search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட கலெக்டர்கள்"

    • மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
    • அனைத்து உதவிகளும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக மாறுகிறது.

    'மிச்சாங் புயல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இந்த முறை சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் வடகடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக வேகமாக சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறை செயலாளர் ராஜா ராமன், வருவாய் பேரிடர் துறை இயக்குனர் ராமன், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன்,

    சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தீயணைப்பு இயக்குனர் ஆபாஷ் குமார், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட கலெக்டர்களும் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்தார். 

    அப்போது அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார்கள். இதை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    27.11.2023 அன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    புயல் பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சாரம் வசதி உள்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    மழை வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் விழும் காரணத்தால் புயலின்போது, விழக்கூடிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மாவட்ட கலெக்டர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக்குழுக்களை முன் கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.

    பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கனமழையின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம். காவல்துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து போலீசாரை ஈடுபடுத்தி போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்த மழை காலத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி குழுக்கள், போலீஸ், தீயணைப்பு துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்திட விரும்புகிறேன்.

    கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு தேங்கும் மழைநீரை அகற்ற அதிக அளவில் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி உடனே நீரை அகற்ற வேண்டும்.

    வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ளவும், பொதுமக்களின் சிரமத்தை குறைத்திடவும், தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    மழைக்கால நிவாரண பணிகளை மேற்கொள்ள உங்களுக்கு குறிப்பான தேவைகளை உடனடியாக உங்கள் மாவட்டத்தின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு தெரிவித்து பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். அதை அரசு உங்களுக்கு செய்து தர தயாராக உள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
    • சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருட்கள் ஒழிப்பு, அரசு திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதில் உள்ள சுணக்கத்தை போக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். வனத்துறை அதிகாரிகள், கலெக்டர்கள் அடங்கிய கூட்டமும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டமும் நேற்று நடத்தப்பட்டது.

    இந்த மாநாடு 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. இன்றைய மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    இன்று மாலை வரை இந்த மாநாட்டில் சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

    • இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
    • கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    மேற்காணும் அறிவிப்புகளுக்கு இணங்க கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள், செலுத்த வேண்டிய வீட்டுவரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இவ்விணைய தளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன.

    இவ்விணையதளத்தின் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கீழ்காணும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்த இயலும்.

    வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் என அனைத்து கட்டிட அனுமதிகளும் இணைய வழியாக மட்டுமே தரப்பட வேண்டும். இதற்காக http://online.ppa.tn.gov.in/ என்ற முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது.

    ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கிடும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அதிகாரிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலம்தான் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
    • செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    * நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை இணை செயலாளர் ஆனி மேரி சொர்ணா, அரியலூர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

    * கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் கலெக்டராக பதவியேற்பார்.

    * வணிக வரித்துறை (உளவுப்பிரிவு) இணை கமிஷனர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, நாமக்கல் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நில அளவை மற்றும் நில ஆவணத்துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குனர் கமல் கிஷோர், செங்கல்பட்டு கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * வணிக வரித்துறை இணை கமிஷனர் (நிர்வாகம்) எம்.எஸ்.சங்கீதா, மதுரை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷா அஜித், சிவகங்கை கலெக்டராக பதவியேற்பார்.

    * தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சேலம் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சேலம் ஜவ்வரிசி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.என்.பூங்கொடி, திண்டுக்கல் கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் கே.எம்.சரயு, கிருஷ்ணகிரி கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

    தமிழகத்தில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள துறைகள் பற்றிய விவரம் வருமாறு:-

    * சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனர் டி.ஜி. வினய், தொழில்நுட்ப இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    * தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழக மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், வேளாண்மை ஆணையராக பொறுப்பேற்கிறார்.

    * தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்படுகிறார்.

    * தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் விவேகானந்தன், கைத்தறி ஆணையராக பொறுப்பேற்கிறார்.

    * ஆசியர்கள் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டார்.

    * நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார்.

    * எழுதுபொருள் அச்சுத்துறை முன்னாள் கமிஷனராக இருந்த சுகந்தி அருங்காட்சிய ஆணையராக மாற்றப்பட்டார்.

    * ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, நிதித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டார்.

    * நில நிர்வாக கூடுதல் ஆணையர் சுப்புலட்சுமி, வணிக வரிகள் கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    * கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    * காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, சர்வசிக்ஷ் அபியான் திட்ட இயக்குனர் ஆனார்.

    * தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, உள், மதுவிலக்கும் மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * நாமக்கல் மாவட்ட கலெக்டர் சிரேயாசிங், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்கிறார்.

    * தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லலிதா, நகராட்சி நிர்வாக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

    * ராஷ்மி சித்தார்த் ஜகாடே, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டார்.

    * பதிவுத்துறை ஐ.ஜி. சிவன் அருள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கலின் சிறப்பு பணி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் நந்தகோபால், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    * நிதித்துறை துணை செயலாளர் லட்சுமி பாவ்யா தன்னீரு, வணிக வரிகள் மற்றும் இணை ஆணையராக (ஈரோடு) இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.

    * மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

    * திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    * இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அதிகாரி இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனார்.

    * புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.

    * வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துறை தமிழ்நாடு சாலைகள் பிரிவு திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். அவர், சென்னை கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும்.
    • பெருநகர சென்னை மாநகராட்சியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மேற்கொள்ளவும் பேரிடர் தடுப்பு பணிகளை தயார்படுத்தவும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதால் தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இது தமிழக கடற்கரை நோக்கி வருவதால் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

    வானிலை மையத்தின் முன் அறிவிப்பு எச்சரிக்கையின்படி 20, 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் பேரிடர் முன் எச்சரிக்கைக்கான தடுப்பு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு தலைமை செயலாளர் வெ.இறையன்பு, அரசு முதன்மை செயலாளர் அமுதாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு, பாத சாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

    எனவே மழை நீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும் மற்றும் குழிகளும் மூடப்படாதிருப்பின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் மற்றும் அடையாள பலகைகள் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் சாலைகளில் மழை நீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மூடி திறந்திருப்பின், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் தடுப்புகள், அடையாள பலகைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தொடர்புடைய துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க அரசு அலுவலகங்களில் செலவின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய எளிமையான பணிகளைத் தெரிவித்து செயல்படுத்த கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மிக நேர்த்தியான முறையில் செயல்படுத்தி முந்தைய நிலையையும் தற்போதைய நிலையையும் நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைத்தமைக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல, நாம் அமர்ந்து பணியாற்றும் அரசு அலுவலகங்களையும் உபயோகப்படுத்தும் ஓய்வு அறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தி துலங்க செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் மதிய வேளைகளில் உணவருந்தவும் நீர்ப் பருகவும் போதிய வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தனி கவனம் செலுத்தி தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்சொன்ன வசதிகள் தங்கள் அலுவலகத்தோடு நில்லாமல் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு துணை அலுவலகங்களில் செயல்படுத்தும் முகத்தான் நேரடியாக தலையிட்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் எழில்மிகு அரசு அலுவலகமாக திகழவும் அவ்வலுவலகத் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் உணவருந்தவும் போதிய வசதிகளை அந்தந்த அரசு அலுவலகத் தலைமை அலுவலர்கள் மூலம் செய்து கொடுப்பதை உறுதி செய்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் ஓர் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கு விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்.
    • போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

    ஆனாலும் கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

    போலீசார் அவ்வப்போது அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஆட்சி பொறுப்பேற்றது முதற்கொண்டு போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆனாலும் போதை பொருட்கள் விற்பனை சில பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    இதனால் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனியாக மாவட்ட கலெக்டர்கள்-போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டத்தை நடத்தி தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க முடிவு செய்தார்.

    இதையொட்டி அனைத்து மாவட்ட கலெக்டர்கள்-போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகள் அனைவரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதை பொருட்கள் உள்ளது. போதை பாதை அழிவுப் பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி மொத்தமாக அதனுள் மூழ்கி விடுகிறார்கள்.

    இது அவர்களது சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியை தடுத்து விடுகிறது. எதிர்காலத்தை பாழாக்கி அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. இது சமுதாயத்தின்-நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது.

    போதை பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் பேதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக இதுவரை கூட்டம் கூட்டி உள்ளோம். இப்போது முதன் முறையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க கூட்டம் கூட்டி உள்ளோம்.

    போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்தாக வேண்டும்.

    போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். விற்பனையை தடுக்க வேண்டும். அதை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

    போதை பொருள் பயன்படுத்துபவர்களை போதையின் பாதையில் செல்லாமல் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இதற்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை விட மகாராஷ்ராவை விட தமிழ்நாட்டில் குறைவுதான் என்று சொல்வதில் நான் சமாதானம் அடைய தயாராக இல்லை.

    உடலுக்கு கெடுதியானது போதைப்பொருள். அதனால் கெடுதல் என்ற பொருளில் நான் சொல்கிறேன். போதை என்பது தனிமனித பிரச்சினை அல்ல. சமூக பிரச்சினை. இதை தடுத்தாக வேண்டும். போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும்.

    போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். ஒருசேர சமூகம் இயங்கினால்தான் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகம் செயல்பட முடியும்.

    எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நீங்கள் பாடுபட வேண்டும்.

    ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுங்கள்.

    போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

    இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ந்தேதி போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம்.

    அதன்படி தமிழ்நாடு முழுவதும் நாளை (11-ந்தேதி) பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகளும் திரையிடப்பட உள்ளது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இளைய சமுதாயத்தினரிடம் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளின் கருத்துக்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    ×