search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
    X

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

    • மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
    • அனைத்து உதவிகளும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக மாறுகிறது.

    'மிச்சாங் புயல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இந்த முறை சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் வடகடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக வேகமாக சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறை செயலாளர் ராஜா ராமன், வருவாய் பேரிடர் துறை இயக்குனர் ராமன், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன்,

    சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தீயணைப்பு இயக்குனர் ஆபாஷ் குமார், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட கலெக்டர்களும் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார்கள். இதை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    27.11.2023 அன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    புயல் பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சாரம் வசதி உள்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    மழை வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் விழும் காரணத்தால் புயலின்போது, விழக்கூடிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மாவட்ட கலெக்டர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக்குழுக்களை முன் கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.

    பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கனமழையின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம். காவல்துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து போலீசாரை ஈடுபடுத்தி போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்த மழை காலத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி குழுக்கள், போலீஸ், தீயணைப்பு துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்திட விரும்புகிறேன்.

    கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு தேங்கும் மழைநீரை அகற்ற அதிக அளவில் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி உடனே நீரை அகற்ற வேண்டும்.

    வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ளவும், பொதுமக்களின் சிரமத்தை குறைத்திடவும், தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    மழைக்கால நிவாரண பணிகளை மேற்கொள்ள உங்களுக்கு குறிப்பான தேவைகளை உடனடியாக உங்கள் மாவட்டத்தின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு தெரிவித்து பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். அதை அரசு உங்களுக்கு செய்து தர தயாராக உள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×