என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது
    • அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்!!!

    * திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

    * நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

    ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.

    மூன்று இளையனார்!

    இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

    கோபுரம் அருகிலேயே பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

    காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

    திருவண்ணாமலை வரலாறு

    திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சி அளிக்கிறார்.

    மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.

    இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது. சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம்.

    ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர்.

    இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை.

    இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.

    ஒன்பது கோபுரங்கள்!

    கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

    சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

    கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

    மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

    திருவண்ணாமலை கோவில் கட்டமைப்பு

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.

    கடந்த 1000 ஆண்டு காலமாக நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் இக்கோயிலை மிக சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த கோயிலை பற்றி தமிழ் இலக்கணத்தில் முன்னணி கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது.

    மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி ஒரு தமிழ் மகாகவியான அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார். திருப்புகழ் ' என்ற மகா கவிதை இங்கு தான் எழுதி அற்பணிக்கப்பட்டது.

    மற்றொரு தமிழ் கவிஞர் மகாகவி முத்துசாமி தீட்சிதர் இங்குதான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். இக்கோயிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக 5 பிரகாரங்கள் உள்ளன.

    இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலேசுவரரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவை வருமாறு:-

    திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜ கோபுரம். ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும்.

    இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவை யாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும். குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.

    இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது. இங்கு சிவா லிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ஸ்ரீரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார்.

    இந்த பிரகாரத்தின்மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி. இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் கட்டினார். இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக முன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காவது அறையில் முருக கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.

    முதலாவது அறையில் பல அரிய வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும். மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பாட்டு இளையநார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிரார்த்தனை செய்கிறார். இந்த சன்னிதி கோபுரதில்லையனர் சன்னதி என்று அழைக்கப்படுகிறது.

    இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும். இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து பல்லால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது. இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சன்னதியில் லிங்கம், நந்தி, மற்றும் தேவியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்லாலா மகாராஜா கோபுரம் மன்னர் பல்லாலாவால் கட்டப்பட்டது. அதனால்தான் பல்லாலா மன்னர் இறந்த பின்னர் சிவனடியாரே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது. இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அருணாச்சலேஸ்வரரே பல்லாலாவின் மகனாக உருவெடுத்து கடமைகளை செய்தார்.

    கோயிலின் நாலாவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பல்லாலா கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் பல்லாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அனைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது. இந்த பிரகாரம் தான் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.

    • இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
    • இங்கு மட்டும்தான் விநாயகரை மனித குழந்தை வடிவத்தில் பார்க்க முடியும்.

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.

    இங்குள்ள இறைவன் மகாகாளநாதர் என்றும், இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்த பின்னர் அந்த மாலைகளில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மாகாள வாவி என்ற தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும் முருகப்பெருமானையும் வழிபட்டால் விரைவில் மக்கட்பேறு பெறலாம் என்பதும் காலம், காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

    கோவில் அமைப்பு

    இந்த கோவிலுக்கு நாம் சென்றவுடன் நம்மை வரவேற்பதுபோல அமைந்துள்ளது உயர்ந்த ராஜகோபுரம். கோபுரத்தை வழிபட்டு உள்ளே சென்றால் பெரிய முற்ற வெளி உள்ளது. இதன் வலது புறத்தில் கல்யாண மண்டபமாகிய அலங்கார மண்டபம் உள்ளது. அதற்கு எதிரில் இறைவன் சன்னதிக்கு எதிரில் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளது. வழிபட வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் வகையில் அமர்ந்துள்ளார் வார விநாயகர்.

    அடுத்து இரண்டாவது கோபுரம். பெரும்பாலும் ராஜகோபுரத்தை விட மிகவும் சிறிய வடிவில் தான் இந்த கோபுரம் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் ஓரளவு பெரிய அளவில், அழகிய சிற்பங்களுடன் அழகாக உள்ளது. கர்ப்பக்கிரகத்தில், மூலவர் நாகநாத பெருமான், சிவலிங்க திருமேனியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். அவரது இடப்பக்கத்தில் அம்பாள் எழுந்தருளி இருக்கிறார்.

    மூலவர் சன்னதிக்கு வடக்கு பக்கம் காட்சி கொடுத்த நாயகரும், நடராச பெருமானும், ஏனைய உற்சவர்களும், காட்சி தருகிறார்கள். மேலும், தியாகராஜப் பெருமான் சன்னதியில், நீலோத்பாலாம்பாளும், குழந்தை வடிவில் முருகப்பெருமானும், விநாயகரும் உள்ளனர். பெரும்பாலும் விநாயகப் பெருமானை பானை வயிற்றுடன், தும்பிக்கையுடனும் நாம் பார்த்து இருப்போம். ஆனால் இங்கு மட்டும்தான் விநாயகரை மனித குழந்தை வடிவத்தில் பார்க்க முடியும். அம்பாளின் பெயர் பயட்சயாம்பிகை(ராஜ மாதங்கி, அதாவது தன்னை வணங்குபவர்களின் பயத்தை எல்லாம் போக்குவதால் இந்த பெயர் ஏற்பட்டது.

    திருமண தடை நீக்கும் தேவி

    திருமாளத்தில் திருமண கோலத்தில் சிவனும், பார்வதி தேவியும் வீற்றிருந்தனர். அப்போது இறைவன், பார்வதி தேவியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்று கேட்டார். அதற்கு பரமேஸ்வரி, இப்போது நாம் திருமண கோலத்துடன் காட்சி தருகிறோம். நம்மை தரிசிக்க வரும் பக்தர்களில் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் பலர் வருவார்கள். அவர்கள் வரும்போது இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலை கட்டி வந்து, நமக்கு அணிவித்து அர்ச்சனை செய்த பின்னர், அவற்றில் ஒன்றை அவர்களது கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்க அருள் பாலிக்க வேண்டும் என்று கேட்டார்.

    உனது விருப்பம் நிறைவேறுவதாக! என்று கூறி இறைவன் வரம் கொடுத்தார். இதனால்தான் இக்கோவிலுக்கு வரும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை வாங்கி வந்து அம்மனுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து பின்னர் ஒன்றை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது

    தல வரலாறு

    அம்பர் என்னும் ஊரில் அந்தணர் குளத்தில் அவதரித்தவர் சோமாசி மாறர் என்ற முனிவர். அவரது மனைவி சுசீலா தேவியார். இவருக்கு நீண்ட நாட்களாக சோமயாகம் நடத்த வேண்டும் என்று விருப்பம் இருந்து வந்தது. அந்த யாகத்தில் தியாகராஜப் பெருமானே நேரில் வந்து கலந்து கொள்வதோடு அவியை(தினைமாவு) பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார் ஆனால் திருவாரூரில் இருக்கும் தியாகராஜப்பெருமானை கோவிலுக்கு வரவழைப்பது என்பது மிகவும் சிரமம். அதில் இறைவனையே அவியை பெற்றுக்கொள்ள செய்வது சற்று சிரமமான விஷயம் என்று கருதினார்.

    இருப்பினும் இறைவனை வரவழைத்தாக வேண்டும் என்று உறுதியோடு சோமாசி முனிவர் இருந்தார். அப்போது சுந்தரர் பெருமானை அணுகினால், தியாகராஜரை அழைத்து வருவார் என்று சிலர் கூறினர். இதற்கிடையே சுந்தரருக்கு இருமல் நோய் இருந்ததால் தூதுவளை கீரையை விரும்பி உண்டு வந்தார். இதனால் சோமாசி முனிவர் சுந்தரருக்கு தினமும் தூதுவளை கீரையை பறித்துக் கொடுத்து வந்தார்.

    அதுவும் சுந்தரருக்கே தெரியாமல் அவருடைய மனைவி பறவை நாச்சியாரிடம் கொடுத்து வந்தார். இதற்கிடையே ஒரு நாள் பறவை நாச்சியாரிடம் சுந்தரர், தினமும் யார் கீரையை கொடுப்பது? அவரை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சோமாசி முனிவர் என்பவர் கொடுக்கிறார் என்று பறவை நாச்சியார் கூறியுள்ளார்.

    சோமயாகம்

    இதனையடுத்து, சுந்தரரை நேரில் சந்தித்த சோமாசி முனிவர், தான் நடத்த உள்ள சோமயாகத்தில் தியாகராஜப் பெருமான் கலந்து கொள்ள நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். உடனே இருவரும் திருவாரூருக்கு வந்து தியாகராஜப் பெருமானிடம் தங்களது விருப்பத்தை கூறினர் அதற்கு பதில் அளித்த சுவாமி, உங்களது விருப்பத்தை ஏற்று நான் சோமயாகத்தில் கலந்து கொள்கிறேன்.

    ஆனால் நான் எந்த உருவத்தில் வருவேன் என்பதை கூற மாட்டேன். ஏதோ ஒரு உருவத்தில் வருவேன். நீங்கள்தான் என்னை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். உடனே சோமாசி முனிவர், கோவிலுக்கு நேராக வந்து சோமயாகத்தை தொடங்கினார். வைகாசி மாசம் ஆயில்ய நட்சத்திர நாள் வந்தது. பூர்ணாகுதி செய்து அவி வழங்க வேண்டிய நேரமும் வந்தது

    இறைவனின் நீச திருக்கோலம்

    அப்போது திருவாரூரில் இருந்து தியாகராஜர், நீச கோலத்துடன் திருமாளத்துக்கு புறப்பட்டார். அப்போது நான்கு வேதங்களையும் 4 நாய்களாக்கி தோளில் இறந்த கன்றுக்குட்டியை போட்டுக்கொண்டு, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு விநாயகரையும், முருகனையும், மனித குழந்தைகளாக்கி, அம்பாளின் தலையில் சாராய கலயத்தை வைத்து நடந்து வந்தார். இதைக்கண்டதும் சோமயாகத்தில் கலந்து கொண்ட வேத விற்பனர்கள் பயந்து ஓடி விட்டனர்.

    சோமாசி மாறர், பூர்ணாகுதி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார். அப்போது பூமியில் இருந்து திடீரென விநாயகப் பெருமான் தோன்றி எனது தாயும், தந்தையும் தான் இப்படி வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி, அனைவரின் பயத்தையும் போக்கினார். (யாகம் நடந்த இடத்தில் இன்னும் ஐயம் தீர்த்த விநாயகர் என்ற தனி கோவில் ஒன்று இருப்பதை காணலாம்).

    தியாகராஜப் பெருமானும், நீலோத்பலாம்பாளும் யாகத்தில் கலந்து கொண்டு அவி பெற்றவுடன் சோமயாகி முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். இறைவன் வந்திருப்பதை அறிந்த வேத விற்பன்னர்கள் மீண்டும் யாகத்திற்கு வந்து தியாகராஜரை மனம் உருக வேண்டினர்.

    சோம யாக பெருவிழா

    இதனால்தான் வருடம்தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் சோமயாக பெருவிழா இந்த கோவிலில் நடத்தப்படுகிறது. பாவங்களை போக்க காசிக்கு சென்று நீராட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த காசியில் பிறந்த விமலன் என்ற அந்தணர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை செல்வம் இல்லாமல் இருந்தது.

    தென்னாட்டை நோக்கி தல யாத்திரை சென்று தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று கருதி ஒவ்வொரு கோவிலாக சென்றார். கோவில், கோவிலாக சுற்றியும் பலனில்லை. அவரது பக்தியால் மகிழ்ந்த இறைவன் அவர் முன் தோன்றி எங்கு செல்கிறாய்? என்று கேட்டபோது அவர் தன் குறைகளை சொன்னார்.

    அப்போது இறைவன், விமலனிடம் நீ கோவில் திருமாளம் சென்று மகா காளநாதரையும் அக்கோவிலில் எழுந்தருளி உள்ள குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும், முருகனையும் வழிபட்டால் உனக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகனுக்கு மகாதேவன் என்று பெயர் சூட்டுவாய் என்று கூறினார். இறைவனின் ஆணைப்படி அந்தணர் இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனை வழிபட்டு மகா தேவனை பெற்றெடுத்தார்.

    தோஷம் நீக்கிய தலம்

    அஷ்ட நாகங்களில் 2-வது நாகம் வாசுகி. இந்த நாகத்திற்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தை போக்க என்ன வழி என்று சிவபெருமானை தரிசித்து கேட்டது வாசுகி. கோவில் திருமாளம் மாகாளநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், தோஷம் போகும் என்று இறைவன் கூறியதையடுத்து இங்கு வந்து வழிபாடு நடத்தி தோஷம் நீக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், புத்திரபேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கி, ராகு தோஷம், நாக தோஷம், பிரம்மஹத்தி தோஷங்களை நிவர்த்தி செய்ய விரும்புவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில் இது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் திருவாரூருக்கு செல்லும் ரெயிலில் பயணம் செய்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் தஞ்சைக்கு ரெயிலில் வந்து தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயிலில் பயணித்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவிலை அடையலாம்.

    • இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
    • அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை திருத்தலத்தில் அமைந்துள்ளது, மங்களநாத சுவாமி கோவில். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    * இத்தலத்தில் உள்ள மூலவரான சுயம்பு லிங்கம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

    * உத்தரகோசமங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    * கயிலாயத்தை வசிப்பிடமாகவும், காசியை சிறப்பிடமாகவும் கொண்டு சிவபெருமான் வாழ்ந்ததாக புராணங்கள் கூறினாலும், அவர் அவதரித்த தலமாக உத்தரகோசமங்கை திருத்தலம் பார்க்கப்படுகிறது.

    * திருவிளையாடல் புராணத்தில் வரும் 'வலை வீசி மீன் பிடித்த படலம்' நடந்த இடம் இது.

    * ஆதி காலத்தில் இந்த தலம் 'சிவபுரம்', 'தட்சிண கயிலாயம்', 'சதுர்வேதி மங்கலம்', 'இலந்தி கைப் பள்ளி', 'பத்ரிகா ஷேத்திரம்', 'பிரம்மபுரம்', 'வியாக்ரபுரம்', 'மங்களபுரி', 'பதரிசயன சத்திரம்', 'ஆதி சிதம்பரம்' என வெவ்வேறு பெயர்களில் போற்றப்பட்டுள்ளது.

    * இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    * இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாகவும் உள்ளார்.

    * மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.

    * இத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

    * மங்களநாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

    * இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

    * இந்தக் கோவிலில் உட்பிரகாரத்திற்குள் நுழையும் இடத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யாளி சிலைகள் உள்ளன. இவற்றின் வாயில் கல்லால் செய்யப்பட்ட பந்து உள்ளது. இதனை நாம் கையால் நகர்த்த முடியும். ஆனால் யாளியின் வாய்க்குள் இருந்து கல் பந்தை வெளியே எடுக்க இயலாது.

    * பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்தக் கோவிலில் சிவனுக்கும் அம்பாளுக் கும் தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

    * இங்கு ஆதி காலத்து வராகி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு காலத்தில் தொடர்ந்து பூைஜ செய்தால் தீராத பிரச்சினைகள், திருமணத்தடை போன்றவை விலகுகின்றன.

    * இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் வைத்து முருகப்பெருமானுக்கு அளித்ததாக 'ஆதி சிதம்பர மகாத்மியம்' கூறுகிறது.

    * இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னிதி, மங்களேசுவரி சன்னிதி, மரகதக்கல் நடராஜர் சன்னிதி, சகஸ்ரலிங்க சன்னிதி நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடிமரத்துடன் தனித்து இருக்கின்றன.

    * சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம், வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பத்துநாள் சிவ உற்சவம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா, மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் ஆகும்.

    * உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

    * பரத நாட்டிய கலை, சிவபெருமானால் உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலம் இது.

    * உத்தரகோசமங்கை திருத்தலமானது, ராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

    • முழுக்க முழுக்க மூலிகையால் அம்பாள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

    வட திருவானைக்கா என வழங்கும் செம்பாக்கம் என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சி தரும் வயல்வெளி பகுதிகள். நேர்த்தியான தெருக்கள் கொண்ட இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி விசுவரூப மூலிகை அம்மன் கோவில் அழகிய வடிவில் கம்பீரமாக உள்ளது அந்த ஊருக்கே கிடைத்த பெருமை.

    ஒரு பிரமாண்ட அரண்மனை தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் அம்பாள் குழந்தை, குமரி, தாய் என மூன்று வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

    தென் இந்தியாவில் முதல் விசுவரூப மூலிகை அம்பாள் இக்கோவிலில் வீற்றிருப்பது சிறப்பம்சமாகும். 9 அடி உயரத்தில் சர்வலோக மகாராணியாக ஸ்ரீமத் ஔஷத லலிதா மகா திரிபுர சுந்தரி நின்ற கோலத்தில் அங்குச, பாச, மலர், கரும்போடு அன்னை விசுவரூப தரிசனம் தருகின்றாள். முழுக்க முழுக்க மூலிகை யால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது விசேஷ அம்சமாகும்.

    ஔஷத லலிதாம்பிகை யின் சன்னதி அபூர்வ அமைப்புடன் உள்ள ஒரே தலம் இது. ஸ்ரீமத் ஔஷத லலிதாம்பிகை ஒளி வீசும் காந்த புன்னகையோடு மேகலை முதலான அணிகலன்களோடு கிழக்கு நோக்கிய திசையில் வேறு எங்கும் காண கிடைக்காத கலை அழகுடன் பக்தர்களை பரவசமூட்டி ஈர்த்து வருகிறாள்.

    இங்கு மகாராணி தர்பாரில் ஆட்சி செய்வது ேபால கம்பீரமாக அருள் கடாட்சத்துடன் விளங்குகிறாள். தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர அஸ்த்ர, சஸ்திர முறையில் அமையப் பெற்றது. இந்த திருத் தலத்துக்கு விசேஷ சக்தி கள் ஏரா ளம். பக்தர் கள் எண்ணங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வடிவமாக பாலாவின் மூல தேவி லலிதை இங்கு சக்தி படைத்தவளாக திகழ்கிறாள்.

    எப்பேற்பட்ட துன்பத்துடன் இந்த கோவிலுக்கு சென்று மனமுருகி பாலாம்பிகையை வேண்டினாலும் ஒரு மனத்தெளிவும், நேர்மறை சிந்தனையும், முகத்தில் புதுபொலிவும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. வாடிய பயிர்கள் எல்லாம் மழையை கண்டதும் எப்படி மலர்ச்சி அடைகிறதோ, அதே போல் வாடிய முகத்துடன் இங்கு செல்லும் பக்தர்கள் குழந்தை வடிவமாக இருக்கும் பாலாம்பிகையின் முகத்தை பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு பரவசம் அடைவதை நாம் உணரலாம்.

    கால்களில் தண்டையும், கொலுசும் அணிந்து கொண்டு சர்வாபரண அலங்காரத்துடன் விழிகளை திறந்து நம்மோடு பேசும் காந்த உணர்வுடன் ஒரு ஈர்ப்பு சக்தியாய், பொலிவுற அம்பாள் காட்சி தருகிறாள். அம்பாளை ஒரு முறை கண்குளிர பார்த்தாலே அம்பிகையின் ஸ்தோத்தி ரங்கள் நம்மை அறியாமலேயே நம் நாவில் இருந்து வெளிப்படும் என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை.

    இது தவிர இந்த கோவிலில் காலடி எடுத்து வைத்தாலே மனசுக்குள் ஒரு இனம்புரியாத சக்தி ஊடுருவுவதை உணரலாம். அதுவும் அம்பிகையின் சன்னதிக்கு சென்று வழிபட்டால் எந்த பிரச்சினை என்றாலும் அதெல்லாம் நொடிப்பொழுதில் மறைந்து மனசுக்குள் ஒரு அமைதியும், புத்துணர்வும் கிடைப்பதாக இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    இப்படி பல்வேறு சக்திகளை உள்ளடக்கியதாக திகழும் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி, விசுவரூப மூலிகை அம்மன் கோவிலுக்கு திருப்போரூரில் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் ஸ்ரீ அழகாம்பிகை சமேத ஸ்ரீ ஜம்புகேசுவரர் கோவில் நுழை வாயில் வழியாக செம்பாக்கம் ஊருக்குள் 0.5கி.மீ. சென்றால் பெரிய கோவில் எனும்ஜம்புகேசுவரர் கோவில் நம்மை வரவேற்கும்.

    சிவன் கோவில் மதிலை ஒட்டிய சாலையில் 200 மீட்டர் சென்றால் ஸ்ரீபாலா சமஸ்தான திருக்கோவிலை அடையலாம். இத்தலத்தை தரிசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டைமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயத்தின் அமைப்பு

    ஸ்ரீபாலா, ஸ்ரீமத் ஒளஷத லலிதாம்பிகை ஆலயம் செம்பாக்கம் ஊரின் வடகிழக்கு திசையில் கிழக்கு நோக்கியவாறு அரண்மனையைப் போன்ற முகப்புத் தோற்றம் சுதை சிற்பங்களுடன் மிகவும் கலைநயமிக்க வேலைபாடுடன் கிழக்கு திசை நுழைவு வாயில் அமைந்துள்ளது.

    குழந்தை ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி கீழ்சந்நிதி அமைப்பு

    கோவிவை சுற்றி உள்ள வெளிப்புற விமானங்களில் சப்தமாதாக்களின் சுதை சிற்பமும், முன்புறத்தில் ஸ்ரீபாலாம்பிகை கணபதியாக, முருகனாக, கிருஷ்ணனாக, ராமனாக, தட்சிணா மூர்த்தியாக, காளியாக, வாராகி, மாதங்கி, மீனாட்சி அகிலாண்டேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி, சாமரம் வீச ஸ்ரீலலிதாம்பிகை அழகு மிக்க சுதைசிற்ப வேலைபாடுகளுடன் கூடிய முகப்பு தோற்றத்துடனும் உள்ளாள். இருபுறமும் ஐராவதம், ஐராவனம் யானைகள் நிற்க 7 படிகளை கடந்து சென்றால் இருபுறமும் துவார சக்திகள் நின்றிருக்க ஆலயத்தின் முதல் வாயிற்நிலையை கடந்தால் பெரிய மகாமண்டபம் மிகச்சிறப்பான வர்ணவேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

    மகாமண்டபத்திற்கு பிறகு ஊஞ்சல் மண்டபமும், அதற்கு மேல் கருவறையின் இருபுறமும் உத்திஷ்ட கணபதி, முருகன், கலைமகள், அலைமகள், கோஷ்டத்தில் வீற்றிருக்க அர்த்த மண்டபத்தில் மூலவர் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தையாகவும், இவளின் முன் குருமண்டல அசாத்திய ஸ்ரீ சக்கரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபாலாவுக்கு பின்புறத்தில் 3 படிகளை கொண்ட கருவறையில் ஸ்ரீதருணீ திரிபுரசுந்தரி குமரிப்பருவத்திலும் அருள் ஆட்சி செய்கிறாள்.

    மூலவர் ஸ்ரீபாலாவின் இருபுறமும் உற்சவத்திரு மேனியாக ஸ்ரீவாராகி தேவியும், ஸ்ரீமாதங்கியும் வீற்றிருக்க ஸ்ரீபாலாம்பிகை மூல மூர்த்தியாக கீழ்கருவறையில் எழுந்தருள் பாலிக்கின்றாள்.

    தாய் ஸ்ரீமத் ஔஷத லலிதா திரிபுரசுந்தரி அன்னை மேல்தள (மாடிச்சந்நிதி) அமைப்பு

    கீழ் கருவறையின் இருபுறமும் வளர்பிறை (சுக்லபட்சம்) மற்றும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) 16 திதி நித்யா படிகளின் பக்கங்களில் யந்திரங்கள் வலது மற்றும் இடதுபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திதி படிகளின் மூலமாக மேல் கருவறைக்கு சென்றால் ஹயக்கிரீவர், நந்திகேஷ்வரர், மகா மண்டபத்தின் முகப்பின் மேல் பகுதியில் தேவியருடன் கணபதியும், முருகனும் வீற்றிருக்க, நடுவில் கற்பக விருட்சம் கீழ் மகா லட்சுமி, சங்க நிதி, பதும நிதியுடன் வீற்றிருக்கின்றனர். இருபுறமும் பெரிய ரூபமாக சிங்கத்தின் மீது அஷ்டபுஜ வராகியும் கிளியின் மீது அஷ்டபுஜ ராஜ மாதங்கிதேவியும் வீற்றிருக்கின்றனர்.

    மகா மண்டபத்தை சுற்றிலும் அம்பிகையை உபாசனை செய்த குருமார்கள், ஞானிகள் மற்றும் சித்தர்களின் சுதைச் சிற்பங்கள் 16 பேர் சூழ மூலிகை அம்பாள் நேர் எதிரில் சதுர ஆவுடையில் படிகத்தால் ஆன படிக லிங்கம் மகா காமேஸ்வரர் பிரதிஷ்டையாகி உள்ளார்.

    மேல்தள கருவறையில் கிழக்கு நோக்கிய அம்பிகையின் கருவறையின் முன் அர்த்த மண்டபத்தின் நடுவில் வெள்ளி கவசத்துடன் மகாமேரு அமைந்துள்ளது. இருபுறமும் மகாகாளியும், மகா பைரவரும் வீற்றிருக்க கருவறையில் தீப ஒளியில் நம் நேரில் நின்று பேசுவது போல் விஸ்வரூப தரிசனம் தருகிறாள் மூலிகை அம்பாள்.

    மூலஸ்தான சுவர்ண விமானம்

    ஸ்ரீசக்ர ராஜ சிற்சபா விலாச சுவர்ண விமானம் எனப்படும் துவிதள (இரண்டு அடுக்கு) விமானத்தில் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி, அஸ்வரூடா, சம்பத்கரீ தேவியர்கள் நான்கு திசையிலும் சிம்மம் சூழ்ந்திருக்க அமர்ந்துள்ளனர். அதற்கு மேல் உள்ள முதல் அடுக்கு முழுவதும் செப்பு தகடுகள் வெய்து அதற்கு தங்க முலாம் பூசி அழகுடன் அருண நிறத்துடன் பிரகாசமான தோற்றத்துடன் 3 தங்க கலசத்துடன் அமைந்துள்ளது. நாற்புறங்களிலும் பெரிய காமதேனு வாகனங்களால் சூழப்பட்டுள்ளது.

    உற்சவ திருமேனிகள்

    குருபாதுகை, ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி, ரமா வாணி சமேத ஸ்ரீமத் லலிதா மகா திரிபுர சுந்தரி, ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீபால தண்டாயுதபாணி, வேணுகோபால பெருமாள், குழந்தைவேலர், சுவர்ண பைரவர், விபூதி சித்தர், ஸ்ரீகாமேஸ்வரமூர்த்தி, ஸ்ரீ ஆனந்த நடராஜர் ஆகிய உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

    செம்(பியன்)பாக்கம் தலச்சிறப்பு

    சிவன் தானே வந்துறைந்த தொண்டை நாட்டு வைப்பு தலம், வட திருவாணைக்கா என வழங்கும் செம்(பியன்)பாக்கம். சிரம்பாக்கம் என்பது மருவி செம்பாக்கம் என ஆனது. திருச்சி திருவானைக்காவிற்கு இணையான அப்பு (நீர்) தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையே அமர்ந்த நாவல் (ஜம்பு) வனத்தில் உள்ள தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான செம்பியன் கோட் செங்கட் சோழநாயனார் மற்றும் அவரது சோழ வம்சத்தினர்கள், சித்தர்களும், ஞானிகளும், நாகர்களும், சோழ மரபினர், அகத்தியர், லோப முத்திரா தேவியுடன் வழிபட்ட தலம் இந்த நெல் விளையும் செம்பாக்கம் திருத்தலம். இத்தலத்தில் 32 விநாயகர் கோவில்கள், 32 குளங்கள் உள்ளது. இது ஞானபூமி அருள் மிகு ஸ்ரீ அழகாம்பிகை செம்புகேஸ்வர சுவாமி அருள் தரும் புண்ணிய பூமி. அது சமயக்கடவுள்கள் என மொத்தம் 42-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ள தலம்.

    மூலிகைகளால் உருவான ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன்

    சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் "வட திருவானைக்காவு" என அழைக்கப்படும் செம்பாக்கத்தில், ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில், 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

    இந்த திருமேனி பல மூலிகை கள், மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாய கலவைக் கொண்டும், (ரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள், நவரத்தினங்கள்இடம் பெற்றுள்ளன. நமது உடம்பில் உள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டுள்ளது. வளர்பிறை காலங்களில் பலஆயிர மாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார் 8 ஆண்டுகள் கடின உழைப்பில் லலிதாம்பிகை திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, சஸ்த்திரம் என்ற முறையில் அமையப்பெற்றவள் ஆவாள். திதி நித்யா தேவதை களை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் உள்ள கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நின்ற கோலத்தில் அங்குச, பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் புஷ்பபாணம், கரும்பு வில் ஏந்தி அம்பிகை மகா சௌந்தர்ய ரூபத்துடன் அருள்பா லிக்கின்றாள்.

    மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. தினசரி பாதபூஜை உண்டு. குழந்தைகள் நலன் பொருட்டு தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி சவுபாக்கியம், ஆனந்தம், ஆரோக்கியம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல், இங்கு அம்பிகை கோவில் கொண்டிருக்கும் ஆலயம் "ஸ்ரீசக்ரசபை" என்று போற்றப்படு கிறது.

    ஏனென்றால் இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரிபாலனம் செய்வதாக ஐதீகம். ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மும்மூர்த்தி சொரூபிணியாக திகழ்கிறாள். இந்த அம்பிகை திருமேனி 2008-ம் ஆண்டு மாசி பவுர்ணமி ஸ்ரீலலிதா ஜெயந்தி அன்று அம்பிகையின் பத்மபீடத்தில் கற்பபேழை, வலம்புரி சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு மூலிகைஅம்பாள் திருமேனி செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அம்பாள் ஆஞ்ஞையாலும், ஞானாஸ்ரம ஞானிகளின் எங்கள் குருநாதர்களின் வழிகாட்டுதலாலும் மூலிகை திருமேனி பற்றிய ஆய்வுகள் செய்து சித்தர்களின் முறைப்படி குண்டமண்டலங்கள் அமைத்து வேள்விகள் செய்து வளர்பிறை காலங்களில் மட்டுமே இத்திருமேனி அமைக்கப்பட்டது. இத்தகைய பேரழகும் பெருமைக்குரிய மகாசக்தியாகஸ்ரீசக்ரராஜ சபை சந்நிதியில் 15 திதி நித்யா தேவதைகளை படியாக அமைத்து அதன் மேல்தளத்தின் (மாடியில்) கருவறையில் லலிதாம்பிகை திருமேனியை சிற்பாகம ஆய்வரும், ஸ்தபதியும் உபாசகரான சுவாமிஜீ தம் திருக்கரங்களால் அற்புதத்திருமேனி வடிவ மைக்கப்பட்டுள்ளது என்பது போற்று தலுக்கு மட்டுமில்லாமல் வியப்புக்கும் உரிய தகவலாகும்.

    இக்கோவிலில் மூலிகை அம்பாள் ஔஷதத்தால் ஆனவள். ஔஷதம் என்றால் நவபாசாணத்தில் அல்லாமல் முழுமையாக பலவகை மூலிகையினால் மட்டுமே உருவானவள். இந்த அம்பாளின் திருமேனியை வடிவமைப்பதற்கு மட்டும் 8 வருடங்கள் ஆனதாக கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்த மூலிகை அம்பாளின் திருமேனிக்குள் பாணலிங்கம் வீற்றிருக்கிறார். பாண லிங்கம் என்றால் சாளக்ராமம் என்று வைஷ்ணவத்தில் அழைக் கப்படுகிறது. சைவத்தில் பாண லிங்கம் என்றழைக்கப்படுகிறது.

    பாணலிங்கத்தை பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் சிவன் அந்த விக்கிரகத்தில் வீற்றிருப்பார். ஆனால் மற்ற விக்கிரகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தால் மட்டுமே தெய்வங்கள் அதனுள் வீற்றி ருப்பார்கள். அதனால் தான் கோவில்களில் தினமும் 6 கால, 4 கால பூஜை செய்யப்படுகிறது. தெய்வங்களுக்கு ஒவ்வொரு பூஜையை பொருத்தும் தெய்வங்களின் காந்த ஆற்றல் மாறுபடுகிறது. சூரியனிடமிருந்து காலையில் கிடைக்கும் சக்தி வேறு. 11 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, 12,1 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, 3 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, 4 மணிக்கு கிடைக்கும் சக்தி வேறு, எல்லாம் ஒரே சக்தி கிடையாது.

    நேரத்திற்கேற்றவாறு சக்தி மாறுபடுகிறது. இந்த எல்லாக் காலத்தினுடைய சக்தியும் ஒரு மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கோவில்களில் அந்தந்த நேரங்களில் பூஜை செய்து அந்த சக்தியை பெறுவதற்காக 6 கால பூஜை, 4 கால பூஜை, 2 கால பூஜை என செய்யப்படு கிறது. இக்கோவிலில் காலையில் பாலாவிற்கும், மாலையில் லலிதா திரிபுர சுந்தரிக்கும் என இரண்டு வேளை தீபாராதனை காட்டி 2 கால பூஜை செய்யப்படுகிறது. காலை, மதியம், இரவு என 3 கால நைவேத்தியம் செய்யப்படுகிறது.

    லலிதா திரிபுரசுந்தரிக்குள் பானலிங்கர் வீற்றிருக்கிறார். நாம் பூஜை செய்யாவிட்டாலும் அவரே சுயம்புவாக உள்ளார். அந்த பாணலிங்கத்தை உள்ளே வைத்து மேற்புரத்தில் மூலிகையால் கட்டி சிறிது சிறிதாக ஆராய்ச்சி செய்து அம்பாளின் திருமேனியை வடிவ மைத்துள்ளனர். இக்கோவிலில் அம்பாளை 8 வருடங்களுக்கு முன்னரே பிரதிஷ்டை செய்து ஆரம்பித்து ஒவ்வொரு மூலிகைக்கும் தனித்தனியே மந்திரங்களை கூறி ஒரு நாளைக்கு ஒரு இலை அளவு கனமான மூலிகையே அம்பாளின் மீது சாத்த முடியும்.

    அம்பாளின்மீது மூலிகை சாத்தும் போது மழை பெய்தால் என்னென்ன ஆகும். மழை காலத்தில் எப்படி உள்ளது, வெயில் காலத்தில் எப்படி உள்ளது, குளிர் காலத்தில் எப்படி உள்ளது என்பதை ஆராய்ச்சி செய்து, மழைக் காலத்தில் பூஞ்சை பிடிக்கின்றதா எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன என்பது அனைத்தையும் ஆராய்ச்சி செய்துதான் 7 முதல் 8 வருடங்கள் வரை அம்பாளின் திருமேனி உருவாக்கப்பட்டிருக்கிறது.

    மூலிகை அம்பாளுக்கு கோவி லின் தோட்டத்து புஷ்பங்களை வைத்து மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. அதேபோல் மூலிகை அம்பாளுக்கு தனியாக 64 முழம் தனித்தரியில் புடவை நெய்து தான் சாத்த வேண்டும். அம்பாள் பக்தர்களிடம் அவளே கனவில் வந்து கேட்டுத்தான் புடவை சாத்தி கொண்டாள் என்கின்றனர் கோவில் நிர்வாகத்தினர்.

    அம்பாளுக்கு ஸ்ரீவிஜய உபாஸ்மியில் மூன்று மார்க்கம் உள்ளது. ஆரம்ப நிலை, இடை நிலை, உடைநிலை என மூன்று நிலை உள்ளது. ஆரம்ப நிலை என்பது பாலா உபாஸ்மி, இடை நிலை பஞ்சகஸ்த உபாஸ்மி. அவள்தான் கருணை புரியும் திரிபுர சுந்தரி என்பது. உடை நிலை என்பது மஹாஸ் உபாஸ்மி. இதன் பெயர் லலிதா திரிபுர சுந்தரி என்பது. மூன்று அம்பாளுக்கும் மூன்று மந்திரங்களால் யாகம் செய்வது, பூஜை செய்வது நடக்கின்றது.

    மூலிகை அம்பாள் சிறப்புகள்

    * இங்கு ஆண்டுதோறும் 2 முறை மூலிகை தைல காப்பு பச்சை கற்பூரத்தால் மட்டுமே ஆரத்தி நடைபெறும்.

    * மூலிகை அம்பாளுக்கு பிரதி மாதம் பவுர்ணமி மட்டும் 64 முழம் புடவை சாத்தப்படும்.

    * பிரத்யேகமாக தனியாக தறிபோட்டு இந்த அம்பாளுக்கு புடவை நெய்யப்படுகின்றது.

    *பவுர்ணமி திதியில் சர்வ ஆபரண அலங்காரம் மற்றும் 27 வகை ஆரத்திகள் நடைபெறும்.

    * விழா நாட்களை தவிர மற்ற நாட்களில் மூலிகை அம்பாள் தரிசனம் மட்டுமே உண்டு. நினைத்த நேரத்தில் ஆரத்தி இல்லை. நான்கு கால மகா ஆரத்தி தரிசனம் மட்டுமே உண்டு.

    * மூலிகையம்பாள் சந்நிதிக்கு ஆண்கள் சட்டை, பனியன் இல்லாமல் மட்டுமே தரிசிக்க இயலும். (சிறு ஆண் குழந்தை ஆனாலும் அப்படியே)

    * இந்த ஆலயத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல கட்டாயம் அனுமதியில்லை. ஆலய அலுவலகத்தில் செல்போனை கொடுத்து டோக்கன் பெற்று செல்லவும்.

    * செண்பக பூ, தாமரை மாலை, வெட்டி வேர் மாலை தவிர வெளி புஷ்பங்கள் மூலிகை அம்பாளுக்கு சாற்றப்பட மாட்டாது. மூலிகை அம்பாளை தவிர மற்ற தெய்வங்களுக்கு மாலைகள் சாற்றி வழிபடலாம்.

    திதி படி ஏறும் முறை

    திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசை திதி படிவழியே அம்பாளை பார்த்தபடி பின்னோக்கி இறங்க வேண்டும். (முடியாத முதியவர்கள் நேராக இறங்கலாம்).

    மூலிகை திருமேனியில் மும்மூர்த்தி தரிசனம்

    அம்பிகை அலங்காரத்தில் திருமலை பாலாஜியாகவும், அன்னை லலிதாவாகவும் அவளுள் மறைந்திருக்கும் சிவமாகவும் தரிசிக்கலாம். இவளை தரிசனத்தால் ஹரி, ஹரன், அம்பிகை ஆகியோரை தரிசித்த பலன்கிட்டும். இவள் சந்நிதியில் பச்சைகற்பூர ஆரத்தி மட்டுமே நடைபெறும்.

    ஸ்ரீலலிதாம்பிகையின் எளிய 25 நாமஸ்துதிகள்

    1. சிம்ஹாசநேசி 2. லலிதா 3. மஹாராக்ஞீ 4. வராங்குசா 5. சாபிநீ 6. திரிபுரா 7. சுந்தரி 8. மஹாதிரிபுரசுந்தரி 9. சக்ரநாதா 10. சம்ராக்ஞீ 11. சக்ரிணீ 12. சக்ரேஸ்வரி 13, மகாதேவி 14. காமேசி 15. பரமேஸ்வரி 16. காமராஜ பிரியா 17. காமகோடிகா 18. சக்ரவர்த்தினி 19. மகாவித்யா 20. சிவானங்க வல்லபா 21. சர்வ பாடலா 22. குலநாதா 23. ஆம்நாயநாதா 24. சர்வாம் நாய நிவாசிணீ 25. சிருங்கார நாயிகா.

    அமைவிடம்

    ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,

    திருப்போரூர் (ஓ.எம்.ஆர்)- செங்கல்பட்டு சாலை,

    செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா,

    செங்கல்பட்டு மாவட்டம்-603 108.

    (திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.)

    • உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது.
    • ஆண்டு தோறும் சித்திரை 1-ந்தேதி மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.

    தென் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரமாண்டமான வடிவில் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

    கேரளாவின் கட்டிடக்கலை வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்தியங்கிரா தேவி மற்றும் கால பைரவருக்கு ஒரே கல்லில் ஆன 11 அடி உயரத்தில் தத்ரூபமான வடிவில் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

    ஆலயத்தின் மூலவராக மகா பிரத்தியங்கிராதேவி வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பத்து கரங்களுடன் கூடிய விஸ்வரூப கோலத்தில் மகா கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆலய வளாகத்தில் தட்சிணாமூர்த்தி குரு மகாலிங்கேஸ்வரராக தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆகம விதிப்படி நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இவரை வணங்கினால் குழந்தைபேறு, தொழில் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    ஆலய வளாகத்தில் மங்கலம் தரும் சனீஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, வீரணார், சரபேஸ்வரர், பஞ்சமுக கணபதி, சூலினி துர்கா, சிம்ம கணபதி, நாகலிங்கம், முனீஸ்வரர், குருபகவான், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், காளி ஆகிய தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். சனிக்கிழமை தோறும் ஆலயத்தில் உள்ள மங்கலம் தரும் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடக்கின்றன.

    இவ்வாலயம் சாஸ்திரப்படி இயற்கையாகவே இடுகாடு, சுடுகாட்டுக்கு எதிரில் அமைந்துள்ளது கூடுதலான சிறப்பம்சமாகும். இங்குள்ள பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும்.

    ஏவல், பில்லி, சூனியம் போன்ற கெடுதல்கள் அண்டாது. அரசியலில் மேன்மை கிடைக்கும். அரசு வேலை, பதவி உயர்வு கிட்டும் என்பது ஐதீகமாகும்.

    இங்குள்ள மகா கால பைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும். முன்னோர்களின் சாபம் நீங்கி, வாழ்வில் மேன்மை கிட்டும் என்பது ஐதீகமாகும். ஞாயிற்றுக் கிழமை தோறும் கால பைரவர், சரபேஸ்வரருக்கு ஹோமத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    மகா பிரத்தியங்கிரா தேவியை வியாழக்கிழமை காலை சந்தனக் காப்பு அலங்காரத்துடன், எள்ளுப்பூ, செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும். வெள்ளிக்கிழமை அன்னையை தாமரை மலர் 'அணிவித்து சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும். மகா பிரத்தியங்கிரா தேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும். கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    மாதம் தோறும் அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு நடத்தப்படுகிறது. ஆடி அமாவாசை, தைத்திருநாள், தை அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை 1-ந் தேதி அன்று மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.

    உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் மக்கள் நோய், நொடியின்றி நலமாக வாழ வேண்டியும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்து பசுமை வளம் சிறக்க வேண்டியும் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது. இதுபோன்றே மிளகாய் வற்றல் யாகம், பச்சை மிளகாய் யாகம், பாகற்காய் யாகம், எலுமிச்சை பழ யாகம் போன்ற சிறப்பு யாகங்கள் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

    தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கோரம்பள்ளம் அருகே அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்குச் செல்ல தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், கோரம்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ, கார், மினி பஸ், வசதி உள்ளது.

    • தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • 120 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது

    கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்தவரை, ஆண்டவர் ஏசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் ஏசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார். இது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே 3 இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் 2-வது ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், 3-வது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் உள்ளது.

    பிரான்ஸ் நாட்டில் 130 ஆண்டுகளுக்கு முன் மரிய அன்னாள் என்பவர் வாழ்ந்து வந்தார். கடுமையான இதய நோயால் அவதிபட்டு வந்த அவர் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இந்நிலையில், கத்தோலிக்க சபையைச் சேர்ந்த சிலர் 9 நாட்கள் விரதம் இருந்து ஆண்டவரான ஏசுவை மனம் உருகி வழிபட்டால் நோய் தீரும் என கூறினர். இதையடுத்து அன்னாள் அவ்வாறு விரதமிருந்து வழிபட தொடங்கினார். இதையடுத்து 5-வது நாள் அன்று அவரது உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்து மறுநாள் மருத்துவரிடம் சென்று காண்பித்த போது இதய நோய் குறைந்து வருவதாக கூறியுள்ளார்.

    தொடர்ந்து நாளடைவில் அவரது இருதய நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக அந்த மருத்துவர் கூறினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் தன் இதய நோயை குணப்படுத்திய ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தார். அப்போதுதான் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பங்கு தந்தையாக இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்டிணன்ட் செல் என்பவர் அங்கு ஒரு தேவலாயம் ஒன்றை அமைப்பதற்காக தேவையான பொருள் ஏற்பாடு செய்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். இதுகுறித்து தகவலறிந்த அன்னாள், அங்கு ஆலயம் அமைப்பதற்காக ஆகும் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அந்த ஆலயத்தை எப்படி நிர்மானிப்பது என்றும், ஆண்டவரை எப்படி உருவாக்குவது என்றும் ஆலோசித்தனர்.

    இந்நிலையில் மார்க்ரேட் மேரி என்பவர் 1673-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரலேமோனியால் நகரில் உள்ள கன்னியர் மடத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள், அவர் கனவில் ஒவ்வொரு நாளும் மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் கஷ்டங்களால் என் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது பார் என்று கூறி, தன் இதயத்தை திறந்து காண்பித்துள்ளார் ஏசுகிறிஸ்து. கனவில் பார்த்த மார்க்ரேட் மேரி அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு எழுந்தார். பின், அவரது கூற்றுப்படியே ஏசு, தன் இதயத்தை திறந்து காண்பிக்கும்படியான திரு இருதய ஆண்டவர் உருவம் இங்கு உருவாக்கப்பட்டது.

    மேலும் புனித அன்னாளிடம் பொருளுதவியும், மார்க்ரேட் மேரியிடம் உருவ படமும் பெற்ற பெர்டிணன்ட் செல் இடைக்காட்டூர் வந்து ஆலயம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கினார். இந்த ஆலயம் பிரான்ஸ் நாட்டு, 'கோத்தி' எனும் கட்டடக் கலையின் அடிப்படையில் சுண்ணாம்புடன், கருப்பட்டி மற்றும் இதர பொருட்களின் கலவையால் கட்டடம் கட்டப்பட்டு, 'சம்மனசு' எனப்படும் வானதூதர்கள், 153 பேரின் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளது. 120ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது. தற்போது இந்த ஆலயத்திற்கு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருப்புகழ் பாடலைப் பாடி முருகனை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும்.
    • முருகப்பெருமானுக்கு, தமிழகத்தின் ஏராளமான தகோவில்கள் உள்ளன.

    தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    முருகப்பெருமானே வழங்கும் பிரசாதம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாவது படைவீடாகத் திகழ்வது திருச்செந்தூர். இங்கு அமைந்துள்ள முருகப்பெருமான் ஆலயத்தின் கொடிமரத்தில் இருந்து வலது பக்கமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் சென்று வந்தால், அந்த சுற்றுப்பாதையானது 'ஓம்' என்ற வடிவில் அமைந்திருப்பதை அறியலாம். இந்தக் கோவிலில் தங்கக்குடங்கள் இருக்கின்றன. இவை ஆலயத்தில் வேள்வி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறும் காலத்தில் மட்டும் பயன் படுத்தப்படுகின்றன. அதேபோல் தங்க தேங்காய்களும் இங்கே உள்ளதாம். அவற்றை ஆலயத்திற்கு வரும் முக்கியமான பிரமுகர்களுக்கு, பூரண கும்ப மரியாதை கொடுக்கும்போதும், வேள்வி செய்யப்படும்போதும் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆலயத்தில் மட்டுமே பன்னீர் இலையில் வைத்து, விபூதியை பிரசாதமாக வழங்குவார்கள். இந்த பன்னீர் இலையில், முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு நரம்புகள் பாய்வதைக் காணலாம். முருகப்பெருமான் தன் திருக்கரங்களாலேயே விபூதியை வழங்குகிறார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில்தான் பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    மயில் மீது அமர்ந்தமுருகன்

    திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம். 'வக்ரன்' என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலத்திற்கு 'வக்கரை' என்று பெயா் வந்தது. இங்கே வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறு முகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி - தெய்வானை இருக்கிறார்கள். அருண கிரிநாதரின் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று. அந்த திருப்புகழ் பாடலைப் பாடி இத்தல முருகனை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும்.

    சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன்

    சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழித்தடத்தில், சென்னை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, சிறுவாபுரி என்ற ஊர். இங்கு அருள்புரியும் முருகப்பெருமானும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இங்கு அமைந்துள்ள முருகன் கோவிலில் உள்ள இறைவன் 'வள்ளி மணவாளப் பெருமான்' என்று அழைக்கப்படுகிறார். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் அருளும் முகப்பெருமான் 'கல்யாண முருக'ராக அருள்பாலிப்பது கூடுதல் விசேஷம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், விரைவிலேயே அந்தத் தடை விலகி திருமணம் நடந்தேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தல முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சொந்த வீடு கட்டும் கனவும் நனவாகும் என்கிறார்கள்.

    அதிகார முருகன்

    சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்ரோடு வழியில் பொன்னேரி சாலையில் இருக்கிறது, ஆண்டார்குப்பம் என்ற ஊர். இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் முருகப்பெருமான், அதிகாரத் தோரணையில் அருள்பாலிக்கிறார். பிரம்மனிடம் பிரணவத்திற்கு பொருள் கூறும்படி, தன்னுடைய இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்கும் அதிகாரத் தோரணையில் இந்த முருகன் காட்சியளிக்கிறார். இதனால் இவரை 'அதிகார முருகன்' என்றும் அழைப்பார்கள். பிரணவத்திற்குப் பொருள் தெரியாத காரணத்தால், பிரம்மனை சிறையில் அடைத்ததோடு, அவர் செய்து வந்த படைப்புத் தொழிலையும், முருகப்பெருமானே செய்து வந்தார். அதிகாரத்தைக் கைப்பற்றியதாலும் இவரை `அதிகார முருகன்' என்று சொல்கிறார்கள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அதிகாரம் நிறைந்த பதவிகளை இவர் வழங்குவதாக ஐதீகம்.

    • எண்ணிலடங்காத அற்புதங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன.
    • கந்தூரி விழா 14 நாட்கள் பாரம்பரியமாக நடந்து வருகிறது.

    ஜாம்புவானோடை தர்கா சமூக நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்குகிறது என பாரம்பரிய முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அன்றைய காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை இருந்தது. இதன் அருகே உள்ள ஒரு கிராமம் ஜாம்புவானோடை. கடந்த 1306-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி (ஹிஜ்ரி 727 ஜமாதுல் அவ்வல் மாதம் முதல் பத்து) அன்று ஜாம்புவானோடை கிராமத்தை சேர்ந்த கருப்பையா கோனார் என்பவர் விவசாயத்திற்காக ஏர் உழுது கொண்டிருந்தார்.

    அப்போது ஏர் கொம்பு முனை பட்டு நிலத்தில் இருந்து ரத்தம் பீரிட்டு கருப்பையா கோனாரின் கண்களில் அடித்தது. இதனால் அவர் உடல் தளர்ந்து கண்ணொளி மங்கி தள்ளாடியவராக வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஒருவித மன குழப்பத்துடன் அவர் இரவு உறங்கும்போது, அதுவரை பார்த்திடாத அழகிய அரபி தோற்றமுடைய பெரியவர் கனவில் தோன்றி, 'நீர் ஏர் உழுத இடத்தில் நான் வெகு காலத்திற்கு முன்பு அடக்கமாகி இருக்கின்றேன்.

    என்னுடைய பெயர் ஷெய்குதாவூது என்பதாகும். உன்னுடைய இரு கண்களும் எல்லாம் வல்ல அல்லாவின் அருளால் மீண்டும் பிரகாசம் பெற்றுவரும் கவலைப்பட வேண்டாம். இங்கிருந்து 6 கல் தொலைவிலுள்ள நாச்சிகுளத்தில் வட புலத்தைச் சார்ந்த 2 பெரியவர்கள் கபீர்கான், ஹமீதுகான் ஆகிய இருவரிடம் சென்று நடந்ததை கூறி அவர்களை அழைத்து வந்து ஏர் உழுத இடத்தில் தெற்கு வடக்காக எனது தலைபாகத்திலும், கால் பாதத்தில் இரண்டு புஷ்பங்கள் இருப்பதை காண்பீர்கள் என்று கூறி ஜியாரத்தை கபுர் இருக்கும் இடத்தை அமைத்து விளக்கு ஏற்ற சொல் என கூறிவிட்டு அந்த மகான் மறைந்து விட்டார்கள்.

    இதையடுத்து அவர் கண்விழித்து பேரானந்தத்துடன் மகான் சொன்ன பெரியவர்களை சந்தித்து அழைத்து வந்து விளக்கேற்றி ஜியாரத் செய்தார்கள். அன்று முதல் எண்ணிலடங்காத அற்புதங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன.

    மனித அறிவுக்கு அப்பாற்பட்டு மனித குலம் மற்றும் மருத்துவ உலகம் ஆச்சரியத்தில் உறையும் வண்ணம் பலப்பல நிகழ்வுகள் கடந்த 715 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அதன் நினைவாக மகான் அவர்களுக்கு அன்று தொட்டு இன்று வரை பெரிய கந்தூரி விழா 14 நாட்கள் பாரம்பரியமாக நடந்து வருகிறது.

    ஜமாதுல் அவ்வல் பிறை 1-ல் புனித கொடி ஏற்றம், ஜமாதுல் அவ்வல் பிறை 10-ல் புனித சந்தனக்கூடு, ஜமாதுல் அவ்வல் பிறை 14-ல் புனித கொடி இறக்கமும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். குறிப்பாக மேன்மை தங்கிய மகான் ஹக்கீம் ஷெய்குதாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டகையை நாகூர் குத்பு ஜமான் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம், கீழக்கரை பல்லாக்கு வலியுல்லா, இலங்கையில் அடக்கமாகி அருள்பாலிக்கும் மகான் தாலையன் பாவா, மகான் பொதக்குடி நூர் முஹம்மது வலியுல்லா, மகான் சதக்கத்துல்லா அப்பா ஆகியோர் இந்த உலகை விட்டு மறையும் முன்பு ஜியாரத்து செய்தார்கள் என்பது சிறப்பம்சம்.

    எங்கள் மகான் நிகழ்த்திய அற்புதங்கள் மிகவும் அதிகம். இந்த மகானின் தர்கா தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர்களால் மராட்டிய கலை நயத்துடன் கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை சாதி, மத பேத மில்லாமல், சமூக நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களுக்கும் நன்மையும், நலமும், வளமும், இறையருளும் என்றென்றும் கிடைக்க எங்கள் மேன்மைதங்கிய மகான் ஹக்கிம் ஷெய்குதாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டகை எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் இருகரம் ஏந்தி துஆச் செய்தவர்களாக இருக்கிறார்கள். இது இன்ஷா அல்லாஹ் கியாமத் நாள் வரை தொடரும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இங்கு நவக்கிரக சன்னதி இல்லாதது சிறப்பாக கருதப்படுகிறது.
    • தீர்த்தமாக அமிர்தபுஷ்கரணி உள்ளது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் எமபயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தா்களுக்கு அருளும் சிவாலயமாக மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவில் இறைவனாக அமிர்தகடேஸ்வரரும், இறைவியாக அபிராமி அம்மையும் உள்ளனர்.

    தன்னை நாடி வந்த பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எமனிடம் இருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதனால் எம பயம் போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    அபிராமி அந்தாதி

    தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்.

    காலசம்ஹாரமூர்த்தி

    தருமபுரம் ஆதீனம் மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் கட்டுப் பாட்டில் இந்த கோவில் உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லாதது சிறப்பாக கருதப்படுகிறது. இக்கோவில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். காலசம்ஹாரமூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    கோவிலின் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. மேலும் தீர்த்தமாக அமிர்தபுஷ்கரணி உள்ளது. முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் இக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும் இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறியதால் இக்கோவில் அமிர்தகடேஸ்வரர் கோவில் என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சன்னதியில் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    பாசக்கயிற்றின் தடம்

    மார்க்கண்டேயன் தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை இறுகப்பற்றி வழிபட்டபோது எமன் தனது பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீச பாசக்கயிறு மார்க்கண்டேயனோடு சேர்த்து சிவபெருமானையும் இறுக்கிறது. இதனால் சினம் கொண்ட சிவபெருமான் எமதா்மனை தனது காலால் உதைத்து தள்ளினார். எமதர்மன், சிவபெருமான் மீது வீசிய பாசக்கயிற்றின் தடம் தற்போதும் சிவலிங்க திருமேனியில் உள்ளது. அமிர்தகடேஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடக்கும்போது இந்த பாசக்கயிற்றின் தடத்தை காணலாம்.

    கங்கை தீர்த்தம்

    59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உக்ரரத சாந்தி பூஜை செய்து வழிபடுகிறார்கள். 60 வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்கின்றனர். 70 வயது முடிந்து 71 வயதை தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜையும், 75 வயதை கடந்தவர்கள் விஜயரத சாந்தி பூஜையும், 81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகமும் செய்து அமிர்த கடேஸ்வரரை வழிபடுகிறார்கள். கோவிலின் மேற்கு திசை நோக்கி அமிர்தகடேஸ்வரரும், கிழக்கு திசையில் தனிக்கோவிலில் அபிராமி அம்மனும், அமிர்தகடேஸ்வரர் அருகில் காலசம்ஹாரமூர்த்தியும், உள்பிரகாரத்தில் முருகன், மகாலட்சுமி, நடராஜர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். கோவிலின் பின்புறம் உள்ள திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கங்கை தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டு தான் இன்றும் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் நடக்கிறது.

    சங்காபிஷேகம்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. கார்த்திகை சோமவார நாட்களில் இந்த கோவிலில் 1008 சங்குகளை வைத்து நடைபெறும் சங்காபிஷேக விழா பிரசித்தி பெற்றது.

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் பங்குனி அசுவதி நட்சத்திர தீர்த்தவாரி விழாவும் தற்போது வரை பக்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கருவி ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, போன்ற பகுதிகளில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் மயிலாடுதுறையை அடைந்து திருக்கடையூர் கோவிலை அடையலாம். திருக்கடையூர் மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    • பெண்களின் சபரிமலை என்று இந்த கோவில் அழைக்கப்படுகிறது.
    • 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது

    கேரளாவில் ஆலப்புழை மாவட்டம் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் புகழ்பெற்ற சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனவும், பெண்களின் சபரிமலை எனவும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

    பம்பை ஆறும், மணிமலை ஆறும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் தேவி சர்வேஸ்வரியும், அன்ன பூரணியும் அருள்பாலிக்கிறார்கள். சக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற பெண்கள் விரதம் இருந்து புண்ணிய சுமையாக இருமுடி கட்டி வந்து சக்குளத்துகாவு பகவதி அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

    பொங்கலிடும் பெண்கள்

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது போல் இந்த கோவிலுக்கு பெண்கள் வருகிறார்கள். அதே போல சபரிமலைக்கு செல்லும் வழியில் அய்யப்ப பக்தர்களும் சக்குளத்துக்காவு அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

    இங்கு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று அம்மனின் இஷ்ட நிவேத்யமான பொங்கல் வைத்து பக்தர்கள் அருளை பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும் இரு புறங்களிலும் திரண்டு புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள்.

    மிகவும் பிரபலமானது

    கோவில் முன்புறம் வைக்கப்படும் பண்டார அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி சுப முகூர்த்த வேளையில் தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும்.

    கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்த பிறகு நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கார்த்திகை அன்று இங்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

    பெண்களுக்கு பாத பூஜை

    மேலும் இங்கு நடைபெறும் பெண்களுக்கான பாதபூஜையும் (நாரி பூஜை) மிக சிறப்பு வாய்ந்தது. அதாவது பெண்களை பீடத்தில் அமரச் செய்து அம்மனாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குவார்கள். எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படும். 2022-ம் ஆண்டின் நாரி பூஜை அடுத்த மாதம் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் சகோதரி கே.ஆர்.கவுரி அம்மாள், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கே.கருணாகரனின் மகள் பத்மஜா ஆகியோருக்கு கடந்த ஆண்டுகளில் பாத பூஜை நடத்தப்பட்டுள்ளது.

    ஒரு லட்சம் கலச அபிஷேகம்

    டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள், ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கும் வித்யாகலசம், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலச பூஜை ஆகியவை நடைபெறும். அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது வேறு எங்கும் நடைபெறுவதில்லை. அன்றைய தினத்தில் தங்கத் தேரில் திருவாபரணங்கள் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

    வெள்ளிக்கிழமை விசேஷம்

    இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும். வெள்ளிக்கிழமை அன்று பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப் பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ததும் அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் தீர்ந்து விடுகிறது என்பது நம்பிக்கை. மேலும் மது குடிப்பவர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வரப்படுகிறார்கள். தலைமை பூசாரி மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, அம்மனின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பிறகு மது குடிப்பவர்கள் குடியை நிறுத்துகிறார்கள் என நம்பப்படுகிறது. மேலும் சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கிறதாம். இங்கு பார்க்கப்படும் ஜோதிட பிரசன்னமும் புகழ்பெற்றது.

    சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நேரடியாக கோவிலுக்கு தினசரி இயக்கப்படுகிறது. திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது. சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலின் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிட மக்கள் சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இது கேரளாவில் முக்கிய ஊர்கள் மட்டுமின்றி புதுடெல்லி, மும்பை, பெங்களூருவிலும் இதன் கிளைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தேனி மாவட்டம் சின்னமானூரிலும் இந்த மக்கள் சேவை மையம் அமைந்துள்ளது.

    • ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார்.
    • மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம்.

    * மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

    * ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.

    * கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

    * திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

    * மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

    * விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.

    * நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

    * தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

    * கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

    * சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.

    * சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

    * தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

    * ஓசூர்&பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.

    * திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    * திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருட்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

    * கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.

    * திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.

    * தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.

    * தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.

    • சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது.
    • நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் ஒரு மாடக்கோவில்.

    தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்தது.

    மகாமகம்

    சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது. இதை விளக்கும் வகையில் வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே' என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடைபெறும். அப்போது நாடு முழுவதும் இருந்து மக்கள் அனைவரும் கும்பகோணத்துக்கு வந்து மகாமக குளத்தில் புனித நீராடுவது வழக்கம்.

    கும்பகோணம் மகாமக குளத்துக்கு இணையாக திருநல்லூா் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சப்தசாகரம் என்ற குளம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, 'மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்' என்ற பழமொழி உணர்த்துகிறது.

    மாடக்கோவில்

    நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் ஒரு மாடக்கோவில். யானை ஒன்று பெருமான்(மூலலிங்கம்) இருப்பிடத்தைச் சென்று அடையாத வண்ணம் பல படிக்கட்டுகளுடன் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார்.

    அம்பாளின் பெயர் கிரிசுந்தரி. இந்த பெரிய மாடக்கோவிலை திருஞானசம்பந்தர் 'மலை மல்கு கோவில் வானமருங்கோவில், வான் தேயும் கோவில் என பாடி உள்ளார். இரண்டு திருச்சுற்றுகளையுடைய இந்த கோவில் 316 அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது.

    7 மாதர்கள்

    இந்த கோவிலின் முன்கோபுரத்தில் ஒரு மாடத்தில் அதிகாரநந்தி, பிள்ளையார் கொடி மரம், பலிபீடம், இடபதேவர் ஆகியவையும் சற்று தெற்கில் அமர்நீதி நாயனாரது வரலாற்றில் தொடர்புடைய 4 கால்களுடன் கூடிய அழகிய தராசுமண்டபமும் உள்ளன. தெற்கு வெளிச்சுற்றில் அஷ்டபுஜமாகாளி தேவியின் சன்னதி அமைந்துள்ளது.

    மாகாளி 8 கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலத்தில் உள்ளார். இரண்டாவது கோபுர வாசலை கடந்து சென்றால் இத்தலத்து விநாயகரான காசிப் பிள்ளையார் உள்ளார். தென்மேற்கு மூலையில் 7 மாதர்களாகிய அபிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகியோருடன் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.

    குந்தி தேவி

    உள்வடக்கு திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் பெருமானை வணங்கும் கோலத்தில் பாண்டவர்களின் தாய் குந்திதேவியும், அடுத்து இத்தலத்துக்கு வந்து முக்தி பெற்ற அமர்நீதியார் சிலை வடிவங்கள் உள்ளன. இவர்களுக்கு எதிரில் சண்டேஸ்வரர், துர்க்கை அம்மன் சன்னதிகள் உள்ளன.

    வடகிழக்கு மூலையில் நடராஜ பெருமானை அடுத்து சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் அம்பிகையுடன் இரு சிவலிங்கத் திருமேனிகளும் இடம் பெற்றுள்ளன.

    5 நிறங்களில்....

    மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார். இவர் தினமும் 5 நிறங்களில் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என்றும் அமர்நீதியார், அப்பர் ஆகியோருக்கு அருள்புரிந்ததால் ஆண்டார் என்றும், அகத்தியருக்கு தன் திருமணக் கோலத்தை காட்டி அருளியதால் கல்யாணசுந்தரர் என்றும், பேரழகுடன் விளங்குவதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.

    கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் இறைவனும், இறைவியும் இருக்க இருபுறமும் திருமாலும், பிரம்மனும் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர்.

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும் இந்த கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலையை சிவபெருமானுக்கு சூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டு சென்றால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.

    7 கடல்கள்

    ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நாள் என்பதால் கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். இதைக்கேட்ட குந்திதேவி, சிவபெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான், குந்தி தேவிக்காக கோவில் எதிரில் உள்ள தீர்த்தக்குளத்தில் உப்பு, கரும்புச்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய 7 கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடி பேறு பெற்றார்.

    இந்த 7 கடல்களை குறிக்கும் 7 கிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தீர்த்தவாரி

    பிரம்மதேவன் இத்திருக்குளத்தின் கீழ்திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யஜுர் வேதத்தையும், மேற்குத்திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதினெண் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. திருநல்லூர் கல்யாண சுந்தரப்பெருமானுக்கு மாசிமகம், வைகாசி விசாகம், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் இந்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

    நரசிம்ம வடிவம்

    கொடிய அரக்கனாகிய இரணியனை கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்துக்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்தார். இரணியன் மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாக இருக்கவேண்டும் என்று பணித்தார். இந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்.

    பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில்(சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை. இருப்பினும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

    இக்்கோவிலில் வைகாசி விசாக சப்தஸ்தான விழா, ஆனி மாதம் அமர்நீதியார் விழா, மார்கழி மாதம் 10 நாள் திருவெம்பாவை விழா, திருவாதிரை தரிசனம், மாசிமக விழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் ஆகும்.

    5 நிறங்களில் காட்சி அளிக்கும் கல்யாணசுந்தரர்

    நல்லூர் கல்யாண சுந்தரர் தினமும் 6 நாழிகைக்கு ஒரு தடவை பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறார். முதல் 6 நாழிகையில் தாமிர நிறத்திலும் அடுத்த 6 முதல் 12 நாழிகையில் இளஞ்சிவப்பு நிறத்திலும், அடுத்த 12 முதல் 18 நாழிகையில் தங்க நிறத்திலும், 18 முதல் 24 நாழிகையில் நவரத்தின பச்சை நிறத்திலும் அடுத்த 24 முதல் 30 நாழிகையில் என்ன நிறம் என்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் கோவிலில் நடந்து வருகிறது.

    கோவிலுக்கு செல்லும் வழி

    தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் பாபநாசம் அருகே நல்லூர் பகுதியில் கல்யாணசுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் பாபநாசம் அருகே உள்ள நல்லூருக்கு வந்து கல்யாண சுந்தரரை தரிசனம் செய்யலாம். தென் மாவட்டங்களில் இருந்து நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சை வந்து அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் பாபநாசத்துக்கு வந்து கோவிலை அடையலாம்.

    ×