search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

    கடலூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் கோண்டூர் ரெட்டியார் தெருவில் வசித்து வந்தவர் ஜெயராமன் மகன் கோச்சமின்(வயது 43). இவர் வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து விட்டு ஊருக்கு வந்திருந்தார். இவருடைய மனைவி தேவி (35). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கோச்சமினுக்கும், அவரது தந்தை ஜெயராமனுக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் கோச்சமின் மனைவி தேவி தன்னுடைய தாய் வீட்டுக்கு செல்வதாக கூறினார். இதனால் அவரை கோண்டூர் வி.ஐ.பி.நகரில் உள்ள அவரது தாய் வீட்டில் குழந்தைகளுடன் கொண்டு சென்று விட்டு வந்தார்.

    பின்னர் அவர் நெய்வேலி இந்திராநகரில் வசிக்கும் தந்தை ஜெயராமன் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். அங்கிருந்து மீண்டும் கோண்டூர் ரெட்டியார் தெருவில் உள்ள வாடகை வீட்டுக்கு சம்பவத்தன்று வந்த அவர், மதியம் தனது மனைவியிடம் செல்போனில் பேசி, வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

    அதற்கு அவர் தன்னுடைய தாய் வீட்டிலேயே இருப்பதாக கூறி வர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தன்னுடைய தந்தை வீட்டுக்கு செல்ல உள்ளதாக கூறி, செல்போனை சுவிட்சு ஆப் செய்து விட்டார். அதன்பிறகு மீண்டும் மனைவிக்கு போன் செய்து அழைத்துள்ளார். அதற்கு அவர் சில நாட்கள் கழித்து வருவதாக கூறியுள்ளார்.

    அதன்பிறகு அவரிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில் தேவி தன்னுடைய மகன்களின் பள்ளி சீருடைகளை எடுத்து வருவதற்காக அவரது தம்பியை கோச்சமின் தங்கி இருந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதன்படி அவர் அங்கு சென்ற போது, அவரது வீட்டு கதவு பூட்டி இருந்தது. கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார். அங்கே கோச்சமின் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி தன்னுடைய அக்கா தேவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த கோச்சமின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்து கிடந்த கோச்சமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×