என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தை பருவத்தில் வாயில் விரல் சூப்புவதால் பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.
    குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும்; விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளும் ஏற்படுகிறது. நம்மில் பலருக்கு நிகழந்த இந்த உடல் மற்றும் மன மாற்றங்கள் நம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் விரல் சூப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.

    இந்த பழக்கம் குழந்தையின் தனிமை, பசி உணர்வு காரணமாகவும் அவர்களில் ஏற்படலாம். குழந்தைகள் இவ்வாறு விரலை சூப்பிக் கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்; இப்பொழுது குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைப்பதால், பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

    குழந்தைகள் தனது வளரும் குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைத்து உறங்குவது, எப்பொழுது பார்த்தாலும் விரலை வைத்துக் கொண்டே திரிவது, அவர்கள் வளர்ந்த பின் பால் பற்கள் முளைத்து, அவை விழுந்து பின்னர் பற்கள் முளைக்கும் பொழுது ஒரு வரிசையில் அல்லாமல், ஏறுமாறாக கோணலாக, எத்து பல்லாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்படி வளர்ந்த பற்களில் அத்தனை பலம் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

    குழந்தையாய் இருந்து சிறுவர் பருவத்திலும் கூட சூப்பிய கையை எடுக்காமல் குழந்தை வளர்ந்தால், பின்னர் குழந்தையின் கையில், விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து அதனால் அவ்வுறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணர்வற்று போகும் நிலை உருவாகலாம். இந்த விளைவால் குழந்தைகளின் முக்கிய உறுப்பான கைகள் மற்றும் அவற்றின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன.



    குழந்தைகள் பிறந்ததில் இருந்து கடைபிடிக்கும் பழக்கத்தை பள்ளி சென்ற பின்னும் மேற்கொண்டால், அங்கு மற்ற குழந்தைகளின் ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகும் பொழுது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் குழந்தை வாயில் எதையாவது வைத்து வளர்த்து பழக்கப்பட்டு விட்டதால், வளர்ந்த பின் வாயில் வைக்க எதையாவதை தேடும்; அந்த சமயத்தில் புகைபிடித்தல், மது, போதை போன்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

    இது போன்று பற்பல பாதிப்புகள் குழந்தையின் ஒரு சிறிய பழக்க வழக்கத்தால், விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து, பின்னாளில் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆகையால், குழந்தைகளுக்கு இந்த பழக்கம் ஏற்படும் சிறு வயதிலேயே அவர்களுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்து சொல்லி வாயில் கையை வைத்து வளர விடாமல் தடுக்க வேண்டும்.

     அதே சமயம் அவர்களின் உணர்வுகள் அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும் பய மற்றும் பாதுகாப்பு உணர்வுகள் குறித்து எந்தவித பாதிப்புகளும் குழந்தைகளிடம் ஏற்படாத வகையில், அவர்களை இந்த விரல் சூப்பும் பழக்கத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிகழ்காலத்தில் அவர்கள் மனம் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்கும் வகையில் அன்பாய் எடுத்து சொல்லி குழந்தைகளை திருத்துவது பெற்றோரின் கடமையாகும்.
    குழந்தை தோலின் இந்த பலவீனமான தன்மை காரணமாக, பல்வேறு வகையான தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 7 சரும பிரச்சனைகளை பார்க்கலாம்.
    குழந்தை தோலின் இந்த பலவீனமான தன்மை காரணமாக, பல்வேறு வகையான தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக அந்த நோய்களை பற்றி தெரிந்துகொள்வது சிறந்தது. எனவே அந்த நோய்களை பற்றியும் குழந்தைக்கு அவை வந்தால் செய்ய வேண்டிய சிகிச்சைகள் பற்றியும் நீங்கள் நன்கு அறிவீர்கள். மேலும் நோயின் தீவிரத்தையும், அதை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமெனவும் அறிவீர்கள். பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 7 சரும பிரச்சனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    வேர்க்குரு:

    இது முகம், கழுத்து, பின்புறம், அல்லது அடிவயிற்றில் அதிகமாக காணப்படும். இது மில்லியாரியா என்றும் அழைக்கப்படுகிறது, சிறிய சிவப்பு புடைப்புகள் வடிவத்தில் இது காட்சியளிக்கும். சூடான வானிலை அல்லது சூடான ஆடைகள் போன்ற பல்வேறு காரணங்களாலும் உங்கள் குழந்தையின் உடல் சூடு காரணமாகவும் இது ஏற்படுகிறது. நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது உங்கள் குழந்தையை வெப்பத்திலிருந்து வெளியேற்றுவது அல்லது உங்கள் குழந்தையின் உடலுக்கு ஒட்டாத சில தளர்வான ஆடைகளை அணிவிக்க வேண்டும். இது வெடிப்புகளை குறைக்க உதவுகிறது.

    குழந்தை முகப்பரு:

    இந்த சிறிய முகப்பருக்கள் அதிகளவு எரிச்சலூட்டும் என்று யார் அறிவார்கள்? இது நீங்கள் நினைப்பதை விட சாதாரணமானது. இது பொதுவாக சிறிய பருக்கள் அல்லது வெள்ளை நிறத்தில், உங்கள் குழந்தையின் முகம், கழுத்து மற்றும் கன்னத்தில் ஏற்படும். இவற்றை அவற்றின் ஆரம்ப காலத்திலேயே குணப்படுத்தப்பட வேண்டும், முடிந்தளவு இரசாயனம் கலக்காத குணப்படுத்த கூடிய எதிர்ப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்.

    அம்மை:

    தடுப்பூசி போட்டாலும் உங்கள் குழந்தைக்கு அம்மைநோய் வர வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பருவத்தில் இது வருவது சாதாரணம் தான். அதுமட்டுமல்லாமல் இதனை மருத்துவரீதியாக எளிதில் குணப்படுத்தலாம். அம்மை நோய் பொதுவாக சிவப்பு கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் வடிவில் வெளிப்படுகிறது. இது காய்ச்சல், பசியின்மை, குமட்டல், மற்றும் தசை வலிகள் ஆகியவற்றால் கூட ஏற்படலாம். இது ஒரு தொற்றுநோயாகும். ஒருவருக்கு ஏற்கனவே அம்மை வந்து குணமாகி இருந்தால் மீண்டும் அம்மை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.



    எக்ஸிமா:

    எக்ஸிமா என்பது தோலின் சில பகுதிகளில் மட்டும் அரிப்பு, கொப்புளங்கள், இரத்த கசிவு போன்றவை ஏற்படும் நிலையாகும். இது கைகள், முகம், கழுத்து, முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் ஏற்படலாம். இது 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பே ஏற்படலாம் மற்றும் சூடான வானிலை, குளிர் காலநிலை, சில சோப்புகள், சில துணிகள், போன்ற பல காரணிகள் இது ஏற்பட காரணமாகின்றன. இதை குணப்படுத்துவதற்கு ஈரத்துணியை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக தேய்த்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும், பின் தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பயன்படுத்தலாம்.

    குளிர் புண்கள்:

    குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குளிர் புண்கள் மிகவும் பொதுவானவை. இவை வாய்வழி பகுதியில் கொப்புளங்கள் வடிவில் உருவாகின்றன, அவை பின்னர் வலுவான புண்களாக மாறும். இது வீங்கிய ஈறுகளில் தொடங்கி வாயின் அனைத்து பகுதிகளையும் தாக்கும். இதனால் வீக்கம் ஏற்படுவதுடன் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம். இந்த புண்கள் 5-10 நாட்கள் வரை நீடிக்கும். பின்னர் அவை மறைய தொடங்கும். இதனால் பசியின்மை, தாகமின்மை ஏற்படலாம், ஆனால் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    கை, கால் மற்றும் வாய் நோய்

    இந்த நோய் கொப்புளங்கள், தொண்டை புண், மற்றும் லேசான காய்ச்சல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. பெயரில் குறிப்பிடுவதுபோல், கொப்புளங்கள் உடலின் கை, கால் மற்றும் வாய்க்குரிய பகுதிகளில் உடைந்து போகின்றன. மேலும் இவை குழந்தைகளின் கீழ்புறத்தை நோக்கி பரவுகின்றன. இந்த புண் வந்தால் சாப்பிடுவதும், குடிப்பதும் மிகவும் சிரமமாகிவிடும். குழந்தைகள் மருத்துவரை விரைவில் அணுகி சரியான மருந்துகளை உபயோகியுங்கள், குழந்தையின் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    விழி வெண்படல அழற்சி:


    குழந்தைகளுக்கு பெருமளவில் ஏற்படும் நோய் இதுவாகும். இது பாக்டீரியா, ஒவ்வாமை, அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும்  நோய்த்தொற்று ஆகும். இதனால் கண்ணீரில் இளஞ்சிவப்பு நிற ஒட்டும் தன்மை கொண்ட நீர் வெளியேறும். இதனால் கண்கள் சிவப்பாகவும் விழித்திரை மஞ்சள் நிறத்திலும் மாறும். இந்த தொற்றுநோயிலிருந்து குழந்தையை பாதுகாக்க விரைவில் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.
    பிறந்த குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து உரம் விழலாம். பிறந்த குழந்தையை சரியாக தூக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
    தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது.

    பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம். உரம் விழலாம். இதற்குச் சுய மருத்துவம் செய்யக் கூடாது. குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும்.

    திரும்பவும் இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்குங்கள். பஞ்சு போல் மென்மையாகக் கையாளுவதன்மூலம் பிஞ்சு உடலுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கும்.

    பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
    சில வேளைகளில் குழந்தைகள் தன் வயதில் தெரிந்து கொள்ள தேவையில்லாத விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொள்கிறார்கள். அவற்றை தடுக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு உலக அறிவை புகட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். இப்பரந்த உலகை காணும் வண்ணம் குழந்தைகளுக்கு அறிவுக் கதவுகள் அனைத்தையும் திறந்து விட வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் குழந்தைகளால் பெற்றோர் துணையின்றி தனித்து இயங்க முடியும். ஆனால் சில வேளைகளில் குழந்தைகள் தன் வயதில் தெரிந்து கொள்ள தேவையில்லாத விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொள்கிறார்கள்.

    வன்முறை உணர்வுகள், பாலியல் விஷயங்கள், தவறான நடத்தைகள், கொலை, கொள்ளை, கடத்தல் என பலவற்றை உதாரணமாகக் கூறலாம். தற்போது அடைந்துள்ள அறிவியல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் மிக எளிதாக குழந்தைகள் இவற்றை தெரிந்து கொள்கிறார்கள். இது போன்ற எதிர்மறை விளைவுகள் எதுவுமின்றி சரியான அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவது பெற்றோரின் கையில் தான் இருக்கிறது.

    பெற்றோர்கள் தங்கள் உள்ளுணர்வின் ஆசைகளை கட்டுப்படுத்தவும், தள்ளிப் போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு தீர்த்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக உறவினர் ஒருவரைப் பற்றி மிகக் கோபமாக பெற்றோர் விவாதிக்கும் போது குழந்தைகள் அருகில் இருந்து கவனித்தால் அவ்வுறவினர் மீது அவர்களும் குரோதத்தை வளர்த்துக்கொள்வார்கள்.

    எனவே குழந்தைகள் அருகில் இருந்தால் சற்று நேரம் கழித்து அவர்கள் இல்லாத போது உறவினர் பற்றி பேசிக் கொள்ளலாம். குழந்தைகள் இருக்கும் போது தொலைக்காட்சி பார்க்கும் பெரியவர்கள் தேர்ந்தெடுத்த நல்ல நிகழ்ச்சிகளை ஓடவிட்டு அறிவை விருத்தியாக்கலாம். நாளிதழ்கள், மாத, வாராந்திர பத்திரிக்கைகளை தரமான, அறிவு வளர்ச்சிக்கு உதவக்கூடியவற்றை தேர்ந்தெடுத்து வாங்கி வீட்டில் போட வேண்டும். குழந்தைகளின் அந்தந்த வயதுக்கேற்ப பொருத்தமானவைகளாக தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்த வேண்டும்.
    சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம்.
    பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும் வாங்கி உண்ண காசு கொடுத்து அனுப்புவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். அப்பழக்கம் தற்காலத்தில் சற்று வலிமையடைந்து இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது பத்து ரூபாய் முதல் அதிகப்பட்ச பணம் கொடுத்து அனுப்பும் பெற்றோர் தற்போது அதிகரித்து இருக்கிறார்கள். சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது.

    செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம். பணம் கொடுத்து தன் முன்னிலையிலேயே உண்டியலில் போடுமாறு பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். பின்னாளில் இந்நடத்தை சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே சேமித்துப் பழகியவர்கள் பிற்காலத்தில் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் தான் பெறும் சம்பளப் பணத்தை கண்ணும் கருத்துமாக செலவு செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு குடும்ப பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமை வளர்ந்து விடுகிறது.

    கிடைத்த பணத்தையெல்லாம் செலவு செய்து வளரும் குழந்தைகள் பின்னாளில் மனதில் நினைத்ததையெல்லாம் வாங்கிக் குவித்து விடும் இயல்பினராக மாறிவிடுவர். மேலும் கடன் வாங்கியாவது செலவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு பெரிய கடன் சுமையை தன் மீது இவர்கள் ஏற்றிக் கொள்வார்கள்.



    பணம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதை அவ்வப்போது குழந்தைகளுக்கு புரிய வைப்பது நல்லது. அப்போது தான் உதாரித்தனமாக செலவு செய்வதை பிற்காலத்தில் தவிர்ப்பார்கள். குறைவான பணத்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று பணம் போதவில்லை என்பதற்காக வேண்டிய பொருளை வாங்காமல் திரும்பி வரலாம்.

    அப்படி வருவதை உணரும் குழந்தைகள் பணத்தின் அருமையை தானாகவே உணர்ந்து கொள்வார்கள். இதுபோன்ற மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்தி குழந்தைகளிடம் சிறுவயதிலேயே பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகளை கஞ்சத்தனம் உள்ளவர்களாக உருவாக்கி விடக்கூடாது என்பதில் பெற்றோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசியமான செலவுகளை செய்வதையும் அநாவசியமான செலவுகளை தவிர்ப்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே சரியானது. 
    ஒற்றைக் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் வளர்ப்பு விஷயத்தில் எந்த விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இந்தக் காலத்தில் நாம் நம் பிள்ளைகளை தெருவிலோ அல்லது அப்பார்ட்மென்ட் தரை தளத்திலோ விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் நாலு சுவர் எனும் வீட்டுக்குள்தான் அதிக நேரம் இருக்கிறார்கள்.

    இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டும், இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விளையாடுவார்கள். விளையாட ஆள் இல்லை என்றால், இரு குழந்தைகள் மட்டும் விளையாடுவார்கள். அதனால், ஒற்றைக் குழந்தை வைத்திருப்பவர்கள் மற்ற குழந்தைகளோடு அதிக நேரம் விளையாட, பேச, குதூகலிக்க விடுங்கள். அதே சமயம்... அதீத செல்லத்தைக் கொடுக்காதீர்கள்.

    இரண்டு பேர்தான் சம்பாதிக்கிறோமே, பிள்ளை கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கலாம் என்கிற தவற்றை செய்யாதீர்கள்.  'நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்' என்கிற எண்ணம் பிள்ளைகள் மனதில் வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு பிள்ளைகள் இருந்தால்தான் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையைக் குழந்தையிடம் வளர்க்க முடியும் என்பதில்லை.



    அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இட்லியும், பூரியும் பிடிக்கும் என்பதை உங்கள் பிள்ளைகள் மனதில் பதிய வையுங்கள். உங்கள் குழந்தை அதிகம் தொடாத பொம்மைகளை, அவர்களிடம் கொடுத்த அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி குழந்தைகளிடமோ அல்லது நடைமேடையில் குடும்பம் நடத்துபவர்களிடமோ தரச் சொல்லுங்கள். மெதுவாக அவர்கள் மனதில் விசேஷ தினங்களின்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்குங்கள்.

    அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மை, பெரியவர்களை மதிக்க வேண்டும், கஷ்டம் என்பது என்ன... என்பதை உணர வையுங்கள். வீட்டில் ரோஜாப் பூக்கள் வாங்கி ஒன்று உனக்கு, இன்னொன்று வீட்டில் வேலைப் பார்க்கிற அக்காவுக்கு என்று, அவர்கள் கையாலேயே அதை கொடுக்கச் சொல்லலாம்.

    பண்டிகைகளுக்கு டிரெஸ் வாங்கும்போது உங்கள் அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டியின் குழந்தைக்கும் ஒரு ஃபிராக் வாங்கி, அதை உங்கள் மகள் கையாலேயே செக்யூரிட்டியிடம் கொடுக்கச் சொல்லலாம். சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போகும்போது கட்டாயம் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அந்த வீட்டில் இருக்கிற ஒற்றைக் குழந்தையுடன் உங்கள் பிள்ளை சேர்ந்து விளையாடுவதன் மூலம், ஒரு உடன்பிறவாத அக்காவோ, தங்கையோ கிடைக்கலாம்.
    குழந்தைகளுக்கு 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றி கொடுப்பது நல்லது.
    உங்கள் குழந்தை வளர்ந்து சமூகத்துக்குப் பயன்படுகிறவர்களாக இருக்க, ஐந்திலேயே வளைக்கப்பட வேண்டும். 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, தினமும் குளிப்பது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றிச் சொல்லிக்கொடுத்திருப்பீர்கள். ஐந்து வயதுக்குப் பிறகு, அவர்களின் சுற்றுப்புறத்தை எப்படிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

    அவர்களை வெளியே அழைத்துச் சென்ற இடத்தில் சாப்பிடும் சின்ன சாக்லெட்டாக இருந்தாலும், அதன் பேப்பர் கவரை, குப்பைத்தொட்டியில் போடப் பழக்குங்கள்.

    வீட்டில் சாப்பிட்டு முடித்ததும், தட்டை அவர்களின் சின்னக் கைகளால் முடிந்த அளவுக்குக் கழுவ பழக்கப்படுத்துங்கள்.

    அப்பார்ட்மென்ட்களில் வசிக்கிறீர்களா? அங்குள்ள பிற குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஆளுக்கு ஒரு மாடியை என்று சுத்தம்செய்ய பழக்குங்கள். உங்கள் பிள்ளைக்கு டஸ்ட் அலர்ஜி பிரச்னை இருந்தால், அவர்கள் ஷெல்ஃபை மட்டும் சுத்தம் செய்துகொள்ளச் சொல்லுங்கள்.

    தெருவில் எச்சில் துப்பினால், எச்சிலில் இருக்கும் கிருமிகளால் தொற்றுநோய்கள் வரும் என்று சொல்லிக்கொடுங்கள்.

    மிகமுக்கியமாக, மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனித்தனி குப்பைத்தொட்டிகளில் போடுவதற்குப் பழக்குங்கள்.
    மொபைல் விளையாட்டில் குழந்தைகளுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும்.
    விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு!

    திருடனை பிடிப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது…போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.

    அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

    விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

    ‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தவறு!. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும்.

    மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள். ‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.

    உங்கள் குழந்தைகள் தினமும் 1-2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம்.

    படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

    உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள்.
    பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தேவையில்லை என்ற கருத்தும், மனப்பாடம் மற்றும் வீட்டுப்பாட முறையை மாற்றி அமைக்கும் முயற்சியும் சமீப காலமாக வலுப்பெற்றுள்ளது.
    நமது பள்ளிக் கல்வி முறையில் நீண்ட காலமாக மனப்பாடமும், வீட்டுப்பாடமும் இருக்கிறது. இரண்டும் ஒவ்வொருவிதமான திறன் வளர்ப்பு பயிற்சிகள் என்றாலும், அதன் விளைவுகள் சிறந்த பலனைத் தந்திருக்கிறதா? என்ற ஆய்வுக்கு வந்திருக்கிறார்கள் கல்வியாளர்கள். அதனால்தான் பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தேவையில்லை என்ற கருத்தும், மனப்பாடம் மற்றும் வீட்டுப்பாட முறையை மாற்றி அமைக்கும் முயற்சியும் சமீப காலமாக வலுப்பெற்றுள்ளது. வீட்டுப்பாடம் மற்றும் மனப்பாடம் பற்றிய சிறிய கண்ணோட்டம்...

    பாடங்கள் எளிதில் மனதில் பதிவதற்காக மனப்பாட பயிற்சி செய்வது சிறந்த மாணவர்களின் பண்பு. முக்கியமான பாடப் பகுதிகள், வாய்ப்பாடுகள், விதிகள், பாடல்கள் போன்றவற்றை அனைத்து மாணவர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட இவற்றை கண்டிப்பாக மனப்பாடம் செய்து வர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துவது உண்டு. தேர்வுகளிலும் மனப்பாடப் பகுதியில் இருந்து சில கேள்விகள் கேட்பது உண்டு.

    மாணவர்கள் எளிதில் மதிப்பெண் பெறவும், தேர்ச்சி பெறவும் மனப்பாட பகுதிகள் துணை நிற்கும். மனப்பாடப் பகுதிகளை மனதில் நிறுத்துவதற்காக மீண்டும், மீண்டும் படிப்பது மாணவர்களின் வழக்கம். இப்படி பயிற்சி செய்வதால், விடை எழுதும்போது மாணவர்கள் ஓரிரு வார்த்தைகள்கூட மாற்றாமல் அப்படியே எழுதும் பழக்கமும் அதிகரித்தது. காலம் காலமாக நடைமுறையில் உள்ள இந்த பழக்கம் மாணவர்களின் படைப்புத் திறனை ஒருவகையில் பாதிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். பாடங்கள் எப்போதும் புரிதலுக்கானவையே தவிர, ஒப்புவிப்பதற்கானதல்ல. மனப்பாட முறையானது படித்ததை, விடைத்தாளில் கொட்டி வைக்கும் முறையை வளர்ப்பதாக அமைவதால் சமீப காலமாக மனப்பாட பயிற்சி முறையை மாற்றி அமைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இது போலவே வீட்டுப் பாட பயிற்சி முறையும், மாணவர்களின் திறனில் எதிர்மறையை உருவாக்கியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. பள்ளியில் நடத்தும் பாடங்களை புரிந்து கொண்டு, அது சார்ந்த பாடங்களை படித்து எழுதிப் பயிற்சி பெறுவதற்காக வீட்டுப்பாட பயிற்சிகள் வழங்கப்பட்டன. கணக்குப் பாடத்தில் புதிர்களை விடுவித்தல், விடை காணல் என பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    சிறந்த பயிற்சி முறையான வீட்டுப்பாட முறை, சமீப காலத்தில் மாணவர்களுக்கு அதிக மனச்சுமையை ஏற்படுத்துவதாக மாறி உள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் வழங்கப்படும் அதிகப்படியான பயிற்சிகள், மாணவர்களை எந்திர கதியில் இயங்க வைக்கிறது. பள்ளி முன்பருவ குழந்தைகளுக்கும் விதவிதமான சேகரிப்புகளுடன்கூடிய வீட்டுப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனால் இளம் குழந்தைகள் பள்ளிச்சூழலை வெறுக்கும் அபாயம் ஏற்படுகிறது என்ற புரிதல் வலுப்பெற்று, 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தேவையில்லை என்ற முடிவு சமீபத்தில் எட்டப்பட்டிருக்கிறது. நீதிமன்றமே இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் இந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவிலலை.

    தனியார் பள்ளிதோறும் மழலையர் பாடத்திட்டங்களில் மாறுதல்கள் இருக்கின்றன. பயிற்றுவிக்கும் முறையிலும், மாணவர்களிடம் பயிற்சி வாங்கும் முறையிலும் வேறுபாடுகள் காட்டுகிறார்கள். விளையாட்டுப் பருவம் மாறாத மழலைகளுக்கு கல்வி என்ற பெயரில் கடுமையான பயிற்சிகள் வழங்குவது ஏற்புடையதல்ல. அவர்களுக்கு பக்கம் பக்கமாக வீட்டுப் பாட பயிற்சி வழங்குவது குழந்தைகளை விரைவில் சோர்வடையச் செய்துவிடுகிறது. அதுவே பள்ளிச்சூழலை குழந்தைகள் வெறுக்கும் நிலையை ஏற்படுத்திவிடும் அபாயமும் உள்ளது. அதிகமான பாடச்சுமையால் குழந்தைகள் எழுத மறுத்து அடம்பிடிப்பதும், பெற்றோர் குழந்தைகளை விரட்டுவதும், இறுதியில் குழந்தைகளுக்காக பெற்றோரே சில பாடங்களை எழுதிக் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது. இதைத் தடுக்க சிறுவர்களின் வீட்டுப்பாட சுமையை குறைக்க உத்தரவு வெளியாகி இருப்பது நல்லதுதான்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பள்ளிக்கல்வி வாரியம் மனப்பாடம் மற்றும் வீட்டுப் பாட பயிற்சித் திட்டத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. அதில் வீட்டுப்பாடத்தை மாணவர்கள் ரசித்துச் செய்யும் வகையில் பல பயிற்சிகள் சேர்க்கப்பட்டன. 318 பக்கங்கள் கொண்டதாக அந்த பயிற்சி செயல்திட்ட அறிக்கை வெளியானது. அதில் வீட்டின் நிர்வாக கணக்குகள் வழியே மாணவர்கள் கணிதப்பாடத்தை விளங்கிக்கொள்வது, பத்திரிகை, டி.வி. சானல்கள் வழியே சமூக நிலவரங்கள், பிரச்சினைகள், தீர்வுகளை தெரிந்து கொள்ளும் பயிற்சிமுறையும் சேர்க்கப்பட்டது.

    மாணவர்களின் மனநிலை, வயது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் பாடப் பயிற்சிகளை மாற்றி அமைப்பதில் தவறில்லை. அதற்கான கல்வியாளர்கள், உளவியலாளர்கள் குழு துடிப்புடன் செயல்படட்டும். அதுவே நாட்டின் எதிர்கால தூண்களான சிறந்த மாணவர்களை உருவாக்கும்!
    குழந்தைகளின் மொழியறிவினை மேம்படுத்த இன்றைய பெற்றோர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
    உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் வேகமாக சுருங்கி வருகிறது. எதிர் காலத்தில் உங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் அவர் களுக்கு நிச்சயம் பன்மொழித் திறன் அவசியமாகும். குறைந்தபட்சம் தாய்மொழி மற்றும் உலக தொடர்பு மொழியாவது அறிந்திருக்க வேண்டும்.

    குழந்தைகளின் மொழியறிவினை மேம்படுத்த இன்றைய பெற்றோர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் நாம் அறியாத மொழியை பள்ளி வழியே பிள்ளைகள் கற்றுக்கொண்டுவிடுவார்கள் என நினைப்பது தவறாகும். உதாரணமாக “நமக்குத்தான் தமிழைத்தவிர மற்ற மொழிகள் தெரியாது. பிள்ளைகளாவது ஆங்கிலமும், இந்தியும் அறிந்து கொள்ளட்டும்” என்ற எண்ணத்தில் இந்த மொழிப்பாடங்களை தேர்வு செய்து படிக்க வைக்கும் பெற்றோர்கள் அதிகம்.

    ஆனால், ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது மொழியறிவைப் பொறுத்தவரை உண்மையாகத்தான் இருக்கிறது. ஏனெனில் பட்டப்படிப்புவரை ஆங்கிலத்தில் படித்தவர்கள்கூட அந்த மொழியில் பேசுவதற்கு தடுமாற்றம் காண்கிறார்கள். எனவே மொழியறிவு என்பது படிப்பதால் மட்டும் வந்துவிடாது. மொழிகளை அறிய சிறப்பாக உச்சரிக்க கற்றுத் தர வேண்டும். பேசுவதற்கான சூழலையும் ஏற்படுத்தித்தர வேண்டும். அல்லது நாமும் அதே மொழியில் கலந்துரையாடி குழந்தைகளின் மொழியறிவை வளர்க்கலாம்.

    ஸ்பெல்லிங் எனப்படும் உச்சரிப்புமுறைதான் எண்ணங்களையும், சிந்தனைகளையும் செம்மையான முறையில் பகிர்ந்து கொள்ள துணை புரியும். இது தொடர்பான பயிற்சி, மிக இளம் வயதில் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் உச்சரிப்புத் திறனை சிறப்பாக்கும் வகையில், பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், அந்த திறனை மேலும் சிறப்பாக்க பல்வேறு வழிகள் உள்ளன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அதற்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. விளையாட்டு வழியாகவும், புதிர்கள் வழியாகவும், சொல் விளையாட்டு வழியாகவும் மொழியறிவை வளர்க்கும் அப்ளிகேசன்கள் இன்று மிகுந்துள்ளன. அவை பற்றி பார்க்கலாம்...

    வித்தியாசமான அணுகுமுறை

    ஆரம்ப நிலையில் எழுத்துகள், சொற்களைப் படிக்கும் சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயிற்சி இது. எழுது, படி என்று குழந்தைகளை இம்சிப்பதைவிட, விளையாட்டாய் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளச் செய்தால், வித்தியாசமான முறையில் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் எளிதாகவும், விருப்பத்துடனும் கற்றுக்கொள்வார்கள். அந்த வகையில், இது ஒரு மிக எளிமையான, எப்போதும் விளையாடக்கூடிய விளையாட்டு.

    குழந்தைகளுக்கு, உங்களின் முதுகில், அவர்களுக்கு பிடித்த எழுத்துகள், வார்த்தைகளை எழுதச் சொல்லி, அது என்னவென்று நீங்கள் உணர்ந்து சொல்லலாம். இதன்மூலம் அவர்கள் உற்சாகம் பெறுவார்கள். மேலும், அவர்களது முதுகில், நீங்கள், சில வார்த்தைகளை எழுதி, அதை கண்டுபிடிக்கச் செய்து, அவர்களின் உச்சரிப்பு திறனை வளர்க்கலாம்.



    புதிர் மற்றும் விளையாட்டு பயிற்சி

    ஸ்கிராபிள் எனப்படும் வார்த்தை விளையாட்டுகள், குறுக்கு எழுத்துப் போட்டிகள் குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல. வயதிற்கு ஏற்ற வகையில் விதவிதமான வார்த்தை விளையாட்டுப் போட்டிகள் உள்ளன. அனைவரின் ஆதரவாலும் பத்திரிகைகளில் இத்தகைய போட்டிகள் தவறாமல் இடம் பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குடும்ப அளவில், மிகவும் விரும்பப்படுகிற ஒரு விளையாட்டாக, இந்த விளையாட்டு கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக, இந்த விளையாட்டு ரசிக்கப்படுகிறது. இந்த விளையாட்டில், குழந்தைகளுடன் நீங்களும் இணைந்து கொண்டால், அவர்களின் உச்சரிப்பு முறை முன்னேறுவதை விரைவில் அறியலாம்.

    வார்த்தை இணைப்பு மற்றும் ஸ்பெல்லிங் ஆகியவை கலந்த WORD JEOPARDY விளையாட்டு பயிற்சிகள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. எந்த வயது சிறுவர்களும், ஏன் பெரியவர்களும்கூட இதில் விளையாடி மொழியறிவு பெறலாம். இந்த விளையாட்டை குழுவாக விளையாடலாம். இந்த விளையாட்டில், ஒரு நபர், ஒரு வார்த்தையை சொல்ல, அந்த வார்த்தையோடு தொடர்புடைய இன்னொரு வார்த்தையை, எதிர் தரப்பு நபர் சொல்வார்.

    உதாரணமாக, Bird என்ற வார்த்தை சொல்லப்பட்டால், அதற்கு தொடர்புடைய Peacock போன்ற மற்றொரு வார்த்தை எதிர்தரப்பால் சொல்லப்படும். இது குழந்தைகள் புதிய சொற்களை கற்றுக் கொள்ளவும், அதை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிய துணை செய்யும். பெற்றோர் அல்லது ஆசிரியர் இரு குழுவாக மாணவர்களை பிரித்து இந்த இப்படி புதிய சொற்களை அறிமுகம் செய்யலாம்.

    பாடலாய் பாடலாம்...

    குழந்தைகள் விளையாட்டிற்கு அடுத்த படியாக பாடல்களின் வழியே நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். அதனால்தான் சிறுவர்களுக்கு அதிக அளவில் ‘ரைம்ஸ்’கள் கற்றுத் தரப்படுகின்றன. இது மொழியறிவையும் வளர்க்க சிறந்த வழியாகும். நீங்கள் கற்றுத் தர விரும்பும் விஷயங்களை, உங்களால் முடிந்த அளவு ஒரு ராகத்துடன் பாடல்போல இசைத்து சொல்லிக் கொடுங்கள். குழந்தைகளும் அதே பாணியில் விரைந்து பாடி பழகிக் கொள்வார்கள்.

    இதர வழிகள்

    குழந்தைகளின் எளிய கற்றலுக்கு உதவும் வகையில், பல்வேறு வயதுப் பருவத்தினருக்கு ஏற்ற புத்தகங்கள், பலவிதமான எளிய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் (apps) இன்று கிடைக்கின்றன. அதை, உங்களது குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப வாங்கிப் பயன்படுத்தலாம். உதாரணமாக காந்த எழுத்துகள், பஸில் எழுத்துக்களைக் கொண்டு கற்பிக்கலாம். படக்கதைகள், வார்த்தை விளையாட்டு புத்தகங்கள் வழியாகவும் கற்பிக்கலாம். அதற்காக நிறைய வசதி இருக்க வேண்டும் என்பதில்லை.

    பெற்றோர், தங்களின் சூழலுக்கு ஏற்ப, பெரிய வசதிகள் ஏதுமின்றியே, தங்களின் குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சி கொடுக்கலாம். குழந்தைகள், அபார கற்பனைத்திறன் மிக்கவர்கள். எனவே, அவர்களிடம் ஒரு சிறிய கதையை எழுதிக் காட்டுமாறு கூறலாம். அது மிக சாதாரணமாக இருந்தாலும் பாராட்டி உற்சாகப்படுத்துங்கள். உலகின் மிகச்சிறந்த படைப்பாளர்கள் எல்லாம் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். அவர்கள் வளர்ச்சியில் அவர்களது பெற்றோர் காட்டிய அக்கறையே அவர்களின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.மொத்தத்தில் பெற்றோர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பே, ஒரு குழந்தையின் மொழியறிவு மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

    கவனம் தேவை

    அதே நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் குழந்தைகளின் ஸ்பெல்லிங் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறப்பான வழிகள்தான். ஆனால் வார்த்தைகள், உங்களது குழந்தையின் அறிவு நிலைக்கேற்ப இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். குழந்தைகளால் புரிந்துகொள்ள இயலாத, கடின வார்த்தைகளாக இருந்தால் குழந்தைகள் சீக்கிரமே அந்த விளையாட்டின் மீது இழந்துவிடுவார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்! 
    குழந்தைக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தெந்த வயதுக் குழந்தைகளுக்கு, என்னென்ன மாதிரி உணவு கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.
    ”குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சத்துமாவுக்கஞ்சி, பருப்பு, மசித்த இட்லி, மசித்த சாதம், இடியாப்பம், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம், வேகவைத்த கேரட், வேகவைத்த ஆப்பிள் எனக் கொடுக்கலாம்.

    ஒரு வயசுக்கு அப்புறம், பெரியவங்க சாப்பிடும் எல்லா வகை உணவுகளையுமே கொடுக்கலாம். 3, 4 வயதுக்கு மேல் லிமிட்டேஷன் இருக்கத் தேவையில்லை. எப்பவுமே பருப்பு வகைகள், கீரை வகைகள், தானியங்கள், விட்டமின் நிறைந்த உணவு வகைகள், புரதம் சார்ந்தவை, அசைவம் என பேலன்ஸ்டு டயட்டை பழக்குங்க உங்க குழந்தைக்கு.

    ”நாளொன்றுக்கு 3 வகை தானியங்கள், 2 -  3 வகை பருப்புகள், 2 -  3 வகை காய்கள், 2 - 3 வகை பழங்கள் (ஜூஸாக அல்லாமல் துண்டுகளாக), 2  3 டீஸ்பூன் எண்ணெயை உணவில் சேர்க்கணும். இப்படியான உணவு… வளமான ஆரோக்கியம், சீரான வளர்ச்சி, தேவையான நோய் எதிர்ப்புசக்தினு உங்க குழந்தைகளை முறையா வளர்க்கும்.

    பிறந்ததிலிருந்து 12 வயது வரையிலான குழந்தைகளின் எடை எவ்வளவு இருக்க வேண்டும், மேலும் அவர்கள்  நாள் ஒன்றுக்கு எவ்வளவு கலோரி மற்றும் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ், இறைச்சி, மீன் உணவுகள், பால் பொருட்கள்னு குழந்தைகளை சாப்பிட வைக்கணும். பால்தான் சத்துனு அவங்ககூட மல்லுக்கட்டி ஒரு நாளைக்கு மூணு டம்ளர் பால் சாப்பிட வைக்கிறது; குண்டா இருக்காங்கனு மொத்தமா கொழுப்பு உணவுகள்ல இருந்து விலக்கி வைக்கிறது; நட்ஸ் நல்லா சாப்பிடுவாங்கனு, தொடர்ந்து அதையே கொடுக்கறதுனு பிடிவாதமா இருக்கக் கூடாது. இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும். சில சத்துகள் அவங்க உடம்பில் சேராமலே போகும் சூழலையும் ஏற்படுத்தும். 
    பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி நம்மில் பலருக்கும் கணிதம் என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கும் நிலையே நீண்டகாலமாக இருந்து வருகிறது.
    பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி நம்மில் பலருக்கும் கணிதம் என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கும் நிலையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. கணிதம் என்பது பிறவி ஞானம் இருப்பவர்களுக்குத் மட்டும் தான் வசப்படும் மற்றவர்களுக்கு அது எட்டாக்கனியா என்றால் நிச்சயமாக இல்லை.

    நம்மால் இது முடியுமா? என்று வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கும்.அனால் அதையே பழகிக் கொள்ளும் போது,அதில் உள்ள நுட்பங்களை கற்றுத் தேறும் போது அச்செயல் எளிதாகிவிடும்.கணிதத்திற்கும் இது பொருந்தும்.மனோதிடமும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் கணிதத்தை வெற்றிக் கொள்வது மிகச் சுலபமாகிவிடும்.ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் தான் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.

    மற்ற எல்லாப் பாடங்களையும் விட கணிதமே கடினமானது என்று உருவாக்கப்பட்ட பிம்பமே இதற்கு காரணமாகும். உண்மையிலேயே மாணவர்கள் கணிதப் பாடத்தை வெறுப்பதில்லை. புரியாமல் ஏற்படும் பயமும் குழப்பமுமே வெறுப்புக்கும் அவநம்பிக்கைக்கும் உள்ளாக்குகிறது. சரியாக அறிந்து கொள்வதால் ஆர்வமும் அதன் பயனாக ஆற்றலும் வெளிப்படும்.

    நல்ல அறிவாளி மட்டுமே நன்றாக கணக்குப் போட முடியும் என்பது நம்மிடையே இருந்து வரும் மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும்.நன்றாக கணக்குப் பயிற்சி செய்வதால் நமது வலது மூளைத் தூண்டப்பட்டு சிந்திக்கும் திறன் மேம்படுகிறது.ஜப்பானியர்களின் சோடோக்கு புதிர் கணக்குகளை தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் மந்த நிலை மாறி நாளடைவில் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் மாறுவதை நாம் உணர முடியும்.

    சிறுவயதிலேயே கணக்கின் அடிப்படைகளான கூட்டல்,கழித்தல்,வகுத்தல்,பெருக்கல் ஆகியவற்றை நடைமுறை விஷயங்களின் மூலம் மனக்கணக்காக போடும் பயிற்சியை பெற்றோர் அளித்து வர வேண்டும். கடைகளில் சரியாக சில்லறை வாங்குவது,மொத்த விலையில் இருந்து ஒரு பொருளின் விலையை கணக்கிடச் செய்வது, அவர்களின் சேமிப்புத் தொகையை அவ்வப்போது எண்ணச் சொல்வது என்று அவர்களுடைய மூளைக்கு வேலைக் கொடுத்து வரவேண்டும்.

    வாய்ப்பாடுகளை எளிய முறையில் கற்க தரையில் கட்டங்கள் வரைந்து குதிக்கச் செய்தோ அல்லது பொருட்களை பிரித்து அடுக்கிக் காண்பித்தோ கற்றுக் கொடுக்கலாம்.மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் இது போன்ற செயல்முறை விளக்கங்கள் மூலம் அவர்களுக்கு இயல்பாகவே கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்படும்.பெற்றோர் இவ் விஷயத்தில் கொஞ்சம் சிரத்தை எடுத்து வந்தால் பிள்ளைகளுக்கு கணிதத்தின் மீதான அச்சம் குறையும்.



    ஒரு கட்டிடம் கட்ட அடித்தளம் பலமானதாகவும் உறுதியானதாகவும் அமைவது அவசியம்.அதே போல கணிதத்தின் அடிப்படை விதிகளையும், சூத்திரங்களையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டால் உயர்கல்வி வகுப்புகளில் தடுமாற வேண்டி இருக்காது.அல்ஜீப்ரா,கால்குலஸ் போன்ற கணிதப்பிரிவுகள் சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தேற்றங்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கும். இந்த முக்கிய விதிகளை சரியாக கவனிக்கவோ, கற்கவோ தவறவிட்டு கணக்கைப் போட முயற்சித்தால் ஒன்றுமே புரியாமல் குழப்பத்தில் ஆழ்த்தி விடும்.

    கணித வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது மிகுந்த சிரத்தையுடன் கவனச் சிதைவின்றி இருத்தல் அவசியம்.சந்தேகம் இருப்பின் அவ்வப்போது நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.பள்ளியில் நடத்தப்படும் முறை புரியவில்லை எனில் எளிமையாக சொல்லித் தரக்கூடிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

    ‘பாடப் பாட ராகம்’ என்பது போல போட போடத் தான் கணக்கு சுலபமாகும்.வாயால் படிப்பதோ, மனதிற்குள் படிக்க முயற்சி செய்வதோ கணிதப் பாடத்தை பொறுத்தவரை ஒத்துவராது.அன்றாடம் பள்ளியில் நடத்தப்படும் பாடத்தை அன்றே போட்டுப் பார்த்து விடுவது நல்லது.

    மாணவர்கள் ஒரே மாதிரியாக படிக்காமல் சில மாற்று முறைகளை கையாளலாம்.குழுக்கள் அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித் தனி பகுதிகளாக பிரித்துக் கொடுத்து தங்களுக்குள்ளேயே பாடம் நடத்துவது போல் செய்தால் சுவாரசியம் அதிகரிக்கும்.

    கணிதத் தேர்வில் பெரும்பாலும் நிகழ்பவை கவனக்குறைவான தவறுகள் தான். ஒவ்வொரு கணக்கையும் முடித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சரிபார்த்தால் இந்த பிரச்சினையை போக்கலாம்.அடிப்படைகளை கற்றல்,வழிமுறைகளை சரியாக புரிந்துகொள்ளுதல்,பயிற்சி செய்தல்,கவனக்குறை தவறுகளை சரி செய்தல் இதுவே கணக்கு கற்றலின் சூட்சமம்.இதனை அறிந்தால் கணக்கு கண்கட்டிவித்தையாக தோன்றாது. உயர்நிலை வகுப்பு மாணவர்கள் ‘ப்ளூ பிரிண்ட்‘ படி அதாவது ஒரு பாடத்திற்கு இத்தனை வினாக்கள் தான் கேட்கப்படும் என்ற அட்டவணைத் திட்டத்தின் படி படித்தால் தேர்வில் தோற்காமல் தப்பிக்க முடியும். இம்முறை நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கும் வழிவகுக்கும்.

    இன்றைய தொழில்நுட்பக் கருவிகளும் , செயற்கைகோள்களும், ரோபோக்களும் செயலாற்றுவதை கண்டு நாம் பிரமித்துப் போகிறோம்.ஆனால் அவற்றை உருவாக்கும் பொறி மனித மூளையில் இருந்தே உருவாகிறது. எனவே மாணவச் செல்வங்களே, நமது மூளையின் மகத்தான சக்தியால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார்
    ×