என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் அருகே கஞ்சா விற்றது தொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள தனியார் உணவகங்கள் அருகே ஆன்லைனில் உணவு டெலிவரியில் வேலை செய்வது போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தாழம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது போல் உடை அணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை கைது செய்து தாழம்பூர் காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்குமார் சேனாபதி (வயது 30) என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கொளப்பாக்கம் அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 53). இவர் நேற்று முன்தினம் கொளப்பாக்கம் அருகே சாலை ஓரமாக நின்று போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் முனியம்மாள் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து முனியம்மாள் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் வேலு இவரது மகன் அன்பழகன் (வயது 22). இவர் மோட்டார் சைக்கிளில் சோத்துப்பாக்கத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கி சென்றார்.ஒழுப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது அண்ணன் சதீஷ் மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்.
    மாமல்லபுரத்தில் காரில் சிக்கி உயிரிழந்த குரங்கை சுற்றி வந்த குட்டி குரங்குகள் தடவி கொடுத்தும், கண்ணீர் விட்டும், தட்டி எழுப்ப முயற்சித்தும் பாச போராட்டம் நடத்தியது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலம் அருகே உள்ள சப்தகன்னி கோவில் வளாகத்தில் உள்ள பழமையான மரத்தில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.

    நேற்று மாலை பெரிய குரங்கு ஒன்று கிழக்கு ராஜ வீதி சாலையை உணவுக்காக  கடக்க முயன்றது. அந்நேரத்தில் எதிரில் வந்த காரின் சக்கரத்தில் குரங்கு சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குரங்கு  இறந்து போனது.

    கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் தாய் குரங்கு பலியானதை கண்ட அதன் குட்டி குரங்குள் மற்றும் அதன் கூட்டத்தில் இருந்த ஏராளமான குரங்குகள் அங்கு வந்தன.

    அவை இறந்து கிடந்த குரங்கை சுற்றி சுற்றி வந்தன. மேலும் பலியான குரங்கை பரிதாபத்துடன் தடவி கொடுத்தும், கண்ணீர் விட்டும், தட்டி எழுப்ப முயற்சித்தும் பாச போராட்டம் நடத்தியது.

    இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் கண் கலங்கினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் இறந்த குரங்கை மீட்டு அருகில் உள்ள வருவாய் ஆய்வாளர் வளாகத்தில் குழிதோண்டி புதைத்தனர். முன்னதாக அந்த குரங்குக்கு பாலூற்றி, பிடித்த உணவை படைத்தும், மாலையிட்டு இறுதி சடங்கு செய்தனர். பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஏராளமானோர் குரங்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.

    அந்த இடத்திலும் இறந்து போன குரங்கின் குட்டிகள் மற்றும் ஏராளமான குரங்குகள் சுற்றி வந்தன. இந்த காட்சிகள் அங்கிருந்த மக்களின் நெஞ்சை கனக்க செய்தது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,196 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 5,796 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 699 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2573 ஆக உயர்ந்துள்ளது. 17,524 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 78 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1280 பேர் உயிரிழந்துள்ளனர். 5,351 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கூடுவாஞ்சேரி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசு விடுமுறையான தைப்பூச தினத்தில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து (வயது 35) என்பவர் திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்தார். உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல மறைமலைநகர் அண்ணா சாலை பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்ததாக மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா கம்பங்கள் பராமரிப்பில்லாத காரணத்தால் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரம் போலீஸ் துறையினருக்கு உதவிடும் வகையில் மத்திய சுற்றுலாத்துறை, சுவதேஷ் தர்ஷன் திட்டதின் கீழ் 40 இடங்களில் சுழலும் கண்காணிப்பு கேமரா கம்பங்கள் அமைத்து கொடுத்தது.

    சுற்றுலா பயணிகள் போர்வையில் கடற்கரைக்கு வரும் வழிப்பறி திருடர்களையும், அங்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் நபர்களையும், சுற்றுலா பயணிகளிடையே சில நேரம் மோதல் ஏற்பட்டு கைகலப்பு நடக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பதால் இவற்றை கண்காணிக்கும் வகையில் இந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு போலீஸ் துறைக்கு உதவிகரமாக இருந்து வந்தது. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள போலீஸ் துறை கட்டுப்பாடு மையத்தில் உள்ள கணினி பிரிவில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமரா கம்பங்கள் செயல்பாடு இல்லாமல் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. கம்பம் கீழே விழுந்தவுடன் அதில் இருந்த சுழலும் கேமரா உடைந்து சேதமடைந்துவிட்டது. அதில் உள்ள வயர்களும் அறுந்து காணப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு பயன்பட வேண்டிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஒரு சில ஆண்டுகளிலேயே சேதமடைந்துவிட்டது. எனவே குற்ற செயல்களை கண்காணிக்கும் வகையில் சேதமடைந்த கண்காணிப்பு கேமரா கம்பங்களை சீரமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காட்டாங்கொளத்தூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் நின்னகரை பாரதியார் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    பல்லாவரம் ரேடியல் சாலையில் தடுப்பு சுவரில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன்(வயது 30). இவர், துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். குரோம்பேட்டை பெரிய ஏரி அருகே ரேடியல் சாலையில் வரும்போது திடீரென சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக லோகேஸ்வரன் காரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். பின்னர் தீ அணைக்கப்பட்டது. எனினும் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுபற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மறைமலைநகர் அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை புதுப்பேட்டை பச்சையப்பா முதலி தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது44). ஆட்டோ டிரைவர். இவரது மகள்கள் ஐஸ்வர்யா (5), பூஜா (3).

    கடந்த 15-ந்தேதி காலை ஞானவேல் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து ஞானவேலின் மனைவி ஜெயந்தி எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மறைமலைநகர் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் 3 பேர் பிணமாக கிடப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக மீட்கப்பட்டது மாயமான ஞானவேல், அவரது மகள் ஐஸ்வர்யா, பூஜா என்பது தெரிந்தது. 3 பேரும் துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.

    மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஞானவேல் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்த போது சிறுத்தைப்புலி உயிரிழந்து இருப்பது பூங்கா ஊழியர்கள் இடையே மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த புதன் கிழமை பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பூங்காவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் என 350 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 5 வயது சிங்கம் ஒன்றும் உயிரிழந்தது.

    இதை தொடர்ந்து வண்டலூர் பூங்கா வருகிற 31-ந் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வீட்டு தனிமையிலும், ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பூங்கா ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், விலங்குகளுக்கும் அது பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளின் மாதிரிகளையும் பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த 4 வயதான சிறுத்தைப்புலி ஒன்றின் மாதிரியை சேகரிப்பதற்காக கால்நடை மருத்துவர்கள் சென்றனர். மாதிரியை சேகரித்துக் கொண்டிருந்த போது சிறுத்தைப்புலி திடீரென இறந்தது.

    இதனால் கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சிறுத்தைப்புலி திடீரென இறந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த வண்டலூர் பூங்கா இயக்குனர் கருணா பிரியா உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கடந்த ஓராண்டில் 3 சிங்கங்கள், 3 புலிகள், 14 நெருப்புக் கோழிகள் வண்டலூர் பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. கொரோனா தொற்று பாதித்த சிங்கமும் உயிரிழந்து இருந்தது.

    தற்போது கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்த போது சிறுத்தைப்புலி உயிரிழந்து இருப்பது பூங்கா ஊழியர்கள் இடையே மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளின் உடல்நிலையை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    வண்டலூர் ஊராட்சியில் சரக்கு ஆட்டோ வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 22). மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்காக சரக்கு ஆட்டோ வாங்கி தர வேண்டும் என்று வீட்டில் கேட்டுள்ளார்.

    தற்போது பணம் இல்லை இன்னும் சில மாதங்கள் கழித்து வாங்கலாம் என்று வீட்டில் கூறியுள்ளனர்.

    இதனால் மனம் உடைந்த மணி கடந்த 10-ந்தேதி தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மணி உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
    ×