search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்"

    குடியாத்தம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் போஜனாபுரம் ஊராட்சி மேல்சுந்தரகுட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சரிவர வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை குடியாத்தம் மேல்பட்டி செல்லும் சாலை உள்ளிகூட்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆழ்த்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என்று கூறினர்.

    சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேட்டவலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தை அடுத்த வைப்பூர் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய குடிநீர் தொட்டிகளின் மோட்டார்கள் பழுதடைந்து உள்ளன. பல மாதங்களாகியும் இதனை சீரமைக்கவில்லை. மேலும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் குடிநீர் குழாயும் பழுதடைந்துள்ளதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இதுபற்றி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 7 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள சாலையில் காலிக்குடங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ், கருணாநிதி, முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிநீர் தொட்டியின் மோட்டார்கள் சரி செய்யப்படும் என்றும் கூறினர்.

    அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் கீழவண்ணம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் கீழவண்ணம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி நேற்று கீழப்பழுவூர்- ஏலாக் குறிச்சி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் தொலை தூரம் சென்று விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியில் வேலைக்காக செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து விரைவில் நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என்று கூறினர். 

    இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து விரைவில் கீழவண்ணம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கீழப்பழுவூர்- ஏலாக் குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கந்தர்வக்கோட்டை ஒன்றியம் காட்டுநாவல் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வரவில்லை. குடிநீர் விநியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை ஒன்றியம் காட்டுநாவல் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வரவில்லை. அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள வயல்பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    எனவே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காட்டுநாவல் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு கந்தர்வக்கோட்டை போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    கிணத்துக்கடவு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    கிணத்துக்கடவு:

    கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சி சென்றாம் பாளையம் கிராமத்தில் கடந்த 18 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை 7.30 மணியளவில் சென்றாம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த வழியாக பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் அரசு பஸ் வந்தது. அதனை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தாஸ், அம்பராம் பாளையம் கூட்டு குடிநீர் திட்ட உதவி பொறியாளர் திருமலை சாமி, கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தான் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை.

    இன்று முதல் முறையாக தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று தண்ணீர் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மற்ற மாவட்டங்களில் மழை பெய்த போதும், திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் ஆத்தூர் காமராஜர் அணை வறண்டு வருகிறது. அங்கிருந்து மிகவும் குறைந்த அளவே குடிநீர் எடுக்கப்படுகிறது.

    இதனால், நகர் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நகர் முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டதால் அவை பழுதடைந்து விட்டன. இதையடுத்து, ஜிக்கா திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, 41-வது வார்டில் ஜின்னா நகர், பூச்சிநாயக்கன்பட்டி மற்றும் ஞானபிரகாசபுரம் ஆகிய பகுதிகளில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் கடந்த 24 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு திண்டுக்கல்-மதுரை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    அரக்கோணம் அருகே பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள தணிகை போளூர் இச்சிப்புத்தூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் ஒரு குடம் நீருக்காக அப்பகுதி மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    குடிநீர் பிரச்சினையை போக்கக்கோரி அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் தணிகை போளூர் பஸ் நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

    தகவலறிந்து வந்த, அரக்கோணம் தாலுகா போலீசார் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசப்படுத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    செந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது மருவத்தூர் ஊராட்சி. இங்கு உள்ள மேற்கு தெருவில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

    தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி செந்துறை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கல்லாக்கோட்டை பேருந்து நிலையம் அருகே திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த  வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும் கந்தர்வக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் மற்றும் போலீசார், அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    அதியமான்கோட்டை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி அருகே அதியமான் கோட்டையை அடுத்த தேவரசம்பட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் நிலத்தடிநீரை பயன்படுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் குழி தோண்டினர். அப்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை சரிசெய்யாமல் அவர்கள் அப்படியே குழியை மூடி விட்டனர். இதனால் அப்பகுதியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

    குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படாததை குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை தேவரசம்பட்டி அருகே உள்ள சாலையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகிக்க உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×