என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா? நடக்காத காரியம்.
    • நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கலைஞர். அவர் எழுதிய "பராசக்தி" படத்தின் அற்புதமான, சமுதாய சீர்திருத்தும், புரட்சிகரமான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி, நடித்து சிவாஜி கணேசன் ஒரே நாளில் உச்ச நட்சத்திரம் ஆனார். எம்.ஜி.ஆருக்கு "மருதநாட்டு இளவரசி","மந்திரிகுமாரி", "மலைக்கள்ளன்" போன்ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்களை மிகப்பெரிய வெற்றிப்படங்களாக்கி எம்.ஜி.ஆரை நட்சத்திரமாக மாற்றினார்.

    1977-ம் ஆண்டு என்னுடைய பியட் காரை மியூசிக் அகாடமி பக்கம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வண்டி வந்துகொண்டிருந்தது. வண்டியில் வந்துகொண்டிருந்தவரை என் கார் கண்ணாடி மூலம் உற்றுப்பார்த்தேன். நன்கு தெரிந்த முகம். கண்ணில் கருப்புக்கண்ணாடி. கலைஞர் என்று தெரிந்தது. நான் அப்படியே இடது பக்கமாக ஒதுங்கி வழி விட்டேன். எனது காரை கடக்கும் போது அவர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்து கைகளை ஆட்டினார். காரில் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுதான் நான் கலைஞரை முதல் முதலில் பார்த்தது.


    நான் 1980-ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் நண்பர் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் தயாரிப்பாளர் என்னிடம் வந்து "நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன்... நம் படத்துக்கு கலைஞர் வசனம் எழுத ஒப்புக் கொண்டார்" என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

    எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா? நடக்காத காரியம்... இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம். தயாரிப்பாளரிடம் முடியவே முடியாது என்று கூறினேன். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு இடி விழுந்த மாறி ஆயிற்று. அவர் வசனம் எழுத சம்மதித்ததே நமக்கு கிடைத்த பாக்கியம். அவர் வசனம் எழுதினால் நம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் இல்லையென்றால் அவர் எழுத சம்மதித்த பிறகும் நீங்கள் வேண்டாம் என்று கூறியதை அவரிடம் நான் எப்படி சொல்வது என்று திண்டாடினார். நான் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன் என்று கூறினேன். அவரும் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்லி கலைஞரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

    கலைஞரை சந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றேன். வாங்க என்று அவருக்கே சொந்தமான அந்த கரகரப்புக் குரலில் என்னை அழைத்து நலம் விசாரித்தார். பின்பு "கதையைக் கேட்டேன்... நன்றாக இருக்கிறது. சிறப்பாக வசனங்களை எழுதிடலாம்" என்றார். நான் அவரிடம் "சார் உங்கள் வசனங்களை நான் பேச முடியாது.


    எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை எப்படி நான் பேசுவது? என்னால் முடியாது. தவறாக நினைக்க வேண்டாம்" என்று கூறினேன். அதற்கு அவர் சிரித்து "எனக்கு யாருக்கு எப்படி எழுதவேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு எழுதுவது போல எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டேன்... அதே போல எம்.ஜி.ஆருக்கு எழுதுவதைப்போல சிவாஜிக்கு எழுதமாட்டேன். உங்கள் படங்களை நான் பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுகிறேன்" என்று சர்வ சாதாரணமாக கூறினார். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனை அந்த நொடியில் எனக்கு தோன்றியதற்கு நீ கெட்டிக்காரன்டா என்று நானே மகிழ்ந்து "சார் படப்பிடிப்பில் நாங்கள் சில வசனங்களை மாத்துவோம் சில வசனங்களை நீக்குவோம். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை மாத்தவும் முடியாது நீக்கவும் முடியாது. அது சரியானதாகவும் இருக்காது" என்று கூறினேன்.

    அதற்கு அவர் "மாற்றுங்கள்.. ஒன்றும் தவறில்லை, அது என்ன திருக்குறளா?'' என்று கூறினார். அவர் அப்படி சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் நொடியில் சாம்பல் ஆகி விட்டது. எனக்கு ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தேன். இதை கவனித்த கலைஞர் சிரித்துக்கொண்டே "முன்னால் யார் வசனங்களை எழுதினாரோ அவரே எழுதட்டும்... நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்..." என்று கூறி தன் உதவியாளரிடம் தயாரிப்பாளரை அழைக்கும் படி கூறினார்.

    தயாரிப்பாளரிடம் "என்னுடைய வசனங்களை பேசுவதற்கு தனக்கு கஷ்டமாக இருக்கும் என்று ரஜினி கூறுகிறார். நான் அவருடைய பாணியிலேயே எழுதித் தருகிறேன் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார். ஆனால் இந்த மாதம் 10-ந்தேதி படப்பிடிப்பு என்று ரஜினி கூறுகிறாரே... நான் அடுத்த மாதம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்... காலம் மிகவும் கம்மியாக இருக்கின்றது. எனக்கு ஏற்கனவே முன் நிர்ணயிக்கப்பட்ட வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆகையால் இந்தப் படத்திற்கு என்னால் வசனங்கள் எழுத முடியாது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி தயாரிப்பாளரை அனுப்பி வைத்தார். பிறகு என்னைப் பார்த்து "என்ன ரஜினி இப்போ உங்களுக்கு திருப்தியா?" என்று கேட்டார்.


    தயாரிப்பாளரின் மனதையும் துன்புறுத்தாமல், என்னையும் திருப்திபடுத்திய அவருடைய செய்கையால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் அவருடைய வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ? தவறு செய்து விட்டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.

    பல நேரங்களில் நான் அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவர் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் அவரை கவனித்துப் பார்த்ததில் எந்த ஒரு முடிவையும் எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எடுக்கமாட்டார். அதற்கு சம்மந்தப்பட்டவர்களில் பல பேருடன் விசாரித்து, பேசி, விவாதித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார். அப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கும் முக்கியமான முடிவை நிச்சயம் கலைஞர் பல பேரின் ஆலோசனைகளை கேட்டுதான் எடுத்திருப்பார்.

    எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து "இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம். நீங்கள் மட்டும் கேட்டு பிறகு என்னிடமே திருப்பிக்கொடுத்து விடுங்கள்" என்று கூறினார். அது 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு அவருக்கும் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் நடந்த தொலை பேசி உரையாடல் ஆகும். அதில் எஸ்.எஸ்.ஆர். "அண்ணே... ஏதோ கெட்ட நேரம் அவசர அவசரமாக என்னென்னமோ நடந்து விட்டது. வருங்காலத்தில் கழகத்திற்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும். வேறு யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் ஒரு பொது இடத்தில் சந்தித்து மனம் விட்டுப்பேசினால் எல்லாம் சரி ஆகிடும்.


    கலைஞரிடம் நான் பேசுகிறேன். எனக்காக இதை செய்யுங்கள்" என்று கூறுவார். அதற்கு எம்.ஜி.ஆர். "இல்லை தம்பி.. என்னுடைய விசுவாசிகள் எனக்கு ஆதரவாக போராட்டங்கள் செய்து என்னுடைய அபிமானிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள். நான் திரும்பி கட்சியில் சேர்ந்தால் என்னுடைய அபிமானிகளை கட்சியில் உள்ளவர்கள் முந்தைய மாதிரிப் பார்க்க மாட்டார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவார்கள் அவர்கள் எல்லாம் உதிரிப்பூக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகவே நான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வேறு வழியில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதே" என்று அந்த உரையாடல் முடிந்திருக்கும்.

    அதன் பின் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அதன் பின் யார் யார் எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சொன்னார்களோ.. அதில் பல பேர் ஒவ்வொருவராக கட்சில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்கம் போனார்கள். அதனால் கலைஞரின் இதயம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்?

    எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்னாரோ? எவ்வளவு வேதனைகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி தொண்டர்களுக்கு அவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், கட்டுரைகள், சினிமாவில் எழுதிய வசனங்கள், அவர் செய்த சுற்றுப்பயணங்கள், மேடைப்பேச்சுகள், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்டுக் கோப்பாக, ஒரு தனி ஆளாக கட்சியை வழி நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சி.

    கலைஞர் வாழ்ந்த அதே காலத்தில் நானும் வாழ்கிறேன், அவருடைய இதயத்தில் எனக்கென்று ஒரு தனி இடம் இருந்தது. அதனால்தான் எந்த ஒரு விழாவிலும் என்னை அவர் அருகில் அமர வைத்து மகிழ்வார் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 1996-ம் ஆண்டு ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    'கந்தன் கருணை' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி அதன்பின்னர் 'மூன்று முடிச்சு' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வந்தார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இவர் பல மொழி படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.


    நடிகை ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஒரு ஓட்டலின் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். இவரது மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. அதன்பின்னர் பல தகவல்களுக்கு பிறகு அது ஓய்ந்தது.


    இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள நேர்காணலில், "ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. திடீர் விபத்தால் நிகழ்ந்த மரணம். துபாயில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து விசாரணைகளும் எனக்கு நடந்தன. இறப்பில் எந்தக் குற்றமும் இல்லை என்றும் அது தற்செயலாக நடந்த விபத்து என்றும் போலீசார் உறுதிப்படுத்தினர்.


    ஸ்ரீதேவி திரையில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக அடிக்கடி பட்டினி இருப்பார். எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து சட்டென மயக்கமாகும் நிலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறார். அப்போது தான் மருத்துவர் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாக கூறினார். திருமணத்துக்கு முன்னதாக, இதேபோல் டயட்டில் இருந்ததால் குளியலறையில் விழுந்து பல் உடைந்து போனதாக ஸ்ரீதேவி இறந்தபின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்'' என்று போனி கபூர் கூறினார்.

    • நடிகை குஷ்பு நடிப்பு மற்றும் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
    • ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு புகழ் பெற்றவர் குஷ்பு.

    தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு புகழ் பெற்ற குஷ்பு நடிப்பது மட்டுமல்லாமல் பா.ஜ.க கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், நடிகை குஷ்புவுக்கு கேரளா, திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்த கோவிலில் வருடந்தோறும் ஒரு பெண்ணை தேர்வு செய்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம், அந்த வகையில் நடிகை குஷ்புவை கோவில் நிர்வாகம் தேர்வு செய்து அழைப்பு விடுத்தது. அதை ஏற்று கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் குஷ்பு கலந்து கொண்டார்.


    இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, "கடவுளின் தெய்வீக ஆசீர்வாதம். திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் நாரி பூஜை செய்ய என்னை அழைத்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இத்தகைய பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் நன்றி" என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.


    • ரஜினியின் 170-வது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    தலைவர் 170 போஸ்டர்

    இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 'தலைவர் 170' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.


    • விநாயகக் செந்தில் என்பவர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தார்.
    • இந்த குற்றச்சாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு 'அசோசியேஷன்ஸ் ஆப் அறுவை சிகிச்சை இந்தியா' என்ற அமைப்பினர் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஏ.ஆர்.ரகுமானை புக் செய்து முதற்கட்டமாக ரூ. 29 லட்சத்தி 50 ஆயிரத்தை அசோசியேஷன் கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சி நடக்காததால் முதற்கட்டமாக கொடுத்த தொகையை அசோசியேஷன், ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்டுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். இந்த காசோலையை பல முறை வங்கியில் செலுத்தியும் பவுன்ஸ் ஆனதால் இது நிலுவையில் இருந்தது.

    கடந்த 5 வருடமாக ரூ. 29 லட்சத்தி 50 ஆயிரத்தை திருப்பி கொடுக்கப்படாமல் இருந்ததால் இது தொடர்பாக அந்த அசோசியேஷனின் அமைப்பு செயலாளர் விநாயகக் செந்தில் என்பவர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கத்தால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என்றும் தன்னுடைய நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளனர். தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை நான் பெறவில்லை. மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள அந்த சங்கம் தேவையில்லாமல் தன் பெயரை களங்கப்படுத்தும் விதமாக புகாரளித்துள்ளனர்.

    அறுவை சிகிச்சை நிபுணர்கள் அளித்த நோட்டீஸை 3 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும். அதோடு ரகுமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அயலான் போஸ்டர்

    இந்நிலையில், 'அயலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டரை பகிர்ந்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படம் வருகிற 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'ரத்தம்' திரைப்படத்தின் ஐந்து நிமிட ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
    • சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி இசைத்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசைத்திறமையுள்ள பலரின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.



    இந்நிகழ்ச்சியில் சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வார எபிசோடிலும் பல அற்புதமான தருணங்கள் நிகழ்ந்து வருகின்றன. நிகழ்ச்சியின் தொடக்க வாரத்தில், பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.



    எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், கலர்வெடி கோகுல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார் இசையமைப்பாளர் தமன்.


    நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்னதாகவே தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் தமன். கலர் வெடி கோகுலை விமானத்தில் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு படத்திற்காக வாய்ஸ் டெஸ்ட் எடுத்துள்ளார். மேலும் கலர் வெடி கோகுலுக்கு முதல் சம்பளத்தை தந்து அசத்தியுள்ளார். கலர் வெடி கோகுல் பாடப்போகும் பாடல், படம் மற்றும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் விவரங்கள் பின் வரும் வார நிகழ்ச்சிகளில் வெளியிடப்படவுள்ளது.

    தமன் 'இது கலர் வெடி கோகுலின் திறமைக்குக் கிடைத்த பரிசென்றும் அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்வார்' என்றும் பாராட்டினார். நிகழ்ச்சி முடிவடையும் முன்னர் கலர் வெடி கோகுல் சினிமா பாடகராக மாறியது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, போட்டியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளது.

    • ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    தலைவர் 170 போஸ்டர்

    மேலும், இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 'தலைவர் 170' திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. 1991-ம் ஆண்டில் வெளியான 'ஹம்' திரைப்படத்தில் ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    • ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    தலைவர் 170 போஸ்டர்

    மேலும், இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 'தலைவர் 170' திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் இணைந்து 'மேரி கிறிஸ்மஸ்' படத்தில் நடித்துள்ளனர்.
    • இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.

    பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மேரி கிறிஸ்மஸ்'. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.


    மேரி கிறிஸ்மஸ்

    இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். 'மேரி கிறிஸ்மஸ்' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது, இப்படம் டிசம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

    • ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளனர்.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    மேலும், இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, "படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தற்போது செல்கிறேன். அடுத்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும். 170-வது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

    ×