என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhuvanagiri"

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புவனகிரி:

    புவனகிரி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு. மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டு ரங்கன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பூபதி (70). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். பூபதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு பூபதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று அதிகாலை எழுந்த பூபதி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போடவே அருகே வசித்து வருபவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் உதவியுடன் பூபதி புவனகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பு. மணவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
    • விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார்.

    ஆலய முகப்புத் தோற்றம்

    அனந்தன் என்னும் பெருமாளுக்கு இந்தப் பூவுலகம் முழு வதும் சிறப்பு வாய்ந்த பல ஆலயங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் மிகப் பழமை வாய்ந்த வைணவக் கோவில்கள் இருப்பது மிக மிக அரிது.


    ஆனால் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திலுள்ள பு.உடையூர் கிராமத்தில் அப்படி ஒரு பெருமைமிகு பெருமாள் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆகும்.

    இவ்வாலயம் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பதை மட்டும், அதன் கட்டிடக்கலையை வைத்து கணிக்க முடிகிறது. ஆனால் யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்று எதுவும் இல்லை.

    பல நூறு வருடங்களாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில், ராமானுஜர் சில காலம் தங்கியிருந்ததாகவும், அவர் சிதிலமடைந்த ஆலயத்தை புதுப்பித்ததாகவும் தற்போதைய தல வரலாறு தெரிவிக்கிறது.

    தில்லையை தரிசிக்க வந்த ராமானுஜர், இந்த வழியாகத்தான் தில்லைக்குச் சென்றிருக்கிறார். அப்போது இந்த கிராமத்தில் சிதிலமடைந்து கிடந்த கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தைப் பார்த்துள்ளார்.

    அப்பகுதி மக்களிடம், "ஏன் இப்படி இந்த ஆலயத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள்? பரந்தாமன் ஆலயத்தை பார்ப்பதற்கே, மனது பாரமாக இருக்கிறதே!" என்று வருத்தப்பட்டாராம்.

    ஊர் மக்களோ, "பல நூற்றாண்டு காலமாகவே இந்த ஆலயம் சிதிலமடைந்துதான் இருக்கிறது. இந்த ஆலயத்தை கட்டும் அளவுக்கு, எங்களிடம் போதிய பொருளாதாரம் இல்லை" என்று கூறினராம்.

    உடனே ராமானுஜர் தன் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு, இவ்வூரில் சில காலம் தங்கி ஊர் மக்களின் உடல் உழைப்போடு சிதைந்து கிடந்த கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தை பழமை மாறாமல் அப்படியே கட்டி முடித்திருக்கிறார் என்ற செவி வழிச் செய்தி நமக்குக் கிடைக்கிறது. அதன்பிறகு அவ்வூர் மக்கள், இந்த பெருமாளைக் கொண்டாடத் தொடங்கினர்.


    கோவில் அமைப்பு

    முன்மண்டபம் அதில் திருநாமம், அனுமன், கருடாழ்வார் ஆகியோரின் சுதை சிற்பங்கள் அழகுற காட்சி தருகின்றன. அவைகளை வணங்கிவிட்டு உள்ளே சென்றால், பலிபீடம், கருடாழ்வார் ஆகியோரை தரிசிக்கலாம்.

    ஆலயத்தில் நுழைந்ததும் முதலில் இருப்பது மணி மண்டபம். அடுத்தது மகா மண்டபம். அர்த்த மண்டபத்தின் வாசலில் ஜெயன், விஜயன் ஆகிய இரண்டு துவார பாலகர்கள் கம்பீரமாக காட்சி தருகிறார்கள். அந்த மண்டபத்தில் சன்னிதிகள் எதுவும் கிடையாது.

    கிழக்கு நோக்கிய கருவறையில் கல்யாண வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களுக்கு முன்பாக ஸ்ரீதேவி-பூதேவியுடன் கூடிய வரதராஜப் பெருமாள், இடது பக்கம் சக்கரத்தாழ்வார், வலது பக்கம் பெருந்தேவி தாயார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

    தன் திருநாமத்திலேயே கல்யாண வெங்கடேசப் பெருமாள் என்று இருப்பதால், இவ்வாலயம் திருமணத் தடையை போக்கும் சிறப்பு மிக்க ஆலயமாகத் திகழ்கிறது.

    பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்த திரு மணங்கள் கைகூட, இவ்வாலய பெருமாள் மீது நம்பிக்கை வைத்து, அவரது சன்னிதி முன்பாக நின்று 'கோவிந்தா..' என்று கோஷம் எழுப்பி பிரார்த்தனை செய்தாலே போது மானது.

    தடைகளை அகற்றி விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

    திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கையில் சின்னச் சின்ன சலசலப்புகள் வருவது சகஜம்தான். ஆனால் அதுவே கோபமாக மாறி கணவன் - மனைவியை பல நேரங்களில் பிரிப்பதுண்டு.

    மனம் வருத்தத்தால் மண வாழ்க்கையில் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழவும் இவ்வாலய கல்யாண வெங்கடேசப் பெருமாளை துளசி மாலை சூட்டி வணங்குகிறார்கள்.


    அப்படி ஒன்றுசேரும் தம்பதியர் இருவரும் இங்கு வந்து, துளசியால் இறைவனை அர்ச்சித்து, தங்களின் நன்றிக் கடனை செலுத்துகிறார்கள்.

    இவ்வாலயம் அமைந்த பு.உடையூர் கிராமத்தின் முக்கியமான தொழிலாக கருதப்படுவது விவசாயம் தான்.

    இங்குள்ள விவசாயிகள், தங்கள் விவசாயப் பணியை தொடங்கும் முன்பு, நாராயணனின் நாமத்தை கூறி பிரார்த்தனை செய்துவிட்டுதான், விவசாயப் பணிகளைத் தொடங்குகிறார்கள். அப்படி செய்யப்படும் விவசாயம், அமோக விளைச்சலை அள்ளித் தருவதாக சொல்கிறார்கள்.

    கல்வியில் சிறந்து விளங்க இங்கிருக்கும் அனுமனுக்கு கல்வி பயிலும் மாணவ - மாணவிகள், 'ஸ்ரீராமஜெயம்' எழுதி மாலையாக தொடுத்து அணிவித்து பிரார்த்தனை செய்கின்றனர். அப்படி செய்பவர்களுக்கு மன உறுதியும், தன்னம்பிக்கையும் பிறப்பதோடு, கல்வியிலும் சிறந்து விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் ஆண்டு விழா மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று காலையும், மாலையும் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு அன்று ஒரு நாள் மட்டும் இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.

    அதோடு வாரம் தோறும் சனிக்கிழமைகள், மாதந்தோறும் ஏகாதசி ஆகிய நாட்களிலும், கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடை பெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். சனிக்கிழமை மட்டும் மாலை வேளையிலும் திறக்கப்படும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் சிதம்பரத்தில் இருந்து பு.உடையூர் கிராமத்திற்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.

    புவனகிரி அரசு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உடைந்த மேஜை நாற்காலிகள் மற்றும் பயன்படாத பொருட்களை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தனர்.

    தற்போது இந்த பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வு நடந்து வருகிறது. புவனகிரியை சுற்றியுள்ள தனியார் பள்ளி மாணவர்களும் இந்த பள்ளியில் தான் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அந்த அறையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும், பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ பற்றி எரிந்த அறையில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது. இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பள்ளி அறைக்கு மர்ம மனிதர்கள் யாரும் தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ பற்றி எரிந்த பள்ளி அறையின் அருகில்தான் பள்ளியின் அலுவலக அறை உள்ளது. அதில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு தாள்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த அறைக்கு தீ பரவுதற்கு முன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தேர்வு தாள்கள் தப்பின.



    புவனகிரி அருகே இன்று காலை தாறுமாறாக ஓடிய பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 37 பேர் படுகாயமடைந்தனர்.
    புவனகிரி:

    சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டது. பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை திண்டிவனத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது33) ஓட்டி சென்றார்.

    அந்த பஸ் புவனகிரியை அடுத்த கீழ்புவனகிரி திருவள்ளுவர் நகர் அருகே கடலூர்-சிதம்பரம் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவர் ராஜேசின் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்ட அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள், பெண்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பஸ்சின் இடிப்பாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

    இந்த விபத்தில் டிரைவர் ராஜேஷ் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட 37 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். டிரைவரின் கை துண்டானது. விபத்து குறித்து புவனகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பலத்த காயமடைந்த 37 பேரையும் சிதம்பரம் மற்றும் புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    ×