search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷீலா தீட்சித்"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று மாலை சந்தித்த அக்கட்சியின் மூத்த பிரமுகரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான ஷீலா தீட்சித் அவரது ராஜினாமா முடிவை கைவிடுமாறு வற்புறுத்தினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று நாடு முழுவதிலும் உள்ள மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    எனினும், ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். அவரை சந்திக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி வந்துள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் கடந்த இருநாட்களாக ராகுல் வீட்டின் அருகே முகாமிட்டுள்ளனர். ஆனால், அவர்களை ராகுல் சந்திக்கவில்லை.

    அவரது  தாயார் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி உள்ளிடோரை தவிர கடந்த இருநாட்களாக ராகுல் காந்தியின் வீட்டுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த பிரமுகரும் டெல்லி முன்னாள் முதல் மந்திரியும் டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித்  தலைவர் ராகுல் காந்தியை இன்று மாலை சந்தித்தார்.

    ராஜினாமா முடிவை கைவிடுமாறு வற்புறுத்திய அவர் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

    ‘தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எங்களது எண்ணத்தை ராகுல் காந்தியிடம் தெரிவித்து அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வற்புறுத்தினேன். 

    நீங்கள் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்காவிட்டால் மிகுந்த வேதனைக்குள்ளாவோம் என்னும் எங்கள் கட்சியினரின் கருத்தையும் அவரிடம் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன்’ என செய்தியாளர்களிடம் ஷீலா தீட்சித் தெரிவித்தார். 

    முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் மிகுந்த நன்மதிப்பை பெற்றுள்ள ஷீலா தீட்சித் மீது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ள நிலையில் அவர் இன்று ராகுலை சந்தித்தது காங்கிரசாருக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
    டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் நாளைக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். #Election2019
    இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 7 மக்களவை தொகுதி உள்ளன. இங்கு 6-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை.

    அடுத்த மாதம் 12-ந்தேதி ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 23-ந்தேதிதான் கடைசி நாள். இந்நிலையில் நாளைக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

    7 தொகுதிகளுக்கான கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசிய அவர், ‘‘அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை கட்சி தலைமை நாளைக்குள் அறிவிக்கும். நான் சாந்த்னி சவுக் தொகுதியில் போட்டியிட தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும்’’ என்றார்.

    இதனால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் டெல்லியில் தனித்தே போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது.
    பாராளுமன்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித் சரியாக ஆட்சி செய்திருந்தால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியிருக்க மாட்டேன் என கூறியுள்ளார். #AAP #ArvindKejriwal #SheilaDikshit #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்  கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தற்போதுள்ள மோடி அரசு எப்படி நாட்டை மோசமாக வழி நடத்துகிறதோ, அதேபோல் தான் காங்கிரஸைச் சேர்ந்த டெல்லியின் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தும் ஆட்சி நடத்தினார் என பலர் கூறியுள்ளனர். அவர் நல்ல முறையில் ஆட்சி செய்திருந்தால் ஆம் ஆத்மியை நான் தொடங்க வேண்டிய அவசியமே இல்லை. டெல்லியில் பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை எதுவுமே அவரது ஆட்சியில் சரிவர செயல்படவில்லை. 



    அவரைத் தொடர்ந்து வந்த மோடி அரசும் மக்களை ஏமாற்றுகிறது. டெல்லியில் புதிய பள்ளிகள், மருத்துவமனைகள், மொகலா கிளினிக் ஆகியவற்றை அமைக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் மக்களுக்கான  எங்கள் பணியை மோடி அரசால் தடுக்க இயலாது. டெல்லியில் மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் அனுமதி வழங்கவில்லை.

    அனைத்து நலப்பணிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. எல்லா மாநிலங்களுக்கும் திட்டங்களை நிறைவேற்ற சுதந்திரம் உள்ளது. ஆனால் டெல்லிக்கு இல்லை. மத்திய அரசின் செயல்களில் அதிருப்தி ஏற்பட்டிருப்பவர்கள் மீண்டும் அவர்களுக்கு ஓட்டுப்போடாதீர்கள். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இதே நிலை நீடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #AAP #ArvindKejriwal #SheilaDikshit #PMModi 
    ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress #Poorfamily #SheilaDikshit
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் (மாதம் 6 ஆயிரம் ரூபாய்) வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடைவார்கள் என தெரிவித்தார்.



    இந்நிலையில், ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷீலா தீட்சித், வறுமையை அடியோடு ஒழிக்க இந்த திட்டம் மிகப்பெரிய ஆயுதமாக அமையும். ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது. உலகில் எந்த நாட்டு அரசும் நிறைவேற்றாத ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் வழங்கும் மிகப்பெரிய திட்டமாகவும் இது இருக்கும். ராகுலின் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress #Poorfamily #SheilaDikshit
    டெல்லி காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #SheilaDikshit #DelhiCongress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக பொறுப்பு வகித்து வந்த அஜய் மக்கான் உடல் நலக்குறைவால் சமீபத்தில் பதவி விலகினார். இதையடுத்து, டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் (வயது 80), புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவியேற்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் நடைபெற்றது. அப்போது, டெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் பொறுப்பேற்றுக் கொண்டார். 

    இதேபோன்று தேவேந்தர் யாதவ், ஹரூண் யூசுப் மற்றும் ராஜேஷ் லிலோத்யா ஆகிய 3 பேரும் புதிய செயல் தலைவர்களாக தீட்சித்துடன் பொறுப்பேற்று கொண்டனர். விழாவில், கட்சியின் மூத்த தலைவர்கள் கரண் சிங், ஜனார்த்தன் திவேதி, மீரா குமார், பிசி சாக்கோ, சந்தீப் தீக்சித், அஜய் மக்கான் ஆகியோர் பங்கேற்றனர்.

    டெல்லியில் காங்கிரஸ் கட்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக கூறிய தீட்சித், இதற்கு அடிமட்ட தொண்டர்களின் உதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மேலும், பாராளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற முழு முயற்சியுடன் காங்கிரஸ் கட்சி பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.

    ஷீலா தீட்சித் பதவியேற்பு விழாவில், கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளியான ஜெகதீஷ் டைட்லரும் கலந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. #SheilaDikshit #DelhiCongress
    காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #SheilaDikshit #DelhiCongress
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியான அஜய் மக்கான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதலுடன் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் டெல்லி காங்கிரஸ் தலைவராக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.   

    தேவேந்திர யாதவ், ராஜேஷ் லிலோதியா, ஹாருண் யூசுப் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.



    இதுதொடர்பாக, ஷீலா தீட்சித் வெளியிட்டுள்ள செய்தியில், தலைவர் பதவியை அளித்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி என்னை கவுரவப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், டெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டதற்கு முன்னாள் தலைவர் அஜய் மக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்தியில் உள்ள மோடி அரசையும், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசையும் எதிர்த்து திறம்பட செயல்படுவார் என தெரிவித்துள்ளார். #SheilaDikshit #DelhiCongress
    டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் இருந்து டெல்லி முதல் மந்திரிஅரவிந்த் கெஜ்ரிவால் இன்று விடுவிக்கப்பட்டார். #Delhicourt #Kejriwal #defamationcase #SheilaDikshit
    புதுடெல்லி:

    டெல்லியின் முதல் மந்திரியாக ஷீலா தீட்சித் முன்னர் பதவி வகித்தபோது மின்சார கட்டண உயர்வை எதிர்த்து பரவலாக போராட்டம் நடைபெற்றது.

    அவ்வகையில், கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது அந்நாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தரக்குறைவாக விமர்சித்து அவதூறாக பேசியதாக ஷீலா தீட்சித்தின் உதவியாளரான பவன் கேரா என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.


    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அவரை இவ்வழக்கில்  இருந்து விடுவிப்பதாக டெல்லி பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட் சமர் விஷால் இன்று அறிவித்துள்ளார். #Delhicourt #Kejriwal  #defamationcase #SheilaDikshit
    இதய அறுவை சிகிச்சைக்காக விரைவில் பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து நலம் விசாரித்தார். #Kejriwalvisitsheila #SheilaDikshit
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி முதல் மந்திரியாக 3 முறை பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். கடந்த 2012-ம் ஆண்டு இதயத்தின் ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை செய்து கொண்ட இவர், தற்போது இதயவில் சார்ந்த கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்.

    இதற்காக, விரைவில் பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை அவரது வீட்டில் இன்று சந்தித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவரிடம்  நலம் விசாரித்தார்.

    அரசியலில் முன்னர் பரம எதிரிகளாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வந்த இருவரும் இன்று சந்தித்த செய்தி இருகட்சியினரின் மத்தியிலும் மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. #Kejriwalvisitsheila  #SheilaDikshit
    கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணா செய்வதன் மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார் என முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் குறிப்பிட்டுள்ளார். #Kejriwal #SheilaDikshit
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணா செய்வதன் மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார் என முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் குறிப்பிட்டுள்ளார்.

    1998 முதல் 2013 வரை டெல்லி முதல் மந்திரியாக பதவி வகித்த ஷீலா தீட்சித், டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கானுடன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    கவர்னர் மற்றும் உயரதிகாரிகளுடன் அனுசரித்துப் போக தெரியாத கெஜ்ரிவால், தன்னிடம் முழு அதிகாரம் இல்லை என்று கூறிக் கொண்டிருக்காமல் மேம்பாட்டுப் பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என ஷீலா தீட்சித் அறிவுறுத்தினார்.

    ‘1998 முதல் 2003-ம் ஆண்டுவரை டெல்லி முதல் மந்திரியாக நான் பதவி வகித்த முதல் ஆட்சி காலத்தில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் டெல்லி முதல் மந்திரியாக நான் பொறுப்பேற்றிருந்தபோது எரிசக்தி திறையை தனியார் மயமாக்கியது, டீசல் வாகனங்களுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுக்கு வாகனங்களை மாற்றியது மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை எனது அரசு நிறைவேற்றியது.

    எங்களுக்கும் பல தடைகள் இருந்தன. ஆனால், கவர்னருடன் மோதல் போக்கை கையாளாமல் டெல்லியின் முன்னேற்றத்துக்காக நாங்கள் பாடுபட்டோம்.

    அரசை வழிநடத்துவதில் தோல்வி அடைந்துவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து தேவை என்று கூறுவதன் மூலம் டெல்லி மண்ணின் மீதும் காவல் துறையிலும் தனக்கு அதிகாரம் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறார். இருப்பினும், இதர துறைகளில் இந்த ஆம் ஆத்மி அரசு செய்துள்ள சாதனைகள் என்ன? என்பதையும் அவர் குறிப்பிட வேண்டும்.

    கவர்னர் மற்றும் தலைமை செயலாளருடன் மோதல் போக்கை கடைபிடித்து, அரசின் துறை செயலாளர்களின் அலுவலகங்களை எல்லாம் பூட்டி வைத்து கொண்டால் எந்த அதிகாரி அவருடன் ஒத்துழைப்பார்? என்பதையும் கெஜ்ரிவால் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல் மந்திரி கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவது, இதற்கு முன்னர் நாம் காணாத நிகழ்ச்சியாகும். இதன்மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார்’ என்று ஷீலா தீட்சித் கூறினார். #Kejriwal #SheilaDikshit
    ×