search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Omni van"

    • ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏற்காடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (34). இவர் தனது ஆம்னி வேனில் பொம்மிடியில் இருந்து ஏற்காடு மலை கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மளிகை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்.

    இவர் தனது ஆம்னி வேனில் மளிகை பொருட்களுடன் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த தகவலை தொடர்ந்து ஏற்காடு போலீசார் நேற்று மஞ்சகுட்டை கிராமத்தில் தீவிர வாகன சோதனை செய்தனர். அப்போது மளிகை சரக்கு கொண்டு வந்த கார்த்திக்கின் ஆம்னி வேனை மஞ்சக்குட்டை கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதையில் வழிமறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய ஏற்காடு போலீசார் போதை பொருட்களை கொண்டு வர பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது.
    • பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அரக்கன் கோட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சாமிய ப்பன் (48). இவர் சொந்தமாக ஆம்னி வைத்துள்ளார். இந்த வேனில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு உள்ளது.

    இதனை சரி செய்வதற்காக கள்ளிப்பட்டி பகுதிக்கு ஆம்னி வேனை சாமியப்பன் ஓட்டி சென்றார். இதையடுத்து வேன் கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் அருகே வந்து கொண்டு இருந்தது.

    அப்போது திடீரென அந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமியப்பன் வேனை அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவலறி ந்து கோபி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் ஆம்னி வேன் முழுமையாக எரிந்தது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆம்னி வேனில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வந்தது.

    • திருச்செந்தூர் கோவில் சென்று விட்டு திரும்பும் போது விபரீதம் ஏற்பட்டுள்ளது.
    • விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (41). இவரது மனைவி நந்தினி வயது (34 ) . இவர்களுக்கு மித்ரா ஸ்ரீ (8) என்ற மகளும், சாய் மகிலன் (5) என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்ணன் திருச்செந்தூர் செல்வதற்கு வேண்டி ஆம்னி வேனில் தனது மனைவி, மகன், மகள், உறவினர்களான பவானி, அம்மாபேட்டை பாரதி வீதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் மனைவி சாந்தி (59), சதீஷ்குமார் வயது (31), அவரது மனைவி சவுமியா (வயது 27) ஆகியோருடன் கிளம்பி சென்றார்.

    இந்நிலையில் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்கு வேண்டி ஆம்னி வேனில் திருச்செந்தூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை கண்ணன் ஒட்டி வந்தார்.

    இந்நிலையில் இன்று நள்ளிரவு 1.20 மணி அளவில் ஆம்னி வேன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கணபதி பாளையம் அருகே உள்ள சின்னம்மாபாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் அவரது மனைவி நந்தினி, மகள் மித்ரா ஸ்ரீ, மகன் மகிலன், உறவினர் சாந்தி, சதீஷ்குமார், சவுமியா ஆகியோர் காயமடைந்தனர்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வந்தது.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • குடும்ப நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • பயணம் செய்த 6 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    பல்லடம் :

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மனைவி சசிரேகா( வயது 57). இவரது மகன் சோமுகுமார்(38). இவரது மனைவி மகாலட்சுமி(27) .இவர்களது குழந்தை கிருத்திக் மற்றும் பிரணவ்(13) ,ரித்திக்(11) . இவர்கள் ஒரு ஆம்னி வேனில், உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ஆம்னி வேன் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே கேரளாவிற்கு செல்வதற்காக வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆம்னி வேனின் முன் பகுதி அப்பளமாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த 6 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் இந்தவிபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அனைவரும் சிறு,சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×