என் மலர்tooltip icon

    கார்

    ஹோண்டா விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹோண்டா விற்பனையாளர்களில் சிலர் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளன. இதன் விலை விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், சில விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் டிசம்பர் மாத வாக்கில் விநியோகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கின்றன. 

    முன்னதாக வெளியான தகவல்களில் பி.எஸ். 6 சிட்டி மாடலில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் பிஎஸ். 4 வெர்ஷனை போன்று 119 ஹெச்.பி. திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 பெட்ரோல் மாடல் விலை பி.எஸ். 4 மாடலை விட ரூ. 35,000 முதல் ரூ. 40,000 அதிகமாக இருக்கும்.

    ஹோண்டா சிட்டி

    ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 மாடலில் டூயல் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 15-இன்ச் அலாய் வீல், ரிமோட் லாக்கிங், பவர் விங் மிரர் மற்றும் விண்டோக், ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர், ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2020 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
    அக்டோபர் 2019 மாத விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



    அக்டோபர் 2019 மாத காலத்தில் மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இது முந்தைய மாத்தை விட 4.5 சதவிகிதம் அதிகம் ஆகும். 

    முந்தைய மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1.53 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 1.41 லட்சம் யூனிட்கள் உள்நாட்டிலும், 9,158 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனையில் யு.வி. பிரிவு 11.3 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    யு.வி. பிரிவில் விடாரா பிரெஸா, எர்டிகா எம்.பி.வி., எக்ஸ்.எல்.6 பிரீமியம் எம்.பி.வி. மற்றும் எஸ் கிராஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனைக்கு தீபாவளி பண்டிகை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் பல்வேறு தள்ளுபடி மற்றும் சலுகைகளும் வழங்கப்பட்டன.

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

    மாருதி நிறுவனம் கடந்த மாதம் எஸ் பிரெஸ்ஸோ மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் அறிமுகமான முதல் இரு மாதங்களில் 10,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மாருதி நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 ரக வாகனமாக எஸ் பிரெஸ்ஸோ இருக்கிறது. 

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஆல்டோ கே10 மாடலில் வழங்கப்பட்டதை விட மேம்பட்ட என்ஜின் ஆகும். இதே என்ஜின் மற்ற என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹோண்டா இந்தியா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 10,000-க்கும் அதிக கார்களை விற்பனை செய்திருக்கிறது.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் அக்டோபர் 2019 இல் மட்டும் 10,010 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4,177 யூனிட்கள் குறைவு ஆகும். அக்டோபர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 633 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

    "ஆட்டோமொபைல் துறையின் மந்த நிலையை பண்டிகை காலம் மாற்றியமைத்துவிட்டது. அதிக தள்ளுபடி மற்றும் பண்டிகை கால சலுகைகள் காரணமாக வாகன விற்பனை அதிகரித்தது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது கடந்த மாத விற்பனை ஹோண்டாவிற்கு சாதகமாக அமைந்தது. இதே நிலை வரும் மாதங்களிலும் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்" என ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார். 
    ஹோண்டா அமேஸ்

    தற்சமயம் ஹோண்டா கார்ஸ் இந்தியா - ப்ரியோ, அமேஸ், ஜாஸ், டபுள்யூ.ஆர்.-வி, சிட்டி, பி.ஆர்.-வி, சிவிக், சி.ஆர்.-வி மற்றும் அக்கார்ட் என மொத்தம் ஒன்பது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ஹோண்டா ஜாஸ் புதிய வேரியண்ட்டை டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது.

    இத்துடன் சர்வதேச சந்தைக்கான ஹோண்டா சிட்டி மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின. இந்த கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் புதிய செடான் மற்றும் ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்யலாம்.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்.யு.வி. கார் கடந்த மாதம் மட்டும் சுமார் 3500 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் அக்டோபர் 2019 மாதத்தில் எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. மாடல் மொத்தம் 3500 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் 31 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 3536 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

    இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 26 சதவிகிதம் அதிகம் ஆகும். செப்டம்பர் மாதத்தில் 2608 எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி.க்கள் விற்பனை செய்யப்பட்டன. அக்டோபர் மாதத்தில் பண்டிகை காலம் என்பதால் வாகன விற்பனை அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. 

    எம்.ஜி. ஹெக்டார்

    இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகமான எம்.ஜி. ஹெக்டார் அமோக வரவேற்பு காரணமாக ஒரே மாதத்தில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. பின் செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் முன்பதிவு துவங்கப்பட்டது. அக்டோபர் 11 ஆம் தேதி வரை சுமார் 8000 பேர் எம்.ஜி. ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

    அக்டோபரில் எம்.ஜி. ஹெக்டார் உற்பத்தி எண்ணிக்கை 10,000 யூனிட்களை கடந்ததது. இதுவரை எம்.ஜி. மோட்டார் இந்தியா சுமார் 700 எம்.ஜி. ஹெக்டார் யூனிட்களை ஒரே நாளில் விநியோகம் செய்தது.
    ஃபோர்டு மஸ்டாங் மாடலை தழுவி உருவாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



    ஃபோர்டு மஸ்டாங் சார்ந்து உருவாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புறம் மஸ்டாங் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய காரில் சர்வதேச சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மஸ்டாங் மாடல்களில் உள்ளதை போன்று ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக ஃபோர்டு நிறுவனம் மேக் 1 மாடலின் டீசரையும் வெளியிட்டது.

    மேக் 1 டீசர்

    டீசரில் ஃபோர்டு ரேஞ்சர் எஸ்.யு.வி. மற்றும் மஸ்டாங் கார்கள் டெட்ராயிட்டில் உள்ள ஃபோர்டு தலைமையகத்திற்கு செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலாக உருவாகும் இந்த கார் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் பின் இந்த கார் எல்.ஏ. ஆட்டோ விழாவிலும் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 எஸ்.யு.வி. கார் இந்தியாவில் மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்7 கார் இந்தியாவில் வெளியான மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்தக் கட்ட மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இவற்றுக்கான விநியோகம் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மாடல்: எக்ஸ்டிரைவ் 30டி டிசைன் பியூர் எக்சலென்ஸ் டீசல், எக்ஸ்டிரைவ் 40ஐ பெட்ரோல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டீசல் வேரியண்ட் மாடல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. பெட்ரோல் வேரியண்ட் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 40ஐ மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் எடிஷனில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7

    இந்த என்ஜின் 260 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மாடல்: மினரல் வைட், பைடோனிக் புளு, பிளாக் சஃபையர், டெரா பிரவுன், ஆர்க்டிக் கிரெ பிரிலியன்ட் எஃபெக்ட் மற்றும் கார்பன் பிளாக் என மொத்தம் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. எக்ஸ்டிரைவ் 40ஐ மாடல் மட்டும் ஆல்பைன் வைட், வெர்மாண்ட் பிரான்ஸ் மற்றும் சொஃபிஸ்டோ கிரே பிரிலியன்ட் எஃபெக்ட் போன்ற கூடுதல் நிறங்களில் கிடைக்கிறது.
    மெர்சிடிஸ் பென்ல் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. கார் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய எஸ்.யு.வி. மாடலின் விலை பிப்ரவரி 2020 வாக்கில் அறிவிக்கப்படும் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

    நான்காம் தலைமுறை ஜி.எல்.இ. மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எனினும், இதன் வெளிப்புற தோற்றம் முதல் தலைமுறை எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட அதிக நீலமாகவும், வீல்பேஸ் 80 மில்லிமீட்டர் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

    காரின் உள்புறம் இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற அம்சம் சமீபத்தில் அறிமுகமான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களிலும் வழங்கப்படுகிறது.

    2020 மெர்சிடிஸ் பென்ல் ஜி.எல்.இ.

    இந்தியாவில் புதிய ஜி.எல்.இ. மாடலில் பி.எஸ். 6 ரக டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பேஸ் மாடலான ஜி.எல்.இ. 400டி காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும். இந்த என்ஜின் 330 ஹெச்.பி. @3600-4000 ஆர்.பி.எம். செயல்திறனையும் 700 என்.எம். டார்க் @1200-3000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும்.

    இதைத் தொடர்ந்து ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 245 ஹெச்.பி. @4200 ஆர்.பி.எம். செயல்திறனையும் 500 என்.எம். டார்க் @1600-2400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். ஜி.எல்.இ. பெட்ரோல் என்ஜின் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் யூனிட் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 367 ஹெச்.பி. @5500-6100 ஆர்.பி.எம். செயல்திறனையும் 500 என்.எம். டார்க் @1600-4500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். அனைத்து என்ஜின்களும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
    சொகுசு கார்களை தயாரிக்கும் லெக்சஸ் ஆர்.எக்ஸ். 450 ஹெச்.எல். எனும் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



    சொகுசு கார்கள் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் தனது புதிய மாடல் ஆர்.எக்ஸ். 450 ஹெச்.எல். மாடலை அறிமுகம் செய்தது. புதிய கார் இதில் மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது செல்ப் சார்ஜிங் ஹைபிரிட் மாடல் காராகும். 

    இந்தியாவில் இதன் விலை ரூ.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் பேட்டரியில் ஓடக் கூடியது. இதில் 3.5 லிட்டர் என்ஜின் உள்ளது. இது பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்டுள்ளது.

    இந்த காரில் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம், தொடுதிரை என பிரீமியம் காருக்குரிய தொழில்நுட்பங்கள்  வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் அளிக்கப்பட்டு 10 ஏர் பேக்குகளை வைத்துள்ளது இந்நிறுவனம்.

    லெக்சஸ் ஆர்.எக்ஸ். 450 ஹெச்.எல்.

    இத்துடன் ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், இ.எஸ்.சி., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட், அசிஸ்ட் ஆக்டிவ் கார்னரிங் அசிஸ்ட், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார், ரியர் கேமரா உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன.

    பிரீமியம் மாடலில் வந்துள்ள ஹைபிரிட் எஸ்.யு.வி.க்கு வசதி படைத்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்பது நிச்சயம். இந்தியாவில் இந்த கார் ஆடி கியூ 7, பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5, மெர்சிடஸ் ஜி.எல்.இ. உள்ளிட்ட பிரீமியம் கார்களுக்குப் போட்டியாக களமிறங்கி உள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.





    மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்படுவதாகவும் இந்தியாவில் இந்த கார் வணிகரிதியில் அடுத்த ஆண்டு வெளியாகாது என தெரிவித்துள்ளது. 2020 ஆண்டு வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அடுத்தக்கட்ட சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி. பார்கவா இதுபற்றி கூறியதாவது,

    எலெக்ட்ரிக் வாகன பணிகள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிலையிலேயே இருக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரை தொடர்ந்து சோதனை செய்யப்படும். மாருதி சுசுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் வணிக ரீதியில் வெளியிடுவதற்கான நிலையில் இல்லை. 

    வேகன் ஆர் எலெக்ட்ரிக்

    இருசக்கர வாகனங்களை எலெக்ட்ரிக் மயமாக்க அரசு சலுகைகள் அதிகம் வழங்கப்படுகின்றன. எனினும், பயணிகள் கார்களுக்கு நிலைமை வேறாக இருக்கிறது. இதனாலேயே மாருதி சுசுகி தனது இ.வி. வாகனத்தை வெளியிடுவதில் அமைதி காக்கிறது. எலெக்ட்ரிக் வாகனத்தை தற்சமயம் வணித ரீதியில் வெளியிடும் பட்சத்தில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. 

    மேலும் தற்சமயம் இந்த கார் வெளியானால் அதன் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான அச்சத்தை மேலும் அதிகப்படுத்தி விடும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    டேட்சன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான டேட்சன் இந்தியாவில் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி பண்டிகை காலத்தில் டேட்சன் நிறுவன வாகனங்களை வாங்குவோர் தேர்வு செய்யும் மாடல்களுக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ. 62,000 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    தீபாவளி சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு உடனடி தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    டேட்சன் நிறுவன என்ட்ரி லெவல் மாடலான ரெடி கோ ஹேட்ச்பேக் காருக்கு ரூ. 62,000 மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 27,000-க்கு தள்ளுபடி, ரூ. 30,000 மதிப்புள்ள எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 5,000 வரை வழங்கப்படுகின்றன.

    ரெடி கோ ஹேட்ச்பேக் மாடலில் 800சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 63.2 பி.ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடனஅ 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    டேட்சன் ரெடி கோ

    டேட்சன் கோ ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ. 32,000 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10,000 மதிப்புள்ள தள்ளுபடி, ரூ. 20,000-க்கு எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 2000-க்கு வழங்கப்படுகிறது.

    கோ ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 104 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    கோ பிளஸ் காம்பேக்ட் எம்.பி.வி. மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 29,000 மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 7000 மதிப்புள்ள தள்ளுபடி, ரூ. 20,000 மதிப்பில் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 2000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
    எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. இந்திய உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    எம்.ஜி. ஹெக்டார் இந்திய உற்பத்தியில் 10,000 யூனிட்களை கடந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் 5000 மைல்கல் கடந்த நிலையில், 1.5 மாதங்களில் மற்றொரு 5000 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    இந்தியாவில் அறிமுகமான எம்.ஜி. ஹெக்டார் முதற்கட்ட உற்பத்தியில் 5000 யூனிட்களை கடக்க எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மூன்று மாதங்களை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி. ஹெக்டார் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா ஆலையில் மாதம் 1500 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

    பின் அமோக வரவேற்பு காரணமாக உற்பத்தி எண்ணிக்கை மாதம் 3000 யூனிட்களாக அதிகரிக்கப்பட்டது. இத்துடன் ஹெக்டார் உற்பத்தியை மேலும் அதிகப்படுத்த எம்.ஜி. மோட்டார் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எம்.ஜி. ஹெக்டார்

    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கு ஏற்கனவே 40,000 முன்பதிவுகளை ஏற்று இதுவரை 6000 யூனிட்களை விநியோகம் செய்துள்ளது. இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. விலை ரூ. 12.48 லட்சத்தில் துவங்கி ரூ. 17.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழில்நுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
    ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் புதுவித நிறத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.



    ஹூன்டாய் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான மாடல் வென்யூ. காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலாக வந்துள்ள இந்த கார் இப்போது இரட்டை வண்ணத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இரட்டை வண்ணத்தில் உருவாகும் ஹூன்டாய் கார் வென்யூ எஸ்.எக்ஸ். மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஹூன்டாய் வென்யூ

    இதில் 90 ஹெச்.பி. திறன் 1.4 லிட்டர் என்ஜின் கொண்ட டீசல் மாடல் மற்றும் 83 ஹெச்.பி. திறன் 1.2 லிட்டர் என்ஜின் கொண்ட பெட்ரோல் மாடல் ஆகியன மற்றும் 120 ஹெச்.பி. திறன், 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு மாடல்கள் இரட்டை நிறத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

    இதில் 1.2 பெட்ரோல் மாடல் கார் 5 கியர்களைக் கொண்டதாகவும், 1.4 லிட்டர் என்ஜின் கொண்ட டீசல் மாடல் 6 கியர்களுடன் வரும் என தெரிகிறது. இதன் டர்போ பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் மாடல் 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.

    ஏற்கனவே டாடா நெக்சான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் கார்கள் இரட்டை வண்ணத்தில் வெளியாகியுள்ளன. அதற்குப் போட்டியாக புதிய வென்யூ காரை ஹூன்டாய் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
    ×