என் மலர்
கடலூர்
கடலூர் அருகே கிஞ்சம் பேட்டை பகுதியில் இலங்கைத் தமிழர்கள் 3 பெண்கள் உள்பட 8 பேர் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். இவர்கள் தங்கி இருந்ததை குறித்து கியூ பிரிவு போலீசாருக்கும், கடலோர காவல் படை போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில மாதத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு உறவினர்கள் வீட்டிலும், லாட்ஜிலும் தங்கியுள்ளனர். பின்னர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடலூர் கிஞ்சம் பேட்டையில் தங்கி வந்ததாகவும் கூறினார்கள். பின்னர் அவர்கள் முறைப்படி விசா வைத்துள்ளார்களா? என்பதனை கியூ பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது விசா காலம் முடிந்து பல நாட்கள் ஆகியும் கடலூர் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் விசா கிடைப்பதற்காக பதிவு செய்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் க்யூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர காவல் படை போலீசாரும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இது சம்பந்தமாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 பேரையும் தீவிரமாக கண்காணிப்பதோடு இவர்களுடன் வேறு யாரேனும் வந்து உள்ளார்களா? அல்லது எதற்காக இவர்கள் இங்கு வந்துள்ளனர்? விசா காலம் முடிந்தும் ஏன் இங்கு தங்கி உள்ளார்கள்? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 வருடங்களுக்குப் பிறகு வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்காக கோபுரங்கள், கொடி மரங்கள், சுவாமி சன்னதிகள், பிரகாரங்கள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து விருத்தாம்பிகை அம்மன் கருவறை கோபுரம் வர்ணம் தீட்டும் பணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளது.
முதல் கட்டமாக அனுக்ஞை விக்னேஷ்வர பூஜைகளுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மற்றும் யாகசாலை பூஜைகள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து மூலவருக்கு கருவறை கோபுரம் வர்ணம் தீட்டி முடிவடைந்துள்ளது. இதில் கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள், அறநிலையத்துறை ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் கடுமையாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவர் பாலக்கரை பகுதியில் செல்போன் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகளை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு ராஜேஷ் குமார் வியாபாரம் முடிந்தவுடன் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். தொடர்ந்து இன்று அதிகாலை ராஜேஷ் குமாரின் 2 கடைகளிலும் இருந்து கரும்புகை வந்துள்ளது.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கடைகளிலும் தீ மளமளவென பற்றி கொண்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் 2 கடைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் 2 கடைகளிலும் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து கருகியது. இந்த தீ விபத்து குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் அம்மா மினிகிளினிக் உருவாக்கப்பட்டது. இந்த கிளினிக்கில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றி வருகிறார்கள். இன்று காலை மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள் கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மருத்தவதுறை இணை இயக்குனர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அம்மா மினிகிளினிக்கில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளராக கடந்த 1 வருடமாக பணியாற்றி வருகிறோம். கொரோனா வைரஸ் தொற்று பிரிவிலும், தடுப்பூசி முகாம்களிலும், காய்ச்சல் முகாம்களிலும் பணிபுரிந்து வந்த நிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி எங்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூரை சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் அசோக்குமார்(வயது 40). இவரும், அம்மாபேட்டையை சேர்ந்த பத்திநாதன் மகன் சந்தியாகு(38) என்பவரும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று மதியம் புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சந்தியாகு ஓட்டினார். கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் சென்றபோது, எதிரே சேலத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில அசோக்குமாரும், சந்தியாகுவும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துறைமுக போலீசார் விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் செல்வம் உத்தரவின்பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று கடலூர் கடற்கரை பகுதியில் நடந்தது. இந்த குழுவினர் வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது, வனவர் குணசேகரன், வனக்காப்பாளர் ஆதவன், பறவைகள் ஆர்வலர் சுவாமிநாதன், குழந்தைகள் நல மருத்துவர் இளந்திரையன் மற்றும் தன்னார்வலர் குழு நிறுவனர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் பறவைகளை கணக்கெடுத்தனர். அப்போது 55-க்கும் மேற்பட்ட இன பறவைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதாவது மரங்கொத்தி, சிட்டுக்குருவி, காடை, ஆந்தை, கருங்குருவி, செங்கால்நாரை, வீட்டு பறவைகள், ஆஸ்திரேலியாவில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து புலம் பெயர்ந்த குருவிகள், மழைக்கால பறவைகள் உள்ளிட்ட 55 வகையான பறவை இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குழுவினர் இன்று (சனிக்கிழமை) கடலோர பகுதிகளில் மீண்டும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை நடத்துகின்றனர்.






