search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சம் பறிமுதல்"

    ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கேரளா ஜவுளி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஈரோடு, மார்ச். 26-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த பிரவீன் தாஸ் (50) என்ற ஜவுளி வியாபாரி வந்தார். அவரிடம் ரூ.2 லட்சம் உரிய ஆவணமின்றி இருந்ததாக தெரிகிறது.

    தான் ஜவுளி வாங்க வந்ததாக பிரவீன்தாஸ் கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் வில்லரசம் பட்டி நால் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    அங்கு வந்த ஒரு காரை சோதனை நடத்திய போது காரில் வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ஆவணமின்றி ரூ.1 லட்சம் இருந்தது. அவரும் ஜவுளி வாங்க இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறினார்.

    அதே சமயம் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பிறகு அந்த பணம் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ராமநாதபுரம்:

    கீழக்கரை அருகே திருப்புல்லாணி செக் போஸ்ட் மெயின் ரோட்டில் ராமநாதபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் முரளிதரன் தலைமையில் இன்று காலை வாகன சோதனை நடந்தது.

    அப்பேபாது ராமேசுவரத்தில் இருந்து கீழக்கரை நோக்கி வந்த பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.53,600த்தை பறிமுதல் செய்தனர்.

    டிரைவர் கீழக்கரை முத்துசாமிபுரம் முருகன் மகன் கண்ணன்(வயது 36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் கோபால் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி குழுவினர், திருப்புல்லாணி செக் போஸ்டில் மேற் கொண்ட சோதனையில், கேரளாவில் இருந்து மீமிசல் நோக்கி சென்ற வாகனத்தில் ரூ.77 ஆயிரம் இருந்தது.

    சரியான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை கைப்பற்றி வண்டியின் ஓட்டுநர் மீமிசல் அய்யப்பன் (52) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து அந்த வழியாக வந்த ஏர்வாடி அருகே உள்ள சடைமுனியன்வலசையைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துக்குமார் என்பவரின் காரை சோதனை செய்தனர்.

    அப்போது அவர் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    சத்திரக்குடி டோல்கேட்டில் பறக்கும் படை அலுவலர் பானுபிரகாஷ் சோதனை நடத்தினார். அப்போது காரில் வந்த நாகநாதபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த ராவூத்தர் கனி (30) என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். #LSPolls

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையில் சிக்கிய ரூ.9.76 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போதுசென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 300 பணம் இருந்தது தெரிய வந்தது.

    காரை ஓட்டிவந்தவர் சென்னை திருமுக்கூர் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது36) என்பதும் இவர் கேரளாவில் வாகமான் என்ற இடத்தில் நிலம் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    ஆனால் அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அதனை கைப்பற்றிய அதிகாரிகள் ஆண்டிப்பட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    தமிழக-கேரள எல்லையில் போடி முந்தல் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரி சின்னவெளியப்பன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.40 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போடி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையின்போது கேரளாவில் இருந்து சாகுல்அமீது என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.30 லட்சத்தை பறிமுல் செய்தனர்.

    கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரை ரவி என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை கொடைக்கானலில் காய்கறிகள் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து சார்பதிவகத்தில் ஒப்படைத்தனர்.  #LSPolls

    பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    திருவள்ளூர்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

    ரொக்கமாக பணம் கொண்டு செல்வதற்கு தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்- பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த காவல்சேரி அருகே அரக்கோணம் தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான பறக்கும் படையிளர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70 இருந்தது. காரில் இருந்த செங்கல்பட்டை அடுத்த கொம்மனாஞ்சேரியை சேர்ந்த கண்ணனிடம் விசாரித்தபோது பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.

    இதையடுத்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் சமர்ப்பித்து பணத்தைப்பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    சங்கராபுரம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ரிஷிவந்தியம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 33 பறக்கும்படை குழுவினர்கள், 33 நிலையான கண்காணிப்பு குழுவினரும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு சங்கராபுரம் மூரார்பாளையம் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜகோபால் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தார்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் டிரைவரிடம் இல்லை.

    இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கார் டிரைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சேலம் மாவட்டம் ஆரகனூர் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 35) என்பதும் குளிர்பானங்கள் மொத்தமாக எடுத்து சென்று பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்வார்.

    அவர் கடைகளில் குளிர்பானங்கள் விற்ற தொகை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தினை வசூலித்து செல்வது தெரியவந்தது. இருப்பினும் சதீஷ்குமார் வைத்திருந்த பணத்திற்கு ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த பணத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரெத்தின மாலாவிடம் ஒப்படைத்தனர்.  #LSPolls

    திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் படைகாத்து தலைமையில், பறக்கும் படையினர் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறையில், சேலம் மாவட்டம் சொர்ணபுரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 16¼ கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.96 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் பேரளி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆசிக்கான் தனது காரில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர் மற்றும் கியாஸ் அடுப்புகள் ஆகியவற்றை குன்னம் துணை வட்டாட்சியர் பழனிசெல்வன் தலைமையில் கைப்பற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் பாலம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவை சேர்ந்த கூட்டுறவு சார்பதிவாளர் சசிக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த அமுதா தியோஸ் என்பவர் தனது காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 500 எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதியிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டாட்சியர் அந்த தொகையினை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை தாசில்தாரும் மணப்பாறை நத்தம் தனிதாசில்தாருமான இளவரசி தலைமையிலான குழுவில் இடம்பெற்ற ராஜேந்திரன், தேவசேனாபதி உள்ளிட்ட 5 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக காரில் வந்த கருமண்டபத்தை சேர்ந்த அந்தோணி நவீன் என்பவர் ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 400 ரொக்கமாக எடுத்து சென்றார். அந்த பணத்திற்காக உரிய ஆவணமோ அல்லது ரசீதோ அவரிடம் இல்லை. விசாரணையில், எடமலைப்பட்டி புதூர்- மதுரை ரோட்டில் அவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதாகவும், வங்கியில் செலுத்த பணம் எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுபோன்று, திருச்சி வயலூர் ரோட்டில் ரெங்காநகர் சோதனைச்சாவடியில் தனிதாசில்தார் (மணப்பாறை சிப்காட்) வசந்தா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சண்முகாநகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கருணாகரன் அவ்வழியாக காரில் வந்தார். அவரது காரை சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ.1 லட்சம் இருந்தது. அந்த தொகைக்கான ஆவணம் ஏதும் அவரிடம் இல்லை. விசாரணையில், நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில் கட்டுவதற்காக பணத்தை எடுத்து செல்வதாக கருணாகரன் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் ஏதும் இல்லை என்பதால் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடத்தில் 2 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்து 400-ஐ திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அந்த தொகை ஒரு கவரில் ‘சீல்’ வைக்கப்பட்டு கருவூலத் தில் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சேலத்தில் முதல் நாளிலேயே வாகன சோதனையில் ரூ.3.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம் மேற்கு தாசில்தார் வள்ளி தலைமையிலான பறக்கும் படையினர் சேலம் திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காரில் வந்த ஈரோட்டை சேர்ந்த சண்முகம் (வயது 50) என்பவரிடம் நடத்திய விசாரணையில் மருத்துவ மனையில சேர்த்துள்ள தாயின் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து நண்பரிடம் அந்த பணத்தை வாங்கி வந்ததாக கூறினார்.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதுகுறித்து தாசில்தார் வள்ளி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ரோகிணிக்கு தகவல் தெரிவித்தார். உடனே கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் போதிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். பணத்தை கொண்டு வந்தவர் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் கூறினார்.

    இதேபோல் வீரபாண்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.73 ஆயிரம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 59) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பவர்லூம் வைத்திருப்பதாகவும், தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அவரிடம் ஆவணங்கள் ஏதும்இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 33 பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வியாபாரிகள் தொழில் அதிபர்கள் அத்தியாவசிய தேவைக்குகூட பணத்தை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    ×