என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ1 பட டீசரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர் சந்தானம் நடிப்பில் தயாரிக்கப்பட்ட ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் ஒன்) திரைப்படத்தின் 2-வது டீசர் வெளியாகி இருக்கிறது. 

    அதில் ‘லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் நடக்கும் கலாசலான லவ் ஸ்டோரி’, ‘ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி’ ‘மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்,’ காதலுக்காக குடும்பத்தையே உதறிய புரட்சி நாயகன் என்றும், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வருகிற 27-ந்தேதி திரைப்படம் வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்யும் விதத்தில் டீசர் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக உள்ள நிலையில் ஒரு வீணான பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறோம்.

    ஏ1 பட டீசரில் இடம்பெற்ற சர்ச்சை காட்சி

    இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது. அப்படி இருக்கையில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்து நடிகர் சந்தானம், ஜான்சன், ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    பிரபல நடிகை ஒருவர் பிச்சைக்காரர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு தவியாய் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தனியாக சிக்கிக்கொள்ளும் ஹீரோயின்களை செல்பி எடுக்கிறேன் என்று ரசிகர்கள் முற்றுகையிட்டு குறும்பு செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. தற்போது ஒரு நடிகை பிச்சைக்காரர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு தவியாய் தவித்த சம்பவம் நடந்திருக்கிறது. 

    மும்பையில் ஷாப்பிங் செய்ய மால் ஒன்றுக்கு சென்ற ரகுல் பிரீத் சிங், ஷாப்பிங்கை முடித்துவிட்டு காரில் ஏற வந்தார். அப்போது அங்கு நின்ற சில பிச்சைக்காரர்கள் கூட்டமாக ரகுலை முற்றுகையிட்டு பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.

    பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த ரகுல் பிரீத் சிங்

    இதை சற்றும் எதிர்பார்க்காத ரகுல் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார். அவர்களிடம் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்த ரகுலின் தர்மசங்கடமான நிலையை பார்த்தவர்கள் வேகமாக ஓடிவந்து அவரை பிச்சைக்காரர்களிடமிருந்து மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவுகிறது.
    ’என்.ஜி.கே.’ படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள ’காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    சூர்யா, மோகன்லால்

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'காப்பான்' படத்தின் சிங்கிள் டிராக் 'சிறுக்கி' பாடல் சமீபத்தில் ரிலீசாகி ஹிட் ஆனது. இதனையடுத்து இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 
    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 21-ந் தேதி நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றுபோனது. கமல் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று கூறப்பட்டது. 

    தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பிலிருந்து பின்வாங்குவதாகவும் ஷங்கர் வேறு தயாரிப்பாளர்களை அணுகிவருவதாகவும் திரைத்துறையில் பேசப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். 

    காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிப்பது ஏற்கனவே உறுதியான நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராஜேசும், பிரியா பவானி சங்கரும் இணைந்து நடிக்க உள்ளனர். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடித்துவரும் இருவரும் கமலுடன் இணைந்து முதல்முறையாக நடிக்க உள்ளனர்.
    சில நாட்களுக்கு முன் காணாமல் போன பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
    பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் (வயது 70). இவர் எவ்ரிபடி ரைட்ஸ் ஆப் காரவ்சல், அன்னி ஹால், பிட்வின் த லைன்ஸ், தி மேன் வித் ஒன் ரெட் ஷூ, த கோல்ட சைல்ட், சிவில் ஆக்‌ஷன், மான் ஹாட்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அமெரிக்க டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 

    சார்லஸ் லெவின் கடந்த 8–ந் தேதி திடீரென்று மாயமானார். குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். சார்லஸ் லெவினின் மகன் தந்தையை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தார். போலீசாரும் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். ஆனாலும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    சார்லஸ் லெவின்

    இந்த நிலையில் சார்லஸ் லெவினின் கார் ஒரேகானில் உள்ள செல்மா என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர். காரை திறந்து பார்த்தபோது காருக்குள் அவரது நாய் இறந்து கிடந்தது. கார் நின்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதையும் கண்டு பிடித்தனர். 

    உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அது சார்லஸ் லெவின் உடல் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடக்கிறது. சார்லஸ் லெவின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    உலக கோப்பை கிரிக்கெட்டின் ஐ.சி.சி. பவுண்டரி விதிமுறையை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வித்தியாசமாக விமர்சித்துள்ளார்.
    மும்பை:

    உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் டை (சமன்) ஆன பிறகு கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரும் சமன் ஆனதால் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) இந்த விதிமுறை கேலிக்கூத்தானது, அதை தூக்கி எறிய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் பவுண்டரி விதிமுறையை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வித்தியாசமாக விமர்சித்துள்ளார். ‘உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் ஒரே நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ.2 ஆயிரம் நான்கு 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது. நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க அதற்கு நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ளவரே பணக்காரர்’ என்று ஐ.சி.சி. சொல்வது போல் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

    இதே போல் இந்தி நடிகரும், அரசியல்வாதியுமான பரேஷ் ரவால் தனது டுவிட்டர் பதிவில் ‘டோனியின் கையுறையை மாற்றுவதற்கு பதிலாக ஐ.சி.சி. முட்டாள்தனமான இத்தகைய விதிமுறைகளை மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் பாடல் இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

    முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார். முன்னதாக அழகிய தமிழ்மகன், மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய போதும் ரகுமான் இசையில் விஜய் பாடியதே இல்லை. 

    பிகில் படக்குழு

    பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர். இதில் கதாநாயகி நயன்தாரா மருத்துவ மாணவியாக நடிப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. 

    இந்நிலையில், இப்படத்தின் பாடல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ’சிங்கபெண்ணே’ பாடல் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவன் தொடர்பான செய்தியை, கவனத்திற்கு கொண்டுவந்த மாலை மலருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலட்சுமி. இவரது மகன் குருசூரியா. வினோதமான நோய் தாக்கப்பட்டதால் குருசூரியா படுத்த படுக்கையாகி விட்டான். இந்த நிலையில் குருலட்சுமியின் கணவரும் பிரிந்து சென்றுவிட்டார். குருலட்சுமியின் தம்பி வெங்கடேசன் தனது அக்கா மற்றும் அக்காவின் மகனுக்காக திருமண வாழ்வை தியாகம் செய்து அவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்.

    மிகவும் ஏழ்மையினால் அவர்களால் குருசூரியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை சந்தித்தால் தேவையான மருத்துவ உதவிகிடைக்கும் என்று சொன்னதை கேட்டு 3 பேரும் சென்னை புறப்பட்டு வந்தனர். ஆனால் அவர்களால் ராகவா லாரன்ஸ் முகவரியை கண்டு பிடித்து அவரை சந்திக்க முடியவிலலை.

    இதனால் எதுவும் புரியாமல் தவித்த அவர்கள் 3 பேரும் எழும்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே கடந்த சிலதினங்களாக தங்கி இருந்தனர். இதுபற்றி தகவல் நேற்றைய மாலை மலரில் படத்துடன் வெளியானது. அதை பார்த்ததும் ராகவா லாரன்ஸ் உடனடியாக அவர்களுக்கு உதவ முன் வந்தார்.

    சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த 3 பேரை நடிகர் ராகவா லாரன்ஸ் வீட்டிற்கு அழைத்து உபசரித்த காட்சி

    படவேலைகளில் மும்முரமாக இருந்தும் இன்று காலையில் முதல் வேலையாக தனது உதவியாளரை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு காரில் அனுப்பி குருலட்சுமியும், வெங்கடேசனையும் ராகவா லாரன்ஸ் அழைத்துவர கூறினார். அதைகேட்டதும் அவர்கள் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் வடித்தனர். பின்னர் 3 பேரையும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராகவா லாரன்ஸ் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    அச்சிறுவனின் மருத்துவ செலவுகளை ஏற்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். 3 பேரும் என்னை நம்பி வந்து கஷ்டப்பட்டதை மாலை மலரில் பார்த்ததும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த சிறுவனுக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப உதவி செய்யப்படும். எங்களால் முடியாத அளவுக்கு இருந்தால் அரசை அணுகுவோம். என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.
    இந்நிலையில், இந்த செய்தியை எனது கவனத்திற்கு கொண்டுவந்த மாலை மலர் நாளிதல் மற்றும் இணையத்தளத்துக்கு  எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 
    வெளிநாட்டு டி.வி.க்களை தொடர்ந்து, தென் இந்திய டி.வி.க்களிலும் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    வெளிநாட்டு டி.வி.க்களில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தென் இந்திய டி.வி.க்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 21-ந்தேதி துவங்க உள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். இந்நிலையில் மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார்.

    இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கில் பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டியை பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்தனர். அப்போது பிக்பாஸ் வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஸ்வேதா புகார் தெரிவித்தார்.

    ஸ்வேதாவின் புகார் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பிக்பாஸ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை காயத்திரி குப்தா. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பே என்னிடம் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தை அவர்கள் திரும்ப பெற்றுள்ளனர். ஒப்பந்தம் போடப்பட்டதால், நான் வேறு எந்த புதிய வாய்ப்புகளையும் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் நான் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன்.

    காயத்திரி குப்தா

    பிக்பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் இல்லாமல் வாழ முடியுமா? என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கேட்டனர். இது என்ன மாதிரியான கேள்வி என நான் அவர்களிடம் கேட்டேன். டி.ஆர்.பி.க்கு உத்தரவாதம் தரவில்லை எனில் உங்களை நாங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் நடத்தும் நிர்வாகிகள் கேட்டனர். அப்படி என்றால் ஏன் இரண்டரை மாதத்துக்கு முன்பு அவர்கள் என்னுடன் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். எனக்கான சம்பளத்தை கூட அவர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சில நாடகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் யாருடனாவது ஏற்கனவே கருத்து வேறுபாடு அல்லது பிரச்சினை இருக்கிறதா என்றும் என்னிடம் அவர்கள் கேட்டனர். அவர்களை பொறுத்தவரை நான் யாருடனாவது பிரச்சினை செய்யவில்லை என்றால் டி.ஆர்.பி. கிடைக்காது. 

    பிக்பாஸ் ஒப்பந்தத்தில் உள்ள சில வி‌ஷயங்கள் முற்றிலுமாக நியாயத்துக்கு புறம்பானது. நிகழ்ச்சிக்கு எதிராக பேசக்கூடாது என ஒப்பந்தம் போடுகின்றனர். இது அடிமைத்தனத்தை தவிர வேறு என்ன? பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நாம் பேச வேண்டாமா? எனவே தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு நஷ்டஈடு வேண்டும். பிக்பாஸால் நான் நிறைய இழந்துவிட்டேன். இவ்வாறு காயத்திரி கூறியுள்ளார்.
    என்.ஜி.கே. படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
    என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    சூர்யா, சாயிஷா

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'காப்பான்' படத்தின் சிங்கிள் டிராக் 'சிறுக்கி' பாடல் சமீபத்தில் ரிலீசாகி ஹிட் ஆனது. இதனையடுத்து இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பு நாளை (ஜூலை 17) காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சுப்பு இயக்கத்தில் சுமன், அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘உணர்வு’ படத்தின் முன்னோட்டம்.
    சுப்பு இயக்கத்தில் புதுமுகங்கள் அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உணர்வு’. உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவித டயலாக்கும் இல்லாமல் சமீபத்தில் வெளியான உணர்வு படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. 

    சுமன்

    பல சர்வதேச படவிழாக்களில் திரையிட்டு நிறைய விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தை நயன்த் எலிவேஷன் நிறுவனத்தின் சார்பில் ஜே.சேகர் தயாரித்துள்ளார். நகுல் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டேவிட் ஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சுமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் ஜோதிகா மீது சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
    ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராட்சசி' படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்தாமல் கதை புத்தங்கள் படிப்பது, செல்போனில் முடங்கி கிடப்பது, மாணவர்கள் சிகரெட் பிடிப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. 

    அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாததால் அவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர முடியவில்லை என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. இந்த வசனமும், காட்சிகளும் உண்மையாக உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியது.

    ஜோதிகா

    இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- 

    ஜோதிகா நடிப்பில் வெளி யாகி உள்ள “ராட்சசி” படத்தில் வாத்தியார்களால்தான் நாடே கெட்டு பேச்சு என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே ‘ராட்சசி’ படத்தை தடை செய்து ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×