என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது.
    • மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

    சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை கடந்த 2023 செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் ரயில் கடக்கிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது.

    ஆனால் இந்த ரயில் பல்வேறு பயணிகள் இறங்கி இடம்மாறும் நிறுத்தமான விருத்தாசலத்தில் நிற்காமல் சென்றுவந்தது. இதனிடையே பயணிகள் பலரும் இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்றுசெல்லவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து வந்தே பாரத் ரயில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் தேதி குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ராமேசுவரம்:

    வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை புவனேஸ்வரிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த புவனேஸ்வர் விரைவு ரெயிலில் போலீசார் சோதனை செய்தபோது ரெயிலின் பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 5 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் ராமேசுவரம் ரெயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது யார் என்பது குறித்து ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    25-ந்தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    26 மற்றும் 27ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    21-12-2025 மற்றும் 22-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்தியமேற்கு- தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.
    • அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு கடந்த 16-ந்தேதி தமிழகத்தில்; இலவச மின்சாரம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகள் தட்கல் திட்டத்தில் இணைப்பு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று காலக்கெடு எதுவும் குறிப்பிடாமல் அறிவித்து இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியான 2 தினங்களில் அதாவது கடந்த 18-ந்தேதி மதியம் 2 மணியுடன் இத்திட்டம் நிறைவுப் பெற்றுவிட்டதாக விண்ணப்பம் பெறுவதை நிறுத்திவிட்டார்கள்.

    பல லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் போது 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.

    எனவே, அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு குறைந்த பட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது இத்திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    • நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பாசனத்திற்கு போக வைகை அணைக்கு செல்லும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

    999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணையின் மேலாண்மை, நீர் பயன்படுத்தும் உரிமை, நீர்திறப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை தமிழக பொதுப்பணித்துறை செய்து வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என கேரள அரசு மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் வதந்தியை கிளப்பி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு தமிழக அதிகாரிகள் பராமரிப்பு பணி மேற்கொள்ள தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    கடந்த 2011ம் ஆண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்.ஓ.வி. நீர்மூழ்கி கலத்தை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அணை பலமாக உள்ளது. அச்சப்பட தேவையில்லை என உத்தரவிட்டு பல்வேறு வழிகளை வழங்கி வருகின்றனர். கடந்த நவம்பர் 10ம் தேதி அணையை மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. பின்னர் மதுரையில் நடத்திய ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் நவீன ஆர்.ஓ.வி. மூலம் ஆய்வு நடத்த இரு மாநில அதிகாரிகள் ஒப்புதலோடு முடிவு எடுக்கப்பட்டது.

    தரைக்கு மேல் இருந்து இயக்கப்படும் இந்த கருவி மூலம் அணைக்கு அடியில் நீரில் மூழ்கியுள்ள சுவர்கள், தடுப்புகள், கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை ஆராயலாம். மேலும் ஆழமான அபாயகரமான பகுதிகளில் கருவிகள் பொருத்தப்பட்ட காமிராக்கள் மூலம் முப்பரிமாண வீடியோ மற்றும் படங்களை பதிவு செய்து கொள்ளலாம. 14 ஆண்டுகளுக்கு பின்னர் 2வது முறையாக ஆய்வு நடத்துவதற்காக ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆர்.ஓ.வி. நீர் மூழ்கி கலம் வரவழைக்கப்பட்டு தமிழக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் ஆய்வுக்காக சுமார் 7 பேர் கொண்ட வல்லுனர் குழுவுடன் துறை அதிகாரிகள், இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் நாளை முதல் அணையின் 250 மீட்டர் நீருக்கு அடியில் அணையின் உட்புறம், முன்புறப்பகுதிகளில் ஆய்வு நடைபெற உள்ளது. தினசரி 20 மீட்டர் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்பதால் 12 நாட்கள் வரை ஆய்வு நடபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

    போக்குவரத்து சேவையில் புறநகர் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புறநகர் மின்சார ரெயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக பயணம் செய்யலாம் என்பதாலும் அதில் பயணிப்பதை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

    சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

    தற்போது ரெயில் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. வழக்கமாக உள்ள அதே கட்டணமே நீடிக்கிறது. இதேபோல் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
    • என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.

    அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற மாணவி அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான டாக்டர் ஒருவர் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

    இது தொடர்பாக மாணவி அளித்துள்ள புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரி உரிமையாளரான டாக்டர் எனக்கு காலை 6.30 மணிக்கு போன் செய்து நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. நேரில் வா என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து பகல் 1 மணி அளவில் நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதன் பிறகு டாக்டர் தனது காரில் பெண் ஒருவருக்கு மசாஜ் செய்ய வேண்டி உள்ளது என என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி நான் அவருடன் கொளத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காரில் சென்றேன்.

    அப்போது டாக்டர் என்னிடம் நீ, காபி, டீ எதுவும் சாப்பிடுகிறாயா? என்று கேட்டார். நான் அந்த பழக்கம் இல்லை என்று கூறினேன். இதையடுத்து காரில் இருந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தார். அதனை குடித்ததும் நான் மயக்கம் ஆகிவிட்டேன்.

    அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது எனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை.

    என்னை காரில் அழைத்து சென்ற டாக்டரும் ஆடை எதுவும் இன்றி படுக்கையில் எனது அருகில் படுத்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளி விட்டு விட்டு உடைகளை அணிந்துக் கொண்டு அங்கிருந்து அச்சத்துடன் வீட்டுக்கு வந்து விட்டேன். பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.

    பின்னர் இதுபற்றி எனது அக்காவிடம் கூறினேன். இதற்கு பிறகு அவரும், எனது உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடமும், அவரது மனைவியிடமும் இதுபற்றி கேட்டு சண்டை போட்டனர்.

    என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னுடன் தகாத உறவில் ஈடுபட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மருத்துவ மாணவி முதலில் இந்த புகார் மனுவை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் மாணவி அளித்த புகார் மீது தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    மாணவி புகாரில் கூறி இருப்பது பற்றிய தகவல்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களையும் சேகரித்தனர். இதில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து டாக்டர் கார்த்திகேயனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பிசியோதெரபிஸ்ட் டாக்டரான இவர் சொந்தமாக ஆஸ்பத்திரியை நடத்தி வரும் நிலையில்தான் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிசியோதெரபிஸ்ட் படித்து வந்த கொடுங்கையூர் மாணவியை அடைவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று ஏமாற்றி மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து கொளத்தூர் ஜெயந்தி நகர் 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாணவியை அழைத்துச் சென்ற போதுதான் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதற்காக கோககோலா குளிர்பானத்தை வாங்கி அதில் மயக்க மருந்தை கலந்து தயாராக வைத்திருந்து உள்ளார்.

    இதைதான் மாணவிக்கு கொடுத்து மயக்கம் அடைய செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கற்பழித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பிசியோதெரபிஸ்ட் டாக்டரான கார்த்திகேயன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு உள்ளது. பி.என்.எஸ். 123-குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருளை சாப்பிட கொடுத்தல், பி.என்.எஸ். 63-கற்பழிப்பு, பி.என்.எஸ். 64-கற்பழிப்புக்கான தண்டனையை உறுதி செய்யும் பிரிவு ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் டாக்டர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த பாலியல் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2026-27-ம் ஆண்டில் ஸ்காலர்ஷிப் பெற இப்போதே விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்ப பதிவு படிவத்தை நிரப்பி, மதிப்பெண் தாள்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகம் மற்றும் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைந்து 2026- 27-ம் கல்வியாண்டுக்கான விஜய் தகுதி ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது. திறமையான மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2026-27 கல்வியாண்டிற்கான விஜய் தகுதி ஸ்காலர்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-26-ம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஸ்காலர்ஷிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில், தொடர்ந்து இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

    கடந்த ஆண்டு 180-க்கும் மேல் கட்ஆப் மதிப்பெண் பெற்ற தகுதியான மாணவர்களுக்கு 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஸ்காலர்ஷிப், உயர்கல்விக்கான ஸ்காலர்ஷிப், ஒற்றை பெற்றோரின் குழந்தைகளுக்கான ஸ்காலர்ஷிப் ஆகியவையும் வழங்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து, 2026-27-ம் ஆண்டிலும் தகுதியான மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது. திறமைகளை மேம்படுத்துவதும், நிதி நெருக்கடி காரணமாக எந்த மாணவரும் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கம் ஆகும்.

    2026-27-ம் ஆண்டில் ஸ்காலர்ஷிப் பெற இப்போதே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு 100 சதவீதம் இலவச கல்வி வழங்கப்பட உள்ளது. அதாவது 10, 11, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் வரை தொடர்ந்து நல்ல மதிப்பெண்களை பெற்று, பிளஸ் 2 தேர்வில் 185-க்கும் மேல் கட்ஆப் மதிப்பெண் பெறுவதில் நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

    தேசிய அல்லது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், சிறந்த விளையாட்டு வீரர்கள், உயர்கல்வி பெறுபவர்கள், ஒற்றை பெற்றோரின் குழந்தைகள் ஆகியோருக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான விண்ணப்ப பதிவு படிவத்தை நிரப்பி, மதிப்பெண் தாள்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 28.2.2026 ஆகும். விண்ணப்பங்களை https://forms.gle/Vfvry5Wru4beQ64JA என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

    • கீழடி அகழாய்வு அறிக்கையை இன்று வரை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது.
    • 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர்.

    நெல்லையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பொருநை, தமிழரின் பெருமை; இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. தெற்கில் இருந்துதான் வரலாற்றை எழுத வேண்டும்

    என்ற நமது கூற்றுக்கு சான்றாக உள்ளது.

    கீழடி அகழாய்வு அறிக்கையை இன்று வரை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது.

    கீழடி, பொருநை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட வேண்டும்.

    தனித்துவமான தமிழர்களின் வரலாற்று பெருமையை வெளிக்கொணரும் எந்த ஆய்வும் நடைபெறக்கூடாது என மத்திய அரசு தடுக்கிறது.

    இல்லாத சரஸ்வதி நதி நாகரீகத்தைத் தேடி அலைவோருக்கு, கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரியவில்லை. அதற்காக நாம் விட்டுக் கொடுக்க முடியுமா? 2000 ஆண்டுகால சண்டை இது, தோற்றுப் போக மாட்டோம்.

    100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கியது குறித்து, போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி மூச்சு கூட விடவில்லை.

    காந்தியின் பெயரை நீக்கியதுடன், 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினகரன் என்பவரிடம் இருந்து ஒரு பாம்பை வாங்கி தந்தையின் காலில் கடிக்க வைத்துள்ளனர். ஆனால், அப்போது கணேசன் உயிர் தப்பிவிட்டார்.
    • மீண்டும் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை வரவழைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, 3 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகத் தனது தந்தையைப் பாம்பைக் கடிக்க வைத்துக் கொலை செய்த இரண்டு மகன்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

    கடந்த அக்டோபர் மாதம், இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது மகன் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    கணேசன் இறந்த பிறகு, அவரது மகன்கள் மோகன்ராஜ் (29) மற்றும் ஹரிஹரன் ஆகியோர் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரினர்.

    ஆனால், கணேசன் பெயரில் வருமானத்திற்கு மீறிய வகையில் பல காப்பீட்டு பாலிசிகள் இருப்பதையும், அந்த குடும்பத்திற்குப் பல இடங்களில் கடன் இருப்பதையும் கவனித்த காப்பீட்டு நிறுவனம், காவல்துறையிடம் புகார் அளித்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    தந்தையைக் கொன்று விபத்து மரணமாகக் காட்டினால் பெரிய தொகையை ஈட்டலாம் என மகன்கள் திட்டமிட்டுள்ளனர்.

    சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே, தினகரன் என்பவரிடம் இருந்து ஒரு பாம்பை வாங்கி தந்தையின் காலில் கடிக்க வைத்துள்ளனர். ஆனால், அப்போது கணேசன் உயிர் தப்பிவிட்டார்.

    மீண்டும் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை வரவழைத்து, அக்டோபர் 22 அதிகாலையில் கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்துள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.

    பாம்பு கடித்தவுடன், அது தானாக வீட்டிற்குள் வந்தது போலக் காட்ட அந்தப் பாம்பை அங்கேயே அடித்துக் கொன்றுள்ளனர்.

    இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் மற்றும் அவர்களுக்குப் பாம்பை ஏற்பாடு செய்தும் உதவி புரிந்தும் வந்த பாலாஜி, பிரசாந்த், தினகரன், நவீன்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
    • நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.

    தென்னிந்தியாவின் ஆகஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவ னங்கள் அதிகம் உள்ளன.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய, மாநில அளவில் நெல்லை மாவட்டம் கல்வியில் சாதனை படைத்து வருகிறது. உயர் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளும் நெல்லையில் அதிகமாக உள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள், விஞ்ஞானிகள் என பலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயர் அறிவியல் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

    இத்தகைய சிறப்புமிக்க பாளையங்கோட்டையில் அண்ணா, கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்று அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் மாணவ-மாணவிகள், போட்டி தேர்வாளர்கள், உயர் கல்வி கற்பவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டுமென்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார். மேலும் முதலமைச்சரிடமும் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.

    இதையடுத்து பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நூலகம் அமைப்பதற்காக பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு தேர்வு செய்தார். அந்த இடத்தில் நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து அங்கு 3 ஏக்கர் நிலத்தில் 69 ஆயிரத்து 414 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைப்பதற்கு இடம் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இந்த நூலகம் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இதில் உயர் கல்வி கற்பதற்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்கள், போட்டி தேர்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அரங்கம், மாநாட்டு கூடம் வசதி, குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் படிப்பதற்கு தனி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெறுகிறது.

    சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்றே அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படு கிறது. இங்கு போட்டித் தேர்விற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகிறது. இந்த நூலகம் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டுக்கு மேலும் ஒரு பெருமையை சேர்க்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • இதுவரை 3 ஆயிரத்து 783 நர்சுகள் பணி நிரந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
    • 45 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் மூலம் இட்மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    போராட்டம் நடத்துவது அவர்கள் உரிமை. ஆனால் முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது சரியானதல்ல. ஏனெனில் இது மக்கள் உயிர் சார்ந்த பணி என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், அவர்களை தூண்டி விடுபவர்களும் உணர வேண்டும்.

    ஒப்பந்த நர்சுகளை பொறுத்தவரை 2014-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள். அவர்களை பணி அமர்த்திய போதே 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு கூலி பணியிடங்கள் உருவாகும்போது சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற விதியையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதை ஏற்றுதான் பணியிலும் சேர்ந்துள்ளார்கள்.

    ஆனால் நான்கைந்து ஆண்டுகள் யாரையும் பணி நிரந்தரம் செய்யாமல்விட்டு விட்டார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்த பிறகுதான் ஆண்டு தோறும் உருவாகும், காலி பணியிடங்கள் உடனுக்குடன் விதிப்படி நிரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆயிரத்து 783 நர்சுகள் பணி நிரந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

    நாளை மறுநாள் (செவ்வாய்) 169 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க இருக்கிறேன். போராட்ட குழுவினரின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் தரப்பில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.

    புதிய வேலை வாய்ப்புகள் என்பது மருத்துவத்துறையின் கட்டமைப்புகள், மருத்துவ பயனாளிகளின் எண்ணிக்கை, நிதி ஆதாரம் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து அரசு எடுக்கும் கொள்கை முடிவு சார்ந்தது.

    மருத்துவத் துறையில் 18 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு 35 ஆயிரம் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். 45 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வளவு வெளிப்படை தன்மையாக நிர்வாகம் நடந்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்னதாக நேரில் சந்தித்து பேசி இருக்கலாம். அவர்களும் துறையின் அங்கத்தினர்கள் தான் தேர்தல் நேரத்தில் யாரோ தூண்டி விடுகிறார்கள். உண்மை நிலையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×