search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுவாக்குப்பதிவு"

    மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட தேர்தல் மே 19-ம் தேதி நடந்தது. இதில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உத்தர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.



    மேலும் இந்த வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. 89.67 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இதனிடையே தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் சில பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடைபெற்றதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் எண் 181, 182, நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் எண் 192, 193, 194, 195, ஜாலிப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண் 196, 197 என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 3,074 ஆண் வாக்காளர்களும் 2,985 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6059 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் கொளுத்தும் வெளிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர். இவர்கள் தர்மபுரி பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்கும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு வாக்கும் என 2 வாக்குகளை பதிவு செய்தனர்.

    இதையொட்டி 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற தேர்தலின் போது இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதால் ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் மறு ஓட்டுப்பதிவின்போது செல்போனை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

    வாக்குச்சாவடிகளை பாராளுமன்ற பொதுத்தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, கலெக்டர் மலர்விழி, போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6,059 வாக்காளர்கள் கொண்ட இந்த 8 வாக்குச்சாவடியிலும் 5,433 பேர் ஓட்டு போட்டனர். இது 89.67 சதவீதம் ஆகும்.

    டி.அய்யம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களிக்க காலதாமதம் ஏற்படுவதாக கூறி அலுவலர்களிடம் வாக்காளர்கள் வாக்குவாத்தில் ஈடு பட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். ஜாலிப்புதூர் பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். தகவல் அறிந்த கூடுதல் சூப்பிரண்டு மணிகண்டன் அதிரடிப்படை போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கு திரண்டு இருந்த கட்சி நிர்வாகிகளை கலைந்து செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவள்ளூர் எம்.பி. தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    திருநின்றவூர்:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

    அப்போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டதும், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு உட்பட்டதும் ஆன திருநின்றவூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் (எண் 195) வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டது.

    அப்போது மொத்தம் 858 ஓட்டுகள் பதிவானதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் இறுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்த்த போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்கு 27 வாக்குகளும், பூந்தமல்லி எம்.எல்.ஏ. தொகுதிக்கு 37 வாக்குகளும் கூடுதலாக பதிவாகி இருந்தன.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 195-ல் மறுவாக்குப்பதிவு இன்று (19-ந் தேதி) நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.


    அதன்படி மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்குப்பதிவு நேரம் தொடங்கியது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காலையிலே ஏராளமானோர் வாக்களித்தனர்.

    அவர்களுக்கு திருவள்ளூர் பாராளுமன்றதொகுதி, பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்ததால் 2 ஓட்டு போட்டனர். அவர்களது இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

    இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 513 ஆண் வாக்காளர்களும், 536 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1049 பேர் உள்ளனர்.

    மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் மே 19ல் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி, மறுவாக்குப்பதிவு தொடர்பாக விளக்கம் அளித்தார். #LokSabhaElections2019 #Repoll
    சென்னை:

    தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கடந்த 29ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினோம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த 13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இல்லை.



    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மறு வாக்குப்பதிவுக்காகவே தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Repoll 
    திரிபுரா மேற்கு தொகுதியில் 168 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்றும், 12-ந் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திரிபுரா மேற்கு, திரிபுரா கிழக்கு என்ற 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 11-ந் தேதி திரிபுரா மேற்கிலும், 18-ந் தேதி திரிபுரா கிழக்கிலும் வாக்குப்பதிவு நடந்தது.

    இதில், திரிபுரா மேற்கு தொகுதியில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்தன. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்ற முறைகேடுகளில் பா.ஜனதாவினர் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.



    இதையடுத்து, திரிபுரா மேற்கு தொகுதியில் 26 சட்டசபை தொகுதிகளில் அமைந்துள்ள 168 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த 168 வாக்குச்சாவடிகளிலும், நாடாளுமன்ற 6-வது கட்ட தேர்தலுடன் சேர்த்து, வருகிற 12-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இதேபோல் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளிலும், புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TripuraElection

    திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டதால், மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest
    புதுடெல்லி:

    மேற்கு திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதியில் கடந்த மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 81 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கள்ள ஓட்டு போட்டதாகவும், பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரித்து, அறிக்கை பெற்றது. அதில், திரிபுரா மேற்கு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 26 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.



    இதையடுத்து, இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வரும் 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest
    கர்நாடக மாநில சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் குளறுபடிகள் தொடர்பான புகார்களுக்கு உள்ளான 3 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. #Repoll #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு இயந்திரங்கள் குளறுபடிகள் தொடர்பான புகார்கள் எழுந்ததால் பெங்களூருவில் உள்ள ஹெப்பல் தொகுதிக்குட்பட்ட லொட்டேகொல்லஹல்லி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    1444 வாக்காளர்களை கொண்ட இந்த வாக்குச்சாவடியில் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாநில தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள குஸ்ட்டாகி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரு வாக்குச்சாவடிகளுக்கு சேர்த்து நாளை தேர்தல் நடைபெறும் என கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் இன்றிரவு அறிவித்துள்ளார்.

    இந்த இரு வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட சுமார் 275 வாக்காளர்கள் தொடர்பாக பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் இங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். #Repoll #KarnatakaAssembly
    ×