என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்று கார்த்திகை விரதம்.
    • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-1 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை நள்ளிரவு 1.38 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.30 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா. மாயவரம் முடவன் முழுக்கு, குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் மூலவர் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்க டேசப் பெருமாள், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவில்களில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-அமைதி

    சிம்மம்-சுகம்

    கன்னி-நட்பு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- ஆதரவு

    மகரம்-வெற்றி

    கும்பம்-நிறைவு

    மீனம்-செலவு

    • மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
    • அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று தொடங்கி இன்று இரவு 3.42 மணிவரை இருக்கிறது. எனவே நேற்று இரவு முதலே பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்திருந்தனர்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது.
    • இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பூஜை காலங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை (16-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் மேல் சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார்.

    பின்பு இரவு 7 மணிக்கு சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களின் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கிறார்கள்.


    சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதிரியும், மாளிகை புரம் கோவில் மேல் சாந்தி யாக வாசுதேவன் நம்பூதிரியும் பதவி ஏற்கிறார்கள். இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    அதன் பிறகு நாளை (16-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ப தத்தன் ஆகியோர் முன்னிலையில் புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    கோவிலின் நடை திறக்கப்பட்டதும் நிர்மால்ய தரிசனமும், அதிகாலை 3:30 மணிக்கு கணபதி ஹோமமும் நடைபெறும்.

    அவை முடிந்ததும் அதிகாலை 3:30 மணிக்கு நெய் அபிஷேகம் தொடங்குகிறது. தொடர்ந்து காலை 7 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நடைபெறுகிறது. அது முடிந்ததும் காலை 8:30 மணி முதல் 11 மணி வரை மீண்டும் நெய் அபிஷேகம் நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் 11:30 மணி வரை அஷ்டாபி ஷேகமும், பகல் 12:30 மணிக்கு உச்ச பூஜையும் நடைபெறும். அதன் பிறகு பிற்பகல் ஒரு மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும்.

    மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாரா தனையும், இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபி ஷேகமும், இரவு 9:30 மணி முதல் அத்தாள பூஜையும் நடைபெறும். பின்பு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    மண்டல பூஜை காலத்தில் இந்த பூஜைகள் அனைத்தும் தினமும் நடைபெறும். அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகின்றனர்.


    ஸ்பாட் புக்கிங் மூலம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போட்டும் அவர்கள் கொண்டுவரலாம்.

    ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்குவதற்காக பம்பையில் 7 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் எரிமேலி மற்றும் வண்டி பெரியாரிலும் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் செயல்படுகின்றன.

    பக்தர்கள் வரக்கூடிய வாகனங்களை நிறுத்த நிலக்கல், பம்பை மலை உச்சி, சக்குபள்ளம் ஆகிய 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இந்த ஆண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

    பம்பையில் பக்தர்கள் வரக்கூடிய கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வருவதற்காக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சங்கிலி தொடர் போன்று பஸ்கள் தொடர்ச்சி யாக இயக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் இயக்கப்படும் தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பம்பை வரை சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கிறது.

    மேலும் பக்தர்கள் தங்கு வதற்காக பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் நடைப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பம்பையில் 7 ஆயிரம் பேர் தங்கும் வகை யில் 9 நடை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சன்னிதானத் தில் 10 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும், நிலக் கல்லில் 8 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும் நடை பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின் றன.

    அது மட்டுமின்றி சபரி மலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு யாத்திரை செல்லக்கூடிய பக்தர்களுக்கு வழங்கு வதற்காக 3 ஆயிரம் இரும்பு தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்களுக்கு தண்ணீர் நிரப்பி விநியோகிக்கப்படும்.

    பத்தர்கள் மலையில் இருந்து இறங்கும்போது அந்த பாட்டிலை திருப்பி கொடுத்து விட வேண்டும். இதேபோல் பக்தர்களுக்கு சுக்கு தண்ணீர் வழங்குவ தற்காக சரங்குத்தி முதல் சன்னிதானம் வரை 60 கவுண்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன.

    மேலும் பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்க பம்பையில் இருந்து சன்னிதானம் வரையிலான மலை பாதையில் பல இடங்களில் மருத்துவ சிகிச்சை மையங்கள் இருக் கின்றன. மேலும் பக்தர்கள் அமருவதற்காக ஆயிரத் துக்கும் மேற்பட்ட இரும்பு நாற்காலிகள் வைக்கப்பட் டுள்ளன.

    இந்தநிலையில் சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை முடிந்துவிட்டது. அடுத்த மாதத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    ஆன்லைன் முன்பதிவு செய்த நாளில் வர முடியாத பக்தர்கள், தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்டுகள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    மண்டல பூஜை நாளை தொடங்குவதை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் இன்றே வரத்தொடங்கினர். இதனால் எரிமேலி மற்றும் பம்பையில் பக்தர்கள் கூட்ட மாகவே காணப்பட்டது. மதியம் ஒரு மணி முதல் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு மலை யேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக் கப்பட்டார்கள்.

    பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்புதல் மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சபரிமலையில் பணியமர்த்தப்பட்டு உள்ள னர். மேலும் அதிவிரைவு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி கமாண்டோ வீரர்களும் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • குக்கிராமங்களிலும் ராமர் வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன.
    • 11 பிரதோஷ தினங்கள் வந்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    கோவில் தோற்றம்

    ராமாயண காலத்தோடு தொடர்புடைய ஆலயங்கள் இங்கே உண்டு. ராமரால் பூஜிக்கப்பட்ட சிவ தலங்களும் உண்டு. அவற்றில் ராமேஸ்வரம் போன்ற புகழ்பெற்ற திருத்தலங்கள் நமக்குத் தெரியும்.

    ஆனால் குக்கிராமங்களிலும் ராமர் வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைதான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம்.


    கடலூர் மாவட்டம் பின்னலூர் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் ராமலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, ராமர் வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    அயோத்தியாபட்டினத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ராமர் சென்றபோது, பின்னலூர் என்ற கிராமத்தில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.

    குலோத்துங்கச் சோழன் தனது ஆட்சி காலத்தில் 72 மாடக் கோவில்கள் கட்டியதாகவும், அதில் ஒன்று இக்கோவில் என்றும் கூறப்படுகிறது.

    குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்த காலத்தில் மக்கள் விவசாய பணிக்காக பள்ளம் தோண்டும்போது, பூமிக்கு அடியில் இருந்து சிவலிங்கம் ஒன்றை வெளியே எடுத்தனர். இதுபற்றி மக்கள் அனைவரும் குலோத்துங்கனிடம் விபரத்தைக் கூறினர்.

    இதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற குலோத்துங்கச் சோழன், சிவபெருமானுக்கு அங்கே ஒரு ஆலயத்தை அமைக்க முடிவு செய்தார். அந்த ஆலயத்தை மாடக்கோவிலாக அமைத்ததாகக் கூறப்படுகிறது.

    வடலூர் அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரை நமக்குத் தெரியும். ஆனால் அவருக்கு அந்தப் பெயர் வந்ததற்கான காரணம், இந்த ராமலிங்கேஸ்வரர் ஆலயம் தான் என்று சொல்லப்படுகிறது.

    அருட்பிரகாச வள்ளலாரின் தந்தை ராமையாப்பிள்ளை, தில்லை நடராஜரை தரிசிக்க வடலூரில் இருந்து பின்னலூர் வழியாக செல்வது வழக்கம். அப்பொழுது தினமும் ஊரில் இருக்கும் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தரிசனம் செய்து தனக்கு புத்திர பாக்கியம் இல்லாத குறையை மகேசனிடம் மனதார வேண்டி இருக்கிறார்.

    அவர் வேண்டுதல் பலித்து ராமலிங்கேஸ்வரர் அருளால் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. எனவே அந்த குழந்தைக்கு இக்கோவிலில் வைத்து, 'ராமலிங்கம்' என்று பெயர் சூட்டியதாக கூறுகிறார்கள். இப்படி பல சிறப்புகள் வாய்ந்தது இந்த ஆலயம்.


    இந்த கோவில் அமைப்பு படி முன் மண்டபத்தின் மேல் பகுதியில் நடுநாயகமாக சிவன்- பார்வதி ரிஷப வாகனத்தில் சுதைச் சிற்பகமாக வீற்றிருக்கின்றனர். அவர்களின் இருபுறமும் வள்ளி-தெய்வானை உடனாய சுப்பிரமணியர், விநாயகர், அனுமன், ராமர், சீதை, நந்தி ஆகியவை உள்ளன.

    அடுத்தது அலங்கார மண்டபம், அங்கே நந்தி, பலிபீடம், விநாயகர் மற்றும் நால்வர் சன்னிதி அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தெற்கு நோக்கி அற்புதமாய் காட்சி தருகிறாள். அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    கிழக்கு நோக்கிய கருவறையில் ராமலிங்கேஸ்வரர், வட்ட பீடத்தில் பாண லிங்கமாக காட்சி தருகிறார். அவரை வணங்கி விட்டு கோஷ்டத்திற்கு வந்தால், தெற்குமுகம் பார்த்து ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சிவ துர்க்கையை வணங்கலாம்.

    பிரகாரத்தில் விநாயகர், ஸ்ரீதேவி - பூ தேவி சமேதராக சீனிவாசப் பெருமாள், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய அனைவரும் தனித்தனி சன்னிதியில் அற்புமாக காட்சி தருகின்றனர்.

    இவ்வாலயத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புமிகு பிரார்த்தனைகள் பல இருக்கின்றன. இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்வது விசேஷமானதாகும். தொடர்ச்சியாக 11 பிரதோஷ தினங்கள் வந்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

    ஜாதகத்தில் கிரக தோஷங்களால் தள்ளிப் போகும் திருமணங்கள் நல்ல படியாக நடைபெற, மூலவர் ராமலிங்கேஸ்வரருக்கு வில்வ மாலை மற்றும் சரக்கொன்றை மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

    முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு தோஷ பூஜையை இங்கே செய்யலாம். அமாவாசை அன்று தர்ப்பணமும், மற்ற எல்லா நாட்களிலும் முன்னோர்கள் வழிபாடும் செய்யலாம். இதுவும் ஒரு நித்திய அமாவாசை ஷேத்திரம்.


    மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமைய, ஆடிப்பூரம் அன்று கன்னிப்பெண்கள் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு வளையல் அணிவித்து பிரார்த்தனை செய்தால் மனம் போல் வாழ்க்கை அமையும்.

    கடன் பிரச்சனை நீங்க, குடும்ப நிம்மதி கிடைக்க தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபடுகிறார்கள். அன்றைய தினம் 11 நெய் தீபம் ஏற்றி, 11 முறை வலம் வர வேண்டும்.

    இவ்வாலயத்தில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது, சிவராத்திரி. அன்றைய தினம் நான்கு கால பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் அன்றைய தினம் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.

    தில்லை நடராஜர் கோவிலில் நடைபெறுவதுபோல், இந்த ஆலயத்திலும் ஆண்டுக்கு 6 நடராஜர் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று இங்குள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் செய்து பல விதமான மோதக கொழுக்கட்டைகள் பிரசாதமாக நைவேத்தியம் செய்யப்படும்.

    கந்த சஷ்டி ஆறு நாள் உற்சவம் சிறப்பாக நடைபெறும். பர்வதவர்த்தினி தாயாரிடம் முருகன் வேல் வாங்கி ஆலயத்தின் உள்ளே பிரகாரத்தில் சூரசம் ஹாரம் செய்யும் வைபவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய் வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பின்னலூர் ராமலிங்கேஸ்வரர் கோவில்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது.
    • எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் 'சின்' முத்திரை.

    சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள்.

    சபரிமலையில் அருளும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்' என்றால் அறிவு எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.


    எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்' முத்திரையாகும். இந்த முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்ணாரக் கண்டு தரிசிப்பதால், பிறவிப் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்.

    ஒவ்வொரு மாதமும் நடை அடைக்கப்படும் போதும், கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி' என்று அழைக்கப்படுகிறது.

    நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு 'தவக்கோலம்' என்று பெயர்.

    அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்குமாம்.

    மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது, உலகத்தின் பார்வை அந்த கோவிலுக்குள் படும் வேளையில் ஐயப்பனின் தவக்கோலம் கலைவதாக நம்பிக்கை.

    அடுத்த நிமிடம் கோவிலில் ஏற்றிய விளக்கும் அணைந்துவிடும். மனித மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனால் தான் ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், எப்போதும் ஐயப்பனின் திருநாமங்களை சத்தம் போட்டு சரணகோஷமாக சொல்கிறார்கள்.

    இவ்வாறு ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி, பக்தி அதிர்வை ஏற்படுத்தும்.

    இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால்கூட அவர்களது கவனத்தையும் ஐயப்பனை நோக்கி திரும்ப வைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும்.
    • குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.

    சபரிமலைக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராவார்கள். அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு குரு சாமி துணை வேண்டும். சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள், 'குருசாமி' என்ற தகுதியை பெறுகிறார்கள்.


    18-ம் வருடம் சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும். ஒரே ஆண்டில் பதினெட்டு முறை சென்றுவிட்டு வந்தால் அவர்களை குருசாமி என கூற முடியாது.

    18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டு கட்டி, 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.



    18-ம் வருடம் சபரிமலை யாத்திரையின்போது, சிறிய தென்னங்கன்று ஒன்றை எடுத்து செல்வார்கள். இதை கண்டதும் குருசாமி என்று மற்ற ஐயப்ப பக்தர்கள் புரிந்துகொண்டு, அவரிடம் ஆசி வாங்குவார்கள்.

    இதனால் தான் 18-ம் வருடம் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்று அழைக்கின்றனர். இந்த குருசாமி, அடுத்த முறை கார்த்திகை மாதத்தில் மாலை அணியும் ஐயப்ப பக்தர்களுக்கு, தன் கையால் மாலை அணிவிக்கலாம்.

    • இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    இந்த சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதன்படி ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.


    திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அடையாள சின்னத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

    மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 'சுவாமி சாட்பாட்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    இந்த செயலி மூலம் சபரிமலை கோவில் நடை திறப்பு, அடைப்பு, சிறப்பு பூஜை விவரம், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.

    • இன்று பவுர்ணமி. ஸ்ரீமகா அன்னாபிஷேகம்.
    • திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-29 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: பரணி இரவு 10.45 மணி வரை. பிறகு கார்த்திகை.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பவுர்ணமி. ஸ்ரீமகா அன்னாபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால்அபிஷேகம். திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் தேரோட்டம். மாயவரம் ஸ்ரீகவுரிமாயூரநாதர் கடைமுக உற்சவ தீர்த்தவாரி, விருஷப சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. நெடுமாற நாயனார் குருபூஜை. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-அமைதி

    கடகம்-தனம்

    சிம்மம்-சிறப்பு

    கன்னி-பணிவு

    துலாம்- பண்பு

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- ஆசை

    மகரம்-நிறைவு

    கும்பம்-வெற்றி

    மீனம்-பயணம்

    • டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.
    • ஜனவரி 10-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் எனப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

    ஜனவரி 9-ந்தேதி மோகினி அலங்காரமும், 10-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 16-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது.

    அதுசமயம் முகூர்த்த பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தல் காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

    இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அன்னபூரணி, சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி பவுர்ணமி திதி.
    • சந்திரன் சாபம் நீங்கி பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று உதித்து வருவார்.

    "சோறு கண்ட இடம் சொர்க்கம்" ன்னு ஒரு பழமொழி உண்டு.

    சோற்றை கண்டதும் சொர்க்கம் கிடைக்குமா... சோறு பரிமாறப்படும் இடம் சொர்க்கம் போன்றதா என நிறைய கேள்விகள் மனதில்.

    சோறு கண்டதும் சொர்க்கம் என சொல்லும் சொலவடையின் அர்த்தத்தைத் தேடும் போது தான் உலகிற்கே படியளக்கும் பரமசிவனாரின் மகிமை புரிய ஆரம்பித்தது.


    நம்மில் நிறைய பேர் ஆலயத்திற்கு செல்லும் போது சுவாமிக்கு நடைபெறும் பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தைல அபிஷேகம் மற்றும் சந்தனம், விபூதி, மஞ்சள், போன்ற பிற வாசனை பொருட்களால் நடைபெறும் அபிஷேகத்தை பார்த்திருப்போம்.

    சோற்றால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதை நம்மில் வெகு சிலரே பார்த்திருப்போம். ஐப்பசி மாத பவுர்ணமி திதியின் போது சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும்.

    மும்மூர்த்திகளில் சிவபெருமானை போலவே பிரம்மனுக்கும் முன்பு ஐந்து தலை இருந்தது. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவர் என பிரம்மன் நினைத்தார்.

    பிரம்மனின் அகந்தையை அடக்க பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஓர் தலையை சிவபெருமான் கொய்து பிரம்மனை நான்முகன் ஆக ஆக்கினார்.

    சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட பிரம்ம தேவரின் தலையானது சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டு சிவனாருக்கு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது.

    சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்மனின் கபாலம் ஆனது எப்போதும் பசியால் அனத்திக் கொண்டிருந்தது.

    பிரம்மனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க பிரம்மனிடமே உபாயம் கேட்டார் சிவபெருமான்.

    தனக்கு போதும் என்ற அளவுக்கு உணவு கிடைக்கும் போது சிவபெருமானை விட்டு நீங்கி விடுவதாக பிரம்ம தேவரின் கபாலம் சிவனாரிடம் கூறியது.

    சிவபெருமான் கபாலீஸ்வரர் எனும் திருநாமத்தோடு பிச்சாடனார் ஆக உருமாறி பூலோகம் வந்தார்.

    அன்னமிட்டு நிறையும் போது மட்டுமே அந்த கபாலம் சிவபெருமானின் கையை விட்டு பிரியும் என்பது சிவனாருக்கு பிரம்மனால் கொடுக்கப்பட்ட சாபம் ஆகும்.

    சிவ பெருமான் காசிக்கு செல்லும் போது அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள். அகிலம் காக்கும் அன்ன பூரணியின் அன்பினால் கபாலம் நிறைந்தது.

    இதை அடுத்து சிவபெருமான் கையில் ஒட்டி கொண்டு அவரை படாத பாடுபடுத்திய பிரம்மனின் கபாலம் கீழே விழுந்தது. சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

    அன்னபூரணி அன்னை சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி மாதம் பவுர்ணமி திதி. இதனால் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவாலயங்கள் அனைத்திலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது .


    ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் நீங்கி முழு பொலிவுடன் பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று முழு பொலிவுடன் உதித்து வருவார்..

    அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் சந்திர பகவானின் மனைவியர். இதில் ரோஹிணி நட்சத்திரத்தின் மேல் அதிக நாட்டமில்லாமல் சந்திரன் நடந்து கொண்டார்.

    இதை தனது தந்தையிடம் ரோஹிணி புகார் செய்கிறாள். ரோஹிணியின் தந்தை உன் உடல் தேயட்டும்' என சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

    சாபம் பெற்றதும் சந்திரனின் ஒவ்வொரு கலையாகக் குறையத் தொடங்கி, சந்திர பகவான் பொலிவிழந்தார். சந்திரன் தனது தவறை உணர்ந்து தமது சாபம் தீருவதற்காக திங்களூர் கைலாசநாதரை வணங்கினார்.

    சிவபெருமான் அருளால் சாபம் நீங்க பெற்று சந்திரன் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று முழுமையாக பிரகாசித்தார். சந்திரன் பூமிக்கு மிக அருகில் தோன்றும் நாள் ஐப்பசி பவுர்ணமி ஆகும்.

    சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானுக்கு அந்த சந்திரன் முழு பொலிவுடன் இருக்கும் நாளான ஐப்பசி பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் அன்று சிறப்பு வழிபாடு ஆக பிறை சூடிய பெருமான் ஆன சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அன்னாபிஷேகத்தை தரிசித்தவருக்கு அந்த ஆண்டு முழுவதும் அன்னத்திற்கு குறைவு ஏற்படாது. நெல், அரிசி ஆகிறது. அரிசி, சோறாகிறது. சோறு தேகத்துக்குள் சென்று கலந்து வலிமையை அளிக்கிறது.

    இது போலவே ஆத்மா எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் பரமாத்மாவோடு கலந்தால் ஒன்றாகிவிடும் என்பதை உணர்த்தவே அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சொல்லலாம். அரிசி என்ற வார்த்தையிலேயே அரியும் சிவனும் அடங்கியுள்ளனர்.

    சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதன் பொருள் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொரு சோறும் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்திற்கு சமம்.

    நன்றாக சோற்றுப் பருக்கையை உற்று நோக்கினால் சோற்றுப் பருக்கையானது சிவலிங்க வடிவில் இருப்பதை காணலாம் .

    ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தின் போது சிவபெருமானுக்கு சாற்றியிருக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் நம்மால் சிவலிங்கத்தைக் காண முடியும்.

    ஒரே சமயத்தில் கோடி சிவலிங்க தரிசனம் பல ஜென்ம பாவத்தை போக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும் அன்று ஒவ்வொரு சோற்றிலும் ஒரு சிவலிங்கத்தை காணலாம் என ஈஸ்வரன் வரம் கொடுத்து இருப்பதால் அந்த வரத்தின் பயனாக நாம் அன்று கோடி கோடி லிங்கத்தை பார்த்த பலனைப் பெறலாம்.

    சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட அபிஷேக சோற்றை யார் கண்ணார காண்கின்றார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் விளைவாகவே சோறு கண்ட இடமே சொர்க்கம் என கூறப்பட்டது.

    • விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
    • உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

    உலகியல் மயக்கங்களை கடந்து கடவுளிடம் சரணடைந்தால் மட்டுமே மெய்ஞானம் அடைய முடியும். பொன்னால் பதியப்பட்ட சத்தியம் நிறைந்த பதினெட்டு படிகளைக் கடந்து சென்று ஐயப்பனை தரிசித்தால் மெய்ஞானம் நமக்கு கிட்டும். பதினெட்டு படிகளுக்கும் காரணமும், தத்துவமும் உண்டு.


    காமம்:

    பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது.

    குரோதம்:

    கோபம் குடியை கெடுத்து, கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்து விடும்.

    லோபம்:

    பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய் விடும். பேராசை பெரு நஷ்டம். ஆண்டவனை அடைய முடியாது.

    மதம்:

    யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான். மாத்ஸர்யம், மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்து விடும்.

    டம்பம் (வீண் பெருமை):

    அசுர குணமானது நமக்குள் இருக்கக் கூடாது

    அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோக சுமை

    சாத்வீகம்:

    விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

    ராஜஸம்:

    அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது

    தாமஸம்:

    அற்ப புத்தியை பற்றி நிற்பது மதி மயக்கத்தால் வினை செய்வது

    ஞானம்:

    எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு

    அஞ்ஞானம்:

    உண்மைப்பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்

    கண்:

    ஆண்டவனை தரிசித்து ஆனந்தம் அடைய வேண்டும்.

    காது:

    ஆண்டவனின் மேலான குணங்களைக்கேட்டு, அந்த ஆனந்த கடலில் மூழ்கவேண்டும்.

    முக்கு:

    ஆண்டவனின் சன்னிதியில் இருந்து வரும் நறுமணத்தை நுகர வேண்டும்.

    நாக்கு:

    புலால் உணவை தவிர்க்க வேண்டும்.

    வாய்:

    கடுஞ்ச்சொற்கள் பேசக் கூடாது.

    மெய்:

    இரு கரங்களால் இறைவனை கைகூப்பித்தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னிதிக்கு நடந்து செல்லவேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

    இந்த பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றை களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச்சென்றால் தான் இறைவன் அருள் நமக்கு கிடைக்கும். இதையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டு படிகளும் உணர்த்துகின்றன. 

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-28 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி காலை 8.07 மணி வரை பிறகு சதுர்த்தசி பின்னிரவு 3.52 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: அசுவினி நள்ளிரவு 12.12 மணி வரை பிறகு பரணி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் வெண்ணைத் தாழி சேவை. திருமூல நாயனார் குருபூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-விருத்தி

    மிதுனம்-விருப்பம்

    கடகம்-லாபம்

    சிம்மம்-பாராட்டு

    கன்னி-ஆதரவு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-வரவு

    தனுசு- லாபம்

    மகரம்-உறுதி

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-கண்ணியம்

    ×