என் மலர்
புதுச்சேரி
- எங்கள் கூட்டணியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்.
- நாராயணசாமி வயிற்றெரிச்சலில், பொறாமையில் தொடர்ந்து இதுபோல பேசி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு துறையிலும் 2 மாதம் ஒரு முறை ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன். போலீஸ் துறையில் நடந்த ஆய்வில் நகரில் பெருகிவரும் நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சட்ட-ஒழுங்கு, போதைப்பொருள் விற்பனை தடுப்பு, தொடர் குற்றவாளிகளை கண்காணித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கந்து வட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் கவர்னரை சந்தித்து அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாக சென்றடைய வேண்டும். துறை சார்ந்த கோப்புகளுக்கு அனுமதி, இலவச அரிசி வழங்குவது போன்ற திட்டங்களை ஆலோசனை செய்ய சென்றோம். எங்களுக்குள்ளோ, முதல்-அமைச்சருடனோ, கூட்டணியிலோ எந்த குழப்பமும் இல்லை.
எங்கள் கூட்டணியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். முதலில் அவர் கட்சியில் அவருக்குள்ள பிரச்சினையை பார்க்க வேண்டும். அந்த கட்சியினரே அவர் கட்சி நடவடிக்கையில் தலையிடக்கூடாது என புகார் தெரிவித்து வருகின்றனர்.
அவர் முதலில் அவர் கட்சியை பார்க்கட்டும், எங்கள் கூட்டணியில் மூக்கை நுழைக்க வேண்டும். இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது.
இந்த வயிற்றெரிச்சலில், பொறாமையில் தொடர்ந்து அவர் இதுபோல பேசி வருகிறார். அரசியலில் நானும் உள்ளேன் என தெரியப்படுத்த, எங்கள் அரசின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.
இது அவரின் அனுபவத்துக்கும், வயதுக்கும் அழகல்ல. அவர் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.
- புதுவையில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.
- மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மைய குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமிழ் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளரான மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 144 தொகுதிகளை தேர்வு செய்து அதில் பா.ஜனதா கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணக்கப்பட்டுள்ளது.
அதில் புதுவை பாராளுமன்ற தொகுதியும் ஒன்றாகும். எனவே புதுவையில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கட்சியை பலப்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விவகாரம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை தடை செய்வது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த மத்திய இணை மந்திரி, மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
- ஞானசேகர் தன்னுடைய நிலத்தில் கரும்பு, நெல், மரவள்ளி உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறார்.
- முருங்கை மரத்தை இயற்கை முறையில் தொழு உரம், புண்ணாக்கு உள்ளிட்டவை வைத்து பராமரித்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை மண்ணாடிப்பட்டு அருகே உள்ள சுத்துக்கேணி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர்.
விவசாயியான இவர் தன்னுடைய நிலத்தில் கரும்பு, நெல், மரவள்ளி உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகிறார். இவரது வீட்டு தோட்டத்தில் முருங்கை மரம் வைத்துள்ளார்.
இந்த முருங்கை மரத்தை இயற்கை முறையில் அதாவது தொழு உரம், புண்ணாக்கு உள்ளிட்டவை வைத்து பராமரித்து வருகிறார்.
இதில் தற்போது முருங்கைக்காய்கள் காய்த்துள்ளது. ஒவ்வொரு காயும் குறைந்தபட்சம் 5 அடி நீளம் உள்ளது. இது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரணமாக ஒரு முருங்கைக்காய் அதிகபட்சம் 2 அடி இருக்கும்.
ஆனால், ஞானசேகரன் தோட்டத்தில் இருக்கும் முருங்கைக்காய்கள் 5 அடி நீளம் இருப்பதால் அதனை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
இதுகுறித்து விவசாயி ஞானசேகர் கூறுகையில், இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு செய்யப்பட்டு வரும் இந்த முருங்கை 5 அடி நீளமுள்ள காய்கள் காய்த்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் வந்து இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதாகவும் இந்த மரத்திலிருந்து பதிவு போட்டு தங்களுக்கு தருமாறு கேட்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
- டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம்.
- அராங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பதால் கொசுக்களை வெளியிடுவதில் தாமதமாகிறது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு செய்து அதற்கான பணிகளை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர்- விசிஆர்சி மருத்துவர் அஷ்வனி குமார் கூறுகையில், " டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம். ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண் கொசுக்களை விடுவிப்போம். இது வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உருவாக்கும். நாங்கள் கொசுக்கள் மற்றும் முட்டைகளை உருவாக்கியுள்ளோம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.
இதற்கான ஆய்வு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு இப்போது முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன" என்றார்.
- முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது.
- கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தொடர்ந்து ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதமும் 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டைதான் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமை செயலர் ராஜீவ்சர்மா, அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது. மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 924 கோடிக்கு அனுமதி அளித்தது.
தற்போது ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீடு காலக்கெடு முடிவடைந்துள்ளது. இதனால் புதுவை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலம் ரூ.ஆயிரத்து 300 கோடி வருவாய் கிடைக்காது.
இதனால் மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என புதுவை அரசு வலியுறுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் நீண்ட விவாதம் நடந்தது.
- காரைக்காலில் காலரா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது என புதுச்சேரி துணை நிலை கவர்னர் தெரிவித்தார்.
- மாவட்டத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் சிலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் எதிரொலியாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தம் செய்து பீளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது எனக்கூறிய புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
- காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல்.
காரைக்கால்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
பாதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் சிலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் எதிரொலியாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காலரா பரவல் எதிரொலியாக காரைக்காலில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். இந்த 3 நாட்கள் விடுமுறையின்போது பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தான் ஒரு மந்திரவாதி எனவும் முருகனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை பரிகாரம் மூலம் சரிசெய்து விடலாம் எனவும் சத்தியவதி கூறினார்.
- லட்சுமி தனது கணவருக்கு தெரியாமல் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். பூஜையின்போது பணம் மற்றும் நகைகளை வைக்கும்படி கூறியதால் லட்சுமி அதன்படி செய்தார்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). எலக்ட்ரீசியன் இவரது மனைவி லட்சுமி (வயது 35). வீட்டில் தையல் எந்திரம் வைத்து துணி தைத்து கொடுத்து வருகிறார். இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் 7-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
லட்சுமியின் வீட்டில் அவரது மாமனார் துரைராஜன், மாமியார் உதயகுமாரி ஆகியோரும் வசித்து வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு லட்சுமியின் வீட்டுக்கு சத்தியவதி (26) என்ற பெண் வாடகைக்கு குடித்தனம் வந்தார். தான் ஒரு தனியார் கம்பெனியில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருவதாக கூறினார். தனது கணவர் திண்டிவனத்தில் ஒரு மார்க்கெட்டில் பணியாற்றி வருவதாக சத்தியவதி கூறினார். அவரது தோற்றத்தை கவனித்த லட்சுமி அவருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்தார். சத்தியவதியும் லட்சுமியிடம் அன்பாக பேசி வந்தார்.
இந்த நிலையில் லட்சுமியின் கணவர் முருகனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனை அறிந்த சத்தியவதி தான் ஒரு மந்திரவாதி எனவும் முருகனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை பரிகாரம் மூலம் சரிசெய்து விடலாம் என கூறினார். இதனை நம்பிய லட்சுமி பரிகார பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார்.
மேலும் லட்சுமியை காஞ்சிபுரத்துக்கு அழைத்து சென்றும் பூஜை செய்தார். அதன் பின்னர் வீட்டிலே பூஜை செய்யலாம் என கூறினார். அதன்படி லட்சுமி தனது கணவருக்கு தெரியாமல் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். பூஜையின்போது பணம் மற்றும் நகைகளை வைக்கும்படி கூறியதால் லட்சுமி அதன்படி செய்தார்.
பல்வேறு நாட்கள் பூஜை செய்தும் முருகனின் உடல்நிலை சீராகவில்லை. இந்த நிலையில் முருகனுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை எடுத்தபோது வயிற்று வலி தானாக சரியாகிவிட்டது. இதனை அறிந்த சத்தியவதி தான் செய்த பரிகார பூஜையால் தான் உங்கள் கணவருக்கு வயிற்றுவலி சரியாகிவிட்டதாக கூறி தனது பரிகார பூஜையின் மகிமையை எடுத்து கூறினார்.
மேலும் இந்த பூஜை குறித்து வெளியில் யாரிடமும் சொன்னால் உங்கள் குழந்தைகள் ரத்தம் கக்கி இறந்து விடுவார்கள் என மிரட்டினார். இதனால் பயந்துபோன லட்சுமி இதனை யாரிடமும் சொல்லவில்லை.
இந்த நிலையில் லட்சுமியின் மாமனார் துரைராஜனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து துரைராஜனின் மனைவி உதயகுமாரி சத்தியவதியிடம் சென்று தனது கணவர் குணமடைய பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றார். அதன்படி சத்தியவதியும் பூஜை செய்தார்.
இந்த நிலையில் துரைராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் தான் சிக்கிவிடுவோமோ என பயந்து போன சத்தியவதி வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவானார். அதன் பிறகு தான் லட்சுமி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதற்கிடையே துரைராஜனின் துக்க நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் சிலர் லட்சுமியிடம் விசாரித்தபோது தன்னை சத்தியவதி ஏமாற்றிவிட்டதாக கூறினார். பரிகார பூஜை செய்வதாக கூறி 37 பவுன் நகைகள் மற்றும் 12 லட்சம் பணத்தை கணவருக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்ததாக கூறினார்.
இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியவதியை கைது செய்தனர். போலி மந்திரவாதியிடம் தனது நகை பணத்தை இழந்த சம்பவம் இந்திரா நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
- மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது. அரசு, தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
அந்த தனியார் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியின்றி வழங்கப்படுவதாக பொது நலஅமைப்பினர் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை புதுவை சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வரவழைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதன் தரத்தை ருசித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் ஆலோசனைகளையும் கூறினார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் மாதிரியை முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து, அதை சாப்பிட்டு பார்த்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 10 பைசாவிற்கு விற்ற ஒரு புரோட்டா 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என உயர்ந்து 5 ரூபாயை எட்டியுள்ளது.
- சிறுவயது முதல் கடையிலேயே வேலை செய்த மைதீனின் மகன் ஷரீப் தந்தை மறைவிற்கு பின் தற்போது கடையை நடத்தி வருகிறார்.
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக எல்லையான கோட்டக்குப்பம் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
இங்கு பிரியாணி, புரோட்டா, சிக்கன் சமோசா, ஆட்டுகால் சூப் என மசாலா மணம் கமழும். இங்கு 5 ரூபாய் புரோட்டா கடையும் உள்ளது. 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இயங்கும் ஒரே புரோட்டா கடை இது தான்.
கவி பக்கிரி மைதீன் என்பவர் நடத்திய இந்த கடைக்கு கவி ஓட்டல் என பெயர் இருந்தாலும் 5 ரூபாய் புரோட்டா கடை என்பதுதான் அடையாளம்.
10 பைசாவிற்கு விற்ற ஒரு புரோட்டா 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என உயர்ந்து 5 ரூபாயை எட்டியுள்ளது. சிறுவயது முதல் கடையிலேயே வேலை செய்த மைதீனின் மகன் ஷரீப் தந்தை மறைவிற்கு பின் தற்போது கடையை நடத்தி வருகிறார்.
ஏ.சி. கிடையாது, வசதியான சேர்-டேபிள் கிடையாது. அந்த காலத்து பெஞ்சு, சேர், சாதாரண மர மேஜை மட்டுமே. காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை புரோட்டா கிடைக்கும்.
இதனால் புரோட்டாவை ஒருபுறம் போட்டு கொண்டே இருக்கிறார்கள். மறுபக்கம் சால்னா கொதித்து கொண்டே இருக்கிறது. விறகு அடுப்பில்தான் சமையல். மசாலா பொருட்கள் அனைத்தையும் சொந்தமாக தயாரிக்கிறார்கள்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரூபாய் புரோட்டா 5 ரூபாயானது. அதன் பிறகு விலை ஏற்றவில்லை. தரமும் குறைக்கப்படவில்லை. நாளுக்கு 2 ஆயிரம் புரோட்டா வரை போடுகிறார்கள். கடையில் 10 பேர் பணிபுரிகிறார்கள்.
பல ஆண்டுகளாக ஒரே சுவையை அளிக்கின்றனர். இயற்கை முறையிலான உணவு தயாரிப்பதை சாப்பிடும் மக்கள் இங்கு நேரடியாகவே பார்ப்பது கூடுதல் சிறப்பு.
செயற்கை சுவையூட்டி மற்றும் நிறமூட்டி கிடையாது என்பதால் புதுவைக்கு பல பகுதிகளில் இருந்து வருபவர்கள் இங்கு சாப்பிட்டு செல்கின்றனர்.
- புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.
- பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும்.
புதுச்சேரி:
நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது என கவர்னர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
புதுவையில் அரசு திட்டங்களுக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் அதிகாரத்தை கவர்னருக்கு அளிப்பது குறித்து, நேற்று முன் தினம் அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கவர்னர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது:-
நில உரிமைகள் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது. அதுபற்றி நான் பேசவில்லை. எந்த உரிமையையும் யாரும் கேட்கவில்லை.
புதுவை மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும். எல்லா விதத்திலும் பயன் அடைய வேண்டும் என்பது என் கருத்து.
பெஸ்ட் புதுவையாகவும், வளர்ச்சியில் பாஸ்ட் புதுவையாகவும் இருக்க வேண்டும். கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, எந்த முன்னேற்றங்கள் வேண்டுமோ அவற்றை செய்து தருகிறோம் என்று கூறி உள்ளனர். எல்லா வகையிலும் புதுவை முன்னேறப் போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






