search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village people road blockage"

    மங்கலம்பேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் திடீரென பழுதடைந்தது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் கிராம மக்கள், அருகில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய கிணற்றுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இது பற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலையில் கிராம மக்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு, விருத்தாசலம்- சிறுவம்பார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகள், கிராம மக்களை சமாதானப்படுத்தி விரைவில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரி பண்ருட்டி அருகே கிராம மக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்கு செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள புது காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பழுதடைந்ததால் கடந்த பல நாட்களாக இங்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினமும் குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து சென்றுதண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வந்தது

    இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் திரளாகக் கூடி பண்ருட்டி சித்தூர் காலையில் அங்கு செட்டிபாளையத்தில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்து பாதித்தது இந்த வழியாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×