என் மலர்tooltip icon

    கோவில்கள்

    காட்டை திருத்தி கோவில் அமைக்கப்பட்ட நரசிம்மர் என்பதால் இவருக்கு காட்டழகிய சிங்கர் என்கிற பெயர் ஏற்பட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுமார் 2500 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலாக இக்கோவில் இருக்கிறது. இக்கோவிலின் பிரதான தெய்வமான திருமாலின் அவதாரமான நரசிம்ம மூர்த்தி காட்டழகிய சிங்கர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் தலவிருட்சமாக வன்னி மரம் இருக்கிறது. ராமானுஜரின் சீடரும், ஸ்ரீரங்கத்தில் பிறந்தவருமான பிள்ளை லோகாச்சாரியார் இக்கோவிலில் ஸ்ரீவசநவபூஷணம் முதலிய பதினெட்டு கிரந்தங்களை இயற்றியுள்ளார்.

    தல புராணங்களின் படி முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இப்பகுதிக்கருகே வசித்த மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் அவதிப்பட்டனர். யானைகளை அடித்து விரட்டுவது இயலாத காரியம், அதே நேரத்தில் அந்த யானைகளை கொல்வதோ மிகவும் பாவமான செயல். இப்படி இரண்டு விடயங்களையும் சிந்தித்து குழம்பிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இப்பகுதியில் இந்த நரசிம்மர் கோவில் அமைத்தனர். அதன் பிறகு இப்பகுதியில் காட்டு யானைகளின் தொந்தரவு குறைந்தது. காட்டை திருத்தி கோவில் அமைக்கப்பட்ட நரசிம்மர் என்பதால் இவருக்கு காட்டழகிய சிங்கர் என்கிற பெயர் ஏற்பட்டது.

    கோவில் சிறப்புக்கள்

    பொதுவாக கிழக்கு திசை பார்த்தவாறு இருக்கும் பெருமாள் இங்கு மேற்கு திசை பார்த்தவாறு காட்சி தருகிறார். கர்ப கிரகத்தில் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்திருக்கும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்களை காக்கும் அபயஹஸ்த முத்திரையை வலது கையில் நரசிம்மர் கொண்டிருக்கிறார். விஜயதசமி தினத்தன்று ஸ்ரீரங்கம் பெருமாள் இங்குள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி காலை முதல் மாலை வரை அருள்பாலிக்கிறார். பிறகு குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வீதியில் இருக்கும் தல விருட்சம் வன்னி மரத்தில் அம்பெய்தி தெற்கு வாசல் வழியாக மூலஸ்தானத்திற்கு செல்கிறார்.

    இக்கோவில் ஒரு பிராத்தனை தலமாக விளங்குகிறது. பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பக்தர்கள் விரும்பும் நட்சத்திர தினங்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.

    பிரதோஷ நாளில் இந்த நரசிம்மருக்கு செய்யப்படும் பூஜையில் கலந்து கொண்டு வழிபடும் குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். வைகாசி நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி நட்சத்திரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதி ஆகிய நான்கு நாட்களின் போது ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து தைலக்காப்பு, திருப்பணியாரங்கள் இக்கோவிலுக்கு அனுப்பப்படுகிறது.

    கோவில் நடை திறப்பு

    காலை 6.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    கோவில் முகவரி

    அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில்
    ஸ்ரீரங்கம்
    திருச்சிராப்பள்ளி – 620006
    இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குளத்துப்புழை ஐயப்பன் கோவில் (அ) குளத்துப்புழா ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இங்கு ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் பால சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவிற்கே உள்ளது. இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது.

    கோவில் அமைப்பு

    குளத்துப்புழா கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். நடுவில் கருவறையும் சுற்றி மரத்தாலான கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம். இங்கு ஐயப்பன் பாலகனாகக் கருவறையுள் காட்சி தருகிறார்.

    பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    கோவில் தோன்றிய தல புராணம்

    கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும் அவருடைய ஆட்களும் காட்டில் கல்லடையாற்றின் கரையில் ஒருமுறை தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர்.

    உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது என்பது மரபுவழிச் செய்தி.

    சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன.

    மச்சக் கன்னி புராணக் கதை

    கோவிலை ஒட்டி கல்லடையாறு ஓடுகிறது. குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி அவரைத் திருமணம் செய்ய விழைய ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம்.

    மச்சக் கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக ஒரு நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

    சிறப்புகள்

    இக்கோவிலில் ஐயப்பன் பாலகனாக அமைந்துள்ளதால், சிறுவர்களின் கல்விக்கு உகந்த இடமான இங்கு விஜய தசமி மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் இங்கு நடைபெறும் வித்யாரம்பம் சிறப்பானது. ஏப்ரல்/மே மாதத்தில் நடைபெறும் விஷு மகோத்சவம் இங்கு நடைபெறும் முக்கியமான திருவிழா ஆகும்[2]. பரவலாக அறியப்பட்ட ஐயப்பனின் கோவில்களில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள்.

    சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம்.திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள குளத்தூர் ஐயன் கோவில் இந்தக் கோவிலில் இருந்து பிடிமண் மற்றும் நீர் எடுத்துவந்து கட்டப்பட்டது.இன்றைக்கும் இந்தக் கோவில் திருவிழாவின் போது குளத்துபுழா சென்று நீர் எடுத்து திரும்புவது வழக்கம்

    இக்கோவில் அமைந்துள்ள குளத்துப்புழா எனும் சிற்றூர், செங்கோட்டை-திருவனந்தபுரம் சாலையில்[2] செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - கொல்லம் இருப்புப் பாதை வழியாகவும் இக்கோவிலை அடையலாம். மேலும் இவ்வூர் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பல வரலாற்று சிறப்புகளையும், அற்புதங்களையும் கொண்டு திகழ்கிறது. இதனால் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.

    கடந்த 1000 ஆண்டு காலமாக நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் இக்கோயிலை மிக சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த கோயிலை பற்றி தமிழ் இலக்கணத்தில் முன்னணி கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது.

    மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி ஒரு தமிழ் மகாகவியான அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார். ‘ திருப்புகழ் ‘ என்ற மகா கவிதை இங்கு தான் எழுதி அர்ப்பணிக்கப்பட்டது.

    மற்றொரு தமிழ் கவிஞர் மகாகவி முத்துசாமி தீட்சிதர் இங்குதான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். இக்கோயிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

    இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலேஸ்வரரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவை வருமாறு:-

    திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜகோபுரம். ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும்.

    இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவை யாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும். குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.

    இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது. இங்கு சிவலிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ஸ்ரீ ரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார்.

    இந்த பிரகாரத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி. இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டினார். இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக மூன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காவது அறையில் முருக கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.

    முதலாவது அறையில் பல அரிய வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும். மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பாட்டு இளையநார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிரார்த்தனை செய்கிறார். இந்த சன்னதி கோபுரதில்லையனார் சன்னதி என்று அழைக்கப்படுகிறது.

    இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சனர் சன்னதியாகும். இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து பல்லால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது. இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சன்னதியில் லிங்கம், நந்தி, மற்றும் தேவியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்லாலா மகாராஜா கோபுரம் மன்னர் பல்லாலாவால் கட்டப்பட்டது. அதனால்தான் பல்லாலா மன்னர் இறந்த பின்னர் சிவனடியாரே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது. இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அருணாச்சலேஸ்வரரே பல்லாலாவின் மகனாக உருவெடுத்து கடமைகளை செய்தார்.

    கோயிலின் நாலாவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பல்லாலா கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் பல்லாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அனைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது. இந்த பிரகாரம் தான் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பல வரலாற்று சிறப்புகளையும், அற்புதங்களையும் கொண்டு திகழ்கிறது. இதனால் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம் மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத்தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

    நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிரகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் அமைந்த ஆலயம். ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.

    தஞ்சாவூர் மாநகரிலும் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பது தெரியுமா? இந்த ஆறு கோவில்களும் தஞ்சாவூருக்குள்ளேயே அமைந்துள்ளன. அந்த கோவில்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் தஞ்சாவூர் மாநகரிலும் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பது தெரியுமா? இந்த ஆறு கோவில்களும் தஞ்சாவூருக்குள்ளேயே அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தஞ்சை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், இந்த ஆறு படைவீடுகளுக்கும் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம்.

    முதலாம் படைவீடு

    தஞ்சை மேல அலங்கம் பகுதியில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலய மூலவர், குன்றின் மேல் இருப்பது போல் உயரமான இடத்தில் இருப்பதால், இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். இதுதவிர விநாயகர், இடும்பன், சிவன், பார்வதி, சிவலிங்கம் திருமேனிகளும் காணப்படுகின்றன. இக்கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது.

    நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில், 250 ஆண்டுகள் பழமையானது. சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விழாக்கள் இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். நாயக்க மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பாக இங்கு ஆயுதங்களை வைத்து வழிபட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

    இரண்டாம் படைவீடு

    தஞ்சை பூக்கார தெருவில் உள்ளது, சுப்பிர மணியசாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் மனைவிகள் இன்றி தனித்து காணப்படுகிறார். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும்.

    திருச்செந்தூரில் வாழ்ந்த ஞானி ஒருவர், ஐம்பொன்னால் ஆன முருகன் சிலை வைத்திருந்தார். அவர் தினமும் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராடும்போது, முருகன் சிலையையும் நீராட்டி பூஜைகள் செய்வார். வயோதிகம் காரணமாக அந்த சிலையை வேறுயாரிடமாவது ஒப்படைத்து தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஞானி எண்ணினார்.

    ஒரு நாள் ஞானியின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அவரை ஒரு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ரெயில்வே ஊழியரிடம் ஐம்பொன் சிலையை கொடுக்கும்படி கூறிவிட்டு மறைந்தார். கனவும் கலைந்தது. கனவில் வந்ததுபோலவே, குறிப்பிட்ட ரெயில்நிலையம் சென்ற ஞானி, ரெயில்வே ஊழியரை சந்தித்து சிலையைக் கொடுத்தார். அந்த ஊழியருக்கும், அந்தக் கனவு முன்தினம் வந்ததை அவர் கூறினார். இருவரும் முருகனின் அருளை எண்ணி நெகிழ்ந்தனர். பின்னர் தஞ்சை வந்த ரெயில்வே ஊழியர், இங்கு ஒரு குடில் அமைத்து முருகனை வழிபட்டார்.

    திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் எல்லா காரியங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    மூன்றாம் படைவீடு

    தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இந்த ஆலயத்தில் இந்திரன் வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. வழக்கமாக முருகப்பெருமானின் அருகில் மயில் வாகனம் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் சன்னிதியில் யானை இருப்பது அரிய காட்சியாக இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. இங்கே விநாயகர், முருகன், இடும்பன், நவக்கிரக சன்னிதிகள், சிவன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், பைரவர், நாகநாதர் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதுவும் ராகுவும், கேதுவும் இடம் மாறி இடம் பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் கார்த்திகை விரதம், பங்குனி உத்திர விழா, முத்து பல்லக்கு, சஷ்டி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    நான்காம் படைவீடு

    தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. சுவாமி மலையில் முருகன் சன்னிதி இருப்பது போலவே, இங்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் அரசு, வேம்பு மரம் சேர்ந்து ஈசான மூலையில் உள்ளது. இங்கு தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை போல பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, ஆஞ்சநேயர் கணபதி, விஷ்ணு துர்க்கை, இடும்பன் என முருகனைத் தவிர 12 சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுடைய கஷ்டம் தீரும் என்பது ஐதீகம். இங்கு சூரசம்ஹாரம், முருகன் திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் விமரிசையாக நடந்து வருகிறது.

    ஐந்தாம் படைவீடு

    தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இங்கு வள்ளி- தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவறைக்கு முன்பாக விநாயகரும், எதிரில் மயிலும், பலிபீடமும் காணப்படுகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு முதலில் வேல் மட்டும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் வள்ளி - தெய்வானையுடன் கூடிய சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகப்பெருமானின் கலியுக அவதாரமான திருஞானசம்பந்தருக்கும் இங்கு தனி சன்னிதி உள்ளது. தவிர விநாயகர், விசாலாட்சி, பைரவர், பஞ்சமுக ஆஞ்சநேயர், துர்க்கை, நவக்கிரக தலங்கள் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. இங்கு முருகனுக்கு நடைபெறும் கந்தசஷ்டி உள்பட அனைத்து விழாக்களும் விமரிசையாக நடைபெறும். இந்தக் கோவிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருத்தணியில் முருகன் இருப்பதை போல இங்கும் காணப் படுவதால் இத்தலம் திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மாநகரில் ஈசானிய மூலையில் இத்தலம் அமைந்துள்ளது.

    ஆறாம் படைவீடு

    தஞ்சை வடக்கு அலங்கம் பகுதி யில் உள்ளது, பால தண்டாயுதபாணி சுவாமி கோவில். இந்தக் கோவில் மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் அடிக்கடி பழனி முருகன் கோவிலுக்குச் சென்று வருவதுண்டு. அப்படி சென்று வர பல நாட்கள் ஆகிவிடும். இதனால் அங்கிருப்பது போலவே இங்கும் ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னதை அடுத்து, பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்கிறார்கள். பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்றுதான் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    கோவில் இருக்கும் பகுதி, மன்னர்கள் காலத்தில் முதலைகளுக்கு தீவனம் வைக்கும் கொட்டகையாக இருந்துள்ளது. எதிரிகள் தஞ்சை நகருக்குள் நுழையாமல் இருக்க அகழிகளை உருவாக்கியிருந்தனர். அதற்குள் பல முதலைகளை வளர்த்து வந்தனர். அந்த முதலைகளுக்காக ஒரு மண்டபத்தில் தீவனம் வைத்துள்ளனர். அந்த மண்டபத்தில்தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.
    சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
    சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் உள்ளிட்டவைதான் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.

    காளிகாம்பாள் கோவில்: சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார். முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.

    திருநீா்மலை ரங்கநாதர்: தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருநீர்மலை. பல்லாவரத்தில் இருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால், இந்த ஊரை அடையலாம். திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆலயம், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கிறது. மலையின் அடிவாரத்திலும் சிறிய கோவில் உள்ளது. இங்கு நீர்வண்ணப்பெருமாள் வீற்றிருக்கிறார். மலையின் மீதுள்ள ஆலயத்தில் ரங்க நாதர் அருளாட்சி செய்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

    மருந்தீஸ்வரர் கோவில்: சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோவில். இங்கு மூலவராக சிவபெருமான் வீற்றிருக்கிறார். நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். அதோடு, அகத்திய முனிவருக்கு, தெய்வீக மருந்து முறைகளை உபதேசம் செய்ததாலும், இவருக்கு இப்பெயர் வந்தது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 திருக்கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று. இந்தக் கோவில் அமைந்த சாலை, அந்த காலத்தில் சோழ நாட்டை, பல்லவ நாட்டோடும், ஆந்திராவில் ஆட்சி செய்த சில ராஜ்ஜியங்களோடும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியதாக சொல்லப்படுகிறது.

    ஜெகந்நாதர் கோவில்: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து விலகி, ரெட்டிக்குப்பம் சாலையில் கானாத்தூர் என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பூரிஜெகந்நாதர் கோவிலை போன்ற வடிவமைப்பிலேயே இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ளதுபோலவே, இங்கும் ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை தரிசிக்க முடியும். தெய்வங்களின் சிலைகளும், பூரியில் உள்ளது போலவே மரத்தால் செய்யப்பட்டவைதான். இதற்காக வேப்ப மரத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான தெய்வங்களைத் தவிர யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் வெண் சலவைக் கற்களாலும், கருப்புப் பளிங்கு கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பளிங்கு கருங்கல் காஞ்சிபுரத்தில் இருந்தும், வெள்ளை சலவைக் கல் ராஜஸ்தானில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.

    தேவி கருமாரியம்மன்: சென்னை புறநகர் பகுதியில் மேற்கு பக்கத்தில் உள்ளது திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். புராண காலத்தில் இந்தப் பகுதியில் மருத்துவக் குணம் மிகுந்த மூலிகை வனம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தெய்வீக மூலிகை (வேர்) நிறைந்த வனம் என்பதால், இந்த பகுதி ‘திருவேற்காடு’ என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இந்த ஆலய அம்மன், குறி சொல்லும் பெண் வேடத்தில் சூரிய பகவானை பார்க்க அவரது இருப்பிடம் சென்றாள். ஆனால் அன்னையை அடையாளம் கண்டுகொள்ளாத சூரியபகவான், அவளுக்கு உரிய மரியாதை தராததோடு, அவமரியாதையும் செய்தான். இதையடுத்து சூரியனின் இடத்தில் இருந்து அன்னை புறப்பட்ட மறுநொடி, சூரியன் தன்னுடைய ஒளியை இழந்தான். இதனால் உலக உயிர்களும் துன்பத்தில் துவண்டன. தன் தவறை உணர்ந்த சூரியன், அன்னையிடம் மன்னிப்பு கோரினான் என்று தல வரலாறு சொல்கிறது. இதனால் சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆலயத்தில் அருளும் கருமாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்படு கின்றன.

    சுப்பிரமணியர் ஆலயம்: சென்னையை அடுத்துள்ளது, பழமையும் பெருமையும் வாய்ந்த குன்றத்தூர். பல்லாவரத்தில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்இந்த ஊர் இருக்கிறது. இங்குள்ள முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர், வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரிய புராணம் என்னும் 63 நாயன்மார்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலமாக குன்றத்தூர் குறிப்பிடப்படுகிறது.
    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பிரமாண்ட ஆலயமாகும்.
    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பிரமாண்ட ஆலயமாகும். இங்கு நான்குபுறமும் பெரிய கோபுரங்கள் மற்றும் உள்கோபுரங்கள் என மொத்தம் 9 கோபுரங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது கோபுரங்களும், ஒன்பது நுழைவாசல்களாக பார்க்கப்படுகின்றன. இதனால் திருவண்ணாமலையை ‘நவதுவார பதி’ என்றும் சொல்வார்கள். இந்த கோபுரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    1. ராஜகோபுரம் (கிழக்கு)

    திருவண்ணாமலை ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் இதுதான். இந்த கோபுரம் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர், கிருஷ்ணதேவராயர். ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தை, 216 அடியாக நிர்மாணித்தார். அதை விட ஒரு அடியாவது பெரியதாக திருவண்ணாமலை ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என எண்ணினார், கிருஷ்ண தேவராயர். இதற்கான பணியை 1550-களில் தொடங்கினார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு, ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அந்தப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, கிருஷ்ணதேவராயர் இறந்துவிட்டார். இதையடுத்து சில ஆன்மிகப் பெரியவர்கள், தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம், இந்தப் பணியை முடிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கிணங்க, திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்தை, கிருஷ்ணதேவராயரின் விருப்பப்படியே, தஞ்சை பெரிய கோவில் விமானத்தை விட, ஒரு அடி அதிகமாக வைத்து 217 அடியுடன் கட்டி முடித்தார். இந்தக் கோபுரம், தமிழ்நாட்டில் 2-வது பெரிய ராஜகோபுரமாக விளங்குகிறது. 11 நிலைகள் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக் கலை அம்சங்களை அதிகமாக காணலாம்.

    2. பேய்க்கோபுரம்

    இது கிழக்கு ராஜகோபுரத்தின் நேராக மேற்கு பகுதியில் உள்ளது. இதனை ‘பேய்க்கோபுரம்’ என்று அழைக்கிறார்கள். கிழக்கு ராஜகோபுரத்திற்கான பணியை தொடங்கியபோதே, மேற்கு கோபுரத்திற்கான பணியையும் கிருஷ்ண தேவராயர் தான் தொடங்கினார். ஆனால் இதனை கட்டி முடித்ததும், தஞ்சை செவ்வப்ப நாயக்கர்தான். 160 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம், தொடக்க காலத்தில் ‘மேற்கு கோபுரம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. அது பேச்சு வழக்கில் ‘மேக்கோபுரம்’ என்றாகி, பிறகு மருவி ‘பேக்கோபுரம்’ என்றாகிப்போனது. பேக்கோபுரம் என்று பேசிப் பேசியே, இது ‘பேய்க்கோபுரம்’ என்ற பெயரைப் பெற்றுவிட்டது. 9 நிலை கொண்ட இந்த கோபுரத்திலும் ஏராளமான சிற்பங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. கார்த்திகைத் தீபத் திருநாளின் போது மட்டும்தான் இந்த கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் மூடப் பட்டு இருக்கும்.

    3. திருமஞ்சன கோபுரம்

    திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு பகுதியில் உள்ள பெரிய கோபுரம் இது. 157 அடி உயரத்தில் அமைந்த இந்த ஆலயத்தை கட்டியவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதும் தெரியவில்லை. இது ஒரு சிறப்புக்குரிய நுழைவு வாசல் ஆகும். ஏனெனில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரண்டு விழாக்களின் போதும், இந்த கோபுரத்தின் வழியாகத்தான், நடராஜர் வெளியே வந்து திருவீதி உலா செல்வார். திருவீதி உலா முடிந்தும், கோவிலுக்குள் செல்வதும் இந்த வழியாகத்தான். முன் காலத்தில் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வதற்கான புனித நீரை, இந்த வாசல் வழியாகத்தான் யானை மீது வைத்து உள்ளே எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே இந்த வாசல் கோபுரத்திற்கு ‘திருமஞ்சன கோபுரம்’ என்று பெயர் வந்ததாம்.

    4. அம்மணி அம்மாள் கோபுரம்

    திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு பகுதியில் அமைந்த பெரிய கோபுரம் இது. திருவண்ணாமலை பகுதியில் வாழ்ந்த ஒரு பெண் சித்தரின் முயற்சியால் கட்டப்பட்டதாகும். சிவபெருமானே இவரது கனவில் வந்து, வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டும்படி உத்தரவிட்டார். இதனால் பலரிடம் நன்கொடை பெற்று இந்தப் பணியை அம்மணி அம்மாள் செய்து வந்தார். 5 நிலைகள் கட்டப்பட்ட நிலையில் பணம் தேவைப்பட்டது. அப்போது சிவபெருமானே, பணம் கிடைக்க அருளினார். மீண்டும் சித்தரின் கனவில் வந்து, ‘பணியாட்களுக்கு விபூதியை ஊதியமாகக் கொடு, மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார். அதன்படியே கட்டிட வேலையைத் தொடங்கிய அம்மணி அம்மாள், அதில் பணியாற்றியவர்களுக்கு, ஊதியமாக விபூதியை வழங்கினார். விபூதியை பெற்றவர்கள் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அன்று அவர்கள் வேலை பார்த்ததற்கான ஊதியத் தொகை சரியாக இருந்தது. இப்படி முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட இந்த வடக்கு ராஜகோபுரத்தின் உயரம் 171 அடி ஆகும். கிழக்கு பிரதான ராஜகோபுரத்தைப் போலவே 11 நிலைகளுடன், 13 கலங்களுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இது. அம்மணி அம்மாளின் பெரு முயற்சியால் நிறைவேறிய காரணத்தால், இந்த கோபுரத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

    5. வல்லாள மகாராஜா கோபுரம்

    1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு வரை, இந்த கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாக கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இதனை கட்டியவர், வீர வல்லாள மகாராஜா. கிழக்கு ராஜகோபுரத்தைத் தாண்டியதும் வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். இந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. இதனால் வருந்திய மன்னனின் கனவில் வந்த சிவபெருமான், தானே மகனாக இருந்து அனைத்து காரியங்களையும் செய்வதாக வாக்களித்தார். அதன்படியே, வல்லாள மகாராஜா இறந்த வேளையில், அவருக்கு சிவபெருமானே இறுதிச் சடங்கை செய்ததாக ஐதீகம். இன்றும் மாசி மாதம் நடைபெறும் நிகழ்வில், மன்னனுக்கு ஈசன் திதி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.

    6. கிளி கோபுரம்

    திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழமையானதாக இந்த கோபுரம் கருதப்படுகிறது. இதனை 1053-ம் ஆண்டு, ராஜேந்திரச் சோழன் கட்டியுள்ளார். சுமார் 81 அடி உயரம் கொண்டது இந்த கோபுரம். வல்லாள மகாராஜா கோபுரத்திற்கு அடுத்தபடியாக இருக்கிறது. முருகப்பெருமானின் புகழைப்பாடிய அருணகிரிநாதா் பிறந்த திருத்தலம் இது. இவர் ஆரம்ப காலத்தில் பெண் பித்தராக இருந்தார். ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்த அவர், இந்த கோபுரத்தின் மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய துணிந்தார். அப்போது முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். இப்பகுதியை ஆண்ட மன்னனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க தேவலோகத்தில் உள்ள மலர் தேவை என்றும், அதனைக்கொண்டு வர அருணகிரிநாதரால்தான் முடியும் என்றும், மன்னனின் ஆலோசகராக இருந்த சம்பந்தாண்டான் கூறினான். இதனை நம்பி, கூடுவிட்டு கூடு பாயும் வித்தையால், தன்னுடைய ஆன்மாவை, இறந்து போன ஒரு கிளியின் உடலுக்குள் செலுத்திக்கொண்டு, தேவலோகம் சென்றார், அருண கிரியார். அதற்குள் அருணகிரியார் மீது பொறாமை கொண்டிருந்த சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். இதனால் கிளி உருவத்திலேயே அந்த கோபுரத்தில் தங்கினார் அருணகிரியார். இதனால் இது ‘கிளி கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

    7. தெற்கு கட்டை கோபுரம்

    திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் ‘தெற்கு கட்டை கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

    8. மேற்கு கட்டை கோபுரம்

    பேய் கோபுரத்திற்கு அடுத்தபடியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

    9. வடக்கு கட்டை கோபுரம்

    அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
    இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார்
    மூலவர்     –  சுகந்தவனேஸ்வரர்
    உற்சவர்     –  சோமாஸ்கந்தர்
    அம்மன்     –  சமீபவல்லி
    தீர்த்தம்     –  கிணறு
    பழமை     –  500-1000 வருடங்களுக்கு முன்
    மாவட்டம்     –  சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.

    சிவகங்கைப் பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி செய்து வந்தபோது, ஒரு போரில் பெரிய வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தார். ஆனால் எந்த இடத்தில் கோவில் அமைப்பது என்பதில் அவருக்கு குழப்பம் இருந்தது. அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், பெரிச்சிக்கோவில் பகுதியைச் சுட்டிக்காட்டி அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கேயே கோவில் அமைக்கும்படியும் கூறினார். அதன்படி அமைந்ததுதான் சுகந்தவனேஸ்வரர் கோவில். வாசனை மலர்கள் நிறைந்த பகுதியில் இந்த இடம் அமைந்த காரணத்தால், இறைவனுக்கு இப்பெயர் வந்தது.

    இது பைரவர் வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு அருகில் மூன்று பேர் வணங்கிய நிலையில் உள்ளனர். அதோடு பைரவரின் நாய் வாகனத்தைப் பிடித்தபடி, பாலதேவர் அருள்கிறார். பவுர்ணமி தோறும் மாலை வேளையில் இந்த பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். பக்தர்கள் பின்புற முகத்தை பார்க்க முடியாது.

    அம்பாள் சமீபவல்லிக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. தன்னை வேண்டுவோர் அருகில் இருந்து காப்பவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். இத்தலத்தின் விருட்சம் வன்னி. கிணற்று நீர் பிரதான தீர்த்தம். அபலைப்பெண் ஒருத்திக்கு, தந்தை ஸ்தானத்தில் இருந்து மணம் முடித்து வைத்த சிவன், அவளை அவளது கணவன் கைவிட்ட போது, வன்னிமரம், கிணறு மற்றும் இலிங்கமாக இருந்து சாட்சி சொன்னார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது போலவே, இந்த தலத்திலும் கிணறையும், வன்னியையும் காணலாம். பிரகாரத்தில் அருகருகே நான்கு விநாயகர்கள் காட்சி தருகின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியருக்கும் சன்னதி உள்ளது. இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். இச்சிலையை போகர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கிறார்கள்.

    பிரார்த்தனை:

    நோய்கள் நீங்க பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

    நேர்த்திக்கடன்:

    பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    போக்குவரத்து வசதி:

    மதுரையில் இருந்து 60 கி.மீ., தூரத்திலுள்ள, திருப்புத்தூர் சென்று அங்கிருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள கண்டரமாணிக்கம் செல்ல வேண்டும். இவ்வூரிலிருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். பஸ் வசதி அதிகமில்லை என்பதால் ஆட்டோவில் சென்று வரலாம்.
    வரும் நவம்பர் 13-ம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த நன்னாளில் குருவித்துறை யோக குருவை தியானித்து அருள்பெறுவோம்.
    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது, குருவித்துறை என்ற திருத்தலம். இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாக வீற்றிருந்து காட்சி தருகின்றனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் நடைபெறுவது வாடிக்கை. அதுபோன்ற காலத்தில் எல்லாம் இரு பக்கங்களிலும் பலர் உயிரிழப்பார்கள்.

    அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ என்ற மந்திரத்தை கற்றறிந்திருந்தார். இதனால் தன் பக்கம் உயிரிழந்த அசுரர்களை எல்லாம், அந்த மந்திரத்தை உச்சரித்து உயிர்ப்பித்து விடுவார் சுக்ராச்சாரியார். இதனால் அசுரர்களின் பலம் கூடிக்கொண்டே இருந்தது. தேவர்களின் படையோ குறைந்து கொண்டே இருந்தது.

    இதையடுத்து சுக்ராச்சாரியாரிடம் இருந்து ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையில் இருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்பதற்காக அனுப்ப முடிவு செய்தனர். அப்படி கல்வி கற்கும்போது, ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் யோசனையாக இருந்தது. இதற்காக தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன் தேர்வு செய்யப்பட்டான்.

    சுக்ராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரிடம் கல்வி கற்றபடியே அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்க வந்த கசன், தேவ குலத்தைச் சேர்ந்தவன் என்பதை அசுரர்கள் அறிந்தனர். மேலும் கசன், ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்கவே இங்கு வந்திருப்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். எனவே கசனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையான சுக்ராச்சாரியாரிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். இதற்கிடையில் மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இத்தலப் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார். இதனாலும் இது குரு தலமாக கருதப்படுகிறது. இங்கு வழிபட்டாலும் குருவால் கிடைக்கும் நன்மைகள் பல நம்மை வந்தடையும்.

    வியாழன் என்று அழைக்கப்படும் குரு பகவான், நவகிரக வரிசையில் முக்கியமானவர். இவரை வணங்கினால் ஞானம், செல்வம் முதலானவற்றை அடையலாம். 'குரு' என்றால், 'இருளை நீக்குபவர்' என்று பொருள். அதாவது, நம்மிடம் இருந்து வரும் அறியாமையாகிய இருளை நீக்குபவர். பொதுவாக, சிவாலயங்களில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது சாதாரணமாகப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால், வைணவத் தலம் ஒன்றில் குருபகவான் எழுந்தருளி இருப்பது, சற்று வித்தியாசமானதுதான்.

    மூன்று பிராகாரங்களைக் கொண்ட விரிவான இந்தக் கோயில், வைகைக் கரையில் அமைந்துள்ளது. பெருமாளை தரிசனம் செய்யச் செல்வதற்கு முன் வெளியே குரு பகவானின் திருச்சந்நிதி. பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அவரை தரிசிக்கும் கோலத்தில் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார் குரு. இவருக்கு அருகே ஸ்ரீசக்கரத்தாழ்வார் எழுந்தருளியிருக்கிறார். இங்கே குரு பகவான், யோக குருவாகக் காட்சிகொடுக்கிறார். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் பாவனையில் காட்சி தருகிறார்.

    குருவைத் தவிர, மகாவிஷ்ணு, இந்திரன், பிரம்மன், சூரியன் மற்றும் சந்திரன், அனுமன், அக்னி பகவான், நட்சத்திர தேவதைகள் உள்ளிட்ட பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்கள்.
    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர் வழியில் இருக்கிறது, பாடி என்ற ஊர். இங்குள்ள லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 5 நிமிடம் நடந்தால், திருவலிதாயநாதர் திருக்கோவிலை அடையலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த இந்த அற்புதமான ஆலயத்தில் வலிதாயநாதர், வல்லீஸ்வரர் என்ற பெயர்களில் இறைவனும், தாயம்மை என்ற பெயரில் இறைவியும் அருள்பாலிக்கிறார்கள். இந்த ஆலயம் குரு பகவானின் பரிகாரத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு குரு பகவான் வந்து தங்கியிருந்து, சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். வியாழ பகவான் எனப்படும் குரு, தன்னுடைய சகோதரரின் மனைவி மேனகையின் சாபத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தார். அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவித்த வர், சிவபெருமானை நினைத்து வழிபட்டார்.

    இதையடுத்து குரு பகவானின் முன்பாக தோன்றிய சிவபெருமான், “நீ.. திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய்து வா.. உனக்கான பலன் கிடைக்கும்” என்றார்.

    அதன்படியே இத்திருத்தலம் வந்த குரு பகவான், இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்து, தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றார். குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    குருவைத் தவிர, மகாவிஷ்ணு, இந்திரன், பிரம்மன், சூரியன் மற்றும் சந்திரன், அனுமன், அக்னி பகவான், நட்சத்திர தேவதைகள் உள்ளிட்ட பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்கள். இருப்பினும் இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு மட்டும் தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது.

    இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தத் திருத்தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம்.
    முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குமரக்கோட்டத்து குமரனை, கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அர்ச்சகர் பூஜித்து வந்தார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், “வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக” என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் கந்தப்பெருமான்.

    இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார், கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை எழுதுவார். பின்பு தினமும் இரவு, அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார். மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல்களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். இப்படி 1 லட்சம் பாடல்கள் அடங்கிய கந்தபுராணத்தை இயற்றி முடித்தார்.

    அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி ‘கந்த புராணம்’ குமரக்கோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ் புலவர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டை, முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து போக்கினார். ‘கந்த புராணம்’ அரங்கேறிய மண்டபம் ஆலயத்தில் இருக்கிறது. இன்றும் அதனை நாம் கண்டு தொழலாம்.

    படைப்புத் தொழிலை செய்கிறோம் என்ற ஆணவத்தில் இருந்தார், பிரம்மதேவர். அவரது செருக்கை அடக்க எண்ணிய முருகப்பெருமான், பிரம்மாவிடம், “படைப்புத் தொழிலுக்கு ஆதாரமான பிரணவ மந்திரமாம் ‘ஓம்’ என்பதன் பொருள் யாது?” என வினவினார். பொருள் அறியாமல் விழித்த பிரம்மதேவரை, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். மேலும் பிரம்மாவின் படைப்புத் தொழிலையும் முருகப்பெருமானே மேற்கொள்ளத் தொடங்கினார். அவ்வாறு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம்.

    இங்கு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவில் அருள்கிறார். முருகர் மான் தோலை இடுப்பிலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார். கீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம், மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை, கீழ் இடக்கரத்தை தொடை மீது பொருத்தி, மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் முருகப்பெருமான், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். குமரக்கோட்டத்தில் முருகப்பெருமான், பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளுவதால், துன்பத்தில் இருப்பவர்கள் இத்தல முருகனை வழிபாடு செய்தால் வாழ்வில் மாற்றம் வரும்.

    உற்சவர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல பைரவரை அஷ்டமியிலும், முருகனுக்குரிய சஷ்டி, கிருத்திகை நாட்களிலும் வழிபட்டு வந்தால் பகை, பிணி விலகி சகலத்திலும் நன்மையே உண்டாகும். இத்தல முருகனுக்கு தினமும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனைக் கண்குளிர கண்டு தரிசித்தாலே சகல நற்பேறுகளும் கிட்டும். குமரக்கோட்டம் குமரனுக்கு தீபாவளியில் மட்டும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்படும். கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதமிருந்து, சூரசம்ஹாரம் அன்று குமரனை 108 முறை வலம் வந்தால், நம் மனதில் எண்ணியவை எளிதாக ஈடேறும்.

    மருமகனுடன் மாமன்

    குமரக்கோட்டத்தில் ‘உருகும் உள்ளப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார் மகாவிஷ்ணு. ஒரு முறை பிரளயம் வந்து உலகமே அழிந்து போயிற்று. அப்போது பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த மார்கண்டேயர் திருமாலிடம், ‘உலக உயிர்கள் அனைத்தும் என்னாயின?’ என வினவ, திருமாலோ ‘என் வயிற்றில் உள்ளன’ என உரைத்தார். இதை நம்பாத மார்கண்டேயர், காஞ்சிபுரம் வந்தார். அங்கு உலகம் அழிந்தாலும் அழியாத காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி வாழ்வு பெற்றார். இதனைக் கண்ணுற்ற திருமாலும் காஞ்சிபுரம் வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்தார். பின்பு குமரக்கோட்டம் வந்த திருமால், தன்னுடைய மருமகன் முருகனுடன் ‘உருகும் உள்ளத்தான்’ என்றத் திரு நாமத்தில் தனிச் சன்னிதியில் எழுந் தருளினார்.
    பல்வேறு நற்பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.
    சனி, ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து, பணி உயர்வு, திருமண வாய்ப்பு, குழந்தைப்பேறு, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற்பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.

    அனுமன் வரலாறு

    அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை, ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி– அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது, வானத்தில் தெரிந்த சூரியனைப், ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டான். அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.

    வளர்ந்து பெரியவனான அனுமன், சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன், ராமனிடம் கொண்ட பக்தியும், வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.

    அனுமன், சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது ராம பக்தியினாலும், தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன், சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.

    அனுமன் கோவில்கள்

    தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச்செயல்புரம், குலசேகரன்கோட்டை, பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும், பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

    தல வரலாறு

    பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன், இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர், ‘வணங்கிய நிலை’யில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் காலணி அணிந்து, இடுப்பில் கத்தி சொருகியபடி, கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது.

    நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி, செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி, ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின், மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோவில் வளாகத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளும், கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி, சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.

    ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது, இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும், சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர்.

    சிறப்பு வழிபாடுகள்

    ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5,008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம், சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம், ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம், இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம், மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம், நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம், ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

    இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ஆண்டு வழிபாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மூலம் நட்சத்திர நாளில் 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரம், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    அமைவிடம்

    திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளபட்டி. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுப்பட்டியில்தான் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.

    –தேனி மு.சுப்பிரமணி.
    சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
    சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் உள்ளிட்டவைதான் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.

    காளிகாம்பாள் கோவில்: சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார். முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.

    திருநீா்மலை ரங்கநாதர்: தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருநீர்மலை. பல்லாவரத்தில் இருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால், இந்த ஊரை அடையலாம். திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆலயம், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கிறது. மலையின் அடிவாரத்திலும் சிறிய கோவில் உள்ளது. இங்கு நீர்வண்ணப்பெருமாள் வீற்றிருக்கிறார். மலையின் மீதுள்ள ஆலயத்தில் ரங்க நாதர் அருளாட்சி செய்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

    மருந்தீஸ்வரர் கோவில்: சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோவில். இங்கு மூலவராக சிவபெருமான் வீற்றிருக்கிறார். நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். அதோடு, அகத்திய முனிவருக்கு, தெய்வீக மருந்து முறைகளை உபதேசம் செய்ததாலும், இவருக்கு இப்பெயர் வந்தது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 திருக்கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று. இந்தக் கோவில் அமைந்த சாலை, அந்த காலத்தில் சோழ நாட்டை, பல்லவ நாட்டோடும், ஆந்திராவில் ஆட்சி செய்த சில ராஜ்ஜியங்களோடும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியதாக சொல்லப்படுகிறது.

    ஜெகந்நாதர் கோவில்: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து விலகி, ரெட்டிக்குப்பம் சாலையில் கானாத்தூர் என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பூரிஜெகந்நாதர் கோவிலை போன்ற வடிவமைப்பிலேயே இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ளதுபோலவே, இங்கும் ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை தரிசிக்க முடியும். தெய்வங்களின் சிலைகளும், பூரியில் உள்ளது போலவே மரத்தால் செய்யப்பட்டவைதான். இதற்காக வேப்ப மரத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான தெய்வங்களைத் தவிர யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் வெண் சலவைக் கற்களாலும், கருப்புப் பளிங்கு கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பளிங்கு கருங்கல் காஞ்சிபுரத்தில் இருந்தும், வெள்ளை சலவைக் கல் ராஜஸ்தானில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.

    தேவி கருமாரியம்மன்: சென்னை புறநகர் பகுதியில் மேற்கு பக்கத்தில் உள்ளது திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். புராண காலத்தில் இந்தப் பகுதியில் மருத்துவக் குணம் மிகுந்த மூலிகை வனம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தெய்வீக மூலிகை (வேர்) நிறைந்த வனம் என்பதால், இந்த பகுதி ‘திருவேற்காடு’ என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இந்த ஆலய அம்மன், குறி சொல்லும் பெண் வேடத்தில் சூரிய பகவானை பார்க்க அவரது இருப்பிடம் சென்றாள். ஆனால் அன்னையை அடையாளம் கண்டுகொள்ளாத சூரியபகவான், அவளுக்கு உரிய மரியாதை தராததோடு, அவமரியாதையும் செய்தான். இதையடுத்து சூரியனின் இடத்தில் இருந்து அன்னை புறப்பட்ட மறுநொடி, சூரியன் தன்னுடைய ஒளியை இழந்தான். இதனால் உலக உயிர்களும் துன்பத்தில் துவண்டன. தன் தவறை உணர்ந்த சூரியன், அன்னையிடம் மன்னிப்பு கோரினான் என்று தல வரலாறு சொல்கிறது. இதனால் சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆலயத்தில் அருளும் கருமாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்படு கின்றன.

    சுப்பிரமணியர் ஆலயம்: சென்னையை அடுத்துள்ளது, பழமையும் பெருமையும் வாய்ந்த குன்றத்தூர். பல்லாவரத்தில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்இந்த ஊர் இருக்கிறது. இங்குள்ள முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர், வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரிய புராணம் என்னும் 63 நாயன்மார்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலமாக குன்றத்தூர் குறிப்பிடப்படுகிறது.
    ×