என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே ஓடுபவர்களாக இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.
    பல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இது போன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். 12 வயதிலிருந்து அவர்களை சமையல் செய்யத் தயார்படுத்தலாம்.

    மகள் மட்டுமின்றி மகனையும் சமையலுக்கு பழக்கலாம். ஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.

    முதலில் கியாஸ், மண்எண்ணெய் அடுப்பு என்றால் பாதுகாப்பான முறையில் அவற்றை பற்ற வைக்க கற்றுத் தரவேண்டும். தண்ணீர் சுட வைப்பது, பால் காய்ச்சுவது, டீ-காபி போடுவது, தோசை சுடுவது, ஆம்லெட் போடுவது, முட்டையை வேக வைப்பது போன்றவற்றை செய்ய பழக்கவேண்டும். இந்த மாதிரி சிறுசிறு வேலைகளில் எல்லா பிள்ளைகளுக்குமே ஆர்வம் இருக்கும்.



    இதற்கு பழக்கிய பின்னர் அரிசி களைவது, காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம். நான்காவது கட்டமாக அவற்றை குக்கர்-வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்கவேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிடவேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.

    இதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். பொருட்களின் அளவை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல் அவர்களிடமே அந்த பொறுப்பை விடவேண்டும். சமையலைக் கற்றுத் தரும்போது அருகிலேயே நீங்கள் இருந்து விளக்கவேண்டும்.

    எண்ணெயை உபயோகிக்கும்போது அதை அவர்கள் சரியான அளவில் ஊற்றுவதற்கும் சொல்லித் தரவேண்டும். சாதம் வடிப்பதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு, குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவு, காய்கறிகளை வேக வைப்பதற்கு போதுமான தண்ணீர், சாம்பார் பொடி, மசாலாப் பொடி எவ்வளவு தேவை என்பதையும் சுயமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பழக்கவேண்டும். கத்தி, அரிவாள் மனையை அவர்களாகவே கையாளும் அளவிற்கு பழக்கவேண்டாம்.
    தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
    மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.

    தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.



    இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.

    வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.

    இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.
    குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள்.
    குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள்.

    உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்தக் குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும்போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளைப் பாராட்டும் போது, எந்தச் செயலுக்காகப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.  

    பாராட்டுகளைப் பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சர்யப் பார்வையோ, தலை கோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வதோ, பிடித்த உணவைச் சமைத்து தருவதாகவோகூட இருக்கலாம்.  

    உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் வைத்து பாராட்டுங்கள். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இது போன்ற செயல்களைச் செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.

    நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப்பாராட்டும் தன்மையைக் குழந்தையிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பழக்குங்கள். இதுஅவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.

    திறனை வெளிப்படுத்தும் போதும், போட்டிகளில் வெற்றி பெறும் போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும்.

    ஒருமுறை பாராட்டிவிட்டு அந்தத் திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.

    பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியான மற்றும் சமுக ரீதியான சரியான வளர்ச்சிக்கு குழந்தைகளுக்குப் பாராட்டு என்னும் வைட்டமின் சத்து மிக மிக அவசியம். 
    பெற்றோர், தங்களை அறியாமல் குழந்தைவளர்ப்பில் செய்யும் தவறுகளை என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளை ஸ்மார்ட்டாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உள்ளது.  குழந்தையை ஜீனியசாக வளர்ப்பதற்காக பெற்றோர் படும்பாடு வார்த்தைகளுக்குள் அடங்காது. பெற்றோரின் எண்ணங்களை விட இன்றைய குழந்தைகளின் வேகம் அதிகம். நவீன போன்கள், ஆன்லைன் தேடல் எல்லாவற்றிலும் பெற்றோரை விட அதிகம் புரிந்து கொண்டு பயன்படுத்துகின்றனர். பெற்றோர், தங்களை அறியாமல் குழந்தைவளர்ப்பில் செய்யும் தவறுகளை என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    வீட்டில் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்னையில் ஆரம்பித்து அலுவலகத்தின் தலைமை அதிகாரி வரை நிறைய சிக்கல்கள் பெற்றோருக்கு இருக்கலாம். “அவன் இருக்கான் பாரு..சரியான தொல்லை புடிச்சவன்”, என்று உங்கள் குழந்தை முன் பேசினால், வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்கு விளங்காவிட்டாலும், அவர்கள் மனதில் பதியும். இதன்மூலம் தவறான உலகத்தை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். முடித்தவரை, குழந்தைகள் முன் மற்றவர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சிக்க வேண்டாம்.

    பெற்றோர் பெரும்பாலும் செய்யும் தவறு இது! “என் பையன் கேட்குறதுக்கு முன்னாடியே எல்லாம் வாங்கிக்கொடுத்துடுவேன்”, “என் மகள் அடம்பிடித்ததே இல்லை”, என்று  கூறும் பெற்றோர்களா நீங்கள்? ஏனெனில், உங்கள்  பிள்ளைகளுக்கு மற்றவர்களிடம் கேட்டு வாங்கும் திறமையை குறைத்துவிடுகிறீர்கள். அவர்கள் கேட்பதற்குமுன் தேவையில்லாததை வாங்கிக்கொடுப்பதற்கு முன், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் கேட்டு, அதை எப்படி நாகரீகமாக கேட்டு வாங்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

    இன்றைய பொருளாதாரச் சுழலில், பெற்றோர் இருவரும்   வேலைக்கு செல்லவேண்டியுள்ளது. அதனால், வேலை நாட்களில் குழந்தைகளுடன் போதுமான நேரத்தைச் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். அதைப் போக்க வாரநாட்களை எடுத்துக்கொள்ளுங்கள். வார நாட்களில் குழந்தைகளுக்காக தனியாக நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் போன், லேப்டாப், டிவி போன்றவற்றின் பக்கம் தலை சாய்க்காமல் இருங்கள். அவர்களைப் பேசவிட்டு நீங்கள் ரசித்தாலே ஆனந்தமாவார்கள் குழந்தைகள். 
    உங்களின் கவனத்திறன் எப்படி? உங்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...
    சிறந்த மாணவர்களின் பண்புகளில் ஒன்று கவனத்திறன். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும், நாமாக பாடம் படிக்கும்போதும் கவனம் சிதறாமல் இருந்தால் நமக்கு எளிதில் பாடங்கள் விளங்கிவிடும். நன்றாகப் படித்தும் பாடங்கள் நினைவில் நிற்காமல் போவதற்கு கவனச்சிதறல் காரணமாக இருக்கலாம். உங்களின் கவனத்திறன் எப்படி? உங்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...

    கேள்விகளுக்கு செல்லலாமா?

    1. ஒரு பாடம் அல்லது பயிற்சி சிரமமாக இருந்தால் அதை உடனே நிராகரிப்பீர்களா?

    அ. ஆமாம், அதுதான் எனக்கு தெரியவில்லையே.
    ஆ. முயற்சித்துப் பார்க்கிறேன், ஆனாலும் விளங்கவில்லை.
    இ. இல்லை. அதை நிச்சயம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ஆசிரியரிடம் விளக்கம் கேட்பேன்.

    2. பேனா, பென்சில் போன்றவற்றை அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா? இவற்றை இரவல் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?

    அ. மறதி இயல்புதானே, நண்பர்களிடம் இரவல் கேட்பதில் தவறில்லையே.
    ஆ. மறந்துவிட்டால் இரவல் வாங்கித்தானே ஆக வேண்டும்.
    இ. மறக்கமாட்டேன், என்னிடம் அவசர தேவைக்கான கூடுதல் பேனா, பென்சில்கூட இருக்கும்.

    3. ஆசிரியர் பாடம் நடத்தும்போது எழும் சிறு சத்தம் அல்லது வெளிப்புற நிகழ்வு உங்களை ஈர்க்கிறதா?

    அ. அது என்ன? என்று ஜன்னலில் பார்ப்பேன். நண்பனிடம் பேசுவேன்.
    ஆ. ஆசிரியரை கவனிப்பேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நானும் பார்ப்பேன்.
    இ. மற்றவற்றை கவனிக்க மாட்டேன், திடீர்நிகழ்வுகளை மற்றவர் சொன்னால் கேட்டுக் கொள்வேன்.

    4. நீங்கள் படிக்கும் இடத்தில் டி.வி. ஓடுகிறதா?

    அ. வீட்டில் எல்லாம் இருக்கத்தானே செய்யும். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பேன்.
    ஆ. டி.வி. ஓடும், சத்தத்தை குறைக்க சொல்லிவிட்டு படிப்பேன்.
    இ. படிப்பதற்கு தனி இடம் செல்வேன். படிக்கத் தொடங்கினால் டி.வி. போடமாட்டார்கள்.

    5. பாடம் நடத்தும்போது எடுத்த கிறுக்கல் குறிப்புகளை, பின்னர் உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா?

    அ. குறிப்பு எடுக்க சொன்னதற்காக எழுதுவேன். பிறகு புரிவதில்லை.
    ஆ. விவரமாக குறிப்பெடுக்க நினைப்பேன் முடிவதில்லை.
    இ. ஆம், என் கிறுக்கல்கள், எனக்கு விஷயங்களை விளக்கிவிடும்.

    6. யாராவது பேசும்போது குறுக்கீடு செய்து பேசுகிறீர்களா?

    அ. ஆமாம். நான் என் கருத்தை சொல்ல வேண்டாமா?
    ஆ. பேச தயக்கமாக இருக்கும்.
    இ. இடையில் பேச மாட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது என் கருத்துகளை சொல்வேன்.

    7. வகுப்பறை சலித்துவிட்டதா?

    அ. ஆம். ஓய்வே இல்லையே.
    ஆ. வேறு வழியில்லையே.
    இ. படிக்கத்தானே வந்திருக்கிறோம். படிப்பதில்தான் விருப்பம் அதிகம்.

    8. ஒரு கேள்வி கேட்கும் போதே பதிலை உளறிக் கொட்டுவது உண்டா?

    அ. பதில் தெரிஞ்சா சொல்ல வேண்டியதுதானே.
    ஆ. பதில் தெரிந்தாலும் சொல்வதற்கு கூச்சப்படுவேன்.
    இ. என்னை பதில் சொல்ல அழைத்தால் பதில் சொல்வேன். அல்லது அனுமதி பெற்று பதிலளிப்பேன்.

    9. குறிப்புகளை படிக்காமல் விடையளித்திருக்கிறீர்களா?

    அ. தேர்வே பிடிக்காது. விடை எழுத சிரமப்படுவேன்.
    ஆ. குறிப்புகளை மறந்து நிறைய வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறேன்.
    இ. இல்லை. குறிப்புகளை படித்த பின்புதான் விடையளிக்க ஆரம்பிப்பேன்.

    10. வீட்டுப்பாடத்தை எப்போது எழுதுவீர்கள்?

    அ. பள்ளி கிளம்பும் முன்பு.
    ஆ. இரவில் தூங்கும் முன்பு
    இ. வீட்டுப்பாடம் முடித்துவிட்டுத்தான் வேறுவேலை.

    11. ஒரு புதிய பயிற்சி வழங்கினால் அதை சரியாக, சீராக செய்து முடிப்பதில் சிரமம் இருக்கிறதா?

    அ. ஆம், அதிக பயிற்சியால் அவதிப்படுகிறேன்
    ஆ. சிரமமாக இருந்தாலும் செய்து முடிப்பேன்.
    இ. இல்லை, புதிய புதிய பயிற்சிகள் உற்சாகம் தருகின்றன

    12. இணையதளத்தில் ஒரு வேலை கொடுத்தால், நீங்களாகவே முயன்று முடித்துவிடுவீர்களா?


    அ. ம்ஹூம், இன்டர்நெட் என்னை குழப்பிவிடும், நண்பர்களின் உதவியுடன்தான் கேட்டு செய்வேன்.
    ஆ. செய்ய முயற்சிப்பேன், சந்தேகம் வந்தால் நண்பர்களிடம் கேட்பேன்.
    இ. என்னால் அது முடியும். தேவையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன்.

    13. நீண்ட நேரம் கருத்தரங்கம், பயிற்சி வகுப்பில் இருக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்?

    அ. வெறுப்பாக இருக்கும், அரட்டையடித்து பொழுதுபோக்கி மகிழ்வேன்.
    ஆ. சலிப்பாக இருக்கும். வேறுவழியில்லையே.
    இ. பயனுள்ள கருத்துகளை கவனித்துக் கொண்டே இருப்பேன். அதற்காகத்தானே வந்திருக்கிறோம்.

    14. கொடுத்த பயிற்சி உங்களுக்கு தெரியாதது, விருப்பமில்லாதது என்பது தெரியவரும்போது என்ன செய்வீர்கள்?

    அ. ‘என்னம்மா இப்டி பண்றாங்களேம்மா’ன்னு நினைப்பேன். இடையில் நிறுத்திவிடுவேன்.
    ஆ. தெரிந்ததை செய்வோம் என நினைப்பேன்.
    இ. எப்படியாவது செய்து முடிக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பேன்.

    15. உரையாடும்போது நீங்கள் எப்படி பேசுவதாக மற்றவர்கள் கூறுகிறார்கள்?

    அ. என்னை யாரும், எதுவும் சொல்ல முடியாது.
    ஆ. நினைத்ததை சொல்லிமுடித்துவிடுவேன், மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை.
    இ. நன்றாக பேசியதாக கூறுவார்கள். நிறைய விஷயங்கள் பேசியதாக பாராட்டுவார்கள்.

    16. கவனக்குறைவால் தவறுகள் ஏற்பட்டதை யாராவது சுட்டிக் காட்டினால் என்ன செய்வீர்கள்?

    அ. அவர்களுக்கு வேறு வேலையில்லை என நினைப்பேன்.
    ஆ. தவறுகளை குறைக்க நினைப்பேன், ஆனாலும் முடியவில்லை.
    இ. தவறுகள் வராது. வந்தால் அடுத்தமுறை கண்டிப்பாக சரிசெய்துவிடுவேன்.

    17. பள்ளியில் உங்கள் நடவடிக்கைகள் நாள்தோறும் மாறுகிறதா?

    அ. நான் அப்படித்தான். ‘நமக்குன்னு ஒரு ‘கெத்து’ வேண்டாமா?’
    ஆ. அமைதியாக இருப்பேன், கூச்சம் அதிகம்.
    இ. என் நடவடிக்கைகளை யாரும் விமர்சனம் செய்ததில்லை. நல்ல பெயர் எடுத்திருப்பதாகவே கருதுகிறேன்.

    18. விருப்பமானதை விட்டுக் கொடுக்கவும், அவசியமானதை கடைப்பிடிக்கவும் முடிகிறதா?


    அ. நான் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
    ஆ. மாற்றங்களை கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.
    இ. தேவையற்றதை விட்டுவிடவும், அவசியமானதை கடைப்பிடிக்கவும் என்னால் முடியும்.

    இப்போது மதிப்பீட்டிற்கு வருவோம். ஒவ்வொரு கேள்வியின் முதலாவது (அ) பதிலுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கிக் கொள்ளுங்கள். இரண்டாவது (ஆ) பதிலுக்கு 5 மதிப்பெண்கள் வழங்குங்கள், மூன்றாவது (இ) பதிலுக்கு 10 மதிப்பெண்கள் வழங்குங்கள். இப்போது உங்கள் பதில்களுக்கான மொத்த மதிப்பெண்களை கூட்டுங்கள். மதிப்பெண்களுக்கு ஏற்ப கவனத்திறனை மதிப்பிட்டு மாற்றம் செய்து கொள்ளலாம்...

    உங்கள் மதிப்பெண்கள் 60-க்குள் இருந்தால்

    நீங்கள் எதையும் இயல்பாக அணுகும் பண்புள்ளவர். உங்களால் வாழ்வில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். ஆனால் அசட்டையான வேடிக்கை பண்புகளால் கவனத்திறனில் சற்று பின்தங்கியிருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களுக்கு ஒரு உத்வேகம் வரும்போது துடிப்புடன் செயல்படக்கூடியவர்கள். அப்போது உங்கள் கவனம் சிதறுவதில்லை. எதையும் அலட்சியம் இன்றி அணுகும்போது உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாது. விருப்பமுள்ள விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறையை மாணவப் பருவத்தில் படிப்பதற்கும் கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பச்சை காய்கறிகள், கீரைகள், தயிர், முட்டை, மீன் போன்றவை நினைவுத்திறனை அதிகரித்து, கவனச்சிதறலை குறைக்கும்.

    உங்கள் மதிப்பெண்கள் 120-க்குள் இருந்தால்...

    நீங்கள் போட்டி மனப்பான்மை கொண்டவர். கோபம் அதிகமாக வரும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடத்தை சீக்கிரமே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் உண்டு. ஆனாலும் தயக்கம் அதற்கு தடையாய் இருக்கும். நீங்கள் நிதானத்தை கடைப்பிடித்தால் நிறைய சாதிக்கலாம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உணவுக்கும் குணாதிசயங்களுக்கும் சம்பந்தம் இருப்பதால் உலர்ந்த பழங்கள், பச்சைக்காய்கறிகள் எடுத்துக்கொள்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி கவனத்திறனை வளர்க்கும்.

    உங்கள் மதிப்பெண்கள் 120-க்கு மேல் இருந்தால்

    நீங்கள் சிறந்த மாணவராக எல்லோர் முன்னிலையிலும் பேசப்படுகிறீர்கள். ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக இருப்பீர்கள். அவர்கள் வாக்கை அப்படியே ஏற்று செய்யும் மனப்பாங்கு கொண்ட நீங்கள் பேச்சுப் போட்டி, எழுத்துப்போட்டி, தேர்வு எல்லாவற்றிலும் சாதிப்பீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்தினால் உங்களது திறமை விரிவடையும். ஓட்ஸ் கஞ்சி, பருப்புகள், கொட்டை வகைகள், தானியங்கள், மீன் வகைகளும் எடுத்துக் கொள்வது சிறந்த கவனத்திறனுக்கு துணை செய்யும்.
    இன்றைய மாணவ சமுதாயம் புத்தகத்தை புரட்டுவதில் கூட சங்கடப்படுகிறார்கள். வாசிப்பு பழக்கத்தை மாற்றி விட்ட செல்போன் ஒவ்வொரு மனிதர்களிடமும் அட்டை போன்று ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
    தகவல் தொழில் நுட்ப உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தின் மூலை முடுக்குகளில் நடக்கும் சம்பவங்களை நம்மால் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இன்று நாம் போகவேண்டிய இடத்துக்கு கூட யாரையும் கேட்க வேண்டியதில்லை. அந்த அளவு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு தகவல் தொழில் நுட்பம் என்பது தேவை தான். ஆனால் இந்த தகவல் தொழில் நுட்பத்தால் இன்று இளைய சமுதாயம் சீர்கெட்டு வருகிறது. செல்போனில் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அதிநவீன வசதிகளும் உள்ளன.

    ஒரு வீட்டில் 5 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் 5 பேருக்கும் செல்போன்கள் உள்ளன. இது தவிர சிலர் 2 செல்போன்கள் கூட பயன்படுத்துகிறார்கள். ஆக எந்த நேரமும் செல்போனில் தான் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இரவு தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் செல்போனை நோண்டாமல் இருக்க முடியாத நிலைக்கு அதற்கு அடிமையாகி விட்டார்கள்.

    முன்பெல்லாம் பயணத்தின் போது நாளிதழ்கள், நல்ல கதை புத்தகங்களை தேர்ந்து எடுத்து படிப்பது உண்டு. இப்போது அப்படி படிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஒரு நாளிதழை அருகில் பயணிப்பவர்கள் என அனைவரும் படித்து முடித்து விடுவார்கள். அதில் நல்ல விஷயங்களையும், அரிய பல தகவல்களையும் தெரிந்து கொண்டு ஞானம் பெற்றார்கள். இன்று அந்த காட்சிகளை எல்லாம் நமது பயணத்தில் காண முடியவில்லை.

    மாறாக, அனைவரும் பேசுவதை கூட குறைத்துக் கொண்டு செல்போன்களில் மூழ்கி இருக்கும் காட்சியைத்தான் பார்க்கிறோம். வயது வித்தியாசமின்றி இப்போது செல்போன்களை பயன்படுத்துகிறோம். அதில் நமது பொன்னான நேரத்தையும் வீணடிக்கிறோம்.செல்போன்களில் இப்போது வாட்ஸ்-அப் பார்த்து அதில் நேரத்தை செலவிடும் முதியோர்களும் இதில் அடங்குவர்.

    செல்போனை 20 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தினால் அதில் உள்ள கதிர்வீச்சுக்கள் உடலுக்கும், மூளைக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதன் பாதிப்புகள் குறித்து பக்கம், பக்கமாக எழுதினாலும் அதை எல்லாம் படித்து தங்களை மாற்றிக்கொள்ளாமல் வீணடித்து வருகிறார்கள். என்று செல்போன் பயன்பாடு அதிகரித்ததோ அன்று முதல் வாசிப்பு பழக்கத்தை பெரும்பாலானோர் கைவிட்டு விட்டனர்.



    வாசிப்பு பழக்கம் தான் மனிதனை அறிவுள்ளவனாக மாற்றக்கூடிய ஆயுதம். அத்தகைய அறிவாற்றலை புறந்தள்ளி விட்டு இப்போது செல்போன் உலகத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் இன்றைய மாணவ சமுதாயம் புத்தகத்தை புரட்டுவதில் கூட சங்கடப்படுகிறார்கள். வாசிப்பு பழக்கத்தை மாற்றி விட்ட செல்போன் ஒவ்வொரு மனிதர்களிடமும் அட்டை போன்று ஒட்டிக்கொண்டு இருக்கிறது. வாசிப்பை நேசிக்க வேண்டும். அப்போது தான் அறிவு படைத்தவர்களாவோம். இந்த சமுதாயமும் நல்ல சமுதாயமாக மாறும். ஆனால் அதை விடுத்து வாசிப்புக்கு விடை கொடுத்தோம் என்றால் இனி வருங்கால சந்ததிகளை கூட நம்மால் காப்பாற்ற முடியாது.

    செல்போன் பயன்பாட்டால் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஒவ்வொரு மனிதர்களும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதில் முதன் முதலில் இருப்பது கண் தான். இன்று கண் மருத்துவமனைகளில் அதிக அளவு நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி கண் பாதிப்பினால் வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். டாக்டர் கூறிய பின்னர் தான் ஞானம் வந்ததை போன்று வருந்துகிறார்கள்.

    உள்ளே நுழைந்ததும் கண் டாக்டர் கேட்கும் முதல் கேள்வி என்ன வென்றால் நீங்கள் செல்போனில் வாட்ஸ்-அப் பார்க்கிறீர்களா? என்பது தான். இந்த கேள்விக்கும் அங்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் ஆமாம் என்கிறார்கள். இப்படி ஒட்டு மொத்த சமுதாயமும் அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கண்ணையும், மூளையும், உடலையும் பாதுகாக்க நல்ல சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலும் செல்போன் பயன்பாட்டை நிறுத்தாமல் தொடர்ந்தீர்கள் என்றால் அந்த சத்துள்ள உணவின் பயன்பாடு கிடைக்காமலே போய்விடும்.

    புத்தகத்தை படி அறிவை வளர்த்துக்கொள், நீ படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள். அப்போது தான் நல்ல விஷயங்கள் உன் மூலமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவி பாயும் என்று சொன்னது எல்லாம் அந்தக்காலம். இப்போது வாட்ஸ்அப்பில் வரும் உப்பு சப்பில்லாத கமெண்ட்டுகளை தான் பலர் ஷேர் செய்து கொண்டு இருக்கிறார்கள். பார்வையற்றவன் குருடன் அல்ல, கல்வி கற்காதவனும் பார்வையற்றவனுக்கு சமம் என்று போதனை செய்ததை இன்றைய சமுதாயம் மறந்து விட்டது. படித்தால் தான் அறிவு வளரும். எனவே வாசிப்பை பாதிக்கும் செல்போன் பயன்பாட்டை குறைப்போம். வாசிக்க தொடங்குவோம். மக்களையும் இந்த மண்ணையும் நேசிக்க தயாராவோம்.

    -மாயா, திருச்சி 
    பெற்றோரும் தங்கள் குழந்தை எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பெற்றோர் செய்யும் சில தவறுகள் குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படும். அவை என்னவென்று பார்க்கலாம்.
    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடைய வழியில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். ஆனாலும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடும். இப்போது அதிக படியான பெற்றோர் கவனக்குறைவாக செய்து ஆபத்தை ஏற்படுத்திய விஷயங்களை பார்ப்போம்.  

    * உங்கள் குழந்தையை SIDS - லிருந்து பாதுகாக்க வேண்டும். அது என்ன SIDS என்றால், திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி. அதாவது உங்கள் குழந்தை தூங்கும் தொட்டிலில் உங்கள் குழந்தையை தவிர வேறு எந்த பொருளும் இருக்க கூடாது. அதாவது உங்கள் குழந்தையின் தொட்டிலில் பொம்மைகள், தலையணைகள் அல்லது வேறு எந்த குஷனிங் பொருட்களும் இருக்க கூடாது. இவை உங்கள் குழந்தைக்கு சுவாசத்தை தடுக்கும். எனவே உங்கள் குழந்தையின் தொட்டிலில் இருந்து இவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு சிறிய போர்வையை மட்டும் போர்த்திவிடுங்கள், அதுவும் அவர்கள் கழுத்து பகுதி வரை இருக்க கூடாது. அவர்கள் அதை முகத்திற்கு இழுத்துவிட கூடாது என்பதற்காக.



    * உங்கள் சூடான கோப்பை தேநீர், காபி அல்லது வேறு எந்த சூடான பானைத்தையும் குடிப்பதற்கு முன்பே, உங்கள் குழந்தையை நீங்களே தொலைவில் இருக்கும் படி வைக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தையை நீங்கள் கையில் வைத்து கொண்டு குடிக்கும் போது என்ன பிரச்சனை இருக்கிறது என்றால், நீங்கள் தற்செயலாக நகர முயற்சிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஓட கூட முயற்சிக்கலாம். அப்போது அது தவறி உங்கள் குழந்தையின் மேல் விழுந்து விட கூடாது என்பதற்காக.

    * நீங்கள் உங்கள் குழந்தையை ஷவரில் குளிக்க வைக்க போகும் போது, குழாய் நீரில் இருந்து வரும் தண்ணீரின் வெப்பநிலையை சரிபார்க்கவும். தண்ணீர் முழுவதும் அதே போல வரப்போவதில்லை எனும் போது, ஒரு வாளி தண்ணீரை சேகரித்து, உங்கள் குழந்தையை குளிக்க வைப்பது நல்லது. உங்கள் குழந்தையின் தோல் உங்கள் தோலைவிட மிகவும் மென்மையாக இருப்பதால் அதிக வெப்பநிலையால் எளிதில் பாதிப்படையும்.

    * ஒரு விபத்து ஏற்படும் போது, காற்று பைகள் (airbags) தாக்கத்திற்கு எதிராக முன்னணியில் உள்ள பெரியவர்களைப் பாதுகாத்து, அவர்களது உயிர்களை காப்பாற்றும். அதே நம் வாழ்வை பாதுகாக்கும் காற்று பைகள் (airbags) ஒரு 10 வயது குழந்தையின் கழுத்து மற்றும் முதுகு தண்டு வடதில் சில கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த காற்று பைகள் (airbags) குழந்தைகளுக்கு ஆபத்தானவை. எனவே உங்கள் குழந்தையை முன் இருக்கையில் அமர வைக்காமல், உங்கள் அருகில் பின் இருக்கையில் அமர வைப்பது சிறந்தது.

    வ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.
    கல்வி...! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. கல்வி என்ற அளவுகோலே ஒருவரின் அறிவு, ஆற்றலை நிர்ணயிக்கிறது. அந்த அறிவு, ஆற்றலே வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தருகிறது. காரணம், கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே வேலை, அதை வைத்தே ஊதிய அளவும் மாறுபடுகிறது.

    இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.

    ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கல்லூரியிலும், அதன் பின்பு பணிதளத்திலும் ஜொலிக்க முடியும் என்ற நிலையில், பள்ளி மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை வசதியாக பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள் கட்டணம் என்ற பெயரில் பெரும் தொகை வசூல் செய்து கல்வித்துறையில் கல்லாக்கட்டத் தொடங்கிவிட்டன.

    இன்னொருபுறம், தாய் மொழியிலான தமிழ் வழிக்கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் விருப்பம் ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இருப்பதால், புற்றீசல் போல தனியார் பள்ளிகள் முளைக்கின்றன. தமிழ் வழியிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் படிப்படியாக மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த நேரத்தில் ஆங்கில கல்வியை மாணவர்களும், பெற்றோரும் விரும்புவதற்கான காரணங்களை புறந்தள்ளிவிடவும் முடியாது. இதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன. அதாவது, 12-ம் வகுப்புக்கு பிறகு, உயர்கல்வி படிக்க மாணவர்கள் கல்லூரிகளை நாடும்போது, அனைத்து வகை பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகளிலும் பெரும்பாலும் ஆங்கிலமே மேலோங்கி நிற்கிறது.

    உயர் கல்வியில் தமிழ் மங்கிப்போய் விடுவதால், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களை படிக்க கஷ்டப்படுகிறார்கள். இதை உணர்ந்த பெற்றோர், என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று, கடன் வாங்கியாவது பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்க துணிகிறார்கள். இதுதான் தனியார் பள்ளிகளின் எழுச்சிக்கும், அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் ஆகும்.

    இது தொடர்பாக, தமிழக பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசின் குழு ஒன்று, தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது நமக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் 820 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை அவர்களே சொல்லிக் கொடுப்பதாகவும் அந்த குழுவின் அறிக்கை தகவல் தருகிறது.

    ஆரம்ப பள்ளிகளை எடுத்துக்கொண்டால், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், நடுநிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும் என்று மத்திய குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் கூறுகிறது. ஆனால், ஒரு ஆசிரியரே பள்ளி முழுவதையும் கவனித்துக்கொள்ளும் நிலை வந்ததற்கான காரணம், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது தான்.

    தமிழக அரசும் இதே காரணத்தை சொல்லி, இன்றைக்கு 3 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த தயாராகிவிட்டது. காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 1,053 பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும், மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டதால், 1,950 பள்ளிகளின் கதவுகளை அடைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சீட்டுக்கட்டு போல ஆண்டுதோறும் சரிந்துகொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

    அதாவது, இங்கு சேர வேண்டிய மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை பெறுவதற்காக தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தான் இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.

    நிலைமை இவ்வாறு இருக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களும், பெற்றோரும் விரும்பும் ஆங்கில வழிக்கல்வியை தொடங்குவதற்கு அரசு தயங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம், தமிழகத்தில் கல்வியும் அரசியல் என்ற மாய வலைக்குள் சிக்கிக் கிடக்கிறதே!

    ஒருவேளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்கினால், இங்குள்ள எதிர் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள். ‘தமிழ் மடிந்துபோகுமே...!’ என்றெல்லாம் அவர்கள் கவலை தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள். தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க களம் அமைத்துக்கொள்வார்கள். அதை தடுத்து நிறுத்தும் செயலிலும் அவர்கள் குதித்துவிடுவார்கள்.

    ஆனால், அவர்களின் பிள்ளைகள் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்தார்களா?, படிக்கிறார்களா? அல்லது படிப்பார்களா? என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

    எனவே, முதலில் அரசியல் வலையில் சிறைபட்டு கிடக்கும் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். தாய் மொழி கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் பிரதானம் என்றாலும், உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் ஆங்கில வழிக்கல்வியும் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆங்கில வழிக்கல்வி படிப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்றில்லை. தமிழை பாதுகாத்து ஆங்கில அறிவையும் ஊட்ட அரசு முன்வர வேண்டும்.

    தமிழக அரசுக்கு ஆங்கிலத்தின் அவசியம் தெரிந்தாலும், தமிழை காப்பதாக நினைத்துக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. பெற்றோருக்குத்தான் பிள்ளைகளின் கல்வி பாரமாகிக் கொண்டிருக்கிறது. ‘நாம் அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தது வரை செலவான தொகையை, இன்றைக்கு நம் பிள்ளைக்கு எல்.கே.ஜி.யிலேயே செலவழிக்க வேண்டியது இருக்கிறது’ என்று அவர்கள் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைக்கவும் பணத்திற்கு என்ன செய்வது? என விடை தெரியாமல் தினமும் திகைக்கிறார்கள்.

    நாடு சுதந்திரம் அடைந்தபோது, தனியார் வங்கிகள் எல்லாம் அரசுடமையாக்கப்பட்டு, பொதுத்துறை வங்கிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த வங்கிகள் எல்லாம் இன்றைக்கு மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுபோல், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்று பாகுபாடு பார்க்காமல், அனைத்து பள்ளிகளையும், கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி, ஆங்கில வழியில் கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

    அதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும். அதே நேரத்தில், தாய் மொழியான தமிழ் மொழியை காட்டாய பாடமாக்கி, பாகுபாடின்றி அனைவரும் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ், நம் இனத்தின் அடையாளம். ஆங்கிலம், நிகழ் காலத்தின் கட்டாயம். எனவே, தாய்த்தமிழை காத்து, ஆங்கிலத்தையும் கற்பிக்க அரசு முன்வர வேண்டும்.

    -ஆர்.கே. 
    பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் சில வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

    குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

    வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் அறிவியல் ரீதியான உண்மைகளைப் பக்குவமாக சொல்லித்தர வேண்டும். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப்பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.

    தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுறுத்துவது நல்லது.

    மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.

    ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.

    குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாட்டைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.  
    மாணவர்களின் கைகளில்தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
    இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது படிப்பறிவின்மை. நாம் பெற்ற செல்வம் குறையாத செல்வம் என்று சொன்னால் அது கல்வி ஒன்றாகத்தான் இருக்க முடியும். அறியாமையைப் போக்கவல்லது கல்வி ஒன்றுதான். அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைத் தகர்க்கக்கூடிய சக்தி கல்விக்கு மட்டும்தான் உண்டு என்ற அடிப்படையில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் கல்விக் கூடங்கள் தமிழகத்தில் வளர்ச்சியைடந்தன.

    இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான். மாணவன் என்றால் மாண்+அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன், மாண்புடையவன் என்று பொருள். அதனால்தான் மாணவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றார்கள். பெருமைமிக்க திறமைகள் இப்பருவத்தில்தான் கிடைக்கும்.

    மாணவர்களின் கைகளில்தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது. மாணவர்களின் சுயதிறன் திண்மை பெற வேண்டும் என்றால், கல்வியின் தரம் உயர வேண்டும். முக்கியமாக விஞ்ஞானம், கணிதம், கணினிப் பயிற்சி கற்பிக்கப்பட வேண்டும். கல்விப் புரட்சி ஒன்றுதான் மாணவர்களின் சிந்திக்கும் சக்தியை வளர்க்கச் செய்யும்.

    தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் தோண்டத் தோண்டப் பெருக்கெடுக்கும் வல்லமை படைத்தது படிப்பறிவு ஒன்றுதான். படிக்கும் போதே ஒரு லட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். லட்சியப் பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடை செய்யக்கூடும். ஆனால், தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.

    மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாடில், எந்த ஒரு பிரச்சினை என்றாலும், அதை ஆராயும் முறையையும், கேள்வி கேட்கும் நேர்த்தியையும் புகட்டினார். ஒரு மாவீரன் உருவானான். மாணவர்-ஆசிரியர் இடையே அத்தகைய அறிவுப் பரிமாற்றம் ஏற்பட வேண்டும். அதனால்தான் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று கூறப்படுகிறது. பாரதியின் ஆத்திச்சூடி போல் புதிய கல்வித்திட்டம் அறிவொளிமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கட்டும்.

    இன்றைய மாணவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். ஏனெனில், மாணவர்கள் எவ்வாறு அமைகிறார்களோ அந்த வகையில்தான் இந்தியா செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது. சுதந்திர இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம், நாட்டை வல்லரசாக உயர்த்துவோம் என்று உறுதிகொள்ளுங்கள். 
    குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது.
    குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொள்ளாத பெற்றோர்களே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் வட்டி, கல்விக்கடன் என வாங்கி சிரமப்படுகிறார்கள். பெற்றோரின் சுமையை குறைக்க மாணவர்களான நீங்களும் சேமிக்கலாம். கல்வி சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சிறு கண்ணோட்டம்...

    பெற்றோர், குழந்தைகளின் எதிர்கால கல்விக்கான சேமிப்பை அவர்கள் சிறுவயதாக இருக்கும்போதே தொடங்க வேண்டும். அப்படி விழிப்புணர்வற்ற நிலையில் பெற்றோர் இருந்தால் மாணவர்களான நீங்கள் சாதுர்யமாக செயல்பட்டு சேமிக்கத் தொடங்க வேண்டும். இதற்காக நிதி ஆலோசகரின் உதவியை நாட வேண்டும் என்பதில்லை. உங்கள் அன்றாட செலவுக்கு கொடுக்கும் பணத்தில், அவசியமற்றதை வாங்கி பணத்தை வீணடிக்காமல் சேமித்து வைத்தாலே உங்கள் தேவைகள் பலவற்றை சாதிக்க முடியும். சிறுவயதில் இருந்தே நீங்கள் உண்டியல் பழக்கத்தை கொண்டிருந்தால் உங்கள் பள்ளித் தேவையில் சரிபாதிக்குமேல் உங்கள் சேமிப்பிலேயே ஈடுகட்ட முடியும். மாணவர்களான நீங்கள் உங்கள் பெற்றோரின் சுமையறிந்து சேமிககும் பழக்கத்தை உடனே கடைப்பிடிப்பதை வழக்கமாக்குங்கள்.

    பெற்றோரின் வருவாயில் 3 முதல் 5 சதவீதத்தை எதிர்கால கல்விக்காக சேமிக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்தால் 6-7 சதவீதம் வரை சேமிப்பதை வாடிக்கையாக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் பள்ளி செல்ல தொடங்கிவிட்டால், கல்விக்காக செலவிடும் தொகை உங்கள் வருவாயில் 20 முதல் 25 சதவீதம் வரை எட்டிவிடும். படித்த பெற்றோரே இதை அறிந்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை நீங்கள்தான் முதல் தலைமுறை கல்வியாளர் என்றால், பெற்றோருக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.

    பெற்றோர் தேர்ந்தெடுக்கும் பள்ளியைப் பொறுத்து படிப்புச் செலவு அதிகரிக்கலாம், குறையலாம். ஆனால் முறையாக இந்தத் தொகை சேமிக்கப்படாவிட்டால் அது வீட்டு பட்ஜெட்டின் வேறு திட்டத்தில் முடக்கம் ஏற்பட காரணமாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு என்பதை பெற்றோருக்கு விளக்குங்கள். அடிப்படைத் தேவையான சொந்த வீடு கனவு, மகிழ்ச்சிக்கான சுற்றுலா செலவு, உறவு பேணுதலுக்கான செலவுகளை, கல்விச் செலவுத் தொகை விழுங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது கடன் சுமையுடன், மனச்சுமையையும் அதிகரிக்கும்.

    அதற்காக சிறுசிறு செலவுகளில் கவனமாக இருங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை தந்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்க பழகுங்கள். பெற்றோருக்கும் சொல்லிக் கொடுங்கள். மிச்சமாகும் சில்லறைத் தொகையைக்கூட உண்டியலில் போட்டுவைத்து, மாதம் ஒருமுறை சேமிப்பில் செலுத்திவிடலாம்.



    பொருட்கள் வாங்கச் செல்லும்போது, ஒன்றுக்கு இரண்டாக வாங்குவது, எப்போதாவது தேவைப்படும் என்று இப்போதே வாங்கி வைத்தல் போன்ற அலட்சியமான பழக்கத்தை மாற்றுவது சேமிப்பை அதிகமாக்கும். அதே நேரம் வாங்கும் பொருட்களின் தரம் (உதாரணம் ஸ்கூல் பேக், காலணி, உடை), பணம் விரயமாவதை தடுக்கும். எனவே தரமான பொருளை வாங்கி மீண்டும் மீண்டும் ஒரே பொருளுக்காக செலவிடும் தொகையை மிச்சப்படுத்தி அவசியமான சேமிப்புத் தொகையை அதிகரிக்கலாம்.

    சுவைக்காக வெளியில் சாப்பிட செலவிடும் தொகை, உணவைத் தாண்டிய உபரி செலவுகள், ஆடம்பர பொருட்களா பள்ளி கல்லூரிக்கு செல்ல பைக், கார் கேட்பது, விலை உயர்ந்த செல்போன் கேட்பது, அதற்காக பெற்றோரை கடன் வாங்க வைப்பது , பின்னர் வட்டிக்கு பெரும் தொகையை செலுத்துவது போன்றவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் அது நீங்கள் சேமிக்கும் தொகையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். இவற்றை கட்டுப்படுத்த நீங்்களும் பெற்றோருக்கு உதவலாம்.

    மொத்தத்தில் செலவு திட்டமிட்டதாக இருந்தால், சேமிப்பு காலியாகாது. சேமிப்பே உங்கள் பெற்றோரின் கனவுகளுக்கும்,உங்களின் கல்விககும், எதிர்காலத்திற்கும் சிறந்தது.

    சிறுகச் சேர்த்து பெருக வாழ் என்பது பெரியோர் வாக்கு. அது என்றும் பொய்ப்பதில்லை. சேமிப்பை நிரந்தர சேமிப்புகள், தற்காலிக சேமிப்புகள் என இருவகையாக பிரித்துக் கொள்ளுங்கள். எதிர்கால கல்விக்கான சேமிப்பை நிரந்தர சேமிப்பாக கருதுங்கள். அந்த தொகையை எந்த சூழ்நிலையிலும் எடுத்து செலவு செய்ய முடியாத வகையில் டெப்பாசிட் செய்ய வேண்டும். வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் எதிர்கால கல்விக்கான சேமிப்புத் திட்டங்கள் இருப்பது பற்றி பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள்.

    “என் குழந்தைக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும்”, “என் பிள்ளை புத்திசாலி, நிறைய மதிப்பெண்கள் பெற்று முன்னுரிமை பெற்றுவிடுவதால் எனக்கு நிறைய செலவு வராது” அதனால் நான் சேமிக்கத் தேவையில்லை என்று நினைப்பதும், “நான் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் எனது குழந்தையை சேர்க்க மாட்டேன், எனவே எதிர்கால கல்வியைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்பது போன்ற எண்ணங்களை பெற்றோர் கொண்டிருக்கலாம். அவர்களிடம் எதிர்கால கல்விக்காகசேமிப்பதன் அவசியத்தை உணர்த்துவது புத்திசாலி மாணவர்களான உங்களின் பொறுப்பு. சேமிப்பில் உங்கள் கனவும் அடங்கியிருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள!
    தாய்ப்பால் கொடுப்பதற்கும் புட்டிப்பால் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அதனால் புட்டிப்பால் குடிக்கும்பொழுது, குழந்தைகளிடம் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
    குழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய கவலை எப்போதுமே நமக்குத் தேவையில்லை. போதுமான அளவு பால் குடித்ததும் குழந்தை தானாகவே குடிப்பதை நிறுத்தி கொள்ளும். தாய்ப்பால் கொடுப்பதற்கும் புட்டிப்பால் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. ஆனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்பொழுது சில உடலசைவுகள், சைகைகள் மூலம் அவர்களுக்கு என்ன வேண்டும் என தாய்க்கு உணர்த்திவிடும். ஆனால் புட்டிப்பால் குடிக்கும்பொழுது, குழந்தைகளிடம் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

    குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் குழந்தையை தோள் மீது கிடத்தி அல்லது மடியில் நேராக உட்கார வைத்து மெதுவாக அதன் முதுகில் தட்டி கொடுங்கள். குழந்தை ஏப்பம் விடட்டும்.

    பால் கொடுத்த பிறகு குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என சில தாய்மார்கள் சந்தேகம் எழுவதுண்டு. பொதுவாக பார்முலா உணவுகளில் உப்பு, புரதம், கார்போஹைட்ரேட்டுக்கள் போன்ற அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் என்பதால் பால் மட்டுமே போதுமானது. ஆனால் காய்ச்சலுடனோ அல்லது வெயில் காலமாகவோ இருந்தால் குழந்தைக்கு நாவறட்சி ஏற்படும். இந்த சமயங்களில் அவ்வப்போது தண்ணீர் கொடுப்பது நல்லது.

    பாட்டில் பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும். குறைவாக பால் குடிக்கும் குழந்தைக்கும் மலச்சிக்கல் வரும். இதை தவிர்ப்பதற்கு குழந்தைக்கு சரியான விகிதத்தில் பால் புகட்டுவது, போதுமான தண்ணீர் கொடுப்பது நல்லது.

    குழந்தை குடித்து முடித்த பால் புட்டியை திறந்து, தண்ணீரில் கழுவாமல் அப்படியே சூடாக இருக்கும் வெந்நீரில் போட வேண்டும்.  புட்டியில் இருக்கும் பால் வெந்நீரில் கலந்து அது வெண்மையாகும். பின் அந்த புட்டியை எடுத்து பச்சைத்தண்ணீர் விட்டு நன்கு அலச வேண்டும்.
    ×