என் மலர்
ராஜஸ்தான்
- புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ராஜஸ்தானில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார்.
- இதன் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பது சோனியா காந்திக்கு அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் போட்டியிடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியான ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.
இதேபோல காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு கேட்டு போர்க்கொடி தூக்கியவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி.யும் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கட்சி கொள்கை அடிப்படையில் அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதையடுத்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.
இதுதொடர்பாக கருத்துக்களை கேட்பதற்காக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் சச்சின் பைலட் முதல்-மந்திரி ஆவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 82 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததோடு, சச்சின் பைலட்டை முதல்-மந்திரியாக்க கூடாது என வலியுறுத்தி தங்கள் பதவியை ராஜினாமா செய்ய போவதாக கூறி ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு பிறகே புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய வேண்டும், பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரையும் முதல்வராக்க கூடாது, மேலிட பார்வையாளர்கள் தனித்தனியாக இல்லாமல் எம்.எல்.ஏ.க்களிடம் குழுவாக கருத்து கேட்க வேண்டும் என்ற 3 நிபந்தனைகளையும் அவர்கள் விதித்தனர்.
கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ.க்களின் இந்த செயலுக்கு பின்னணியில் அசோக் கெலாட் இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக கெலாட் ஆதரவு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செயல்படுவதும், கட்சி தலைமைக்கு நிபந்தனை விதிப்பதும் தவறு என மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் கூறினார்.
மேலும் தலைமை கூட்டிய கூட்டத்தில் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தது ஒழுக்கமற்ற நடவடிக்கை என மல்லிகார்ஜூன கார்கேவும், அஜய் மக்கானும் தெரிவித்தனர்.
இதற்கிடையே ராஜஸ்தான் மாநில அரசியல் குழப்பத்திற்கு நான் காரணம் இல்லை எனவும், எம்.எல்.ஏ.க்கள் எனது பேச்சை கேட்கவில்லை எனவும் மேலிட பார்வையாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு அறிக்கை தயார் செய்து கட்சி தலைமையிடம் கொடுத்தனர்.
புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ராஜஸ்தானில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் இதன் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பது சோனியா காந்திக்கு அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்யுமாறு அசோக் கெலாட்டிடம் வலியுறுத்தி கமல் நாத்தை சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரம் அசோக் கெலாட்டிற்கு பதிலாக வேறு சிலரின் பெயரை காங்கிரஸ் தலைமை பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், கமல்நாத், குமாரி செல்ஜா, பவண்குமார் பன்சால் ஆகிய மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் பவண்குமார் பன்சால் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை வாங்கி சென்றுள்ளார். இதனால் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ராஜஸ்தானில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக சோனியா காந்தி நேற்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து இன்றும் ஆலோசனை நடந்து வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர்.
- சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட விரும்பவில்லை.
இதனால் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து சசிதரூர் களம் இறங்க உள்ளார். எனினும் அசோக் கெலாட், காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசி என்பதால் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்சியில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலகுவார் என கூறப்படுகிறது.
இதனை நேற்று அசோக் கெலாட் சூசகமாக கூறினார். இதுதொடர்பாக பேட்டி அளித்த அவர், 40 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சாசன பதவிகளை வகித்து விட்டேன். இப்போது புதிய தலைமுறையினர் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.
இதனால் மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி ஆவதற்கு சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சச்சின் பைலட் புதிய முதல்-மந்திரி ஆவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ. கோவிந்த் ராம் மேக்வால் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் கிளர்ச்சி செய்ததால் ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தான் உதவினர். இதனால் புதிய முதல்-மந்திரி யார்? என்பதை அனைத்து தரப்பினரும் ஆலோசித்து தான் முடிவு செய்ய முடியும் என்றார்.
அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யக்கூடாது எனவும், அவர் முதல்-மந்திரியாக தொடர வேண்டும் எனவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். இதனால் நேற்று இரவு தொடங்க இருந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தாமதமானது.
இந்த கூட்டத்திற்காக முதல்-மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட், மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் முதல்-மந்திரி இல்லத்தில் காத்திருந்தனர். ஆனால் கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சச்சின் பைலட்டுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கூடாது என வலியுறுத்தி அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதம் வழங்கப்போவதாக மாநில அமைச்சர் பிரதாப் சிங் கச்சரியவாஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை என்பது அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் நடைபெறும். கட்சியில் இடம்பெற்றிருக்கும் 102 எம்.எல்.ஏ.க்களில் யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரியாக வர முடியும்.
மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோரே தீர்மானிப்பார்கள் என்றார்.
200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவர்களில் 20 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சச்சின் பைலட்டுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில், புதிய முதல்-மந்திரி தேர்வு செய்வதில் ராஜஸ்தான் மாநில காங்கிரசில் கடும் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 80 பேர் மற்றும் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேரும் டெல்லி வருமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
- சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு
- அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர்:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இதையடுத்து முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.
2020-ம் ஆண்டு அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக் கூடாது என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பைலட் போர்க்கொடி தூக்கியபோது கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதற்கிடையே, 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று இரவில் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையை உணர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட்டை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி இருக்கிறார். ஆனால் அசோக் கெலாட், தன் கையில் எதுவும் இல்லை என்றும், எம்எல்ஏக்கள் தன் மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.
இது ஒருபுறமிருக்க, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்திருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் கூட்டத்தை நடத்துவதற்காக காத்திருந்தனர். சச்சின் பைல்ட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்றனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வராததால் கூட்டம் நடைபெறவில்லை. இதன்மூலம் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.
- கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
- 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் 'நான் சக்தி உதான்' திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தும் முதல் மாநிலமாக ராஜஸ்தானில் உள்ளது.
கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.
இத்திட்டத்திற்காக 2022-23 நிதியாண்டில் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 33 மாவட்டங்களில் உள்ள 60,361 அங்கன்வாடி மையங்களில் 1.15 கோடி பயனாளிகளுக்கும், மாநிலத்தில் உள்ள 34,104 அரசுப் பள்ளிகளில் 26.48 லட்சம் பயனாளிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 31 மாவட்டங்களில் உள்ள 26,220 பள்ளிகளுக்கும், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கியுள்ளது. இதற்காக மொத்தம் ரூ. 104.78 கோடியை ஆர்எம்எஸ்சிஎல் செலவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபை நோக்கி சென்ற பாஜகவினரை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.
- பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன
லம்பி நோயை கட்டுப்படுத்த மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியதுடன், இது தொடர்பாக ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. லம்பி நோய் பாதிப்பு, வேலையின்மை, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி முழக்கம் எழுப்பினர்.
பாஜக அலுவலகத்தில் இருந்து சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். அங்கு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சட்டசபை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதுடன், போலீசாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார். லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- தோல் கட்டி நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
- இந்நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாடுகள் லம்பி ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பசுவை அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாடு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவரது ஆதரவாளர்கள் மாட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராவத், 'பாருங்கள். இந்த அரசு மீது கோமாதாவுக்கும் கோபம் வந்துவிட்டது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்து ஊசிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இந்நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
அதேசமயம், சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.
கூட்டத்தொடர் தொடங்கும் முன், முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'லம்பி ஸ்கின் எனப்படும் தோல் கட்டி நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்நோயிலிருந்து மாடுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.
- காரை நிறுத்திய மக்கள், நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- கார் மூலம் நாயை இழுத்துச் சென்ற மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு.
ஜோத்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று காரில் நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் அதை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளார். போக்குவரத்து பரபரப்பு நிறைந்த சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்த நாய் காருக்கு பின்னால் ஓட முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்ததை கண்ட விலங்கு நல ஆர்வலர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காரின் முன் தனது வாகனத்தை நிறுத்தி அந்த ஓட்டுநரை கட்டாயப்படுத்தி காரை நிறுத்தச் செய்கிறார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அந்த நாயின் சங்கிலியை அவிழ்த்து விட்டு அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் அந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஒரு மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அகற்றும் நடவடிக்கையாக அதை காரில் கட்டி இழுத்து சென்றதாக அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விலங்கு வதை சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இதயமற்ற அந்த மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளனர்.
- ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
- காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்தார்.
இதை தொடர்ந்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையை விமர்சித்த அந்த கட்சியின் பல தலைவர்கள் விலகினார்கள். கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி தற்போது பாதயாத்திரை மேற் கொண்டு வருகிறார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வருகிற 22-ந்தேதி வெளியிடப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் 24 முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8-ந்தேதி யாகும். தேவைப்பட்டால் அக்டோபர் 17-ந்தேதி நடைபெறும். முடிவுகள் அக்டோபர் 19-ந்தேதி வெளியாகும்.
இந்த நிலையில் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை முதல்-மந்திரி அசோக்கெலாட் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்று கொண்டனர். இதனால் ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் டெல்லியில் இருந்ததால் இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்று மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் காந்தியை தலைவராக்கும் தீர்மானத்தை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது. மற்ற மாநில காங்கிரஸ் குழுக்கள் இதை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மீட்புப் பணிக்கு நான்கு மண் அள்ளும் இயந்திரங்கள், நான்கு டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டது.
- சிசிடிவி கேமரா மூலம் சிறுமியின் நிலை கண்காணிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள அப்பானேரி அருகே உள்ள ஜஸ்ஸா பாடா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்கிதா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிறுமி 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது அவர்கள் ஆய்வு செய்ததில் சிறுமி 60 முதல் 70 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது தெரியவந்தது. பின்னர், மீட்புப் பணிக்கு நான்கு மண் அள்ளும் இயந்திரங்கள், நான்கு டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையின் குழுக்கள் தலைமையில் மீட்புப் பணி நடைபெற்றது.
ஆழ்துளை கிணற்றை சுற்றியுள்ள பகுதியை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு பின் தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் சிறுமியின் நிலை கண்காணிக்கப்பட்டது. சிறுமிக்கு குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் சிறுமியை உடனடியாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தௌசா மாவட்ட ஆட்சியர் கும்மர் உல் ஜமான் சவுத்ரி தெரிவித்தார்.
- ராகுல் காந்தி ரூ.41 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
- அசோக் கெலாட் அமித்ஷாவின் உடையை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர் :
இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரூ.41 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் நேற்று, பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவின் உடையை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'இந்திய ஒற்றுமை பயணத்தில் அவர்களுக்கு (பா.ஜனதாவினர்) என்ன பிரச்சினை? அவர்கள் ரூ.2½ லட்சத்துக்கான மூக்கு கண்ணாடியும், ரூ.80 ஆயிரத்தில் மப்ளரும் அணிந்து கொண்டு, ராகுல் காந்தியின் டி-ஷர்ட் குறித்து பேசுகிறார்கள். உள்துறை மந்திரி அணிந்துள்ள மப்ளரின் விலை ரூ.80 ஆயிரம்' என தெரிவித்தார்.
பா.ஜனதாவினர் டி-ஷர்ட் அரசியல் செய்வதாக சாடிய அசோக் கெலாட், இந்திய ஒற்றுமை பயணத்துக்கு கிடைத்து வரும் சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.
- மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை வலுவிழந்து இருந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் பருவமழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்கிறது.
இந்நிலையில், ராஜஸ்தானின் ஜலாவர் மற்றும் உதய்பூர் மாவட்டங்களில் நேற்று மட்டும் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும். இதன் காரணமாக நாளை முதல் 15ம் தேதி வரை கிழக்கு ராஜஸ்தானில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சியால் பாடுபட முடியாது.
- வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரசால் செயல்பட முடியும்.
ஜோத்பூர்:
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் குறித்து பாஜக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:
இந்தியா குறித்து பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையை காங்கிரஸ்காரர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் வாழும் தேசம் இது. இந்த தேசத்திற்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
தற்போது பாரதத்தை இணைக்க வெளிநாட்டு உடை அணிந்து ராகுல் காந்தி சென்றுள்ளார், ஆனால் அவர் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸால் பாடுபட முடியாது, (சிலரை) திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் மட்டுமே (காங்கிரசால்) செயல்பட முடியும்.






