என் மலர்tooltip icon

    அரியலூர்

    கீழப்பழுவூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த முத்தமிழ்செல்வனின் மகன் வெங்கடேசன்(வயது 28). இவரும், அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரும்(40) இருசக்கர வாகனத்தில் திருமானூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் வழியாக மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வந்தனர். அப்போது நிலைதடுமாறி சாலையில் இருந்த பதாகையில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மன்னார்குடி அருகே பஸ் நிறுத்தம் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்அரசன் (வயது28). திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலையில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி புத்தகரம் கிராமத்திற்கு வந்த அவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனது ஆலை உரிமையாளரின் வீட்டிற்கு கடந்த 3-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றார்.

    மன்னார்குடி அருகே கீழதிருபாலக்குடி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள பஸ் நிறுத்த கட்டிடத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜய்அரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார் விஜய்அரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த வாலிபர் விபத்தில் உயிரிழந்தது புத்தகரம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    15 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி வாலிபர் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டை வாசல் மேல வீதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 26). இவர் டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    இவர் வடகடல் பகுதியைச் சேர்ந்த தத்தனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி. சிறுமியை கர்ப்பமாக்கிய விக்னேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகிறார்.

    பொள்ளாச்சியில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் கிரிநாத் (வயது 21). இவர் அதே பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கிரிநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவியிடம் நட்பாக பழகி வந்தார். அப்போது அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

    அதனை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் கிரிநாத்தை கண்டித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த கிரிநாத் மீண்டும் அந்த மாணவியிடம் கன்னத்தை கிள்ளி தனது வீட்டுக்கு வருமாறு சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வீட்டுக்கு ஓடிச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அவரது நண்பர் ஒருவரை அழைத்து கொண்டு கிரிநாத் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த கிரிநாத்தை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

    அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கிரிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் தாக்கியதாக கிரிநாத் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தீபாவளியை கொண்டாட பாட்டி வீட் டுக்கு வந்த அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூர் அருகே உள்ள ஜமீன்மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஹரிணி (வயது 7). பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலசிங்கம். இவரது மகன் லோகேஷ் (6).

    அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஹரிணி 2-ம் வகுப்பும், லோகேஷ் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். பன்னீர்செல்வத்தின மாமியார் அருகிலுள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் தங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாட குழந்தை ஹரிணி விரும்பினார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் குழந்தைக்காக வாங்கிய புத்தாடைகளை எடுத்துக்கொண்டு ஹரிணியை அவரது பாட்டி வீட்டில் விடுவதற்காக பன்னீர் செல்வம் புறப்பட்டார்.

    அப்போது தம்பி மகன் லோகேஷ் தானும் செல்வதாக கூறினார். உடனே ஹரிணி, லோகேஷ் இருவரையும் மருக்காலங்குறிச்சியில் பன்னீர்செல்வம் விட்டு விட்டு வந்தார். நேற்று காலை புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடிய ஹரிணியும், லோகேசும் அந்த பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    இதற்கிடையே நேற்று மாலை அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். முதலில் குளத்தில் இறங்கிய லோகேஷ் தவறி உள்ளே விழுந்தான். நீச்சல் தெரியாத அவன் தண்ணீரில் தத்தளித்தான். உடனே அவனை காப்பாற்றுவதற்காக ஹரிணியும் உள்ளே இறங்கினார்.

    ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் ஒருசில நிமிடங்களில் மூழ்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராதததால் அவர்களுடன் விளையாடி மற்ற சிறுவர்கள் கூச்சல் போட்டனர். இதையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்தனர். தொடர் மழை காரணமாக குழந்தைகள் விழுந்த தண்ணீர் நிரம்பி இருந்தது. இளைஞர்கள் சிலர் குளத்திற்குள் இறங்கி நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஹரிணி, லோகேஷ் இருவரையும் பிணமாக மீட்டனர்.

    அவர்களது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடல்களை தருமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். மேலும் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு போலீசார் உடல்களை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளியை கொண்டாட பாட்டி வீட்டுக்கு வந்த அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மலம் கழிக்கும் நிலை உள்ளது. ஒரு நாளில் பத்து முறை சிறிது சிறிதாக மலம் கழிக்கின்றனர்.
    செய்முறை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். எல்லா கை விரல்களையும் கோர்க்கவும். நடுவிரல் மட்டும் சேர்த்து நேராக படத்தில் உள்ளது போல் வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம், மாலை இரண்டு நிமிடங்கள் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மலம் கழிக்கும் நிலை உள்ளது. ஒரு நாளில் பத்து முறை சிறிது சிறிதாக மலம் கழிக்கின்றனர். எப்பொழுதும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது. இது உடல் ரீதியாக இருக்கும் ஒரு குறைபாடுதான். ஜீரண மண்டலம் சரியாக இயங்குவதில்லை. மலக்குடலில் சக்தி ஓட்டம் சரியாக இல்லை.

    உடலில் நிலம் மூலகம் நல்ல சக்தி ஓட்டம் பெறாமல் உள்ளது. இதனால் ஆசனவாய் தசைகள் வெளியே வரும் நிலை, மூலவியாதி, ஆசன வாய் தசைகளில் புண் ஏற்படுகின்றது. அடிக்கடி மலம் கழிப்பதால் ஆசன வாய் தசைகளின் உட்புறப் பகுதியில் புண் ஏற்படுகின்றது. இந்நிலையில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவதற்குரிய யோக முத்திரை இதுவாகும்.

    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யாததால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகின்றன. 

    இதனை கருத்தில் கொண்டு நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சமூக ஆர்வலர்கள் திருநாவுக்கரசு, பாஸ்கர், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் தங்க ஜெயபால், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் கப்பல் குமார், விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    ஆந்திராவிலிருந்து நாகைக்கு தனியார் ஆம்புலன்சில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    ஆந்திராவிலிருந்து நாகைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தஞ்சை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் ஜெயசந்திரன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஏட்டுகள் இளையராஜா, சுந்தர்ராமன், விஜய், ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் இன்று காலை நாகை மாவட்டம் அரசு மருத்துவமனை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஆந்திராவிலிருந்து வந்த தனியார் ஆம்புலன்சை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணான தகவலை ஓட்டுனர் கூறியதால் ஆம்புலன்சை சோதனையிட்டனர்.

    அப்போது 5 மூட்டைகளில் சுமார் 200 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேலும் விசாரணை நடத்தியதில் ஆந்திராவிலிருந்து நாகைக்கு கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்க இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தஞ்சாவூர் சரக தனிப்படையினர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை கைது செய்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் மற்றும் ஆம்புலன்சையும் பறிமுதல் செய்தனர். 


    அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 31 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 47 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 292 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 876 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 412 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சி உள்ளதால் வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. 

    அண்ணாத்த படக்குழு
    அண்ணாத்த படக்குழு

    இதுதவிர, ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை 'அண்ணாத்த' திரைப்படம் பெற்றுள்ளது.
    அரியலூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களும், கிராமப்புறங்களுக்கு மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரியலூர் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுவது வழக்கம். ஏற்கனவே அரியலூர் பஸ் நிலையத்தில் மையத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதால், அந்த கட்டிடம் கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது.

    பயணிகள் நிழற்குடைக்கு புதிய கட்டிடம் இன்னும் கட்டப்படவில்லை. தற்போது அதன் அருகே தற்காலிகமாக பயணிகள் நிழற்குடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதிகள் போதிய அளவு இல்லை. மேலும் அங்குள்ள இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் தரையில் அமரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் குடிநீர் வசதியும் அரியலூர் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இல்லை. இதனால் பயணிகள் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சில கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை சுற்றி குப்பைகள் காணப்படுகிறது. கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் தூய்மையாக இல்லை. இலவச கழிவறை இல்லாததால் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கப்படுகிறது. மற்றொரு நகராட்சி நவீன கட்டண கழிவறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே காட்சியளிக்கிறது. மேலும் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகன கட்டண காப்பகத்திற்கு மேற்கூரை இல்லாததால் அதில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மழையில் நனைகின்றன.

    மேலும் அந்த பஸ் நிலையத்தை சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர், வெளியூர் செல்வதற்கு பயணிகள் அதிகளவில் அரியலூர் பஸ் நிலையத்திற்கு வருவார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பயணிகளுக்கு தண்ணீர், கழிவறை, இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்கவும், பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கனமழைக்கு மாடி சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பாட்டி மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடை வீதி அருகேயுள்ள தேவாங்கர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் 2 பேருக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் கடைசி மகன் அஜித்குமார் (வயது 25) ஐ.டி.ஐ. படித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார். மகனின் காதலை ஏற்றுக்கொண்ட ஆறுமுகம் வருகிற 15-ந்தேதி திருமணம் நடத்தவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே அரியலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் குளம் போல் மாறியுள்ளன.

    இந்த நிலையில் ஆறுமுகத்தின் தாய் லெட்சுமி அம்மாள் (67) அங்குள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். அதன் அருகிலேயே சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான வீடும் அமைந்துள்ளது. அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் சிமெண்டால் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி அமைத்திருந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய அஜித் குமார் தனது பாட்டில் வீட்டில் தூங்கினார். கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் தொட்டிக்கு அருகிலிருந்த சுவர் மிகவும் பலமிழந்து காணப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 2.15 மணியளவில் அந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது.

    இதில் தண்ணீர் தொட்டியுடன் சுற்றுச்சுவர் இடிந்து பக்கவாட்டில் உள்ள ஓட்டு வீட்டின் மீது சரிந்து விழுந்தது. அப்போது வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த லெட்சுமி அம்மாள், அவரது பேரன் அஜித்குமார் ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்ட போது அவர் பலியாகி இருந்தனர். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தனது பாட்டியுடன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×