search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "organ donation"

    • கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இந்த கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதாவது கைதிகளுக்கு யோகா, ஓவியம், சிற்பம் ஆகிய பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் உடற் பயிற்சி மற்றும் நடன பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சிறை சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கரில் கைதிகளால் துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டு, 60 வகையான பழம், மூலிகை , காய்கறி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அவர்கள் இது தொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகரை சந்தித்து பேசினர்.


    இது குறித்து ஜிப்மர் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஜிப்மர் டாக்டர்கள், காலாப்பட்டு சிறைக்கு சென்று கைதிகளை சந்தித்து பேசினர். அப்போது 57 தண்டனை கைதிகள், 89 விசாரணை கைதிகள் என 146 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர், கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் 2 அதிகாரிகளும் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

    இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட ஜிப்மர் டாக்டர்கள் அவர்களுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.

    உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

    • நவம்பர் 25லிருந்து கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்ள தொடங்கினார்
    • சிடி ஸ்கேன் பரிசோதனையில் மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது

    இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் (East Midlands) பிராந்தியத்தில் உள்ளது லின்கன்ஷையர் (Lincolnshire) பகுதி. இங்கு தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர், 16-வயதான பள்ளிச்சிறுமி லேலா கான் (Layla Khan).

    சுமார் 3 வாரங்களுக்கு முன்பு லேலாவிற்கு மாத விடாய் கால வயிற்று வலி தொடங்கியது. அவரது தோழிகள் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரை எடுத்து கொள்ள ஆலோசனை கூறினார்கள்.

    நவம்பர் 25லிருந்து லேலாவும் கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்ள துவங்கினார்.

    டிசம்பர் 5 காலகட்டத்தில் லேலாவிற்கு வயிற்று வலியுடன் தலைவலியும் சேர்ந்து கொண்டது. அந்த வார இறுதியில் அவர் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை வாந்தி எடுக்க தொடங்கினார்.

    இதையடுத்து, அவரது குடும்பத்தினர் க்ரிம்ஸ்பி (Grimsby) பகுதியில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். "ஸ்டமக் பக்" (stomach bug) என பொதுவாக அழைக்கப்படும் வைரஸ் தாக்குதலில் வரும் இரைப்பை குடல் அழற்சி (viral gastroenteritis) நோயால் லேலா தாக்கபப்ட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட லேலாவின் நிலை மறு நாள் மோசமடைய தொடங்கி, வலியில் அலற தொடங்கினார். மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முனைந்த போது நடக்க கூட இயலாமல் குளியலறையில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து, அருகிலிருந்த "டயானா, பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ்" மருத்துவமனைக்கு லேலாவை அவர் தாயாரும், உறவினரும் காரில் கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் லேலாவிற்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

    டிசம்பர் 13 அன்று, ஹல் ராயல் மருத்துவமனையில் அக்கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்து விட்டார்.

    குதூகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட நினைத்த லேலா குடும்பம் அவரை இழந்த சோகத்தில் தவிக்கிறது.

    லேலாவின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். அவை 5 உயிர்களை காத்ததாக லேலாவின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

    தக்க சமயத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையை பெறாமல் பிறர் பரிந்துரையில் மருந்துகள் உட்கொள்வதில் அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    • ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ராஜ்குமார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜ்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

    மூளை சாவடைந்து உறுப்பு தானம் செய்த அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9.10 மணிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா, திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மதுரா செந்தில் மற்றும் போலீசாரால் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அவரது உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக மேலகவுண்டன்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் ராஜ்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.

    • தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
    • மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

    நிலக்கோட்டை:

    தமிழகத்தில் முதல்முறையாக உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குன்னூத்துபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது56). விவசாயி. இவர் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.

    மீண்டும் ஊர் திரும்பியபோது எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதற்காக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

    • சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.
    • கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா உள்ளார் கிராமம்- தென்காசி மெயின்ரோட்டை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் சண்முக துரை(வயது 52). இவர் சம்ப வத்தன்று விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    பின்னர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். தொடர்ந்து இன்று காலை அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்படி விபத்தில் உயிரிழந்த சண்முகதுரை யின் நுரையீரல் சென்னை காவேரி மருத்துவ மனைக்கும், கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கும், கருவிழிகள் நெல்லை அரசு மருத்துக்கல்லூரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அரசின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சண்முகத்துரையின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.
    • அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது40) என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

    இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளை செயல் இழந்தது தெரிய வந்தது.

    பின்னர் உறுதி செய்து கொண்ட மருத்துவ குழுவினர் அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.

    இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவி னர், உடல் உறுப்புக்கள் தானமாக பெற்றனர். முதலில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் முதலில் இருதயம் பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல் துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது உடலில் இருந்து 2 சிறுநீரகங்களில், ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் 2 கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜன் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உடலுக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனை அடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் ஊர்திக்கு எடுத்துச் செல்கின்ற வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேப்போல் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலியர் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, இறந்தாலும், சில உயிர்களை வாழ வைக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த கோவிந்தராஜனின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதயம் அறுவை சிகிச்சை செய்துவுடன், போதிய பாதுகாப்பு வசதிகள், ஏற்படுத்தப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது.

    தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள் இனி வரும் காலங்களில் பல உயிர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடல் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கோவிந்தராஜின் உடல் அவரது சொந்த ஊரான போச்சம்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு உடல் உறுப்பு தானம் செய்த கோவிந்தராஜூக்கு அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றும் வகையில் அறிவிப்பு.

    இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

    குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

    தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பைக்கில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த தகர குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் மனைவி ஜெபக்குமாரி (வயது 33) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ராபர்ட்டும், ஜெபகுமாரியும் தனியார் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராபர்ட் மற்றும் ஜெபக்குமாரி ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் வந்தனர்.

    பொன்னை சாலையில் உள்ள அணைக்கட்டு சர்ச் அருகே வந்தபோது ஜெபகுமாரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபக்குமாரி நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.

    இதை தொடர்ந்து ஜெபக்குமாரியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்து தானம் வழங்கியுள்ளனர்.

    விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும்.
    • கல்லீரலைப் போல நுரையீரலுக்கு மீண்டும் வளரும் தன்மை கிடையாது.

    ஒரு மனிதன் உறுப்புக் கொடை செய்ய விரும்பினால் அவன் இறந்த பிறகு அதன் மூலம் ஒன்பது பேர் நன்மை அடைவர்.

    1. சிறுநீரகங்கள் : அதிகமாகத் தேவைப்படும் உறுப்பு. அதிகமாக கொடை அளிக்கப்படும் உறுப்பும் இதுவே. மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும் இரண்டு சிறுநீரகங்களும் தலா ஒரு நபருக்கு என இருவரின் வாழ்வை மேலும் நீட்டிக்க உதவும். டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து விடுபட உதவும்.

    உயிருடன் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தாருக்கு ஒரு சிறுநீரகத்தை கொடையாக வழங்க முடியும். இறந்த நபரிடம் இருந்து வெளியே எடுக்கப்பட்ட சிறுநீரகம் 30 மணிநேரங்கள் உயிரோடு இருக்கும்.

    2. கல்லீரல் : வெளியே எடுக்கப்பட்ட கல்லீரல் 6-12 மணிநேரங்கள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். இறந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலை இரண்டாகப் பிரித்து இருவருக்கு வழங்க முடியும்.

    உயிருடன் இருப்பவர்களும் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தங்கள் கல்லீரலின் சிறு பகுதியை கொடையாக வழங்க முடியும். கொடை வழங்கிய பகுதி மீண்டும் வளர்ந்துவிடும்.

    3. நுரையீரல் : இறந்தவிரிடம் இருந்து பெறப்படும் நுரையீரல் - வலது இடது பகுதிகள் தலா இருவருக்கோ அல்லது இரண்டு பகுதிகளும் சேர்த்து ஒருவருக்கோ தேவைக்கேற்ப பொருத்தப்படும்.

    உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும். எனினும் கல்லீரலைப் போல நுரையீரலுக்கு மீண்டும் வளரும் தன்மை கிடையாது. வெளியே எடுக்கப்பட்டு 4-6 மணிநேரங்கள் உயிர்ப்புடன் இருக்கும்

    4. இதயம் : இறந்தவரிடம் இருந்து பெறப்பட்டு 4-6 மணிநேரங்களில் தேவைப்படுபவருக்கு பொருத்தப்பட வேண்டும்.

    5. கணையம் : இறந்தவரிடம் இருந்து 6 மணிநேரங்களுக்குள் பொருத்தப்பட வேண்டும். உயிருடன் இருப்பவர்களும் தங்கள் கணையத்தின் சிறு பகுதியை தானமாக வழங்க முடியும்.

    6. குடல்: இறந்தவரிடம் இருந்து எடுத்த ஆறு மணிநேரங்களுக்குள் தேவைப்படுபவர்களுக்கு பொருத்த வேண்டும். இவையன்றி இறந்த நபர்களின் கண்களில் இருந்து கார்னியா எனும் விழிப்படலம் . விழிப்படலம் சார்ந்த கண் பார்வையிழப்பில் இருக்கும் நபர்களுக்கு உதவும்.

    கொடையாக வழங்கப்படும் தோல் தீக்காயம் அடைந்தவர்கள், அமில தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.

    தானம் வழங்கப்படும் எலும்புகள், இதய வால்வுகள் போன்றவையும் பலர் வாழ உதவுகின்றன.

    - டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா

    • உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
    • விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கண்தானத்திற்கு சிறப்பாக செயல்பட்ட தற்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணிக்கு, பார்வை யிழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்டமேலாளர் பொன்னுசாமி, கண் மருத்துவத்துறைத்தலைவர் பாரதிராஜன், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் சீதாலட்சுமி ஆகிேயாருக்கு நினைவு நினைவு பரிசு வழங்கினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    கருவிழி கண் தானம் மட்டுமல்லாமல் நம் உடலின் மிகமுக்கியமான பகுதிக ளான சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல்கள் போன்ற உறுப்புகளையும் தானம் அளிக்கலாம். இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வைக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கண்கள் போன்ற உடல் உறுப்புகளை சரியான நேரத்தில் தேவைப்படு வோருக்கு மாற்றம் செய்யும் போது, அவரது வாழ்க்கை யையும், உயிரையும் காப்பாற்ற முடிகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து வதன் மூலமாக ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடல் உறுப்புகளை தான மாக வழங்குவது பல உயிர்களை காப்பாற்று வதற்கான வாய்ப்பாக அமைகிறது என்பதை அறிந்து கொள்ள செய்ய முடியும்.

    இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் வெங்கடேஷ் பிரஜ்னா, அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் சரவணன், அரசு மருத்துவர்கள், கண் தானம் செய்த குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.

    சென்னை:

    சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். மாரிமுத்துவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் பஞ்சந்திருத்தி இருளர் குடியிருப்பு ஆகும்.

    மாரிமுத்து தனது மூத்த மகன் முத்துக்குமரன்(13) என்பவனை திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு மற்ற 4 குழந்தைகளுடன் சென்னை யில் வசித்து வந்தார். கடந்த 27-ந்தேதி முத்துக்குமரன், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 12 வயது நண்பனுடன் வெளியில் சென்றார்.

    திருப்பாச்சூர் அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது திருத்தணி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கடந்த 30-ந்தேதி முத்துக்குமரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி சிறுவனின் உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.

    மேலும் விபத்து தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
    • மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.

    கோவை:

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தபோது அவினாசிசாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே விபத்து ஏற்பட்டது.

    இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு கடந்த 9-ந் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையறிந்த சீனிவாசனின் பெற்றோர் இளமுருகன், கனகவல்லி ஆகியோர் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.

    இதில் கல்லீரல், ஒரு சிறுநீரகம், இதயம், ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், நுரையீரல் சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×