குழந்தை பராமரிப்பு
null

கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளை மாற்றுவது எப்படி?

Published On 2025-10-29 15:00 IST   |   Update On 2025-10-29 15:01:00 IST
  • கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு.
  • என் குழந்தைக்கு கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்.

பெற்றோர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பயம் குழந்தைகளின் அமைதி, அதாவது கூச்ச சுபாவம். கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பாகும். மனோதத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி 10-20 சதவீதம் குழந்தைகள் பிறக்கும்பொழுதே கூச்ச சுபாவம் கொண்டவையாக இருக்கின்றன. கூச்சம் என்பது அமைதியின் ஒரு வெளிப்பாடே. அவர்கள் எதற்காக அமைதியாக இருக்கிறார்கள் என்பதை முதலில் தெளிவுப்படுத்தி, அதிலிருந்து வெளியேக்கொண்டு வாருங்கள். கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளை மாற்றுவது குறித்த சில யோசனைகளை காணலாம்.

முத்திரை குற்றுவதை நிறுத்துங்கள்

முதலில், என் குழந்தைக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள். இதில் சிலர் பெருமைக்கொள்வார்கள். இதில் பெருமைக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. வீட்டில் நம் குடும்பத்தினர் மட்டுமே இருப்போம். அதனால் குழந்தைகள் பெரும்பாலும் மற்ற முகங்களை பார்த்திருக்கமாட்டார்கள். ஒரு பொதுவெளியில் அதாவது ஒரு விழாவிற்கோ, கோயிலுக்கோ செல்லும்போது புதுமுகங்களை பார்ப்பர். தெரியாதவர்கள் என்பதால் சில குழந்தைகள் பேசமாட்டர்கள். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். பெற்றோர்கள்தான் இவர்கள் நம் உறவினர், நண்பர் எனக்கூறி அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அந்த பயத்தை போக்கவேண்டும். புதிய நபர்களை பார்க்கும்போதும் அல்லது பொது இடத்திற்கு செல்லும்போதும் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும். சிலர் இதைவிடுத்து அவன் என்னமாதிரி அமைதியா இருப்பான் என கூறுவார்கள். பின்னர் அவனுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என இவர்களே கூறுவர். இதுபோல உங்களுடையை குணாதிசியம் என லேபிளிடாமல் அது கூச்ச சுபாவமா அல்லது சங்கடமா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அப்படி பேசுவதற்கு சங்கடம் எனும்போது அதனை விளக்கி சரிசெய்யுங்கள். 

கூச்சத்தை பலவீனமாக பார்க்கவேண்டாம்

முதலில் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு அது புதிதாக இருக்கும். முதல்நாள் பள்ளி வகுப்பறையை கற்பனை செய்துகொள்வோம். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே ஓடி, ஓடி விளையாடுவார்கள், சிரிப்பார்கள், அங்குள்ள பொருட்கள், புத்தகங்களை எடுத்து பார்ப்பார்கள், துறுதுறுவென இருப்பார்கள். மற்ற குழந்தைகள் அனைவரும் அமைதியாகத்தான் இருப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல புதிய முகங்கள் பழக பழக அவர்களும் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். பள்ளி மட்டுமின்றி வீட்டிலும் சில குழந்தைகள் அமைதியாக இருப்பார்கள். இதனைப் பார்க்கும் பெற்றோர்கள் பலரும் மந்தமாக இருக்கிறான் எனக் கூறுவார்கள். அது மந்தம் இல்லை. அமைதி. அனைத்து குழந்தைகளும் ஒரே சுபாவத்தை கொண்டிருக்கமாட்டார்கள். அதனால் அமைதியை பலவீனமாக பார்க்கவேண்டாம்.


குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுதல் கூடாது

குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்

கொஞ்சம் தைரியமாக இருக்கும் குழந்தைகள் கூச்ச சுபாவத்திற்கு ஆளாகமாட்டார்கள். மனதில் பயம் இருந்தால்தான் சில குழந்தைகள் பேசமாட்டார்கள். அதனால் குழந்தைகள் எதையாவது எண்ணி பயத்தில் இருக்கிறார்களா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பயத்தில் இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசுங்கள். கோபத்தில் சில பெற்றோர்களே குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுவர். அது அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அதனால் சுபாவங்களை வைத்து பிள்ளைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும்.

தனியாக விடவேண்டும்

குழந்தைகளோடு எப்போதும் ஒன்றாக இருப்பதை தவிர்க்கவேண்டும், அதாவது பொதுஇடங்களில். குழந்தைகளை பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். நிறையபேர் இருக்கும் அந்த இடத்தில் அவர்களை சுதந்திரமாகவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் அதில் கவனம் செலுத்த தொடங்கினால் கொஞ்சம் அவர்களை விட்டு தள்ளிச்செல்லுங்கள். தேவைப்பட்டால் திரும்பி பிள்ளைகளிடம் செல்லுங்கள்.

வெளிப்படைத்தன்மையை பாராட்டுங்கள்

குழந்தைகள் அவர்களுக்கு புதிதாக ஒரு விஷயம் தெரியவரும்போது நம்மிடம் வந்து ஆர்வமாக கூறுவார்கள். நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் சிலர் அதை காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள். குழந்தைகள் பேசுவதை ஆர்வமாக கேளுங்கள். அவர்கள் சொல்லும் விஷயங்கள் தவறாக இருந்தாலும், எடுத்தவுடன் கோபப்பட வேண்டாம். அதை வெளிப்படையாக சொல்வதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். பின்னர் தவறை சுட்டிக்காட்டி திருத்தவேண்டும். திட்டினால் அடுத்தமுறை சொல்லமாட்டார்கள். மறைக்க நினைப்பார்கள். அதனால் அவர்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையாய் இருப்பதை பாராட்டி, அப்படியே தொடர அனுமதிக்கவேண்டும்.

Tags:    

Similar News