search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்க்கரை நோய்"

    • நீரிழிவை ஒரு காலத்தில் பணக்கார நோய் என்று சொல்வார்கள்.
    • நீரிழிவு என்பது நாள்பட்ட உடல் நலக்கோளாறு.

    சர்க்கரை...

    வாயில் போட்டால் இனிக்கும்; அதனால் எல்லோருக்கும் பிடிக்கும். அதுவே உடம்பில் இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்.

    சிலரிடம் கேட்டால் 'சர்க்கரை நோய்' என்ற `நீரிழிவு' ஒரு நோயே அல்ல என்பார்கள். ஆனால் விருந்தினர்களை வரவேற்பது போல் சிவப்பு கம்பளம் விரித்து பல நோய்களை வரவழைப்பதும் அதுதான். வந்த நோய்களை போக விடாமல் தடுத்து நிறுத்தி வைப்பதும் அதுதான்.

    நீரிழிவை ஒரு காலத்தில் பணக்கார நோய் என்று சொல்வார்கள். அதாவது வசதி படைத்தவர்கள்-சொகுசான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற ஒரு எண்ணம் அப்போது இருந்தது.

    ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வயது, தொழில், ஏழை-பணக்காரன் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் வருகிறது. சில குழந்தைகள் பிறக்கும் போதே சர்க்கரை நோயுடன் இந்த பூமிக்கு வரும் துரதிருஷ்டமும் நிகழ்கிறது. சர்க்கரை நோய் பற்றிய சில கசப்பான உண்மைகளை பார்ப்போம்...

    நீரிழிவு என்பது நாள்பட்ட உடல் நலக்கோளாறு. நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்றுவதை இது பாதிக்கிறது.

     நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) ரத்தத்தில் கலக்கிறது. உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பு உற்பத்தி செய்யும் `இன்சுலின்' என்ற `ஹார்மோன்' ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துகிறது.

    கணையம் போதிய அளவு இன்சுலினை உற்பத்தி செய்யவில்லை என்றாலோ அல்லது உற்பத்தியாகும் இன்சுலினை உடல் சரிவர பயன்படுத்தி கொள்ளா விட்டாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அப்படி அதிகரிப்பதைத்தான் நீரிழிவு நோய் என்கிறோம். இது ஒரு நாள்பட்ட தீராத நோய் ஆகும்.

    ஒருவருக்கு மரபு ரீதியாகவோ அல்லது சுற்றுப்புற சூழலை பொறுத்தோ நீரிழிவு நோய் வரலாம்.

    நீரிழிவு நோயில் முதல் வகை (டைப் 1), இரண்டாவது வகை (டைப் 2) என இரு வகைகள் உள்ளன. உடலில் காயங்கள் இருந்தால் மெதுவாக குணமடைவது, சரும அழர்ச்சி, மூக்கில் இருந்து நீர் வடிவது, வாந்தி, வயிற்று வலி ஆகியவை முதல் வகை நீரிழிவுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தோன்றிய சில வாரங்கள் அல்லது மாதங்களில் நீரிழிவு நோய் வரும். எந்த வயதிலும் இந்த முதல் வகை நீரிழிவு வரலாம். குழந்தைகள், பருவ வயதினர், இளைஞர்களுக்கு முதல் வகை நீரிழிவு வருகிறது.

    முதலாவது வகை நீரிழிவு இரண்டாவது நிலைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் பலருக்கு இதுபற்றிய எந்த அறிகுறியும் தெரியாது.

    பெரும்பாலும் இளம் வயதில்தான் இரண்டாவது வகை நீரிழிவு தொடங்குகிறது. அதிக உடல் பருமன் உள்ளவர்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இரண்டாவது வகை நீரிழிவு ஏற்படுகிறது. குடும்பத்தில் பெற்றோர், சகோதரர் அல்லது சகோதரிக்கு இரண்டாவது வகை நீரிழிவு இருந்தாலும் ஒருவருக்கு அந்த வகை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    நீரிழிவு காரணமாக இதய மற்றும் சிறுநீரக நோய்கள், கண்பார்வை இழப்பு போன்றவை ஏற்படலாம்.

    உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது, உடற்பயிற்சி, சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்வது, ஆரோக்கியமான உணவு போன்றவற்றின் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

     நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி என்று சொல்வார்கள். தினமும் 45 நிமிடம் கையை வீசி வேகமாக நடக்க வேண்டும் என்றும் அப்படி செய்தால் நீரிழிவு வராமல் தடுக்க முடியும் என்றும், ஏற்கனவே இருந்தாலும் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    நடப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடப்பதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அலுவலகங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களில் மின்தூக்கியை (லிப்ட்) பயன்படுத்தாமல் படிகளில் ஏறிச்செல்வது ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் அவர்கள் யோசனை தெரிவிக்கிறார்கள்.

    பொதுவாக இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து 5 நிமிடம் நடப்பது மிகவும் நல்லது. இதனால் உடல் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் மூலநோயை தடுப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த முடியும்.

    ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை 3 நிமிடம் மிதமான வேகத்தில் நடந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறைவதாக இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டில் உலக அளவில் 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதாவது 53 கோடியே 70 லட்சம் பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை வருகிற 2030-ம் ஆண்டில் 64 கோடியே 30 லட்சமாகவும், 2045-ல் 78 கோடியே 30 லட்சமாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     பரிசோதனை செய்து கொள்ளாததால் தங்களுக்கு நீரிழிவு இருக்கிறது என்பது தெரியாமலேயே ஆண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (44 சதவீதம்), அதாவது 24 கோடி பேர் அந்த நோயுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாவது வகை பாதிப்பு இருப்பதாகவும் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் பரிசோதனை செய்து கொள்ளாததால், 90 சதவீதம் பேர் தங்களுக்கு இரண்டாவது வகை நீரிழிவு இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    2021-ம் ஆண்டில் மட்டும் நீரிழிவு காரணமாக உலகம் முழுவதும் 67 லட்சம் பேர் இறந்து இருக்கிறார்கள்.

    உலகிலேயே அதிக அளவிலான நீரிழிவு நோயாளிகள் சீனாவில்தான் இருக்கிறார்கள். அங்கு 15 கோடி பேர் நீரிழிவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

    இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், மெக்சிகோ, வங்காளதேசம், ஜப்பான், எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

    இந்தியாவில் 10 கோடியே 10 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 11.4 சதவீதம் என்றும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 15.3 சதவீதம் பேர் நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் நீரிழிவுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1990-ல் 2 கோடியே 50 லட்சமாகவும், 2016-ல் 6 கோடியே 50 லட்சமாகவும் இருந்தது. இப்போது அது 10 கோடியை தாண்டி இருப்பது, நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

    நம் நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் 90 முதல் 95 சதவீதம் பேர் இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகளே.

    இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மரபு, போதிய உடலுழைப்பு இன்மை, உடல் பருமன், மனஅழுத்தம், வாழ்க்கை மற்றும் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பெருநகரங்களில் மக்கள் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாறுவதும், மனிதர்களின் பல வேலைகளை எந்திரங்களே செய்துவிடுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    1950-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் மட்டுமே நகரங்களில் வசித்தனர். இப்போது 35 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கிறார். வேலைவாய்ப்பை தேடி ஏராளமானவர்கள் நகரங்களுக்கு குடிபெயர்வதால் நகரங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.

    இதனால் நகரங்களில் வசிப்போருக்கு வீடு, குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் போன்றவை காரணமாக மனஅழுத்தம் ஏற்படுகிறது. நகரங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரம் பேர்களிடம் நடத்திய ஓர் ஆய்வில் அதிகபட்சமாக கோவாவில் 26.4 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 26.3 சதவீதம் பேரும், கேரளாவில் 25.5 சதவீதம் பேரும் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    மக்கள் தொகை அதிகமுள்ள உத்தரபிரதேசத்தில்தான் குறைந்த அளவாக வெறும் 4.8 சதவீதம் பேருக்கே நீரிழிவு உள்ளது. என்றாலும் அங்கு நீரிழிவு வரக்கூடிய நிலையில் 18 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இது தேசிய சராசரியை (15.3 சதவீதம்) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனா, இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளிலுமே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 130 கோடி நீரிழிவு நோயாளிகள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அமெரிக்காவில் 3 கோடியே 73 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது அந்த நாட்டின் மக்கள் தொகையில் 11.3 சதவீதம் ஆகும். நீரிழிவுக்கு ஆளானவர்களில் 2 கோடியே 64 லட்சம் பேர் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் ஆவார்கள்.

    குழந்தைகளும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு 2020-ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

    இந்தியாவில் நிகழும் மரணங்களில் 2 சதவீதம் நீரிழிவு நோயால் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் நீரிழிவு காரணமாக ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றால் 70 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.

    2019-ம் ஆண்டு சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவி உலகையே முடக்கிப் போட்ட கொரோனா பெருந்தொற்று, சர்வதேச அளவிலான சுகாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதை நன்கு அறிவோம். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் கொரோனாவின் அச்சுறுத்தல் முடிந்தாலும், அதன் பாதிப்பு ஏதாவது ஒருவகையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மறதி ஏற்படுவதாக ஒரு கருத்து உள்ளது.

    கொரோனா பெருந்தொற்றுக்கு பின், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகள் மூலம் இன்சுலின் சுரப்பி பாதிக்கப்பட்டு அதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந்தேதி உலக நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று நீரிழிவு நோய் வராமல் தடுப்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தாக்கத்தை எந்தெந்த வகையில் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    உணவு முறையின் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அரிசி உணவை குறைத்துக்கொண்டு முடிந்தால் தவிர்த்து கம்பு, சோளம், சாமை போன்ற சிறுதானியங்களையும், பருப்பு வகைகளையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.

    சர்க்கரை நோய் ஓர் அழையா விருந்தாளி. அந்த விருந்தாளியை யாரும் விரும்புவதில்லை. ஆனால் வந்துவிட்டால் போவதும் இல்லை. எனவே சமாளித்துத்தான் ஆகவேண்டும்.

    • 28 ஆயிரம் பேர் பாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சர்க்கரை நோயாளிகளில் 25 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை மருத்து வக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராமசாமி, துறைத்தலைவர் மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரிஸ், கௌதமன், மருத்துவத்துறை தலைவர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்று முகப்பு பகுதியில் நிறைவடைந்தது.

    பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் முதல்முறையாக முன்னோடி திட்டமாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாத மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய் அறுவை சேவைகள் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சர்க்கரை நோயாளிகளில் 25 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் 85 சதவீதம் பேருக்கு நோய் முற்றிய நிலையில் கால் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரம் பேர் பாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே மாதம் ஒருமுறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டாக்டர்கள் பங்கேற்கும் பாத நோய் அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டு வருகிறது.

    சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்பில் கவனம் செலுத்தினால் கால் அகற்றப்படுவதில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்றார்.

    • இங்கிலாந்து ஆய்வின் தரவுகளை அமெரிக்க பல்கலைக்கழகம் பெற்ற ஆய்வு செய்தது
    • அதிக உப்பு, கார்டிசாலை அதிகரித்து, அதன் மூலம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் 'சர்க்கரை நோய்' என வழக்கத்தில் அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்று. ஆங்கிலத்தில் 'டயாபடிஸ்' (diabetes) என அழைக்கப்படும் நீரிழிவில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை உள்ளது. நீரிழிவு நோய்க்கான காரணங்களையும், அதை கட்டுக்குள் வைப்பதற்கான வழிமுறைகளையும் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சுமார் 4 லட்சம் பேரிடம் 12 வருடங்களாக இங்கிலாந்தில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் தரவுகளை பெற்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தின் டுலேன் பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 'அப்சர்வேஷனல் ஸ்டடி' (observational study) என அழைக்கப்படும் இந்த கண்காணிப்பு ஆய்வுகளில் ஒரு காரணியை நோய்க்கான நேரடி காரணம் என குறிப்பிட முடியாவிட்டாலும், நோயை உண்டாக்குவதில் மறைமுக தொடர்புடைய காரணியாக ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். 



    அவ்வாறு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாம் சமைக்கும் உணவு மற்றும் கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளின் மூலமாக உட்கொள்ளப்படும் உப்பு, நீரிழிவு நோய்க்கு ஒரு மறைமுக தொடர்பு உள்ள காரணி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு 8 கிராம் உப்பு, மக்கள் உட்கொள்ளும் சமைத்த மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவின் மூலமாக உடலுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரத்த அழுத்தம் கூடும் பொழுது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலினின் செயலாக்கம் குறைந்து விடுகிறது. டுலேன் பல்கலைகழக ஆய்வில் உப்பின் அளவு கூடுவதால் கார்டிசால் எனப்படும் ஹார்மோன் அளவு அதிகரிப்பதும், இதன் காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    உப்பை குறைப்பதால் சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாகவோ அல்லது உப்பு கூடுவதால் சர்க்கரை அதிகரிப்பதாகவோ கூற இந்த ஆய்வில் நேரடி ஆதாரம் இல்லை. இருந்தாலும், உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகிய இரண்டுமே உள்ள நோயாளிகளுக்கு, உட்கொள்ளும் உப்பின் அளவு குறைவதனால் ரத்த அழுத்தம் குறைவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தி இருந்த 5 கிராம் தினசரி அளவை விட, இந்தியர்கள் அதிகமாக 9லிருந்து 10 கிராம் வரை உப்பை உட்கொள்கிறார்கள் என சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்று மாசு காரணமாக சென்னை மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 'டைப் 2' நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.
    • காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த வரம்புகளை விட சென்னை மற்றும் காற்றின் தரம் மோசமாக உள்ளது.

    இந்த நிலையில் காற்று மாசு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும் என்று சென்னை மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காற்று மாசு காரணமாக சென்னை மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 'டைப் 2' நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

    சர்வதேச பத்திரிகைகளில் வெளியான 2 ஆய்வு முடிவுகள் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சென்னையில் 6,722 பேரிடமும், டெல்லியில் 5,342 பேரிடமும் ஆய்வு செய்து அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தனர். 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.

    தெற்காசியாவின் கார்டியோ மெட்டபாலிக் ரிஸ்க் குறைப்பு மையம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவின்படி அவர்கள் காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். மேலும் காற்று மாசு காரணமாக இளைஞர்களும் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆய்வில் காற்று மாசு அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

    • மருவை எளிய முறையில் நீக்க வீட்டில் செய்யக்கூடிய மருத்துவ வைத்தியம்.
    • முகத்தில் கழுத்தில் மருக்கள் வரும்.

    மருவை எளிய முறையில் நீக்க வீட்டில் செய்யக்கூடிய மருத்துவ வைத்தியம். இந்த மரு குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இதுபோன்ற வயசு வித்தியாசம் இல்லாமல் வரும். முகத்தில் கழுத்தில் மருக்கள் வரும். ஒற்றை மருக்கள் அல்லது இரண்டு மூன்று சேர்ந்து வரும் மருக்கள் எப்படி எளிய முறையில் நீக்கலாம் என்று பார்க்கலாம்.

    மருக்கள் யாருக்கெல்லாம் இருக்கும்?

    * உடல் பருமன் இருக்கும் ஆண்-பெண் இருபாலருக்கும் இருக்கும்.

    * ஹார்மோன் இன் பாலன்ஸ் (நீர்க்கட்டி தைராய்டு) இது போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு இருக்கும்.

    * சர்க்கரை நோய் உள்ளவர்கள்.

    * ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் இருக்கும்.

    நீக்குவது எப்படி?

    தேவையான பொருட்கள்:

    எலுமிச்சை பழம்

    இஞ்சி

    சுண்ணாம்பு (வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பு).

    செய்முறை:

    ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். அதன் சாறை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சுண்ணாம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். சுண்ணாம்பு சேர்த்தவுடன் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அதை எடுத்து மரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் முகத்தில் உள்ள மருக்கள் ஒரு வாரத்தில் நீங்கிவிடும். தினமும் இரவு மற்றும் காலையில் இதை செய்து வந்தால் உடனடியாக நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

    • காலைநேரங்களில் பொதுவாக எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும்.
    • ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது.

    காலைநேரங்களில் பொதுவாக எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும். எனவே பித்தத்தை குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அதற்கு நேர்மாறாக பித்தத்தை அதிகரிக்கும் காபியை காலைநேரங்களில் அதிகம் எடுத்துக்கொள்கிறோம்.

    விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்களித்துக்கெண்டே இருக்குமா இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம்.

    காலையில் சாப்பிடக்கூடிய கஷாயம் பித்தத்தை குறைப்பதாக இருந்தால் அது சிறப்பு. கரிசலாங்கன்னி, மொசுமொசக்கை, திரிகடுகம், ஆவாரம்பூ கசாயம். நெல்லிக்காய் குடிநீர் இந்த வகையான கஷாயங்களை காலையில் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

    உணவுமுறைகள்

    ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது. அவாரம்பூ குடிநீர் உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. பித்தம் அதிகரிப்பதனால் வரக்கூடிய முதல் நோய் சர்க்கரை நோய். பித்தம் அதிகரித்து இருக்கும் போது கபம் அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். ஆவாரம்பூ தேநீர் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

    இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு, தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

    பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

    ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

    விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறுகள் அகலும். பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும். நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

    எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும். அரச மரக்குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

    • நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது.
    • சர்க்கரை நோய் உருவாகுவதற்கு காரணம் மைதாவில் தயாராகும் உணவுகள்தான்.

    வளர்ந்து விட்ட நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது. புதிது புதிதாக பரவுகின்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அதை பரிசோதிக்க முதலில் எலிக்கு செலுத்துவதே வாடிக்கையாக உள்ளது. ஏனெனில் தயாரிக்கப்படும் மருந்து மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு.

    அதனால் என்ன என்கிறீர்களா? உலகில் தற்போது பரவலாக காணப்படும் சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், அது வராமல் தடுக்கவும் அனைவரும் முயற்சி செய்வார்கள். அதற்காக சில யோசனைகளையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும். ஆனால் பெரும்பாலும் இந்த சர்க்கரை நோய் உருவாகுவதற்கு காரணம் மைதாவில் தயாராகும் உணவுகள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    சர்க்கரை நோய் தடுப்புக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எலிக்கு கொடுத்து பரிசோதிப்பதற்காக எலிக்கு முதலில் சர்க்கரை நோயை உருவாக்குகின்றனர். இதற்காக அவர்கள் அலாக்சாம் என்ற மருந்தை ஊசி மூலம் அதன் உடலில் செலுத்துவதாகவும், இந்த ஊசியை செலுத்திய மறுநாள் எலிகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்.

    இந்த அலாக்சாம் ஊசி தயாரிக்க பயன்படும் கெமிக்கல் மைதாவில் நிறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து ஓட்டல்களிலும் பரோட்டா உணவு வழங்கி வருகின்றனர். மக்களும் இதை ஆர்வத்துடன் சாப்பிட்டு செல்கின்றனர். இந்த பரோட்டாவுக்கு பயன்படும் மைதாவை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் அதில் எலிக்கு செலுத்தப்படும் அலாக்சாம் கெமிக்கல் நிறைந்திருப்பதாக மதுரை கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் தானோ என்னவோ கேரளாவில் உள்ள உணவகங்களில் பரோட்டா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகு வதற்கு இதுபோன்ற உணவு பொருட்களே 70 சதவீதம் காரணமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    எனவே உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தி சுகர், கேன்சர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களுக்கு ஆளாகாமல் இருக்க பரோட்டா போன்ற மைதா உணவுகளை தவிர்க்கலாமே! பரோட்டா பிரியர்கள் உஷார்!

    • உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
    • கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

    காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

    முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.

    • இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம்.
    • நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.

    பொதுவாகவே இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம். ஏனென்றால் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களையே நாம் அதிகம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். முன்பெல்லாம் 40- 45 வயதுக்குப் பிறகு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதற்கான டெஸ்ட் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்போது 30 வயதை எட்டியதுமே சர்க்கரைநோய்க்கான டெஸ்ட் எடுக்கச் சொல்கிறோம்.

    ஒருகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி, அதில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அளவுக்கு அதிகமான அந்த உணவு கொழுப்பாக உடலில் சேரும். கொழுப்பாக சேரும் அந்த தன்மை இன்றளவும் நம் மரபணுக்களில் இருக்கிறது.

    நம்மில் பலரும் பசித்த பிறகு உணவு உண்ணும் பழக்கம் இல்லை. நேரத்துக்கு சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடுவதால் தேவைக்கு அதிகமான உணவானது கொழுப்பாக போய் சேர்ந்துவிடுகிறது. அதனால் நமக்கு சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால்தான் 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய சொல்கிறோம்.

    பெற்றோர் இருவரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த நோய் பாதிக்க 60 சதவிகிதம் வாய்ப்பு உண்டு. பெற்றோர் இருவருக்குமே சர்க்கரைநோய் இருந்தால் அந்த வாய்ப்பு 90 சதவிகிதமாக அதிகரிக்கும்.

    நம் வாழ்க்கைமுறையும் சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்களில் பிரதானமாக இருக்கிறது. உடலியக்கமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வது, இரவில் தாமதமாகவும் அதிகமாகவும் சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, இரவில் கண்விழித்திருப்பது என நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குப் பழகும்போது சர்க்கரைநோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை வரவிடாமல் தடுக்க முடியும். ஸ்ட்ரெஸ்சும் மிக முக்கிய காரணம்.

    ஏற்கெனவே நம் மரபணுக்களில் நீரிழிவுநோய்க்கான தன்மை இருக்கும்போது மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களும் சேரும்போது 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரைநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் 30 ப்ளஸ்சிலும், வாழ்வியல் மாற்றங்கள் இருப்பதாக உணர்பவர்கள் 40 ப்ளஸ்சிலும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்ப்பது அவசியம்.

    • குளிர்பானங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது
    • புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வில் புற்றுநோயை உண்டாக்கலாம் எனத் தெரியவந்துள்ளது

    நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு மாற்றாக காபி, தேநீர் போன்ற பானங்களில் 'அஸ்பார்டேம்' எனும் செயற்கை இனிப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

    உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவான புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC), அஸ்பார்டேமின் பாதுகாப்பு மதிப்பாய்வை நடத்தியிருக்கிறது.

    அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் அதன் அறிக்கை குறித்து வரும் செய்திகளின்படி, இந்த செயற்கை இனிப்பான அஸ்பார்டேம், 'மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்' என இந்த அமைப்பு முத்திரையிட தயாராகி வருகிறது.

    புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த பாதுகாப்பு மதிப்பாய்வு இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் அஸ்பார்டேம் அபாயகரமானதா? இல்லையா? என்பதை மதிப்பீடு செய்வதற்காகவே நடத்தப்பட்டது. ஆனால், ஒரு நபர் இதுபோன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை உட்கொள்வதில் பாதுகாப்பான அளவு எவ்வளவு என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

    1980 வருட ஆரம்பங்களில் இருந்தே டேபிள்-டாப் இனிப்பு எனப்படும் அஸ்பார்டேம், சர்க்கரை போன்ற பொருட்களுக்கு ஒரு செயற்கை மாற்றாகவும், டயட் சோடாக்கள், சூயிங் கம், காலை உணவு தானியங்கள் மற்றும் இருமல் மருந்து போன்ற தயாரிப்புகளிலும் சுவைக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

    • இன்சுலின் தாவரத்தின் 2 இலைகள் தின்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
    • ஒரு நாளைக்கு 2 இலைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம்.

    திருப்பதி:

    சர்க்கரை நோய் இன்று வேகமாக பரவி வருகிறது ஒரு காலத்தில் 45 வயதுக்கு மேல் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை பணக்கார நோய் என்று கூறி வந்தார்கள்.

    ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. சிறு குழந்தை முதல் சக்கரை நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனாலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என ஒரு சிலர் புலம்புவதையும் காணமுடிகிறது.

    இந்த நிலையில் சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை தேவை இல்லை. இன்சுலின் தாவரத்தின் 2 இலைகள் தின்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும் என ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் மொட்டமறி சந்தீப் கூறியுள்ளார்.

    இவர் அவரது வீட்டு மாடியில் சிறிய தோட்டம் அமைத்து அதில் இன்சுலின் செடிகளை வளர்த்து வருகிறார்.

    இதன் மூலம் தனது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டதன் மூலம், கடந்த 7 ஆண்டுகளாக நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன்.

    "நான் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு கடந்த 7 வருடங்களாக இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டு வருகிறேன். மேலும், இந்த 7 ஆண்டுகளில் நான் எந்த டாக்டரையும் பார்க்கவில்லை.

    இன்சுலின் தாவரங்களை நான் வழங்கி வருகிறேன். "இலைகளை தவறாமல் எடுத்துக்கொண்ட பிறகு, அவர்களின் ரத்த சர்க்கரை அளவு குறைவதைக் கண்டேன்.

    ஒரு நாளைக்கு 2 இலைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம். மேலும் காலையில் ஒரு இலையையும் மாலையில் மற்றொரு இலையையும் சாப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது.
    • ர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.

    சர்க்கரை நோய் டாக்டர் ஒருவர் கூறும் போது, "நவீன ஆலைகளில் தீட்டப்பட்டு அழகான சாக்கு பைகளில் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யப்பட்டு வரும் அரிசிகளில் பெருமளவில் காணப்படுவது மாவுச்சத்து மட்டுமே. இந்த அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது. இதனை 'குளுக்கோஸ் ரைசிங் எபெக்ட்' என்போம். இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.

    நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து வெள்ளை அரிசியை உண்ணும்போது அவர்களின் உடல் நிலை மேலும் மோசமாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக சிவப்பு அரிசி என்று சொல்லப்படும் பாரம்பரிய தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியை உண்ணும்போது அதில் இருக்கும் அதிகமான வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவை உடலில் சர்க்கரை உயர்வதை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு வருவதை தடுப்பதுடன், நீரிழிவு இருந்தாலும் கட்டுக்குள் வைக்கிறது" என்றார்.

    ×