search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணிப்பாக்கம் விநாயகர்"

    • 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
    • திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    சித்தூர்:

    காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

    சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் 21 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.

    அதன் பிறகு தேரோட்டம் நடந்தது. கோவிலின் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பூஜைகள் செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    கோவிலின் மாடவீதிகளில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் பவனி வந்தது. தேரில் எழுந்தருளிய உற்சவர் வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேருக்கு முன்னால் கலை குழுவைச் சேர்ந்த பெண்கள் கோலாட்டம் ஆடினர்.

    தேரோட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

    • அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.
    • நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள்.

    காணிப்பாக்கம் விநாயகர் மகிமை

    காணிப்பாக்கம் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்தலம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹாபுரி கிராமமாக இருந்தது.

    அந்த கிராமத்தில் மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூவருமே உடல்குறை உள்ளவர்கள். ஒருவரால் பேச முடியாது, ஒருவர் பார்வையற்றவர், முன்றாமவரால் கேட்க இயலாது.

    அவர்கள் கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் நீர் முகந்து வயல்களில் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். செவியற்றவரும் பார்வையற்றவரும் ஏற்றக்காலில் ஏறி நின்று மிதிக்க, ஏற்றம் சுமந்துவரும் நீரை கீழே இருக்கும் பேச்சிழந்தவர் கையால் பற்றி கால்வாயில் ஊற்றுவார்.

    வறட்சியால் கிணற்றில் நீர் வற்றிவிடவே பேச்சிழந்தவர் உள்ளே இறங்கி ஊற்று நீர் கிடைக்குமா என்று பார்க்க மண்வெட்டியால் தோண்டினார். அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.

    அதைப்பார்த்த அவர் பயந்து "ஐயோ" என்று அலறினார். கிணற்றுக்கு மேலே நின்றிருந்த பார்வையற்றவருக்கும் இவர் கத்தியது கேட்க இருவரும் உள்ளே எட்டிப்பார்த்தனர். செவியற்றவர் கேட்டார் பார்வையற்றவர் பார்த்தார்.

    கிணற்றிலிருந்து நீருக்கு பதிலாக குருதி பெருகுவதைக்கண்டு இவர்கள் கூச்சலிட வயிலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள். சில விநாடிகளுக்குப் பிறகு பிரமிப்பிலிருந்து விடுபட்டு கிணற்றுக்குள் இறக்கினர்.

    உள்ளே ஒரு பாறை அமைப்பிலான விநாயகர் சிலையையும் அதன் தலையிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தனர். ஒரு துணி எடுத்து குருதி பெறுகிய இடத்தில் வைத்துக்கட்டினார்கள். பிறகு அந்த சிலையை வெளியே எடுத்து வந்தார்கள்.

    மேலே வந்து விநாயகரை நிறுவி, தற்காலிகக்கோவில் ஒன்றை நிர்மானித்தார்கள். அதன் பிறகு கிராமமக்கள் ஒவ்வொருவரும் அவரை வேண்டிக்கொண்டு உடைத்த தேங்காய்களிலிருந்து, வெளிப்பட்ட நீர் ஒரு காணி பரப்பளவில் பரவிநின்றதாம்.

    அதாவது சுமார் ஒன்றேகால் ஏக்கர்! காணி நிலத்தில் பாரகமானதால் (தெலுங்கில் பாரகம் என்றால் நீர் பாய்தல் என்று பொருள்) இந்ததலம் காணிப்பாரகமாகி பிறகு காணிப்பாக்கம் ஆனது.

    "ஸ்ரீகாணிப்பாக்கம்" வரசித்த விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த "சத்தியப்பிரமாணம்" இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்தியத்துக்கு மாறாக எவரேனும் நடத்துகொண்டால், அவர் தொண்ணூறு நாட்களுக்குள்ளேயே விநாயகரால் தண்டிக்கப்படுவார்.

    இதை அனுபவப்பூர்வமாக மக்கள் கண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து (12) கிலோ மீட்டர் பயணத்தில் காணிப்பாக்கத்தை அடையலாம்.

    சுயம்புவான விநாயகர் கிணற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ளார். சுற்றி என்றும் வற்றாத கிணற்று நீரே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவருக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை அனைத்தும் உண்டு. ஆனால் விசேஷ அலங்காரம் எதுவும் செய்வதில்லை.

    இவ்விநாயகர் ஆண்டுதோறும் அகலமாகப் பெருகி வருவது ஆன்மிக அதிசயமாக விளங்குகிறது. அன்று விநாயகருக்குச் செய்வித்த வெள்ளிக்கவசம் இன்று சிறியதாகவிட்டது. என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

    விநாயகர் வளர்வது போலவே அவரை தரிசிக்க வரும் பக்தர்களும் வளம் பெருக வாழ்கிறார்கள். சாதாரண நாளில் கூட நிரம்பிவழியும் பக்தர் கூட்டம் இதை உண்மை என்று நிரூபிக்கிறது.

    நல்லொழுக்கம் கைவரப்பெறவும் இவர் வரம் அருள்கிறார். ஆமாம்.... இவர் முன் நின்று இனி குடிக்க மாட்டேன், புகைக்க மாட்டேன் சூதுவை நாடமாட்டேன் என்று மனமுருக வேண்டுவோர் அந்தத்தீயப்பழக்கங்களிலிருந்து விடுபடுகிறார்களாம்!

    விநாயகரின் தந்தை சிவபெருமான் திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் லிங்க வடிவில் தண்ணீருக்குள் இருப்பது போல் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ள காணிப்பாக்கத்தில் உள்ள (வரசித்தி) காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மூலவரான பிள்ளையார் முழங்கால் வரை உள்ள தண்ணீருக்குள் இருந்தபடி அருள் தருகிறார்.

    • தமிழ்நாட்டில் பல விநாயகர் தலங்கள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
    • காணிப்பாக்கம் விநாயகர் மிக, மிக சக்தி வாய்ந்தவர்.

    இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் உள்ளனர். அந்த கடவுளர்களுக்கு ஏற்ப ஆலயங்களும், வழிபாடு முறைகளும் இருக்கின்றன.

    ஆனால் எல்லா ஆலயங்களிலும் இடம் பெற்றிருப்பவர் விநாயகர் மட்டுமே. அது எந்த கோவிலாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும் சரி, விநாயகர் நிச்சயம் நுழைவாயிலேயே அமர்ந்திருப்பார்.

    அவரிடம் ஆஜராகி வணக்கம் போட்ட பிறகே ஆலயத்தில் மற்ற இடங்களுக்கு செல்ல முடியும். எனவேதான் விநாயகரை 'முழு முதல் கடவுள்' என்றும் `எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர்' என்றும் போற்றுகிறோம்.

    விநாயகரை எல்லாருக்குமே பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம், நாம் தொடங்கும் எந்த ஒரு செயலையும், இடையூறுகள், எதிர்ப்புகளைப் போக்கி வெற்றி பெற செய்வார்.

    எனவே தான் மக்கள், எந்த ஒரு செயலை தொடங்கும் போது விநாயகரை வழிபட தவறுவதில்லை.

    கல்வி, வீடுகட்டுதல், கடை ஆரம்பித்தல், விவசாயம் செய்தல், திருமணம், சீமந்தம், புனித நீராட்டு.. இப்படி எல்லா மங்கல நிகழ்ச்சிகளிலும் விநாயகரைத் தான் முதலில் வழிபடுவது தொன்று தொட்டு வரும் ஒரு மரபாக உள்ளது.

    விநாயகர் வழிபாட்டில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில், அவரை நாம் மனதார அழைத்தால் போதும், அவர் மகிழ்ச்சி அடைந்து, துள்ளி குதித்து ஓடி வந்து உங்களுக்கு உதவிகள் செய்வார். நீங்கள் கேட்டதையும் தருவார். கேட்காததையும் தருவார்.

    மற்ற வழிபாடுகளுக்கு செய்ய வேண்டியது போல விநாயகரை வணங்கவும், வழிபடவும் அதிகமாக பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரு கைப்பிடி அருகம்புல் சார்த்தி, தோப்பு கரணம் போட்டு விட்டாலே போதும், அவர் அருள் உங்களுக்கு நிரம்ப கிடைக்கும்.

    மற்ற கடவுளர்களிடம் மக்களுக்கு பயபக்தி இருக்கும். ஆனால் விநாயகரிடம் பயபக்தி மட்டுமின்றி, நம் குடும்பத்தில் ஒருவர் போல பாசமும் ஏற்பட்டு விடும். அதற்கு காரணம், விநாயகர் ஒருவர் தான் நம் இடத்துக்கு ஏற்பவும், நம் செயல்களுக்கு ஏற்பவும், அந்தந்த பெயர்களுடன் ரொம்ப எளிமையாக மாறி அமர்ந்து அருள் பாலிப்பார்.

    அவருக்கு இந்த பெயர் தான் சூட்ட வேண்டும் என்றெல்லாம் வரைமுறையே கிடையாது. மலை உச்சியில் இருந்தால் உச்சிப்பிள்ளையார், முச்சந்தியில் இருந்தால் முச்சந்தி விநாயகர், மரத்தடியில் இருந்தால் மரத்தடி விநாயகர் என்று பெயர் அமைந்து விடும்.

    மார்க்கெட் விநாயகர், பாஸ்போர்ட் விநாயகர், நாட்டிய விநாயகர், கூப்பிடு விநாயகர், கிரிக்கெட் விநாயகர், ஸ்னடல் விநாயகர், வேடிக்கை விநாயகர், தேன் விநாயகர், பொல்லா பிள்ளையார், தூது விநாயகர், விகட விநாயகர், சக்கர விநாயகர், டிரவுசர் விநாயகர், மொட்டை விநாயகர், குத்து விநாயகர், கர்ப்ப விநாயகர், பத்து தலை விநாயகர், செல்வ விநாயகர், சக்தி விநாயகர், நவசக்தி விநாயகர், வினை தீர்த்த விநாயகர், வீர விநாயகர், ஆனந்த் விநாயகர், கொள்ளை விநாயகர், சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர், அச்சம் தீர்த்த விநாயகர், வழித்துணை விநாயகர், சாவி விநாயகர், பஞ்சமூக விநாயகர்..... இப்படி விநாயகரின் விதம் விதமான பெயர்களை சொல்லி கொண்டே போகலாம்.

    தமிழ்நாடு முழுவதும் இப்படி விநாயகர் பல நூறு பெயர்களில் பல விதங்களில் அருள் பாலித்து கொண்டிருக்கிறார். உலகில் எந்த ஒரு நாட்டிலும் ஒரே கடவுளுக்கு இப்படி பல ஆயிரம் பெயர்கள் இல்லை.

    நாம் மட்டுமே அதுவும் விநாயகருக்கு மட்டுமே இப்படி பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தோம். பெயர்கள் பல ரூபத்தில் இருந்தாலும் விநாயகர் ஒருவரே.

    நாம் அவர் மீது கொண்டுள்ள பாசத்தால் நம் தேவைக்கு ஏற்ப உருவத்தையும் பெயரையும் மாற்றிக்கொள்கிறோம். கொஞ்சம் மஞ்சளையோ, அல்லது சானியையோ உருட்டி பிடித்து வைத்து விட்டால், அது தான் நமக்கு விநாயகர். இவ்வளவு விரைவாக,

    எளிமையாக வேறு எந்த ஒரு கடவுளையும் வணங்க முடியாது. இத்தகைய விநாயகருக்கு உலகம் முழுவதும் ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாட்டில் நிறைய விநாயகர் கோவில்கள் இருக்கின்றன.

    விநாயகருக்கு பெரிய கோவில்கள் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மரத்தடி போதும். சூப்பராக அமர்ந்து நமக்கு அருள் பாலிப்பார்.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் பல விநாயகர் தலங்கள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. தமிழகத்தில் விநாயகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளன.

    அதே போல நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலும் பல புகழ் பெற்ற விநாயகர் கோவில்கள் உள்ளன. அவற்றுள் முதன்மை தலமாக காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ஆலயம் உருவாகியுள்ளது.

    ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் இந்த தலம் உள்ளது.

    காணிப்பாக்கம் விநாயகர் மிக, மிக சக்தி வாய்ந்தவர். அவரை நம்பி யார் ஒருவர் கை தொழுகிறார்களோ... நிச்சயமாக அவர்கள் கை எல்லா துறைகளிலும் ஓங்கும்.

    இதை ஒவ்வொரு நாளும் காணிப்பாக்கம் விநாயகர் நிருபித்துக் கொண்டிருக்கிறார்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காணிப்பாக்கம் விநாயகர் பற்றியும், அவரது சிறப்புகள் பற்றியும் மாலைமலர் இந்த தொகுப்பு உங்களுக்குத் தருகிறது. படியுங்கள்.... காணிப்பாக்கம் விநாயகர் உங்கள் கவலைகளைப் போக்கி வெற்றிகளை அருள்வார்.

    ×