என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.
    • இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் ஸ்ரீ வேட்டக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் பொன்னர்-சங்கர், தங்காள் – செல்லாண்டியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.

    கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பொன்னர் சங்கர், தங்காள் வீர வரலாறு உடுக்கை கதை, பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து பூச்சியூர் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்தல், சாம்புகன் சாமியை மேடைக்கு அழைத்து வருதல், தங்காளுக்கு கிளி பிடிக்க செல்லுதல், கொம்பனை சாம்புகன் சாமி மேடைக்கு அழைத்து வருதல், செம்மறி ஆட்டுகிடாவுடன் மேளதாளம் முழங்க பறை சாற்றி வருதல் தங்காள் செல்லாண்டியம்மன் தீர்த்தம் எடுத்து வந்து தெளித்து அண்ணன்மார்களை எழுப்புதல் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றன.

    தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர், இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக கொம்பனை குறி வைத்தல் நிகழ்ச்சியில் பன்றியை வேல்கொம்பு கொண்டு பூசாரி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சாம்புகன் பூஜை செய்து தீர்த்தம் வழங்கி கிடாவெட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன.

    இறுதியாக சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் 2 நாட்களுக்கு முன்பே இங்கு வந்துள்ளனர்.

    இந்த விழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக வளர்த்த சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் கிடாவெட்டு விருந்து போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பொன்முருகன் வீட்டிலிருந்து ரூ.12.40 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க கட்டிகள் திருடு போனது.
    • சவுந்தரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது 46). தொழில் அதிபரான இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.12.40 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க கட்டிகள் திருடு போனது. இது குறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க கட்டிகளை திருடிய அவரது வீட்டில் வேலை பார்த்த ஒண்டிப்புதூர் முத்துசாமி செட்டி வீதியை சேர்ந்த சிவராமன் என்பவரது மனைவி ஜோதி(47) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 93 கிராம் எடையிலான தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட ஜோதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    முன்னதாக மீதமுள்ள தங்கத்தை மீட்பது குறித்து போலீசார் ஜோதியிடம் நடத்திய விசாரணையில், அது அவரது மகன் சவுந்தர்(27) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று போலீசார் தலைமறைவாக இருந்த சவுந்தரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட சவுந்தரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    மதுரையை சேர்ந்த வக்கீல்கள் முகம்மது அப்பாஸ், யூசுப் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் சங்கம், சமூக நீதி வக்கீல்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமை கழகம், இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வக்கீல்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    • சிட்கோ இண்டோசல் மெயின் ரோட்டில்(பேஸ் டூ) போலீஸ் நிலையம் தயாராகி வருகிறது.
    • ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், 30 காவலர்கள் நியமனம்

    குனியமுத்தூர்,

    கோவை மாநகர எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைப்பதற்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி அந்த 3 பகுதிகளிலும் புதிய போலீஸ் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவை சுந்தராபுரத்தில் சிட்கோ இண்டோசல் மெயின் ரோட்டில்(பேஸ் டூ) போலீஸ் நிலையம் தயாராகி வருகிறது. இந்த போலீஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், 30 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் ஏதேனும் குற்ற சம்பவம் நடைபெறுமோ என பொதுமக்கள் தயங்கி வந்தனர். தற்போது இங்கு புதிதாக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது என்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஆதாமின் ஆனந்தாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
    • கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ஆதாமின் ஆனந்தாஸ் (வயது 56). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சரவணம்பட்டி- விநாயகாபுரம் ரோட்டில் நெல்லையப்பர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆதாமின் ஆனந்தாஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஆதாமின் ஆனந்தாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (54). சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த சேகர்(47) என்பவரது மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்றார். மொபட் மருதம்பட்டி அம்மா நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளங்கோ கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை போலீசார் மீட்டனர்.

    கோவை,

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 36). இவர் கோவை பீளமேடு நேரு நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இளங்கோ நேருநகர் ஐானகியம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இளங்கோ பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இளங்கோவை பணி செய்ய வைத்ததாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ், கட்டிட காண்டிராக்டர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வருகிற 20, 21-ம் தேதிகளில் தேயிலை கண்காட்சி நடக்க உள்ளது.
    • சிறு-குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    கோவை,

    உலக தேயிலை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வருகிற 20, 21-ம் தேதிகளில் தேயிலை கண்காட்சி நடக்க உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியவை இணைந்து நடத்துகிறது. தேயிலை கண்காட்சியை முன்னிட்டு வருகிற 20-ம்தேதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்ளுகேற்கும் மனித சங்கிலி நடத்தப்படுகிறது.

    குன்னூர் தேயிலை கண்காட்சியை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தலைமையில், நீலகிரி எம்.பி ஆ. ராசா முன்னிலையில், தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமசந்திரன் வருகிற 20-ந் தேதி காலை 11 மணி அளவில் திறந்து வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.

    குன்னூர் தேயிலை கண்காட்சியில் தேயிலை தூளின் பல்வேறு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதுதவிர சிறு-குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.தேயிலை கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, அங்கு கலப்படம் இல்லாத தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    அடுத்தபடியாக அகில உலக தேயிலை தினத்தை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி இண்ட்கோசர்வ் சார்பில் பள்ளி- கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலையை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கண்காட்சி அரங்குகளில் தேயிலை தூள் தயாரிக்கும் எந்திரங்களை காட்சிப்படுத்தி, அதன்மூலம் தேயிலை தூள் தயாரிக்கும் முறை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு, விளக்கம் தரபபட உள்ளது.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடக்கும் தேயிலை கண்காட்சியில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா ப்பயணிகள் கலந்து கொண்டு, கலப்படம் இல்லாத தேயிலை தூளை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

    • 1½ ஆண்டுகளாகியும் ஜல்ஜீவன் திட்ட பணிகள் முடிவடையவில்லை
    • தற்போது 3.50 லட்சம் தண்ணீர் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிடைக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 5-வது வார்டுக்குட்பட்ட அம்மன்பு தூரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு ஏராளமான பொது மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

    25 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அதன்பின் பொதுமக்களுக்கு முறை வைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சத்தி சாலையில் இருந்து அம்மன்புதூர் கிராமத்தில் குடிநீர்விஸ்தரிப்பு செய்யவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கவும் ரூ.16.25 கோடி மதிப்பில் கடந்த 2020-21 ஆண்டு குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

    இதில் அம்மன்புதூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் பணிகளும், மேல்நிலை தொட்டியும் அமைக்கப்பட்டது. இந்த திட்டபணி தொடங்கி 1½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் பழைய திட்டத்தின் படி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வருகிறது.

    இதிலும் தலா ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு குடம் முதல் 2 குடம் மட்டுமே தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் பயனில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    அம்மன்புதூர் கிராமத்திற்கு அருகாமையில் தான் பவானி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளின் படி பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. ஆற்றின் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் உள்ளோம். ஜல்ஜீவன் திட்டத்தின் படி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தின் படி எடுக்கப்பட்ட திட்டமும் பயனில்லாமல் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தண்ணீரை அதிகரிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். மேலும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு 3ஆம் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதிலிருந்து வழியோர கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் மற்றும் திருப்பூர் மேயரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டிக்கு வர ஏற்பாடு செய்வதாக கூறியதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், ஊராட்சிக்கு தினசரி 7 லட்சம் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 3.50 லட்சம் தண்ணீர் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிடைக்கிறது. இதனால் ஊராட்சி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது என்றார்.

    • மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
    • இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

    கோவை,

    கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் 12 குவாரிகளில் நில அளவீடு செய்ததில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

    மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும். குவாரி குத்தகைதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நில அளவீடு செய்து எல்லை தூண்கள் நட அறிவுறுத்தப்பட்டது. இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

    மேலும், கடந்த 2 மாதங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் கொண்டுசென்றதற்காக சிறப்பு பறக்கும் படையின் மூலம் 15 வாகனங்கள் மற்றும் கனிம வளத்துறையினர் மூலம் 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும், அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் 21 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கம்பெனிக்கு விரைந்து சென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளரை கண்டித்தனர்.
    • வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அ.குமாரபாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் குமாரபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று நான் டெய்லரிங் எந்திரத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது துணி எந்திரத்தில் சிக்கி கொண்டது. இதனை சரி செய்ய நான் பனியன் கம்பெனி உரிமையாளரை அழைத்தேன். உடனடியாக அங்கு வந்த உரிமையாளர் சரி செய்வது போல நடித்து எனது உடலில் கை வைத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    உடனடியாக நான் இது குறித்து எனது ஆண் நண்பர்களுக்கு தெரிவித்தேன். அவர்கள் கம்பெனிக்கு விரைந்து சென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளரை கண்டித்தனர். எனவே வேலை செய்யும் இடத்தில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • யானை கணக்கெடுப்பு பணியானது 3 முறைகளை பின்பற்றி நடக்கிறது.
    • நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.

    கோவை:

    தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில வனப்பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனப்பகுதிகளில் எத்தனை யானைகள் உள்ளன என்பதை அறிய வனத்துறையினர் கணக்கெடுப்பினை நடத்தி வருகின்றனர்.

    வழக்கமாக ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக கணக்கெடுப்பினை நடத்தி தங்கள் மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் எத்தனை யானைகள் உள்ளன என்ற விவரத்தை அறிவிப்பாக வெளியிட்டு வருகிறது.

    தற்போது முதல் முறையாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கி தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

    இந்த பணியானது இன்று காலை 4 மாநில வனப்பகுதிகளிலும் தொடங்கியது. இன்று தொடங்கிய பணியானது வருகிற 19-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    தமிழகத்தில் கோவை, நீலகிரி வனக்கோட்டங்களில் இன்று காலை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய 7 வனசரகங்களில் 42 இடங்களில் இந்த பணியானது நடந்தது.

    இதேபோல் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இந்த பணியில் வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியை சேர்ந்த இளங்கலை வனவியல் மாணவர்கள் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று யானைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    யானை கணக்கெடுப்பு பணியானது 3 முறைகளை பின்பற்றி நடக்கிறது. முதல் நாளில் நேரடியாக சென்று யானைகளை கணக்கெடுத்தல், 2-வது நாளான நாளை யானையின் சாணத்தை வைத்தும், 3-வது நாளில் நீர்நிலை பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை, நீலகிரி வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. யானைகளின் சாணம், கால்தடம், நீர்நிலைகளுக்கு அருகே அவை வந்து செல்வது உள்ளிட்டவையும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு சென்று கண்காணித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    • கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • மாணவர் இறந்த தகவல் ராஜஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு, உறவினர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.

    கோவை:

    ராஜஸ்தான் மாநிலம் சவாய்மடபூரை சேர்ந்தவர் கமல்ஸ்ரீமல். இவரது மகன் விஷால் ஸ்ரீமல் (வயது 23).

    இவர் ராஜஸ்தானில் உள்ள கோட்டா ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் வனவியல் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விஷால் ஸ்ரீமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது ஆராய்ச்சி படிப்புக்காக கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தார்.

    அவர் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி, விஞ்ஞானியான ரித்திகா கலை என்பவரிடம் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு விஷால் ஸ்ரீமல் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். பின்னர் அங்குள்ள உணவு கூடத்தில் இருந்து பாட்டிலில் தண்ணீரை நிரப்பி கொண்டு அறைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அங்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் விஷால் ஸ்ரீமல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக விஷால் ஸ்ரீமல் யானையிடம் சிக்கிக் கொண்டார்.

    யானை அவரை தூக்கி வீசியதுடன், காலால் மிதித்தது. இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஷால் ஸ்ரீமலை மீட்டு சிகிச்சைக்காக கேரள மாநிலம் புட்டத்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மாணவர் இறந்த தகவல் ராஜஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு, உறவினர்கள் கோவைக்கு வந்துள்ளனர். அவர்களிடம் உடலை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×