என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Shekharbabu"

    • தமிழக அரசின் திட்டங்களை மத்திய அரசு பின்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.
    • பக்தர்களுக்குத் அடிப்படை வசதிகளை செய்து தர முதலமைச்சர் உத்தரவு.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 2,500க்கும் அதிகமான பக்தர்கள் ரெயில்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

    இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இணை ஆணையர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில்,காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்கள் என 200 பேரை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

    ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவோர் 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து வர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காசி-தமிழ் சங்கமத்திற்கு போட்டியாக தமிழக அரசு காசி யாத்திரையை தொடங்கியுள்ளதாக கூறப்படுவது அறியாமையை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 4-ந்தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 27-ல், காசிக்கு 200 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அதற்கு தேவையான நிதி ரூ.50 லட்சத்தை தமிழக அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    தமிழக அரசின் திட்டங்களை மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும் பின்பற்றும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் ஆகும். இது யாருக்கும் எதிரான அரசு அல்ல, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருக்குமான அரசு இது.

    யாருக்கும் போட்டி என்பது எங்கள் துறையின் நோக்கம் அல்ல. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவின்படி தான் அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • தமிழக கோவில்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்.
    • காசித் தமிழ்ச் சங்கம நிகழ்விற்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    திமுக பொறுப்பேற்ற பிறகு, ரூ.3200 கோடி மதிப்பிலான பணிகள் 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில், இவ்வளவு பணிகள் மேற்கொண்டது முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் தான். மேலும் 300க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சபரிமலையில் 24 மணி நேர தகவல் மையம் அமைத்து, அரசு அதிகாரிகளை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

    திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 1000 ஆண்டு கால பழமை வாய்ந்த கோயில்களுக்காக நிதி ஒதுக்கி, அந்த கோயில்களை புதுப்பிக்க இந்த ஆண்டு டெண்டர் விடுவது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 87,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும். அதிகாரிகள் உறங்குவது ஐந்து மணி நேரம் மட்டும் தான். மீதமுள்ள 19 மணி நேரத்தில் எப்போதும் அழைத்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகளுக்கு வயர்லெஸ் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள நகைகள், பொருட்கள் அனைத்திற்கும் முதலாம் பாகம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை, இன்று தபாலிலோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் மூலமோ அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும், அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம். இந்து சமய அறநிலையத் துறைக்கு, காசித் தமிழ்ச் சங்கம நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை. வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.

    திருக்கோவிலில் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். விஐபி தரிசனம் இந்த ஆட்சியில் உருவானது அல்ல. தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும்.

    பாஜக ஒரு சைத்தான்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.

    தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் ஆன்மீக சுற்றுலா குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    கடந்த ஆண்டு மே மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியக் கோரிக்கையின் போது, 60 வயதிற்கு மேல் 70 வயதுக்கு உள்ளே இருக்கும் 200 பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவித்திருந்தோம்.

    அதற்குரிய 5 லட்சம் ரூபாய் செலவுத் தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த பயணத்திற்காக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் தேர்வு செய்யப்படும் முதியவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குளிர்காலம் முடிந்தவுடன் முதலமைச்சரின் அனுமதியை பெற்று காசிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் திருடு போன 166 கோவில் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
    • மேலும் 82 சிலைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 884 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலுவையில் இருந்த ரூ.260 கோடி வாடகை பாக்கியை வசூலித்துள்ளோம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலை போன்று தமிழகத்திலுள்ள 48 முதுநிலை கோவில்களில் செல்போன் தடை செயல்படுத்தப்படும்.

    முதலில் திருச்செந்தூர் கோவிலில் அமல்படுத்தப்படும். திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், கண்ணகி கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. சில மலைக்கோவில்களில் பாதை அமைப்பது தொடர்பாக வனத்துறையுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்று வெளிநாடுகளில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகள் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் திருடுபோன 166 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் தங்களுக்கு சொந்தமானது என சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம் தகுந்த ஆதாரம் மற்றும் சான்றிதழுடன் அணுகினால் அவர்களிடமே சிலை ஒப்படைக்கப்படும்.

    போலி சான்றிதழ் மூலம் அறநிலையத்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்களே விசாரித்து உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
    • ரூ.46 லட்சத்தில் புதிய தேர் சீரமைக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பங்குனி உத்திர தேரோட்டம் கிரி வீதிகளிலும், தைப்பூசத் தேரோட்டம் ரத வீதிகளிலும் நடைபெறும்.

    இந்த வருடத்துக்கான தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள்.

    தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினத்தோறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமார சாமி, வள்ளி தெய்வானை பெரிய தேரிலும், விநாயகர், சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த தேர்கள் பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேரோட்டத்துக்கு பயன்படும் தேர் பல வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது என்பதால் சேதமடைந்து இருந்தது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் ரூ.46 லட்சத்தில் புதிய தேர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

    அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (27-ந் தேதி) வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. புதிய தேரில் விநாயகர், முருகன், சிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வ உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வெள்ளோட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி, அமைச்சர் அர.சக்கரபாணி, சச்சிதானந்தம் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், சார் ஆட்சியர் கிஷன் குமார், கோவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதிய தேர் ரத வீதிகளில் உலா வந்த போது ஏராளமான பக்தர்கள் அதனை கண்டு பரவசமடைந்தனர்.

    வருகிற தைப்பூசத் தேரோட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த தேர் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
    • 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 11-ந் தேதி நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்து அனைத்து அரசு துறைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி, சச்சிதானந்தம் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பொதுப்பணி, வருவாய், நெடுஞ்சாலை, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சாலை, போக்குவரத்து, மின்சாரம், ஓய்விடம், உணவு, கழிப்பறை மற்றும் பல்வேறு வசதிகள் குறித்தும், இதுவரை செய்துள்ள வசதிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    அதன்பின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, கடந்த ஆண்டு தைப்பூச திருவிழாவில் 12 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.

    அதன்படி திருவிழா நடைபெறும் 10 நாட்களில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் செய்ய உணவுத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவித்தது கடந்த ஆண்டு ஏற்பட்ட சில இடர்பாடுகளை முன்வைத்துதான் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு அது குறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு கட்டணம் இல்லாமல் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    பக்தர்கள் வருகையை முன்னிட்டு பழனியில் செயல்படும் தங்கும் விடுதிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து முறைப்படி ஆலோசனை நடத்தி முடிவு செய்ய மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

    பக்தர்களின் வருகையை பொறுத்து போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும். தைப்பூசத் திருவிழா காலங்களில் பழனி நகரில் இலவச போக்குவரத்து செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் 50 சென்ட் இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 1930 -ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் தெரிவித்துள்ளபடியும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு குறித்தும் நடுநிலையோடு அரசு செயல்பட்டு வருகிறது.

    கேள்விகள் கேட்பதும், அதற்கு பதில் சொல்வதும் சுலபம். ஆனால் அமைச்சர் என்ற முறையில் தான் சொல்லக்கூடிய வார்த்தை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதனால் மத மோதல்களை தவிர்க்கும் வகையிலேயே பேசுகிறேன். எனவே அதே பொதுநல நோக்கத்தோடு ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி, சச்சிதானந்தம் எம்.பி., அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், எஸ்.பி. பிரதீப் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம்.
    • ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.

    வடவள்ளி:

    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மருதமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணி, மருதமலை அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை வைக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 2,400 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்க்கடவுள் முருகன் கோவில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 90 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

    60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்களை அறுபடை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல இருப்பிட வசதி, போக்குவரத்து வசதியோடு ஏற்பாடு செய்துள்ளோம்.

    பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட 7 முருகன் கோவில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    மருதமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    மருதமலை கோவிலில் நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணிகள் மே மாதத்தில் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும்.

    மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை அமைக்கப்பட உள்ளது. இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு நடந்து வருகிறது. முதலமைச்சரின் அனுமதியுடன் தமிழ்கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 11 கோவில்களில் முழு நேர அன்னதானம் வழங்கப்படுகிறது. 17 கோவில்களில் ஒரு நேர அன்னதானத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.

    தைப்பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னதான பிரபுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்,

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப் பட்டுள்ளது.
    • தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம்.

    புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கோயில் பணியாளர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் காயமடைந்தவர்களை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைசசர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    புதுகோட்டை கோயில் தேர் விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காயமடைந்தவர்களில் 7 பேர் சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளனர். ஒருவரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 809 திருக்கோயில்களில் 981 தேர்தல்கள் உள்ளன, எல்லா தேரோட்டத்திலும் விபத்து ஏற்படுவதில்லை. சில தேர் விபத்து பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

    எதிர்காலங்களில் விபத்துக்களை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்துக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தேர் விபத்து நடைபெறாமல் இருக்க இந்து சமய அறிநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும். எல்லா வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை தேரோட்டத்திற்கு அனைத்து துறைகள் சார்பிலும் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து யார் அலட்சியம் காரணமாக நடைபெற்றிருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்க மாட்டார்.

    புகாரின் அடிப்படையில் கோயில் ஊரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இறுதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கவனக்குறைவால் விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு தேரில் இருந்து சிலைகள் கோயிலுக்குள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான கோயில் தேர், நல்ல நாள் பார்த்து பழுது பார்க்கப்படும். அதன் பின்னர் மீண்டும் தேரோட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நெல்லையப்பர் திருக்கோயிலில் 500 பேருக்கு அன்னதானம் திட்டம் நாளை துவங்கப்பட உள்ளது.
    • புதிய 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், இசைப் பள்ளிகள் துவக்குவது குறித்து ஆலோசனை.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

    2021-2021 அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் சுமார் 1800 பணிகளில் 40 சதவீதத்திற்கு மேலான பணிகள் நிறைவுற்று இருக்கின்றன. 50 சதவீதம் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 10 சதவீதப் பணிகள் துவங்கப்பட இருப்பதை கலந்தாய்வில் உறுதி செய்துள்ளோம்.

    தற்போது அறிவிக்கப்பட்ட 2600பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். அதில் 75 சதவீதம் அளவிற்கு அரசானைகள் பெறப்பட்டு இருக்கின்றன. மீதமுள்ள பணிகளையும் முடிக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதிகமாக பக்தர்கள் வருகின்ற 10 திருக்கோயில்களுக்கு மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 மருத்துவமனைகள் தொடங்குவது குறித்தும், நாள் முழுவதும் பிரசாதம் 5 திருக்கோயில்களிலே அறிவிக்கப்பட்டது.

    உடனடியாக இத்திட்டத்தை துவக்குவது குறித்தும், அன்னதானத் திட்டத்தில் புதிதாக 10 திருக்கோயில்களில் தொடங்கப்படும் என்றும், கடந்த ஆண்டு 2 திருக்கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டத்தில் இருந்ததை தொடர்ந்து கூடுதலாக 3 திருக்கோயில்கள் என ஐந்து திருக்கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    நெல்லையப்பர் திருக்கோயில் விழாக்களில் 500 பேருக்கு அன்னதானம் என அறிவிக்கப்பட்டிருந்தோம் நாளை இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. 13 திருக்கோயில்களுக்கு பேட்டரி கார்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்களிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும், தொடங்கப்பட்டு இருக்கின்றது. மீதமுள்ள 11 திருக்கோயில்களில் அடுத்த மாதத்திற்குள் அறிவிப்பின்படி துவங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    சுமார் 1500 திருக்கோயில்கள் ரூ.1000 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் பணிகள் குறித்தும், 1000 ஆண்டு பழமையான திருக்கோயில்களுக்கு ரூ.100 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதில் 80 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக ஒப்புதல் பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், இசைப் பள்ளிகள் துவக்குவது குறித்தும், அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றுவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்து அறிவுரைகளை வழங்கி பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    ×