என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பெண்காவலர்கள் ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • கடைவீதிகளிலும், வாகனங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் பயமின்றி நடமாட முடியும்.

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இரவு நேரத்திலும் எந்தவித பயமுமின்றி நடமாட மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக பெண்கள் இரவில் சுதந்திரமாக கடைவீதிகளுக்கு சென்று வர மாநில போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஜம்முவில் உள்ள 6 முக்கிய சந்திப்புகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதற்காக அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆயுதங்களுடன் அவர்கள் ஆண் காவலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

    இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பெண்காவலர்கள் ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் காஷ்மீர் மாநிலத்தில் பெண்கள் இனி சுதந்திரமாக இரவிலும் நடமாடலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கை மூலம் ஜம்முவில் உள்ள பெண்கள் கூறும்போது, கடைவீதிகளிலும், வாகனங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் பயமின்றி நடமாட முடியும் என்று கூறினர்.

    • ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள், ஏ.கே. 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பெயர் சகீர் மஜீத்,மற்றும் அகமது என்பது தெரியவந்தது. இருவரும் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள், ஏ.கே. 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நேற்று 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 2 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இரண்டு பேர் காயங்களுடன் உயிர்தப்பியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மூன்று ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர், ஆற்றில் விழுந்துள்ளது.

    இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிந்ததாகவும், இரண்டு பேர் காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    • ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து யோசனை வகுக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜி20 அமைப்பின் செயற்குழு கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

    ஆனால், சமீபத்தில் பூஞ்ச் பகுதியில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, 5 துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், காஷ்மீரில் ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு சீனாவும் பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்காக ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் விஜய் குமார் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், என்எஸ்ஜி மற்றும் பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், ஃபிதாயீன் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட ஏதேனும் சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் யோசனை வகுக்கப்பட்டுள்ளது.

    இதனால், ஜி20 செயற்குழு கூட்டத்தில் பாதுகாப்பிற்காக மரைன் கமாண்டோக்கள், தேசிய பாதுகாப்புப் படையினர் (என்எஸ்ஜி) மற்றும் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

    • மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் தைரியம் பாஜகவினருக்கு இல்லை.
    • கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் தனது சொந்த முடிவை எடுக்கவில்லை.

    ஸ்ரீநகர்:

    தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பாஜக விரும்பவில்லை. ஏனென்றால், தேர்தலில் தோற்றுவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. தேர்தலுக்காக பிச்சை எடுக்க நாங்களும் தயாராக இல்லை. தேர்தலை நடத்தினால் நல்லது.

    பாஜக தேர்தலை விரும்பவில்லை என்பதால், தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் தனது சொந்த முடிவை எடுக்கவில்லை. எப்போது முடிவெடுத்தாலும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன்பிறகே முடிவெடுக்கிறது.

    • உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் செய்து பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சோதனையின் போது ஸ்ரீநகர் சோசேத் என்ற பகுதியை சேர்ந்த இசாக் அகமது பட் என்பவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதல், இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது, ஆயுத உதவி செய்வது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது உள்பட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் சிலர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் செய்து பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

    இதையடுத்து இன்று காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், அவந்திபுரா, புல்வாமா, குல்காம் மற்றும் ஆனந்ததக் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை 5.30 மணி முதல் 6 மணி வரை இந்த சோதனை நடந்தது.

    இந்த சோதனையின் போது ஸ்ரீநகர் சோசேத் என்ற பகுதியை சேர்ந்த இசாக் அகமது பட் என்பவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் ஜன்னல் கண்ணாடி பொருத்தும் தொழிலாளி என்பது தெரியவந்தது. அவருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையே தொடர்வு எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
    • காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துமாறு தேசிய மாநாடு கட்சி பிச்சை கேட்காது.

    ஜம்மு :

    அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகின்றன.

    இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது நிதிஷ் குமாரின் இந்த கூட்டணி முயற்சி வெற்றி பெறுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி ஒற்றுமை உருவாகுமா? என்பதை கணிக்க என்னிடம் மந்திர விளக்கு எதுவும் இல்லை. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள், நல்ல உணர்வு மேலோங்கும் என்று நம்புகிறோம்.

    காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கூட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சி ஒற்றுமை ஏற்பட வேண்டும் என கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சிகள் உணர்வார்கள் என நம்புகிறேன். ஜனநாயகத்தை பாதுகாக்க அவர்கள் இணைந்து பாடுபடுவார்கள்.

    காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துமாறு தேசிய மாநாடு கட்சி பிச்சை கேட்காது. ஏனெனில் அவர்கள் (பா.ஜனதா) ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டார்கள்.

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் நீங்கள் மக்களின் உரிமையை மறுக்கிறீர்கள்.

    ஆனால் உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலோ அல்லது சட்டசபை தேர்தலோ, இவை எப்போது நடந்தாலும் அதில் போட்டியிட தேசிய மாநாடு கட்சி தயாராக உள்ளது.

    எனினும் இங்கு ஏதோ நடக்கிறது, அதற்காக கடவுளுக்கு நன்றி. குறைந்தபட்சம் பஞ்சாயத்து தேர்தலாவது நடக்கும் என நினைக்கிறேன். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் எந்த தேர்தலையும் விடமாட்டோம்.

    சட்டசபை தேர்தல் எப்போது நடைபெறும் என்று கவலை இல்லை. அதை எப்போது நடத்துவது? என அவர்கள் முடிவு செய்யட்டும். நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

    • ஜம்மு- காஷ்மீரில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு- காஷ்மீரில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

    அச்சம் அடைந்த பொது மக்கள் வீடுகளை வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

    • வீடு இடிந்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 19 வயதான அர்ஷாத் என்பவர் பரிதாபமா உயிரிழந்தார்.
    • இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ரஷீத் (17) உள்பட இருவரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம், தகுரியா என்ற பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் போது பெரிய பாறாங்கல் மலையிலிருந்து உருண்டு வீட்டின் மீது விழுந்தது.

    இதில் வீடு இடிந்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 19 வயதான அர்ஷாத் என்பவர் பரிதாபமா உயிரிழந்தார். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ரஷீத் (17) உள்பட இருவரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இந்த கிராமம் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால், நிலச்சரிவின்போது கற்பாறைகள் கீழே உருண்டு விழும் அபாயம் இருப்பதாகவும், மக்களின் பாதுகாப்பிற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜம்முவில் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வெளியானது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அகதிகளை போலீசார் கைது செய்தனர்.

    பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    இந்நிலையில், இந்தியாவிற்குள் நுழையும் அகதிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக சென்று புதிய அடையாளங்களை உருவாக்கி வசித்து வருகின்றன.

    இந்நிலையில், இதுபோல் ஜம்முவில் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வெளியானது.

    இதையடுத்து நர்வல் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அகதிகளை கைது செய்தனர். 

    • தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    • கண்டுபிடிக்கும் பணியில் ராணுவ உயர் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    தேசிய ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த போது மழை பெய்து கொண்டிருந்தது.

    காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து தெரியவந்தும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.

    மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே பூஞ்ச் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பினர் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். வடக்கு பிராந்திய ராணுவ படை தலைமையகம் சார்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பினர் கூறும்போது, ஜெய்ஷ் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு உள்ளது.

    அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ராணுவ உயர் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 வீரர்கள் பலியாகினர்.
    • இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது.

    இந்த கோர விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது என முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் தான் ராணுவ வாகனம் தீ பிடித்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ராணுவம் கண்டறிந்துள்ளது.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    ×