search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணமதிப்பு நீக்கம்"

    காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம், பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யும் என ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தார். #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் (நியாய்) செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். இதன்மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என சமீபத்தில் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

    இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு காணப்படுகிறது. அதேநேரம் இந்த திட்டம் சாத்தியமில்லை என பொருளாதார வல்லுனர்களில் ஒரு சாராரும், சாத்தியமானதுதான் என மற்றொரு பிரிவினரும் கூறி வருகின்றனர்.

    இவ்வாறு நியாய் திட்டம் நாடு முழுவதும் விவாதங்களை கிளப்பி இருக்கும் நிலையில், இந்த திட்டம் குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ராகுல் காந்தி நேற்று விரிவான பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் தற்போதுகூட 20 முதல் 22 சதவீத குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்கம் மற்றும் கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) திட்டங்களாலேயே இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் ஏராளம்.

    எங்களது நோக்கமே இந்தியாவில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதுதான். அதற்காகவே இந்த நியாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. வறுமைக்கு எதிரான கடைசி தாக்குதலே இந்த திட்டம் ஆகும்.

    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் செய்தது எல்லாம், பணமதிப்பு நீக்கம் மற்றும் கப்பார் சிங் வரியால் இந்திய பொருளாதாரத்தில் இருந்து அனைத்து பணத்தையும் அகற்றியதுதான். அமைப்புசாரா துறைகள் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

    எங்கள் நியாய் திட்டத்தின் நோக்கம் 2 பிரிவானது. முதலில் இது 20 சதவீத பரம ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்கிறது. அடுத்ததாக பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்படுத்தும்.

    இந்த திட்டத்தின் பெயருக்கு (நியாய்) இந்தியில் ‘நீதி’ என்ற பொருள் உண்டு. கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்ட பிரதமர் மோடி, அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே அவர்களுக்கான நீதியாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தால் நாட்டின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என சில பொருளாதார வல்லுனர்கள் கூறுவது தவறு. இது தொடர்பாக ஏராளமான பொருளாதார நிபுணர்கள் மற்றும் வல்லுனர்களிடம் விரிவாக ஆலோசித்த பின்னரே இதை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்தோம்.

    இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் அவசரம் காட்டமாட்டோம். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. போல நிபுணர்களிடம் ஆலோசிக்காமல் இந்த திட்டத்தை அமல்படுத்தமாட்டோம். இந்த திட்டம் குறித்து விரிவாக சோதித்து, ஆலோசித்து இருக்கிறோம். அந்தவகையில் நியாய் திட்டம் முற்றிலும் சாத்தியமான திட்டமே.

    இந்த திட்டம் முதலில் சோதனை ரீதியாக அமல்படுத்தி, பின்னர் அதில் ஏதாவது குறைகள் இருந்தால் அவற்றை களைந்துவிட்டு தேசிய அளவில் செயல்படுத்துவோம். மேலும் இதற்கான பயனாளர்களை கண்டறிவதிலும் வலுவான வழிமுறையை பின்பற்றுவோம். பயனாளர்கள் யாரையும் விடமாட்டோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
    பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். #GST #RaghuramRajan #IndiaEconomicGrowth
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டுவரை, இந்தியா வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன.

    கடந்த ஆண்டு சர்வதேச பொருளாதாரம் வளர்ந்து வந்த நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பது வியப்பாக உள்ளது.

    இந்தியா தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாக சேரும் மக்களுக்கு இது போதாது. அவர்களுக்காக மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, நமக்கு பொருளாதார வளர்ச்சி அதிகம் தேவை. இந்த வளர்ச்சியுடன் திருப்தி அடையக் கூடாது.

    இந்தியாவின் வளர்ச்சி மீண்டும் சுதாரித்து எழும்போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை உருவாக்கி உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து இந்தியா மீண்டு எழுந்தாலும் கூட கச்சா எண்ணெய் விலை, இந்திய பொருளாதாரத்துக்கு சற்று கடினமானதாகவே இருக்கும்.

    வாராக்கடன் பிரச்சினையும் இந்தியாவை பாதித்துள்ளது. அதற்கு திவால் சட்டம் தீர்வு அல்ல. பன்முனை அணுகுமுறை தேவை.

    இந்தியாவில், அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடம் குவிந்திருப்பதும், பிரச்சினையின் ஒரு அங்கம் ஆகும். மத்தியில் இருந்தே இந்தியா செயல்பட முடியாது. பலரும் சுமையை ஏற்றுக்கொள்ளும்போதுதான், இந்தியா இயங்கும்.

    இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார். 
    மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. #RBI #Demonetisation #NoteBan
    புதுடெல்லி:

    கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, மக்களிடம் பணப்புழக்கத்தை (ரொக்க பரிமாற்றம்) குறைப்பதற்காகவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.



    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர் 4-ந் தேதி நாட்டில் இருந்த பணப்புழக்கத்தின் மதிப்பு ரூ.17.90 லட்சம் கோடி ஆகும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி நிலவரப்படி இந்த மதிப்பு ரூ.19.60 லட்சம் கோடியாக இருந்தது. அந்தவகையில் 9.5 சதவீதம் உயர்வைத்தான் அடைந்து இருக்கிறது.

    இதைப்போல பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பது குறைந்து, டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.2.54 லட்சம் கோடியை மக்கள் ஏ.டி.எம்.கள் மூலம் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ.2.75 லட்சம் கோடி ஏ.டி.எம். மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் 8 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

    அதேநேரம் செல்போன் மூலமான பணப்பரிமாற்றம் மட்டும் அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் ரூ.1.13 லட்சம் கோடியாக இருந்த செல்போன் பணப்பரிமாற்றம், கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ.2.06 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

    மேற்கண்ட தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    பணமதிப்பு நீக்கம்தான் மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் என்று ராகுல் காந்தி கூறினார். #Demonestisation #Modi #RahulGandhi
    போபால்:

    மத்தியபிரதேசத்தில் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்வகையில், 15 கி.மீ. தூரத்துக்கு வாகன பேரணியாக சென்று மக்களை சந்தித்தார். பின்னர், போபாலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



    அதில், ராகுல் காந்தி பேசியதாவது:-

    70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. இந்த திட்டம், பணக்காரர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க உதவியது. அதனால், 4 ஆண்டுகால மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் இதுதான்.

    சிறு வணிகர்களின் கையில் உள்ள பணத்தை பறித்து 15 பெரும் பணக்காரர்களின் பாக்கெட்டில் போடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். 15 பெரு நிறுவனங்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை மோடி அரசு ரத்து செய்தது. ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் கடனை ஏன் ரத்து செய்யவில்லை?

    லட்சங்களிலும், கோடிகளிலும் வாங்கப்பட்ட கடன்களை ‘வாராக்கடன்’ என்கிறார்கள். ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயியை ‘கடன் தவறியவர்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.

    மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் களும் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இதுபோல் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்துள்ளோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.  #Demonestisation #Modi #RahulGandhi
    அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி, பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்தபோது, ரூ.745 கோடி செல்லாத நோட்டுகளை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. #AmitShah #BannedNotes
    மும்பை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த நோட்டுகளை நவம்பர் 10-ந் தேதி முதல், டிசம்பர் 30-ந் தேதிவரை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று கூறினார்.

    முதலில், மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் இந்த நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கருப்பு பணம் போடப்படும் என்ற சந்தேகத்தால், 5 நாட்களில், அதாவது நவம்பர் 14-ந் தேதியுடன் இந்த அனுமதி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, பணமதிப்பு நீக்க காலத்தின்போது, பொதுத்துறை வங்கி, மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி என ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டன என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு ‘நபார்டு’ வங்கியின் தலைமை பொது மேலாளரும், மேல்முறையீட்டு ஆணையருமான எஸ்.சரவணவேல் பதில் அளித்துள்ளார்.

    மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில், 7 வங்கிகள் மட்டுமே இந்த விவரங்களை அளித்துள்ளன. 14 வங்கிகள் அவற்றை அளிக்க மறுத்து விட்டன. ஆனால், அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளும், அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் விவரங்களை அளித்துள்ளன.

    அதன்படி, மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக அளவாக ரூ.745 கோடியே 59 லட்சம் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. ஐந்தே நாட்களில் இந்த நோட்டுகள் வந்துள்ளன. இதன் இயக்குனராக இருப்பவர், பா.ஜனதா தலைவர் அமித்ஷா என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக அவர் அப்பொறுப்பில் இருந்து வருகிறார். 2000-ம் ஆண்டு, அவ்வங்கியின் தலைவராகவும் இருந்தார்.

    அந்த வங்கிக்கு பிறகு, அதிகமான செல்லாத நோட்டுகளை பெற்றது, ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகும். அது, ரூ.693 கோடியே 19 லட்சம் பெற்றுள்ளது. அதன் தலைவராக இருப்பவர், குஜராத் மாநில மந்திரி ஜெயேஷ்பாய் வித்தல்பாய் ராடாடியா.

    குஜராத் மாநில கூட்டுறவு வங்கியே வெறும் ரூ.1 கோடியே 11 லட்சம் செல்லாத நோட்டுகளை பெற்றிருக்கும்போது, மேற்கண்ட 2 மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் அதை விட பலமடங்கு அதிகமாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தகவல் உரிமை சட்டத்தில் இந்த விவரங்களை பெற்ற மனோரஞ்சன் ராய் இதுகுறித்து கூறியதாவது:-

    மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட செல்லாத நோட்டுகளின் மதிப்பை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

    7 பொதுத்துறை வங்கிகளில் ரூ.7 லட்சத்து 57 ஆயிரம் கோடியும், 32 மாநில கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரத்து 407 கோடியும் 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 271 கோடியும், 39 தபால் நிலையங்களில் ரூ.4 ஆயிரத்து 408 கோடியும் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன.

    மேற்கண்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் மொத்தம் ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் கோடி செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட மொத்த செல்லாத நோட்டுகளே ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடிதான். ஆனால், மேற்கண்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் 52 சதவீத செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன.

    இதன்மூலம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் அளிக்காத 14 பொதுத்துறை வங்கிகள், ஊரக, நகர்ப்புற வங்கிகள், தனியார் வங்கிகள், உள்ளூர் கூட்டுறவு வங்கிகள், ஜனகல்யாண் வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கி உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆகியவற்றில் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் இல்லாததால், பலத்த சந்தேகம் எழும்புகிறது.

    மேலும், கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், மாநில கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இவ்வங்கிகளில் பெரும்பாலானவை, அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளவை.

    மாநில கூட்டுறவு வங்கிகளில் மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி அதிக அளவாக ரூ.1,128 கோடி செல்லாத நோட்டுகளை செலுத்தியது. வெறும் 4 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட அந்தமானில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி ரூ.85 கோடியே 76 லட்சம் செல்லாத நோட்டுகளை செலுத்தியது சந்தேகத்துக்குரியதாக உள்ளது.

    இவ்வாறு மனோரஞ்சன் ராய் கூறினார். 
    ×