என் மலர்tooltip icon

    கடலூர்

    வடலூரில் வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. கருத்தரங்கம், நாடகங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    வடலூர் :

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கோவில் திருவிழாக்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட அனுமதிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதால் வடலூரில் தைப்பூச திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    வடலூரில் இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் என்னும் சத்ய ஞானசபையில் நடைபெறுகிறது.

    இதையொட்டி வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது.

    28-ந் தேதி காலை 6 மணி, 10 மணி, மதியம், 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 29-ந் தேதி காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

    வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 30-ந் தேதி திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்றும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கருத்தரங்கம், நாடகங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான ராட்டினங்கள், கடைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலைய நிர்வாகம் செய்து வருகிறது.

    தற்போது சபை வளாகத்தில் பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகளும், தெய்வநிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
    கடலூர் அருகே நர்சிங் மாணவியை கடத்திய வழக்கில் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 26), கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய நர்சிங் மாணவி. சென்னையில் படித்து வந்த மாணவி, பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன், அந்த மாணவியை கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த மாணவியின் தாய், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்திய சரவணனை கைது செய்தார். மேலும் கடத்தப்பட்ட மாணவியை போலீசார் மீட்டு, கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    கடலூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் கோண்டூர் ரெட்டியார் தெருவில் வசித்து வந்தவர் ஜெயராமன் மகன் கோச்சமின்(வயது 43). இவர் வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து விட்டு ஊருக்கு வந்திருந்தார். இவருடைய மனைவி தேவி (35). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கோச்சமினுக்கும், அவரது தந்தை ஜெயராமனுக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் கோச்சமின் மனைவி தேவி தன்னுடைய தாய் வீட்டுக்கு செல்வதாக கூறினார். இதனால் அவரை கோண்டூர் வி.ஐ.பி.நகரில் உள்ள அவரது தாய் வீட்டில் குழந்தைகளுடன் கொண்டு சென்று விட்டு வந்தார்.

    பின்னர் அவர் நெய்வேலி இந்திராநகரில் வசிக்கும் தந்தை ஜெயராமன் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். அங்கிருந்து மீண்டும் கோண்டூர் ரெட்டியார் தெருவில் உள்ள வாடகை வீட்டுக்கு சம்பவத்தன்று வந்த அவர், மதியம் தனது மனைவியிடம் செல்போனில் பேசி, வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

    அதற்கு அவர் தன்னுடைய தாய் வீட்டிலேயே இருப்பதாக கூறி வர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தன்னுடைய தந்தை வீட்டுக்கு செல்ல உள்ளதாக கூறி, செல்போனை சுவிட்சு ஆப் செய்து விட்டார். அதன்பிறகு மீண்டும் மனைவிக்கு போன் செய்து அழைத்துள்ளார். அதற்கு அவர் சில நாட்கள் கழித்து வருவதாக கூறியுள்ளார்.

    அதன்பிறகு அவரிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில் தேவி தன்னுடைய மகன்களின் பள்ளி சீருடைகளை எடுத்து வருவதற்காக அவரது தம்பியை கோச்சமின் தங்கி இருந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதன்படி அவர் அங்கு சென்ற போது, அவரது வீட்டு கதவு பூட்டி இருந்தது. கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார். அங்கே கோச்சமின் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி தன்னுடைய அக்கா தேவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த கோச்சமின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்து கிடந்த கோச்சமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூரில் குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்து இருந்தார். அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நகர செயலாளர் செந்தில் வவேற்றார்.

    மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், பரசு. முருகையன், கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிர்வாகிகள் பழனிவேல், ஸ்ரீதர், குணத்தொகையன், சக்திவேல், ஜவகர்சுபாஷ், நகர செயலாளர்கள் புலிக்கொடியன், பாலமுருகன், திருமாறன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை இயற்ற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்ககோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியை தமிழக அரசு ஏற்றபின்பும் மாணவர்களிடம் அரசு கல்லூரிக்கு உரிய கட்டணம் வசூலிக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதை கண்டித்தும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய கோரியும் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 43 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் முதலாமாண்டு பல் மருத்துவம் தவிர்த்து மற்ற இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ கல்லூரி நேற்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாகவும் மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் அறிவிப்பு வெளியிட்டார்.

    அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவியர் விடுதியில் உணவுக்கு பணம் செலுத்தி உள்ளோம். வெளியில் செல்ல மாட்டோம் என தெரிவித்து கலெக்டரை சந்திக்க கடலூருக்கு வந்தனர். கடலூரில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர்.

    அப்போது மாணவர்கள் கூறுகையில், தமிழக அரசுடனும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடனும் பேசுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் கல்லூரி கால வரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று மாணவர்கள் கூறினர்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மருத்துவ மாணவர்களை வெளியேற வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியது.

    ஆனால் மாணவ-மாணவிகள் விடுதியை விட்டு வெளியேற மறுத்து விடுதி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த போராட்டம் நீடித்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது மாணவ-மாணவிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை கல்லூரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    கடலூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65) . இவர் சம்பவத்தன்று கடலூர் செம்மண்டலம் அருகில் பண்ருட்டி-கடலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராமலிங்கம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மழைால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கடலூரில் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மணிலா, உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பஞ்சாட்சரம், கடவுள், ஆறுமுகம், பழனி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பாண்டுரங்கன், அய்யாதுரை, சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தாசில்தார் பலராமனிடம் கோரிக்கைகளை மனுவை அளித்து, புயலால் சேதமடைந்த பயிர்களை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை கேட்ட தாசில்தார், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விடுபடாமல் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பெண்ணாடம் அருகே வெலிங்டன் பாசன வாய்க்காலில் 1½ வயது குழந்தை தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள மாளிகை கோட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 1½ வயதில் இரணியன் என்ற ஆண்குழந்தை இருந்தது.

    நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயகிவிட்டது. இதைத் தொடர்ந்து வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தையை பெற்றோர் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து அருகில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் குழந்தை விழுந்திருக்கலாம் என கருதி திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வாய்க் கால் மற்றும் அங்குள்ள பகுதிகளில் தேடினர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

    மேலும் மாயமான குழந்தையை கண்டுபிடிப்பதற்காக விருத்தாசலம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடினர்.

    இன்று காலைவீட்டில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் வெலிங்டன் பாசன கால்வாயில் குழந்தை இரணியன் பிணமாக மிதந்தான். இந்த கால்வாயில் அதிக அளவு தண்ணீர் வரத்து உள்ளது. எனவே விளையாடிய குழந்தை இரணியன் வாய்க்காலில் தவறி விழுந்ததில் அடித்து செல்லப்பட்டான்.

    தகவல் அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டனர். இதனை பார்த்ததும் பெற்றோர் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே இன்று அதிகாலை அரசு பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
    புவனகிரி:

    சேலத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ்சை காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் குபேந்திரன் (வயது 47) ஓட்டினார். இன்று அதிகாலை புவனகிரி அருகே இரட்டை குளம் என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நிலைதடுமாறிய பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்தது. இதனால் பயணிகள் அலறினர்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 பேர் புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கும், ஒருவர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் அந்த பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
    தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
    கடலூர்:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடலூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பாதாக கூறி மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது.

    குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம். இந்த தேர்தலில் எங்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.

    புதுவையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் புயல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளித்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர் :

    கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கானது பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் உள்ளரங்கங்களில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 100 சதுர மீட்டருக்கு 20 நபர்கள் என்ற விகிதத்தில் அதிகபட்சம் 200 நபர்களும், திறந்த வெளிப்பகுதிகளில் இடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப அதிகபட்சம் 50 சதவிகிதம் வரையிலான நபர்களும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று பங்கேற்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கடலூர் மாவட்டம் வடலூர் சத்தியஞானசபையில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 150-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால் விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல்வெப்ப பரிசோதனை மற்றும் நோய் அறிகுறி குறித்து ஆய்வு மேற்கொண்டு, நோய் அறிகுறியற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நோய் அறிகுறி மற்றும் உடல் வெப்பம் அதிகமாக இருப்பின், மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்து, நெகட்டிவ் என சான்று பெற்ற பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    65 வயதுக்கு கூடுதலான மூத்த குடிமக்கள், சுவாச நோய், இருதய நோய், சர்க்கரை நோய், உயர் மற்றும் குறை ரத்த அழுத்தக் குறைபாடு உடையவர்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஆகியோர் விழாவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
    ஜோதி தரிசன நிகழ்ச்சியை டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்தரங்குகள், நாடகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

    சத்தியஞானசபை பெருவெளி மற்றும் ஜோதி தரிசனம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் அனைத்து வகை கடைகளுக்கும், ராட்டினம் முதலான பொழுதுபோக்கு செயற்பாட்டிற்கும் அனுமதி கிடையாது. மேலும் ஜோதி தரிசன நாளன்று மது மற்றும் இறைச்சி கடைகளை திறக்கக்கூடாது. இதுதவிர பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவை, பொட்டலங்களாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    கடலூரில் நடந்த ஹெல்மெட் பேரணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இருசக்கர வாகனத்தை ஓட்டி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் சார்பில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று கடலூரில் நடந்தது. டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட பேரணியை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலந்து கொண்டு, இரு சக்கர வாகனத்தை ஓட்டி சக போலீசாருடன் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பேரணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வ அமைப்பினர் ஹெல்மெட் அணிந்தபடி இரு சக்கர வாகனங்களில் நகர முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தனர்.

    முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டுபிரசுரம் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்படுத்தினர்.

    இதில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், மணிகண்டன், மகாலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    ×