என் மலர்
வழிபாடு

காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் தேரோட்டம்
- 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
- திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சித்தூர்:
காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் 21 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
அதன் பிறகு தேரோட்டம் நடந்தது. கோவிலின் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பூஜைகள் செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவிலின் மாடவீதிகளில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் பவனி வந்தது. தேரில் எழுந்தருளிய உற்சவர் வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேருக்கு முன்னால் கலை குழுவைச் சேர்ந்த பெண்கள் கோலாட்டம் ஆடினர்.
தேரோட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.






