என் மலர்
ராஜஸ்தான்
- ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மங்காருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார்.
- பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் 3 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மங்காருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார்.
அங்கு 1913-ம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமையில் போராடிய 1,500 பழங்குடியினரை ஆங்கிலேயே ராணுவம் கொன்று குவித்தது. அவர்களின் நினைவாக மங்காரில் பழங்குடியினர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவருடன் ஒரே மேடையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள் அசோக் கெலாட், சிவராஜ்சிங் சவுகான், பூபேந்திர படேல் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், மங்கார் நினைவிடத்தை பிரதமர் மோடி தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களும் மத்திய அரசின் தலைமையில் ஒன்றிணைந்து மங்கார் நினைவிடத்தை மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் இந்த இடத்துக்கு உலக அளவில் ஒரு அடையாளம் கிடைக்கும். நாம் அனைவரும் இந்த இடத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்வோம். அதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.
- 10 ஆண்டுகளாக இந்த சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
- சிலைக்கு உள்ளே சென்று பக்தர்கள் பார்க்க லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உலகிலேயே உயரமான சிவன் சிலை அமைக்கப் பட்டுள்ளது. தியான தோற்றத்தில் ஒரு குன்றின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 369 அடி உயரமுள்ளது. ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலைக்குள் 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகளும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பக்தர்கள் சிலைக்கு உள்ளே சென்று பார்க்கலாம்.
சிலைக்கு உள்ளே ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் டன் உருக்கு மற்றும் இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. . இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் லேசர் ஒளி விளக்குகள் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலை அமைந்துள்ள பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் சிலை திறப்பு விழாவில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் கலந்து கொள்கிறார்.
- உலகம் முழுவதும் ஆன்மிக நற்சிந்தனையை பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர்.
- ஆன்மிகம் ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது.
அபுநகர்:
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு நகரில் பிரம்ம குமாரிகளின் இயக்கத்தின் 85-வது ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளதாவது:
பிரம்ம குமாரிக்ள் அமைப்பு மனித குலத்திற்கு மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு காட்டுகிறது. உலகம் முழுவதும் ஆன்மிகத்தையும், நற்சிந்தனையையும் பிரம்மகுமாரிகள் பரப்பி வருகின்றனர். பருவநிலை மாற்றத்தை முறியடிக்க இருபது லட்சம் மரக்கன்றுகள் நட்டிய அவர்களது பணி பாராட்டுக்குரியது. சரியான கல்வி, சரியான சிந்தனை, சரியான ஞானம் மட்டுமே தமது தேசத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றும்.
நாட்டில் இருந்து முறையற்ற தன்மையையும், நீதியற்ற நடத்தையையும் எதிர்மறை போக்கையும் களைவதற்கு சமூகத்தில் ஆன்மிக மனநிலையை வளர்ப்பது அவசியம். ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாது. உலகம் முழுவதும் தற்போது தொழில்நுட்ப மாற்றம் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது கல்வியில் ஆன்மிகம் என்பது இன்றியமையாத பகுதி, இது ஒரு நபரை முழுமையான மனிதன் ஆக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதலமைச்சர் கெலாட் நகரத்தில் மற்ற ஆறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
- உயர்மட்ட சாலையால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் நகரில் 2.8 கிமீ நீளமுள்ள உயர்மட்ட சாலையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக சோடாலா உயர்த்தப்பட்ட சாலை என்று அழைக்கப்பட்ட நிலையில், இந்த சாலைக்கு 'பாரத் ஜோடோ சேது' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
காங்கிரஸின் தற்போதைய 'பாரத் ஜோடோ யாத்ரா' மத்தியில் இந்த மறுபெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை, அம்பேத்கர் வட்டம் அருகே உள்ள எல்ஐசி கட்டிடம் மற்றும் அஜ்மீர் சாலைக்கு இடையே உள்ள பாதையில் அமைந்துள்ளது. இந்த சாலையால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முதலமைச்சர் கெலாட் நகரத்தில் மற்ற ஆறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
- மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம்.
- இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் இன்று முறைப்படி சேர்க்கப்பட்டது.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி தாக்குதல் நடத்தமுடியும்.
இந்த ஹெலிகாப்டர், உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடியது. இரவு நேரத்திலும், காடுகளிலும் பயன்படுத்தலாம். மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம்.
இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி ஏற்கனவே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் இன்று முறைப்படி சேர்க்கப்பட்டது. இதற்கான விழா ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில், இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கினார்.
- புதிய முதல்-மந்திரி விவகாரத்தில் சச்சின் பைலட் மீது அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.
ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். இதனால் ராஜஸ்தான் முதல்-மந்திரியாக தற்போதைய துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 90 பேர் பதவி விலக முடிவு செய்தனர். இதனால் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்படவே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கினார்.
இந்த நிலையில் புதிய முதல்-மந்திரி விவகாரத்தில் சச்சின் பைலட் மீது அவர் மறைமுகமாக சாடியுள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'ஒரு முதல்-மந்திரி மாற்றப்படும்போது 80 முதல் 90 எம்.எல்.ஏ.க்கள் அணி மாற முன்வந்திருக்கின்றனர். அவர்கள் புதிய முதல்-மந்திரிக்கு எதிராக திரும்பியுள்ளனர். இது தவறு என நானும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு புதிய முதல்-மந்திரியின் பெயரை கேட்டதுமே எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ராஜஸ்தானில் இது முதல்முறை' என சச்சின் பைலட் பெயரை குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார்.
மாநிலத்தில் முதல்-மந்திரி மாற்றம் நிகழுமா? என்ற கேள்விக்கு, 'அது குறித்து கட்சித்தலைமைதான் முடிவு எடுக்கும், நான் எனது பணிகளை செய்கிறேன்' என்று பதிலளித்தார்.
- புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ராஜஸ்தானில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார்.
- இதன் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பது சோனியா காந்திக்கு அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் போட்டியிடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியான ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.
இதேபோல காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு கேட்டு போர்க்கொடி தூக்கியவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி.யும் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கட்சி கொள்கை அடிப்படையில் அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதையடுத்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.
இதுதொடர்பாக கருத்துக்களை கேட்பதற்காக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் சச்சின் பைலட் முதல்-மந்திரி ஆவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 82 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததோடு, சச்சின் பைலட்டை முதல்-மந்திரியாக்க கூடாது என வலியுறுத்தி தங்கள் பதவியை ராஜினாமா செய்ய போவதாக கூறி ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு பிறகே புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய வேண்டும், பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரையும் முதல்வராக்க கூடாது, மேலிட பார்வையாளர்கள் தனித்தனியாக இல்லாமல் எம்.எல்.ஏ.க்களிடம் குழுவாக கருத்து கேட்க வேண்டும் என்ற 3 நிபந்தனைகளையும் அவர்கள் விதித்தனர்.
கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ.க்களின் இந்த செயலுக்கு பின்னணியில் அசோக் கெலாட் இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக கெலாட் ஆதரவு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செயல்படுவதும், கட்சி தலைமைக்கு நிபந்தனை விதிப்பதும் தவறு என மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் கூறினார்.
மேலும் தலைமை கூட்டிய கூட்டத்தில் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தது ஒழுக்கமற்ற நடவடிக்கை என மல்லிகார்ஜூன கார்கேவும், அஜய் மக்கானும் தெரிவித்தனர்.
இதற்கிடையே ராஜஸ்தான் மாநில அரசியல் குழப்பத்திற்கு நான் காரணம் இல்லை எனவும், எம்.எல்.ஏ.க்கள் எனது பேச்சை கேட்கவில்லை எனவும் மேலிட பார்வையாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு அறிக்கை தயார் செய்து கட்சி தலைமையிடம் கொடுத்தனர்.
புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ராஜஸ்தானில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் இதன் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பது சோனியா காந்திக்கு அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்யுமாறு அசோக் கெலாட்டிடம் வலியுறுத்தி கமல் நாத்தை சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரம் அசோக் கெலாட்டிற்கு பதிலாக வேறு சிலரின் பெயரை காங்கிரஸ் தலைமை பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், கமல்நாத், குமாரி செல்ஜா, பவண்குமார் பன்சால் ஆகிய மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் பவண்குமார் பன்சால் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை வாங்கி சென்றுள்ளார். இதனால் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ராஜஸ்தானில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக சோனியா காந்தி நேற்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து இன்றும் ஆலோசனை நடந்து வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர்.
- சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட விரும்பவில்லை.
இதனால் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து சசிதரூர் களம் இறங்க உள்ளார். எனினும் அசோக் கெலாட், காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசி என்பதால் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்சியில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலகுவார் என கூறப்படுகிறது.
இதனை நேற்று அசோக் கெலாட் சூசகமாக கூறினார். இதுதொடர்பாக பேட்டி அளித்த அவர், 40 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சாசன பதவிகளை வகித்து விட்டேன். இப்போது புதிய தலைமுறையினர் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.
இதனால் மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி ஆவதற்கு சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சச்சின் பைலட் புதிய முதல்-மந்திரி ஆவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ. கோவிந்த் ராம் மேக்வால் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் கிளர்ச்சி செய்ததால் ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தான் உதவினர். இதனால் புதிய முதல்-மந்திரி யார்? என்பதை அனைத்து தரப்பினரும் ஆலோசித்து தான் முடிவு செய்ய முடியும் என்றார்.
அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யக்கூடாது எனவும், அவர் முதல்-மந்திரியாக தொடர வேண்டும் எனவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். இதனால் நேற்று இரவு தொடங்க இருந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தாமதமானது.
இந்த கூட்டத்திற்காக முதல்-மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட், மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் முதல்-மந்திரி இல்லத்தில் காத்திருந்தனர். ஆனால் கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சச்சின் பைலட்டுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கூடாது என வலியுறுத்தி அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதம் வழங்கப்போவதாக மாநில அமைச்சர் பிரதாப் சிங் கச்சரியவாஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை என்பது அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் நடைபெறும். கட்சியில் இடம்பெற்றிருக்கும் 102 எம்.எல்.ஏ.க்களில் யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரியாக வர முடியும்.
மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோரே தீர்மானிப்பார்கள் என்றார்.
200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவர்களில் 20 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சச்சின் பைலட்டுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில், புதிய முதல்-மந்திரி தேர்வு செய்வதில் ராஜஸ்தான் மாநில காங்கிரசில் கடும் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 80 பேர் மற்றும் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேரும் டெல்லி வருமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
- சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு
- அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர்:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இதையடுத்து முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.
2020-ம் ஆண்டு அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக் கூடாது என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பைலட் போர்க்கொடி தூக்கியபோது கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதற்கிடையே, 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று இரவில் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையை உணர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட்டை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி இருக்கிறார். ஆனால் அசோக் கெலாட், தன் கையில் எதுவும் இல்லை என்றும், எம்எல்ஏக்கள் தன் மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.
இது ஒருபுறமிருக்க, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்திருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் கூட்டத்தை நடத்துவதற்காக காத்திருந்தனர். சச்சின் பைல்ட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்றனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வராததால் கூட்டம் நடைபெறவில்லை. இதன்மூலம் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.
- கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
- 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் 'நான் சக்தி உதான்' திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தும் முதல் மாநிலமாக ராஜஸ்தானில் உள்ளது.
கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
இத்திட்டத்திற்காக 2022-23 நிதியாண்டில் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 33 மாவட்டங்களில் உள்ள 60,361 அங்கன்வாடி மையங்களில் 1.15 கோடி பயனாளிகளுக்கும், மாநிலத்தில் உள்ள 34,104 அரசுப் பள்ளிகளில் 26.48 லட்சம் பயனாளிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது. இதற்காக மொத்தம் ரூ. 104.78 கோடியை ஆர்எம்எஸ்சிஎல் செலவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபை நோக்கி சென்ற பாஜகவினரை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.
- பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன
லம்பி நோயை கட்டுப்படுத்த மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியதுடன், இது தொடர்பாக ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. லம்பி நோய் பாதிப்பு, வேலையின்மை, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி முழக்கம் எழுப்பினர்.
பாஜக அலுவலகத்தில் இருந்து சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். அங்கு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சட்டசபை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதுடன், போலீசாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார். லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- தோல் கட்டி நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
- இந்நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாடுகள் லம்பி ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பசுவை அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாடு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவரது ஆதரவாளர்கள் மாட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராவத், 'பாருங்கள். இந்த அரசு மீது கோமாதாவுக்கும் கோபம் வந்துவிட்டது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்து ஊசிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இந்நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
அதேசமயம், சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.
கூட்டத்தொடர் தொடங்கும் முன், முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'லம்பி ஸ்கின் எனப்படும் தோல் கட்டி நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்நோயிலிருந்து மாடுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.






