என் மலர்
கோவில்கள்
- சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 7-வது தலமாக கருதப்படுகிறது.
- கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.
குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கல்குளம் நீலகண்டசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 7-வது தலமாக கருதப்படுகிறது. சுற்றுலா நகரமான பத்மநாபபுரம் ஒரு ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது. பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆட்சி புரிந்த மன்னர்கள் இறைவனை தரிசிப்பதற்காக அரண்மனையை சுற்றிலும் பல கோவில்களை கட்டியுள்ளனர். அதில் ஒன்று தான் நீலகண்டசாமி கோவில்.
வானுயர்ந்த ராஜகோபுரம், அழகான தெப்பக்குளம், சிற்பங்கள் நிறைந்த மகாமண்டபம் என கலை அம்சத்துடன் காணப்படும் இந்த கோவில் வேணாட்டு மன்னரான உதய மார்த்தாண்டன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.
சுயம்புவாக சிவன்
அப்போது கோவிலில் சிவலிங்கம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலின் மேற்கில் தோட்டத்தில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் உயரம் 160 செ.மீ. இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதீகம். வேணாட்டரசர்கள் இங்கே இருந்த போது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து அடைபட்டு நின்றதாம்.
அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டாராம். எனவே அந்த இடத்தில் கோவிலை கட்டினார் என்கிறது தலப்புராணம். ஆனந்தவல்லி அம்மனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.
இங்கு கிழக்கு பிரகாரம் கி.பி.17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். இங்குள்ள மண்டபத்தை மதுரை நாயக்க மன்னனாரன திருமலை நாயக்கர் கட்டினார் என்பது மரபுவழி செய்தி.
பரிவார தெய்வங்கள்
கணபதி, சாஸ்தா, பூதத்தான், மாடன்தம்புரான், ஆதிமூல சிவன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர். கிழக்கு பிரகாரம் வடக்கே சிறு கருவறையில் நடராஜரும், சிவகாமியும் உள்ளனர். இவை செப்பு படிமங்கள்.
இக்கோவிலில் ஒரே இடத்தில் இரண்டு சன்னதிகள் இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்பட்டு விடும் என்பதால் சிவபெருமான் சன்னதிக்கும், ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கும் இடையில் ஒக்கத்துப்பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இரண்டு கொடிமரங்கள் கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
திருவிழா
10-ம் நாள் விழாவில் நடக்கும் தேர்திருவிழாவின்போது பெரிய தேரில் சிவபெருமானும், ஆனந்தவல்லியும் அமர, சிறிய தேரில் ஒக்கத்து பிள்ளையார் அமர்ந்து வீதி உலா வருவார்கள்.
இதுபோல் நவராத்திரியின் போது கோவில் குளத்தில் தெப்பத் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது வண்ண விளக்கில் ஒளிரும் தெப்பத்தில் அமர்ந்து சுவாமிகள் குளத்தை வலம் வரும் காட்சியை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இது போல் தினமும் இருவேளை பூஜை என அனைத்து சம்பிரதாய சடங்குகளும் இக்கோவிலில் நடந்து வருகிறது. இங்கு தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது.
காலை 5.30 மணிக்கு நிர்மால்யம், 6 மணிக்கு உஷபூஜை, 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு சாயராட்சை, இரவு 7.30 மணிக்கு அர்ச்சாம பூஜை நடக்கிறது.
- இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது.
- இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது.
மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி. இந்தியாவில் உள்ள பல பெருந்தலங்களில் இதுவும் ஓன்று. ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது. மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன. ஒன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில். இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி ஆகும். இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும்.
இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஒரு அரசன் இருந்தான். அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதத் தலமான மங்களகிரியை வந்தடைந்தான். அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான். அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்றி அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர். அவனும்
ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான். ஆனால், ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான். திருமால் நரசிம்ம வடிவில் அங்கு எழுந்தருளினார். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.
மகாவிஷ்ணு ஒரிசா மாநிலத்தின் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு, ஆந்திர மாநிலத்து சிம்மாசலத்தில் உடலை சந்தனக் குழம்பில் குளிர வைத்துக்கொண்டு, மங்களகிரியில் பானகம் அருந்தி, திருப்பதியில் ஆட்சி செய்துகொண்டு, ஸ்ரீரங்கத்தில் சயனித்திருந்து ஜகத்கல்யாண மூர்த்தியாகத் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகிறது.
திருமால் இரண்யனை வதம் செய்து தன் பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் தோன்றிய கணநேர அவதாரம் நரசிம்ம அவதாரம். சிம்ம முக நரசிம்மர் அருட்பாலிக்கும் கோயில்கள் பல உண்டு. அவற்றில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் சாலையில் 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மங்களகிரி என்ற புனிதத் தலத்திலுள்ள மலைக் குகைக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய ஸ்வம்வ்யக்த அதாவது தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து, பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் அது.
பாரதத்திலுள்ள மலைகளில் மஹேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ருக்ஷம், விந்தியம், பாரியாத்ரம் என்பவை ஸ்பதகுல பர்வதங்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது. ஸர்வ சுகஸ்வ ரூபிணியான மகாலட்சுமி அமிர்தத்தை மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக, பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்திகிரி, தர்மாத்ரி, கோத்தாத்ரி, முக்தியாத்ரி என்பவை அதன் ஏனைய பெயர்கள் என புராணங்கள் கூறுகின்றன. வேதபுராணத்தில் இத்தலத்திற்கு சபலதா என்ற பெயரும் உள்ளதாக சொல்லியிருக்கிறது.
இந்த மலைப் பிராந்தியத்தில் மேய்ந்து வந்த பசு ஒன்று தினமும் மாலையில் பாலின்றி திரும்புவதைக் கண்ட பசுவின் சொந்தக்காரன் அதைக் கண்காணித்தபோது, ஒருநாள் மாலை வேளையில் நிழல் உருவம் ஒன்று பசுவின் பாலை அருந்திவிட்டு குகையொன்றில் சென்று மறைவதைக் கண்டான். அன்றைய இரவு அவனது கனவில் மகாலட்சுமி சமேதராய் நரசிம்மர் தோன்றி, மொமூச்சி என்ற கொடிய அரக்கனுக்காகத் தாம் அந்தக் குகையினுள் மறைந்திருப்பதாகக் கூறினார்.
மறுநாள் பசுவின் சொந்தக்காரன் அந்தக் குகை துவாரத்தில் தனது பசுவின் பாலை ஊற்ற, அதில் பாதி பிரசாதமாக வெளியே வழிந்ததை அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான். இந்தச் சம்பவத்தை அவன் அந்தப் பிராந்தியத்தை ஆண்டு வந்த திரிலோக விஜயன் என்ற அரசனிடம் கூற, அரசன் நரசிம்மருக்கு குகை மீது கோயில் கட்டியதாக பானக நரசிம்ம தலத்தின் புராணம் கூறுகிறது.
கொடிய அரக்கனான மொமூச்சி கொட்டைப் பாக்கில் பொருந்திய ஊசி முனைமீது ஒற்றைக்கால் கட்டை விரலில் சூரியனை நோக்கி நின்று கொண்டு கைகூப்பி பிரம்மனைக் குறித்து தவம் செய்தபொழுது, அந்த தவவலிமையில் ஈரேழு புவனங்களும் ஆடின. இதையடுத்து அன்ன வாகனத்தின் மீது அமர்ந்து நொமூச்சிக்கு காட்சி தந்த பிரம்மன், எந்த மானிடனாலோ அல்லது ஆயுதத்தினாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.
இதைத் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்த நொமூச்சியிடமிருந்து தம்மைக் காக்கத் தேவர்கள் திருமாலிடம் முறையிட, திருமாலும், நரசிம்மராக மங்களகிரி குகைக்குள் தங்கியிருந்தது, மொமூச்சியை எதிர்நோக்கி நின்றார். அச்சமயம் இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை நரசிம்மர் தனது நகங்களில் ஏற்றுக்கொண்டு குகையருகில் மொமூச்சியை சம்ஹாரம் செய்தருளினார் என ஈசன் உமையவளுக்குக் கூறியதாக, பிரம்ம வைவர்த்த புராணத்தின் பவானி சங்கர கீதை கூறுகிறது. இதன் காரணமாகவோ என்னவோ, இத்தல நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகின்றன.
தொடர்ந்து குகையில் தங்கிய நரசிம்மரது உக்ரம் தணியாமல் தகிக்க, பிரம்மன், நாரத மகரிஷி மற்றும் இந்திராதி தேவர்கள் அவரை தோத்திரங்களால் துதிக்க, நரசிம்மர், ஆகாய கங்கையில் நீராடி, தேவர்களை அமிர்தத்தை எடுத்து வரச்சொல்லி அருந்திவிட்டு, அதில் பாதி அமிர்தத்தைப் பிரம்மாதி தேவர்களுக்குப் பிரசாதமாக அளித்தார். அச்சமயம் அவரது உக்ரம் தணியத் தொடங்கியதாம்.
அவ்வாறு கிருதயுகத்தில் அமிர்தத்தை அருந்திய உக்ர நரசிம்மர் திரேதாயுகத்தில் பசு நெய்யையும், துவாபர யுகத்தில் பசுவின் பாலையும், நிகழும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி சாந்தமாக நின்று அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு திருமால் பானக நரசிம்மராக வீற்றிருக்கும் குகைக்கோயில் மங்களகிரியிலுள்ள மலை மீது சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அகன்ற நானூறு படிகளின் வழியாக சிரமமின்றி ஏறி, பானக நரசிம்மர் கோயில் சந்நதியை அடையலாம். மலையடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும், தொடர்ந்து அருகில் கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் மலை ஏறத் தொடங்குகின்றனர். சுமார் 50 படிகள் ஏறியபின் மேற்கு நோக்கி நின்று அருள்புரியும் வேங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கிறோம்.
ஒரு சமயம் சர்வசுந்தரி என்ற அப்ஸரஸ் பெண் இட்ட சாபத்தினால் நாரத மகரிஷி பால் விருட்சமாக மாறி நின்றார். புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் அப்பால் விருட்சத்தைச் சுற்றி வந்து பழங்களை விநியோகம் செய்ய, அவர்களுக்குப் புத்திரகடாட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது. வேங்கடேஸ்வர ஸ்வாமி சந்நதியருகே வளர்ந்த பால் சொட்டு செடியை பிற்காலத்தில் மலையடிவாரத்திலுள்ள கருடாழ்வார் சந்நதியருகில் நட்டதாகக் கூறப்படுகிறது.
வேங்கடேஸ்வரரைத் தரிசித்து, தொடர்ந்து படி ஏறிச் சென்றால் துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள். இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்தைந்து திரிகள் இருப்பதாகவும், ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது. இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
அர்த்த மண்டபத்துடன் உள்ளே தீப ஒளி மட்டும் வீசும் இருள் சூழ்ந்த குகை சந்நதியை அடைகிறோம். இக்குகை கருவறைச் சுவரில் அமைந்த பெரிய பிறை ஒன்றில் மேற்கு திசை நோக்கி பானக நரசிம்மர், சங்கு - சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, பல் வரிசைகள் வெளியே தெரியும். சிம்ம முகவாய் அகன்று திறந்த வண்ணம் முகத்துடன் மட்டும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாகக் காட்சி தருகிறார். இந்தப் பானக நரசிம்மருக்கு பிரத்யேக உருவம் கொண்ட விக்ரகம் எதுவும் கிடையாது.
ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும். இந்தக் கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும். அப்படி விடும் பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் "மடக் மடக்" என பருகும் சத்தம் கேட்கும்.
சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும். இது ஒரு நாள், இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல. தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
கருவறைக்கு வெளியே மகாமண்டபத்தில் கோயில் சிப்பந்திகள் பானக நிவேதனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சார்பில் அவ்வப்போது பானகத்தைக் கரைத்து செம்பிலோ, சிறிய அல்லது பெரிய குடத்திலோ நிரப்பி சந்நதிக்கு எடுத்து வருகின்றனர். பானக அளவுக்குத் தக்கபடி இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சந்நதியிலுள்ள வைஷ்ணவ பட்டர் பெரிய வலம்புரி சங்கினால் திறந்த வாய்க்குள் ஊற்ற, இப்புனித பானகம் உள்ளே சென்று மறைந்து விடுகிறது. பானக பாத்திரத்தின் கொள்ளளவு எதுவாக இருந்தாலும், நிவேதனத்துக்கு எடுத்துச் செல்லும் பானகத்தில் பாதியளவு மட்டுமே வாய்க்குள் செல்கிறது.
தொடர்ந்து ஊற்றப்படும் பானகம் வெளியே வழிந்துவிட, அவ்வாறு மீறும் பானகத்தை அந்த பக்தருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுகின்றனர். பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது. அவ்வாறு புனித பானகம் தயார் செய்யும் இடத்தில் நீருடன் கலந்த வெல்லத் துண்டுகள் கீழே சிதறிக் கிடந்த போதிலும், அங்கு ஈக்கள் மொய்க்காதது இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
இந்தப் பானகத்தைத் தயாரிப்பதற்கு இம்மலைக் கோயிலின் கிழக்கேயுள்ள கல்யாணஸரஸ் என்ற சுனையிலுள்ள நீரே உபயோகிக்கப்படுகிறது. தேவர்கள் கட்டியதாகக் கருதப்படும் இச்சுனையில் சகல புண்ணிய தீர்த்தங்களும் கலந்துள்ளனவாம். மோட்சகாரகராக நின்றருள் புரியும் பானக நரசிம்மரைத் தரிசித்து பானக பிரசாதத்தை அருந்தி விட்டு, இக்கோயிலின் அருகேயுள்ள ஐம்பது படிக்கட்டுகளில் ஏறி தாயார் ராஜ்ய லட்சுமி சந்நதியை அடையலாம் வைரக்கண் மலர்களும் வைர பிறை சந்திரன் பொட்டும், நெற்றியில் துலங்க, மகாலட்சுமி ராஜ்யலட்சுமி என்ற திருப்பெயருடன் கைகளில் பத்மமும், வரத அபய முத்திரைகளுடனும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாக காட்சி தருகிறாள்.
அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயினியான மகாலட்சுமி இங்கு ஞான பிரதாயினியாக விளங்குவதால், ராஜ்யலட்சுமியை ஆந்திர மக்கள் மாறு கொண்ட லெக்ஷ்மம்மா என்று பரிவுடன் அழைக்கின்றனர். ராஜ்யலட்சுமி சந்நதிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இத்தலத்தின் க்ஷேத்ரபாலராக விளங்கும் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் கல்லில் செதுக்கப்பட்டு வண்ணச் சிறப்புமாகக் காட்சி தருகிறார். ராமபிரான் ராவண யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் அனுமனை இத்தலத்தில் க்ஷேத்ரபாலராகத் தங்கி இருக்கும்படி அருளாசி கூறினாராம்.
ராஜ்யலட்சுமி சந்நதிக்குக் கிழக்கே ஒரு சிறு சந்நதியில் வல்லபாசார்யார் மூர்த்தத்துடன் தியான பீடம் அமைந்துள்ளது. ராஜ்யலட்சுமி சமேத நரசிம்மரைப் பூஜித்து வந்த வல்லபாசாரியார், இங்குள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து தியானித்து ஞானஒளி பெற்று ராஜஸ்தான், காஷ்மீர், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் இந்துமத தர்ம சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்து அருந்தொண்டு புரிந்தார். இதையடுத்து அத்தியான பீடம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜ்யலட்சுமி சந்நதியின் மேற்குபுறமாக சிறு கோயிலில், அழகான சிறிய பள்ளிகொண்ட ரங்கநாதரது மூர்த்தம் சந்நதி கொண்டுள்ளார். இச்சந்நதியில் நித்யபூஜை நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இச்சந்நதிகளைத் தாண்டி, மலைமீது கண்டால்ராயன் கூண்டு என்ற குகை அறையில் தீபம் ஒன்று உள்ளது. இத்தீபத்தில், கன்றை ஈன்ற பசு அல்லது எருமை சுரக்கும் முதல் மாத பாலிலிருந்து எடுத்த நெய்யை ஊற்றி எரிய விடுபவர்களது கால்நடைக்கு பால் அதிகம் சுரக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது. இத்தீப ஒளியை ஏற்றி தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் கண்டங்களும், கஷ்டங்களும் தீரும் எனக் கருதப்படுகிறது.
குசிகுமாரன் என்ற பெண் பித்தன் தான் நெருங்கிய வேசிகள் நரசிம்மரிடம் அதிக பக்தி கொண்டிருந்தது தனக்கு இடையூறாக இருந்ததைக் கண்டு, கோபம் கொண்டு நரசிம்மரை நிந்தனை செய்தான். அன்றிரவு அவனது கனவில் நரசிம்மர் தோன்றி அவனுக்கு அருள் கூர்ந்ததையடுத்து, மறுநாள் தீபத்தை ஏற்றி ஞானஒளி பெற்றான் என்பது ஒரு கதை. மங்களகிரி மலையடிவாரத்தில் அமைந்த பெரிய கோயிலில் மகாவிஷ்ணு லட்சுமி நரசிம்மராக சந்நதி கொண்டுள்ளார்.
ராஜா வாஸிரெட்டி வேங்கடாத்ரி நாயுடு என்ற செல்வந்த பிரபு கட்டிய பதினொன்று அடுக்குகளைக் கொண்டு குறுகலாக, உயரமாக அமைந்த ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், நான்கு சக்கரங்கள் பூட்டிய ரதம் போன்றமைந்த சிறிய சந்நதியில் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம். உள்ளே கருவறையில் நரசிம்ம ரூபமாக மகாவிஷ்ணு மகாலட்சுமியை மடித்த தன் இடது, தொடை மீது அமர்த்தி அணைத்துக்கொண்டு, இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி வரத அபய முத்திரைகள் தாங்கிய வலது கரத்துடன், நூற்றெட்டு சாளக்கிராமங்களாலான மாலை அணிந்து, வலதுகாலைத் தொங்க விட்டு லட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகிறார்.
ஆதிசங்கரர் கயிலாயத்திலிருந்து கொண்டுவந்த மந்திர சாஸ்திர ஆதார நூல்களில் பிரபஞ்சஸாரம், மந்த்ர மஹார்ணவம், மந்திரமஹோததி ஆகியவை பிரசித்தி பெற்றவை. பிரபஞ்சஸாரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மருஷி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார். கூரநாராயண ஜீயர் இயற்றிய சுதர்சன சதகத்தில் நரசிம்மரது உருவ லட்சணங்களின் வர்ணனையில், ஜ்வாலாகேசமும் த்ரிநேத்ரமும் (முக்கண்கள்) பிரதான அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சுமி நரசிம்மரது மூன்றாவது கண் அவர் நெற்றியில் துலங்கும் சிவப்பு திருமண்ணின் கீழ் மறைந்திருப்பதாக ஐதீகம்.
லட்சுமி நரசிம்மர் மூர்த்தத்தின் அருகே வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆதிபுருஷரான வைகானஸ மகரிஷி மூர்த்தமாக அமர்ந்துள்ளார். தவிர லட்சுமி நரசிம்மர், நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரது பஞ்ச லோக மூர்த்தங்கள் இச்சந்நதியிலுள்ளன. இக்கோயிலில் பெரிய தட்சிணாவர்த்த வலம்புரிசங்கு ஒன்று உள்ளது. முந்நாளைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் வஞ்சிமார்த்தாண்ட வர்மா காணிக்கையாகக் கொடுத்த இச்சங்கில் ஓங்கார நாதம் கேட்பதாகக் கூறப்படுகிறது. விழாக்காலங்களில் இச்சங்கு உபயோகிக்கப்படுகிறது.
லட்சுமி நரசிம்மரின் கருவறைக்கு வெளியே மகாமண்டபத்திலுள்ள ஒரு சிறு அறையில் பன்னிரெண்டு ஆழ்வார்களின் சிலாமூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. சந்நதிக்கு வெளியே கோயில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்த அழகிய சிறு கோயிலில், வைரக் கண் மலர்களும், கரங்களில் பத்மம் ஏந்தி, வரத அபயக் கரங்களுடன் பத்மாஸன கோலத்தில் கம்பீரமாக வீற்றிருந்து ராஜ்யலட்சுமி அருட்பாலிக்கிறாள். இக்கோயிலில் விநாயகர், கோதண்டராமர், கோதண்டராமர், வாஸவி, கன்னிகா பரமேஸ்வரி, லட்சுமி சமேத ஸத்ய நாராயண சுவாமி ஆகியோரது சிறிய சந்நதிகளும் உள்ளன.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து பூஜித்ததாகக் கூறப்படுகிறது. தர்மரது கனவில் நரசிம்மர் தோன்றி தன்னைப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்யும்படி அருளாசி கூறியதாகப் பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. கடந்த எட்டாவது நூற்றாண்டில் ஆதிசங்கரர் மங்களகிரிக்கு விஜயம் செய்தார். மண்டனமிச்ரரின் மனைவியும் கலைமகளின் அம்சமுமான அவரது மனைவி உபயபாரதி விடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு மாத அவகாசம் கேட்டு, காம சாஸ்திரத்து நுணுக்கங்களை அறிய, இறந்த அபமருகராஜன் என்ற மன்னனது பூத உடலில் பரகாய பிரவேசம் செய்தார் ஆதிசங்கரர்.
இதை அறிந்த அரசனது ஆட்கள், சீடர்கள் மறைத்து வைத்திருந்த ஆதிசங்கரரது பூத உடலைத் தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வைத்து விட்டனர். இது தெரிய வந்த ஆதிசங்கரர் அரசனது உடலினின்று நீங்கி தனது உடலில் பிரவேசித்தபொழுது, அவரது உடலின் கைப்பாகம் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தன் கைகளில் ஏற்பட்ட ரண உபாதையை நீக்கி தன்னைக் கைதூக்கி விடும்படி இத்தலத்தில் லட்சுமி நரசிம்மரைத் துதித்து, லட்சுமிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாடினார் என்று கூறப்படுகிறது.
கடந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் சைதன்ய மகாப்பிரபுவும், பின்னர் ராமானுஜர், மத்வாசாரியார் ஆகிய பெரியோர்கள் மங்களகிரி நரசிம்மரைத் தரிசித்துச் சென்றுள்ளனர். போருக்குச் செல்லுமுன் நரசிம்மரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்ட விஜயநகர சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர் கடந்த பதினான்காம் நூற்றாண்டில் கொண்டபள்ளி பிராந்தியத்தை வென்றுவிட்டு, அதற்கு காணிக்கையாக நிலமும், பொன்னும் இக்கோயிலுக்கு அளித்தார்.
மங்களகிரி நரசிம்மர் கோயிலில் வைகானஸ சம்பிரதாயமே அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனி மாத பௌர்ணமியன்று நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. ஆவணி பௌர்ணமியில் வைகானஸ உற்சவமும், மாசி மாதம் பீஷ்ம ஏகாதசியையொட்டி பிரம்மோற்சவம், தெப்போற்சவம், நவராத்திரி, கார்த்திகை பௌர்ணமி ஆகிய நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
மங்களகிரி கல்யாணஸரஸ் சுனையில் நீராடுவதும், இத்தலத்தில் ஒருநாள் ஜபதபங்கள் செய்வதும் ஜீவன் முக்திக்கு வழிகோலும் என்றும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடும் என்றும் பவானி சங்கரகீதை கூறுகிறது. இதையொட்டி மங்களகிரி ஒரு மோட்ச தலமாக இருந்து, முக்திகிரி என்ற பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் மங்களகிரி உள்ளது.
- பவுர்ணமி காலங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- இந்த மலையில் கோவிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது.
பர்வதமலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 4560 அடி உயரம் கொண்ட ஒரு மலை ஆகும்.
இந்த மலையில் மல்லிகார்ஜுனசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.
இந்த பருவத மலையின் அடிவாரத்திலேயே கரிகாற் சோழனின் வீர வரலாறு தொடங்குகிறது.கரிகாற் சோழன் ஆயிரம் யானைகளை தன் கண் அசைவுக்கு பழக்கியது இந்தக் காடுகளில்தான்.அந்த யானைகளை கொண்டு ஓர் அமாவாசை இரவில் கடலில் ஒர் நீர் மூழ்கி கப்பலைப்போல் மிதக்க வைத்து சென்று கடற் கொள்ளையர்களை நிர்மூலமாக்கினார்..இதை படிக்கும்போதே கரிகாற் சோழன் யானைகளை எப்படிப் பழக்கினார் என்பது புரியும்.
இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.
பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்.
இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.
இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.
மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.
போக்குவரத்து வசதி
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
- இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.
- பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.
ஐயப்பனை கண்கண்ட தெய்வமாக நம்பி வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வத்தைப் பற்றி 80 ஆண்டுகளுக்கு முன் கேரள மக்களுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.
ஐயப்பன் புகழை பாமர மக்களும் உணரும்படி செய்த பெருமை "ஐயப்பன்" நாடகம் நடத்திய நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கத்தையே சேரும். இந்நாடகம் மூலம் மக்களை அவர் பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தார். இவர் 1400 தடவை ஐயப்பன் நாடகங்கள் நடத்தியிருக்கிறார்.
1942 முதல் 1946 வரை நவாபின் நாடகக் கம்பெனியாக மதுரை தேவி பால வினோத சங்கீத சபையினர் கேரளாவில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அப்போது கார்த்திகை பிறந்து விட்டால் 'சாமியே சரணம் ஐயப்பா' கோஷம் காதைத் துளைக்கும். செண்டை வாத்தியங்களில் ஒலி காது செவிடுபடும். இது என்னக் கத்தல், இது என்ன வாத்தியம் என்றே நவாபும் அவரைச் சேர்ந்தவர்களும் நினைத்து வந்தார்களாம்.
நாடகக் கம்பெனி கோட்டயத்தில் முகாமிட்டபோது ஐயப்ப சாமி என்ற பெரியவர் நவாபிடம் வந்து 'ஐயா! நான் நாகர்கோவிலில் இருந்து வருகின்றேன். நீங்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொன்றும் தெய்வ காவியமாக இருக்கிறது. உங்களுக்கு தெய்வ ஆதரவு இருக்கிறது. ஆகவே கலியுக வரதனாக விளங்கும் ஐயப்பன் சரித்திரத்தையும், நாடகமாக நடத்த வேண்டும். இது மலையாளத்தில் நடந்த உண்மைக் கதை என்றார்.
நவாப் - "புதிய நாடகம் என்றால் அதிக பொருட் செலவாகும். மேலும் இது மலையாளக் கதை. தமிழ்நாட்டில் எடுபடுமா என்பதையும் பார்க்க வேண்டும்". என்று கூறி விட்டார்.
அப்பெரியவர், "நீங்கள் நாடகம் நடத்தாவிட்டால் பரவாயில்லை. நான் ஐயப்பன் கதையை கதாகாலட்சேபமாக நடத்தி வருகிறேன். அதை நீங்கள் வந்து கேட்க வேண்டும்" என்று வற்புறுத்தினார்.
நவாப் தாங்கள் முகாமிட்டிருந்த கம்பெனி வீட்டிலேயே அவர் கதாகாலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்தார். கதையைக் கேட்டு ராஜமாணிக்கம் உருகி விட்டார். பந்தள அரசனின் மகனாக வளர்ந்து பனிரெண்டே ஆண்டுகள் மானிட உருவில் வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்து சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பன் சரிதம் எல்லோருடைய உள்ளத்தையும் உலுக்கி விட்டது. ராஜமாணிக்கம் அன்று முதல் ஐயப்பனுக்கு அடிமையானார்.
என்ன ஆனாலும் இதை நாடகமாகவே நடத்தியாக வேண்டும். கதை எங்கு நடந்திருந்தாலும் அதிலுள்ள நீதி மனித சமுதாயத்திற்கே இன்றியமையாதது. இப்ேபர்ப்பட்ட ஒரு அருள் தெய்வத்தின் கதையை நடத்தி உலக மக்கள் அறிய செய்கிறேன் என்று ராஜமாணிக்கம் உறுதி பூண்டார்.
1944-ம் ஆண்டு ஆலப்புழையில் ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. மக்கள் ஏராளமாக வந்து நாடகத்தைப் பார்த்து பரவசமானார்கள். சபரிமலையே பார்த்தறியாத ஏராளமான பேர் நாடகத்தைப் பார்த்தபின் மலைக்குச் சென்று ஐயப்பனை நேரில் தரிசித்தனர்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக ஐயப்பன் நாடகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது. மதுரையில் இந்த நாடகம் நடந்த போது அந்த நகரை இந்நாடகம் ஒரு கலக்கு கலக்கி விட்டது.
இப்படித்தான் தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தி மக்களிடம் மெல்ல, மெல்ல பரவியது. இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.
சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத்தலமாகும். மகிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.
கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் கோவில் காணப்படுகிறது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.
நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் பழமையான ஆலயங்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் சிதிலம் அடைந்த பகுதிகளை காணலாம்.
ஆண்டு தோறும் சுமார் 5 கோடி முதல் 7 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.
சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உச்சரித்து, அதாவது ஐயப்பன் திருவடிகளை சரண் அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பல்வேறு காரணங்களால் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும், மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.
பரசுராமர் செய்த பிரதிஷ்டை
சபரிமலையில் உள்ள ஐயப்பனின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் பரசுராமர் என்றொரு கருத்து உண்டு. ஆனால் பரசுராமரின் காலத்தை திரேதா யுகம் என்று இதிகாசம் மூலம் அறிகின்றோம். ஒரு வேளை சாஸ்தாவின் அம்சமாக கேரளத்தில் அவதரித்த ஸ்ரீமணிகண்டன், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதும் ஆன்றோர்களின் கருத்து.
பாண்டிய வம்சத்து பந்தள மன்னர்கள்
பாண்டிய நாட்டு மன்னர் ஒருவரை அவரது மந்திரி சூழ்ச்சி செய்து கொல்ல முயன்றார். அவர் மதுரையில் இருந்து தப்பிச் சென்று கேரளத்தை அடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பந்தளத்தில் ஒரு இடம் வாங்கி, ஒரு அரண்மனையை அமைத்தார். கி.பி.903- ல் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. பின்னால் வந்த மற்ற மன்னர்கள், அரண்மனையை மட்டுமின்றி தேசத்தையும் விரிவுப்படுத்தினர்.
- மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது.
- சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.
இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.
பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார்.
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.
வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.
தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.
இரண்டு நந்தி :
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார்.
பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
- இந்த திருத்தலத்திற்கு ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.
- கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு அதிகம் வருகிறார்கள். அவர்கள் 9 நாட்கள் நவநாள் ஜெபம் அல்லது 9 வாரம் நவநாள் என்ற அடிப்படையில் குழந்தை இயேசுவை பிரார்த்தனை செய்கிறார்கள். அவ்வாறு செய்தவன் மூலம் ஏராளமானோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
அன்பு, அமைதி, பொறுமை, தியாகம் இவற்றையெல்லாம் கிறிஸ்தவம் மிகவும் வலியுறுத்தி வருகிறது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க திருச்சபையில் குழந்தை இயேசுவின் மீதுள்ள பக்தி பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் மனதில் இருந்து வருகிறது. இயேசுவின் புனிதமான குழந்தை பருவத்தை கிறிஸ்தவர்கள் இன்றளவும் வணங்கி வருவதுபோல் புனித குழந்தை தெரசா, புனித பிரான்சிஸ் அசிசி, புனித அந்தோணியார் மற்றும் புனித அவிலா தெரசா போன்ற பல புனிதர்கள் தெய்வீக குழந்தை இயேசுவின் மீது மிகவும் பக்தி கொண்டிருந்தார்கள்.
பூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் பெங்களூருவில் கடந்த 1969-ம் ஆண்டில் குழந்தை இயேசு மீதான பக்தி மக்களிடையே மிக அதிகமாக பரவ தொடங்கியது. பெங்களூருவில் உள்ள சொன்னேனஹள்ளி, வண்ணாரப்பேட்டை, நீலசந்திரா, ஆஸ்டின் டவுன், ஆனேபாளையா, ஈஜிபுரா போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் குழந்தை இயேசுவை வேண்டி ஜெபிக்க ஆரம்பித்தனர்.
குழந்தை இயேசு மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால்பெண் ஒருவர் விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு பேராலயம் கட்ட இடம் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி அவர் ஒரு பாதிரியாரிடம் கூறி முறையிட்டார். அப்போது விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட இடம் கிடைக்க குழந்தை இயேசுவிடம் ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த பாதிரியார் குழந்தை இயேசுவை நோக்கி நவநாள் ஜெபத்தை ஆரம்பித்தார். அதன்பேரில் அங்கு தேவாலயம் கட்ட இடம் கிடைத்தது.
1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தேவாலயம் கட்டப்பட தொடங்கிய நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஜெபக்கூடத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் மக்கள் வணங்குவதற்காக வைக்கப்பட்டது. அங்கு தினமும் மக்கள் வந்து குழந்தை இயேசுவிடம் தங்கள் பிரச்சினைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக சூறாவளி காற்று, புயல் இப்படி பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி அந்த ஜெபக்கூடம் குழந்தை இயேசுவின் அருளால் எந்தவித சேதமும் இன்றி இருந்தது. இதுவே கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் தொடர்ந்து நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது.
குழந்தை இயேசுவின் அற்புதத்தைக் கண்டு ஏராளமான மக்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்திக்க ஆரம்பித்தனர். 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று முதல் நவநாள் ஜெபம் தொடங்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று இந்த தேவாலயத்தில் நவநாள் ஜெபம் நடக்கிறது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ந் தேதி இந்த திருத்தலத்தின் ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதுவும் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு காலக்கட்டத்திற்கு பிறகு தற்போதுள்ள தேவாலயம் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி முழுமையாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் குழந்தை இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்திற்கு இன்று ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.
மேலும், குழந்தைகள் உடல்நிலை ஆரோக்கியமாகவும், அவர்கள் சிறந்த அறிவுத்திறனுடன் இருக்க வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் குழந்தைகளுடன் இந்த திருத்தலத்திற்கு வந்து குழந்தை இயேசுவை பிரார்த்திக்கிறார்கள்.
- கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிசயமங்கை என்ற ஊரில் அமைந்துள்ளது, விஜயநாதேஸ்வரர் கோவில். தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயம் காவிரியின் வடகரைத் தலங்களில் 47-வது தலமாகும். இந்த ஆலயத்தின் மூலவராக விஜயநாதேஸ்வரரும், அம்பாளாக மங்களாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். அர்ச்சுனன் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஆலயம் 'விஜயநாதேஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனனுக்கு 'விஜயன்' என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ச்சுனனை சந்தித்த வேதவியாசர், 'சிவனை நினைத்து தவம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றால், கவுரவர்களை எளிதாக வெல்லலாம்' என்று கூறினார்.
இதையடுத்து அர்ச்சுனன் வனத்திற்குள் சென்று, சிவனை நினைத்து தவம் இருந்தான். அவனது தவத்தை கலைப்பதற்காக, முகாசுரன் என்ற அரக்கனை துரியோதனன் அனுப்பினான். பன்றி வடிவில் வந்த அந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயற்சித்தான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன், அந்த பன்றியை தன்னுடைய அம்பால் வீழ்த்தினான். அதே நேரம் இன்னொரு அம்பும் அந்த பன்றியை துளைத்திருந்தது. அர்ச்சுனனை நோக்கி வந்த வேடன் ஒருவன், தான்தான் அந்த பன்றியை வீழ்த்தியதாக கூறினான். அதில் வேடனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. கோபம் அதிகமாக தன் கையில் இருந்த அம்பைக் கொண்டு அந்த வேடனை, அர்ச்சுனன் தாக்கினான். அப்போது வேடனாக வந்த சிவபெருமான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி, அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.
அப்போது ஈசனின் அருகில் நின்ற அம்பாள், "ஐயனே.. ஆயுதங்களில் உயர்ந்த பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவனா?" என்று கேள்வி எழுப்பினாள். அதற்கு சிவன், "அர்ச்சுனன் 'மஸ்ய ரேகை' (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்" என பதிலளித்தார். அப்போது அர்ச்சுனனும், அம்பாளின் முன்பாக பணிவாக குனிந்து நின்று தன்னுடைய கையில் ஓடும் அந்த அதிர்ஷ்ட ரேகையை காண்பித்தான். பின்னர் சிவபெருமானையும், அம்பாளையும் அங்கேயே எழுந்தருளும்படி பணித்தான். ஈசனும் ஒப்புக்கொண்டார். அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்த ஈசன், 'விஜயநாதேஸ்வரர்' என்றும், இந்த திருத்தலம் 'திருவிஜயமங்கை' என்றும் பெயர் பெற்றது.
சோழர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த ஆலயத்தின் மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், நுழைவு கோபுரம் சிறியதாகவும் அமைந்துள்ளது. இத்தல அம்பாள் நான்கு கரங்களுடன் காட்சி தரு கிறாள். முன் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரையும், பின் இரண்டு கரங்களில் அட்சரமாலை, நீலோத்பவ மலர் தாங்கியிருக்கிறாள். கோவிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நால்வர் திருமேனிகள் உள்ளன. சிவன் சன்னிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.
கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது. ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். திருமணத்தடை உள்ளவர்களும் வழிபாடு செய்யலாம். இந்த ஆலயத்தில் திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் பயணித்தால் திருவிஜயமங்கை திருத்தலத்தில் கொள்ளிட ஆற்றின் கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்புறம்பியத்தில் இருந்து 8 கிேலாமீட்டர் தூரத்திலும் ஆலயத்தை அடையலாம்.
- இங்கு வில்வம் தல விருட்சமாகும்.
- சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.
மூலவர் - சேவுகப் பெருமாள்
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - புஷ்கரணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது. வியப்படைந்த வேடுவன், "சேவுகபெருமாளே. மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்" என்றதுடன், "பெருமாளே" என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர்,"சேவுகப்பெருமாள் அய்யனார்" என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.
சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாகப் பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.
தேவர்களின் அரசன் இந்திரன் சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்கக் கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.
அய்யனாரைப் போல அய்யப்பனும் இராகு, மாந்தி போன்ற கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். ஐ என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்று புகழ் பெற்று விளங்குகின்றன.
முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும். இருவரும் ஈன்ற மகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோவில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச் சிறந்த தலைவனாக காட்சி தருகிறான். சபரிமலை அய்யப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை. அய்யனைப் போல அய்யனாரும் வீராசனமாகவே வீற்றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார். தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.
இத்திருகோவில் அமைந்த இடம் வில்வவனமானபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவாரத் தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.
இத்திருக்கோவிலின் தல தீர்த்தம் (புஷ்கரணி) விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும். பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை உடனாய முருகன், பரிவார தேவதைகள், கருப்பண்ணசாமி, கருப்பர், சப்தகன்னியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.
திருவிழா:
வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.
கோரிக்கைகள்:
கேட்டதை கொடுப்பதில் வல்லவரான அய்யனார், ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப் பெறுகிறார். சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் கன்றுகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோவில்,
சிங்கம்புணரி,
திருப்புத்தூர் தாலுகா,
சிவகங்கை மாவட்டம்.
- அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார்.
- அம்மன் 5 முகங்களைக் கொண்டவள்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த கோவில் தென்னந்தோப்புகள், மரங்கள் நிறைந்த தோட்டங்கள், வயல்வெளிகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ்ந்து, அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.
புற்று வடிவில் அம்மன்
இந்த கோவிலில் பகவதி அம்மன் வடக்கு முகமாக புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய மண் புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது. அம்மன் 5 முகங்களைக் கொண்டவள். புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர், கடல் நாகர் (கடலில் இருந்து கிடைத்த கடல் நாகர் சிலை) சன்னதிகளும் உள்ளன.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. மண்டைக்காடு காடாக இருந்த போது ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி பரவியதைக் கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார்.
சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்படி ஒருநாள் கால்நடைகளை அழைத்துச் சென்ற சிறுவர்கள் பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடியுள்ளனர். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது விழுந்தது. அதனால் புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அப்போது ஒருவர் சாமி ஆடி குறி சொல்லியிருக்கிறார். இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் புற்றின் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். அதன்படி சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசியிருக்கிறார்கள். உடனே ரத்தம் வருவது நின்றது என்றும் கூறப்படுகிறது.
கேரள பக்தர்கள்
இதேபோல் கேரள மாநிலம் கொல்லம் நகரில் இருந்து பெண் யோகினி மண்டைக்காடு வந்ததாகவும், அந்தப் பெண் கடற்கரையில் தவம் இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததாகவும், அதுவே பிற்காலத்தில் பகவதி தேவியாக வழிபாட்டுக்குரியதானதாகவும் கூறப்படுகிறது. எனவே யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்தில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
கேரளத்தில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்த காலகட்டத்தில் தமிழக அரசால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கொடிமரமும் நடப்பட்டது. தற்போது தாமிரத்தகடு பொதியப்பட்ட நிரந்தர கொடிமரம் உள்ளது. இந்த கோவிலின் கருவறை, நமஸ்கார மண்டபம் அல்லது பஜனை மண்டபம் அனைத்தும் கேரள பாணியில் ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரையால் ஆனது. கருவறையில் புற்று வடிவில் காட்சி தரும் அம்மனுக்கு 1909-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 30 முதல் 40 துலாம் அரைத்த சந்தனம் பூசப்படுகிறது. வடக்குத் திருமுகம் வெள்ளியிலானது. வெள்ளி மகுடமும் உண்டு. அர்ச்சனா படிமமும், விழாப்படிமும் கருவறையில் உள்ளன.
மாசி கொடை விழா
இந்த கோவிலின் நேர்ச்சைகளாக வில்லுப்பாட்டு, மரம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கை, கால் உறுப்பு காணிக்கை, வெடி வழிபாடு, முத்தப்பம், மண்டையப்பம், பொங்கல், கைவிளக்கு, பூமாலை, குத்தியோட்டம், கறுப்பு வளையல், விளைச்சலில் முதல் பொருள் ஆகியன உள்ளன. வில்லிசைக்கலை என்ற கிராமியக் கலைநிகழ்ச்சி பாடுமாறு நேர்ந்து கொள்ளுதல் இந்த கோவிலின் சிறப்பு. காணிக்கை கொடுப்பவரின் ஊரில் இருந்து மண்டைக்காடு வரையுள்ள இடங்களை பாடுவது இதன் சிறப்பு.
முள்முருங்கை போன்ற மரங்களில் செய்யப்பட்ட சாயம் பூசப்பட்ட கை- கால் உறுப்புகளை வாங்கி கோவில் தட்டுப்பந்தலில் எறிவது மற்றொரு நேர்ச்சை. 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலைநோய் தீர அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வராமலோ, வந்தால் குணமாகவும் முத்தப்பமும் நேர்ச்சையாக படைத்து வழிபடுகின்றனர். இவை தவிர வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் முதலியவையும் நைவேத்தியமாக கொடுக்கப்படுகிறது. எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.
கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் நடைபெறும் கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த கோவிலில் திதி அல்லது நட்சத்திரம் அடிப்படையில் அல்லாமல் கிழமையை அடிப்படையாகக் கொண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். மாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமைகளில் விழா நிறைவடையும் வகையில் 10 தினங்களுக்கு முன் கொடி ஏற்றுவிழா தொடங்கும். 6-ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அன்று வலிய படுக்கை பூஜை என்ற சிறப்பு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கும்.
இந்த பூஜையில் திரளி கொழுக்கட்டை, அவல், பொரி, முந்திரி, கற்கண்டு, 13 வகை வாழைப்பழங்கள், இளநீர், பிற பழவகைகள் ஆகியவை அம்மனுக்கு முன் குவியலாக படைக்கப்பட்டு அவற்றின் மேல் தீப்பந்தங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். 9-ம் நாள் திருவிழா அன்று பெரிய சக்கர தீவட்டி நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவன்று ஒடுக்கு பூஜை நடைபெறும். இதில் சாஸ்தா கோவிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உள்பட 11 வகை கறி, குழம்புகள், சாதம் ஆகியவற்றை தலையில் சுமந்து வந்து கோவிலின் கருவறையில் வைப்பார்கள். நள்ளிரவு 1 மணிக்கு பூஜை நடைபெறும். இவற்றை தயாரிக்கும் முறை, கொண்டு வருதல் ஆகியவற்றின் மரபுவழி முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
பெண்களின் சபரிமலை
சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி செல்வதைப்போல, மாசிக்கொடை விழாவுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களால் முடிந்த அளவு விரதமிருந்து இருமுடிகட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்வதி நட்சத்திரம் அன்று நடைபெறும் பொங்கல் விழாவும் இந்த கோவிலின் சிறப்பு நிகழ்வாகும். இதில் கோவிலின் முன்பு 4 திசைகளிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
பங்குனி மாதத்தில் பரணி நட்சத்திர கொடை விழா அன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை பூஜை நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கோவிலில் பரணி நட்சத்திரம் தோறும் தங்கத்தேரில் அம்மன் பவனி வருவார். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற ரூ.1,500 கட்டணம் செலுத்தி தங்கத்தேர் இழுக்க அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு கட்டணம் செலுத்துபவர்களுக்கு பிரசாதம், அர்ச்சனைத்தட்டு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும்.
கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாள பூஜை நடத்தி நடை சார்த்தப்படும்.
- இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.
- 1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் சிறப்புமிகுந்த மறைமாவட்டங்களில் குமரி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கோட்டார் மறைமாவட்டமும் ஒன்றாகும். கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர், இரண்டாம் பவுல், கேட்டவரம் தருபவர் என்று கிறிஸ்தவர்களால் போற்றி புகழப்படும் புனித சவேரியார் நற்செய்தி அறிவித்து, மக்களுக்கு தொண்டாற்றிய பங்குகளில் கோட்டார் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது. புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயம் என்ற பெருமையை கோட்டார் புனித சவேரியார் பேராலயம் வகிக்கிறது. இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.
தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு
இந்த கோட்டார் மறைமாவட்டத்தின் பங்குகளில் ஒன்றாக நாகர்கோவில் மாநகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள மேலப்பெருவிளை பங்கு உள்ளது. இந்த பங்கு, கோட்டார் மறைமாவட்டம் உருவாவதற்கு, (அதாவது 1930-க்கு) முன்பே இருந்த பழமையும், பாரம்பரியமும் கொண்ட பங்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது திருவிதாங்கூர்- கொச்சி சமஸ்தானமாக இருந்தபோது கோவா மறைமாவட்டத்தில் இருந்து கி.பி.1886-ம் ஆண்டில் கொல்லம் மறை மாவட்டம் உருவானது. அப்போது இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த 14 பங்குகளில் மேலப்பெருவிைள பங்கும் ஒன்று என்ற பெருமையைக் கொண்டது. இயேசுவின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்டு, மறைசாட்சியாக இந்திய மண்ணில் ரத்தம் சிந்திய முதல் இல்லற புனிதர் என்ற பெருமையைப் பெற்ற புனித தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு இந்த மேலப்பெருவிளை பங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் அரை சென்ட் மனையில் சிலுவை பாணியில் பனை ஓலையினால் ஒரு குருசடியை இப்பகுதி மக்கள் உருவாக்கி இயேசுவை வழிபட்டு வந்தனர். 5 முன்னோடி குடும்பங்கள் இணைந்து இந்த குருசடியில் வழிபாடுகள் நடத்தி வந்தனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதை உணர்ந்த இப்பகுதியின் முன்னோர்கள் குருசடி இருந்த இடத்தில் கி.பி.1832-ம் ஆண்டில் புனித செபமாலை அன்னைக்கு மண்சுவராலும், ஓட்டுப்புரையாலும் ஆலயம் ஒன்றை உருவாக்க நினைத்தனர். அதற்கு வடசேரி, அறுகுவிளை, புதுக்குடியிருப்பு, சாந்தான் செட்டிவிளை ஊர்க்காரர்களும், மேலப்பெருவிளை ஊர்க்காரர்களும் இணைந்து ஆலயம் எழுப்பினர்
வேண்டுதல் நிறைவேற்றும் அன்னை
1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது. 1942-ம் ஆண்டு தொடங்கி 1944-ம் ஆண்டுகளில் கோவில் உட்புறப் பலிபீடம் புதுப்பிக்கப்பட்டது. இன்றும் இந்த ஆலயம் கல் கட்டிடமாகவும், ஓடுகளால் ஆன மேற்கூைரயுடனும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறது. கி.பி.1858-ம் ஆண்டில் இந்தியாவில் பரவிய காலரா, வைசூரி போன்ற கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் மடிந்தனர். இந்தியாவின் தென்கோடியான குமரி மண்ணையும் இந்நோயின் தாக்கம் விட்டு வைக்கவில்லை. அந்த சமயத்தில் மேலப்பெருவிளை மக்கள் இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சலேத் அன்னையை நோக்கி இடைவிடாது வேண்டினர். புனித லூக்காவின் நற்செய்தி வாசகத்திற்கேற்ப மாதா, மக்களுக்கு அருள்பாலித்து, ஒரு கெபியை கட்ட பணித்தார். அதன்படி மக்கள் கற்களை தலைமேல் சுமந்து வந்து கெபியைக் கட்டினர்.
அதில் 1867-ம் ஆண்டு புனித சலேத் அன்னை சொரூபத்தை அன்றைய கொல்லம் ஆயர் எப்ரேம் ஸ்தாபித்தார். ஊர் மக்களைத் தாக்கி வந்த கொள்ளை நோய்களும் அன்னையின் அருளால் முற்றிலும் அகன்றது. அன்று முதல் இன்று வரை அன்னையிடம் மனம் உருகி வேண்டுபவர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
புதுமைகள் நிகழ்கிறது
சலேத் மாதாவின் எழில்மிகு தோற்றத்துடன் கூடிய இந்த கெபியானது 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 -ந் தேதி அன்றிருந்த பங்கு பணியாளர்களின் இடையறாத உழைப்பாலும் பங்கு மக்களின் வீடுகள் தோறும் சென்று நன்கொடைகள் பிரித்தும் புதிதாகக் கட்டப்பட்டது. அன்றைய ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கெபியை அர்ச்சித்து வைத்தார். சலேத் அன்னை 1864-ம் ஆண்டு சலேத் மலையில் காட்சி கொடுத்ததை கொண்டாடும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 19 -ந் தேதி ஆடம்பர விழாவாக தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் முயற்சியால் கொண்டாடப்பட்டது. அத்தோடு புதுமைகள் பல நிகழும் அன்னையின் கெபியில், மாதந்தோறும் 19-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து கஞ்சிதர்மமும் நடைபெற்று வருகிறது. தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் ஊர் மக்களுடன் இணைந்து, நன்கொடை சேகரித்து கெபியில் மேற்கூரை அமைத்து தந்துள்ளார்.
மேலப்பெருவிளை 1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் தனிப்பங்காக உதயமானது. 1990-ம் ஆண்டு இந்த பங்கு பணியாளருக்கு இல்லம் அமைக்கப்பட்டது. அதுமுதல் பங்குத்தந்தை அங்கு தங்கி பணியாற்றி வருகிறார். 1962-ம் ஆண்டு இந்த ஊரில் ஒரு ரேடியோ நிலையம் கட்டப்பட்டது. அதனை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக அங்கம் வகித்த லூர்தம்மாள் சைமன் திறந்து வைத்துள்ளார். 1963-ம் ஆண்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 1966-ல் படிப்பகமும், 1968-ல் கோட்டார் சமூகசேவை மையத்தால் ஏற்படுத்தப்பட்ட கிராம மருந்தகமும் உருவானது. 1965-ம் ஆண்டில் ஊர் மக்களின் நீராதாரத் தேவையை பூர்த்தி செய்ய கோவில் நிலத்தில் கிணறு வெட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. 2003-ம் ஆண்டு புனித ஜெபமாலை அன்னை சமுதாய நலக்கூடம் பங்கு மக்களின் உதவியோடு அடிக்கல் நாட்டப்பட்டு 2004-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
புனித தேவசகாயம்
2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி இந்த பங்கில் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற குருசு கார்மல், புனித சலேத் அன்னை கெபியில் புதுமை பொருட்கள் விற்பனை நிலையத்தையும், நிர்வாகிகள் அலுவலகத்தையும் கட்ட முயற்சி எடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் புனித தேவசகாயத்துக்கென்று வெள்ளிக்கிழமை நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. அதற்கென்று திருச்சூரிலிருந்து புனித தேவசகாயம் சொரூபம் ஒன்றை தனது சொந்த முயற்சியில் வாங்கி அதை சலேத் அன்னை கெபியில் வைத்து ஸ்தாபித்து பவனியாக ஆலயத்திற்கு கொண்டுவந்த பெருமையும் பங்குத்தந்தை குரூஸ் கார்மலையே சாரும்.
மகிமை பெருகுகிறது
மேலும் இந்த ஆலயம் தொடர்பாக மேலப்பெருவிளை பங்குத்தந்தை குருசு கார்மல் கூறியதாவது:-
கோட்டார் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட பங்குகளில் மேலப்பெருவிளை பங்கும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள ஜெபமாலை மாதா ஆலயத்தில் ஜெபமாலை அன்னையும், சலேத் அன்னையும் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இதனை ஆலயத்துக்கு நன்றி செலுத்த வரும் பக்தர்களின் மூலமாக காண முடிகிறது. அதனால் அன்னையின் மகிமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இந்த ஆலயத்தில் வார நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி, 7.30 மணிக்கு மறைக்கல்வி குழந்தைகளுக்கான திருப்பலியும் நடைபெறுகின்றன. ஞாயிறுதோறும் காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை மறைக்கல்வியும், தொடர்ந்து 10.30 மணி முதல் அனைத்து சிறார் இயக்கங்களும் செயல்படுகின்றன. மாதத்தில் ஒருநாள் மறைக்கல்வி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
உறுதிமொழி
இதுதவிர கடந்த ஆண்டு முதல் மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறுவர்களுக்கான ஆங்கில திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மறைக்கல்வி மாணவர்களுக்கென்று ஞாயிறு காலை 7.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி அதில் மறைக்கல்வி மாணவர்களே, இசைமீட்டி பாடலும் பாட முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் அக்ேடாபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2-வது ஞாயிற்றுக்கிழமை முடிவடையும்.
இங்கு ஏற்கனவே மறைக்கல்வி, பாலர் சபை, சிறுவழி இயக்கம், இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கம், மரியாயின் சேனை, வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கிராம பெண்கள் சங்கம் ஆகியன செயல்பட்டு வந்தன. நான் இங்கு பொறுப்பேற்ற பிறகு நற்செய்தி பணிக்குழு, குடும்பநலப் பணிக்குழு, கைகள் தன்னம்பிக்கை இயக்கம், பிரான்சிஸ்கள் மூன்றாம் சபை, திருஇருதயநாதர் சபை, வழிபாட்டுக் குழு, கத்தோலிக்க சேவா சங்கம், பெண்கள் பணிக்குழு, கார்மல் சபை என பல சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பங்கு மக்களும் துடிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.
இறையருளில் பிறந்து, பங்குதந்தையர் பணியில் வளர்ந்து, இணை தந்தையர்கள் உழைப்பில் உயர்ந்து முழுமை பெற்ற இந்த ஊர் சலேத்அன்னையின் அடிச்சுவட்டில் ஊரின் நலனிலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்டுகிற சமூகமாக மாற்றுவோம் என உறுதிமொழி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆயில்ய திருவிழா 14-ந் தேதி புணர்தம் நாளில் தொடங்குகிறது.
- 16-ந்தேதி வரை 3 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும் என்றார்.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ்பெற்ற மண்ணார சாலை நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தையில்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது.
இதற்காக பல நாடுகளில் இருந்து சாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை வழிபாடுகளில் பங்கேற்பது இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். பண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. அதே சமயத்தில் இங்கு நாகர் ஆராதனை மையத்தில் புரட்டாசி மாதம் ஆயில்ய நட்சத்திர தினத்தில் தரிசனம் நடத்துவது என்பது திருவிதாங்கூர் மன்னர்களின் ஒரு விரதமாகவே கடை பிடிக்கப்பட்டு வந்தது.
ஐப்பசி ஆயில்யம்
ஒரு முறை வழக்கம் போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்து ஐப்பசி மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கோவில் சொத்துக்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டது. அதன்பிறகு தான் ஐப்பசி ஆயில்யம் மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மன்னரும், குடும்பத்தினரும் பங்கேற்கும் அந்தஸ்து கொண்ட விழாவாக ஐப்பசி மாத ஆயில்யம் பிரபலமானது.
புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் ஆயில்ய விழா இன்றும் கோலாகலமாக நடைபெறுகிறது. சிவராத்திரி சிவபெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினத்தன்று முக்கிய விழாவாக
கொண்டாடப்படுகிறது. அதன்படி பல கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நாகராஜா பிரதிஷ்டை சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி நடைபெறுகிறது.
சிறப்பு வழிபாடு
ஆயுள் குறைவு, வம்ச நாசம், தீராவியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் குறையை போக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஆரோக்கிய வாழ்வு பெற நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு ஆகியவையும் சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்களும், நீண்ட ஆயுள் பெற நெய், நினைத்த காரியம் கை கூடுவதற்கு பால், கதலிப்பழம், நிலவறை பாயாசமும், குழந்தை பாக்கியத்திற்கு மஞ்சள் பொடி, பால் பூஜை நடத்த தங்கத்திலான சிறிய உருளி வழங்குதல், மரங்களின் செழிப்புக்கு மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் போன்றவை படைக்கப்பட வேண்டும். நாக தோஷ பரிகாரம், சர்ப்ப பலி, மஞ்சள் பொடி காணிக்கை, பால் பழம் நிவேத்யம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் போன்றவை படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.
பூஜை நேரம்
மண்ணாரசாலை கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 10 மணிக்கு உச்ச பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வேண்டுதலுக்காக சுத்தமான தங்கத்திலும், வெள்ளியிலும் தயாரிக்கப்பட்ட நாகர் வடிவங்கள், நாகர் முட்டை, புற்று, ஆள் வடிவங்கள், விளக்குகள், மஞ்சள் பொடி, உப்பு, நல்ல மிளகு, கடுகு, கற்பூரம், பட்டுத்துணி ஆகிய அனைத்து பொருட்களும் கோவில் கவுண்ட்டர்களில் கிடைக்கும்.
14-ந் தேதி திருவிழா
நடப்பாண்டின் ஆயில்ய திருவிழா குறித்து மண்ணாரசாலை நாகராஜா கோவிலின் நம்பூதிரி எம்.கெ. பரமேஸ்வரன் கூறுகையில், ஆயில்ய திருவிழா வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) புணர்தம் நாளில் தொடங்குகிறது. 16-ந் தேதி வரை 3 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும் என்றார்.
- கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது.
- இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மூலவர்: கொற்றவாளீஸ்வரர்
அம்மன்: நெல்லை அம்பாள்
தீர்த்தம்: மது புஷ்கர்ணி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது, கோவிலூர் என்ற ஊர். இங்கு அமைந்துள்ள கொற்றவாளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி பார்ப்போம்.
இந்த ஆலயத்தை காளையார்கோவில் பகுதியை ஆட்சி செய்து வந்த வீரபாண்டியன் என்ற மன்னன் கட்டமைத்துள்ளான்.
இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
காளீசர் அருளால் வீரபாண்டியன் பெற்றிருந்த கொற்றவாளை, இத்தல இறைவன் மறைத்து விளையாடியதால், அவருக்கு 'கொற்றவாளீஸ்வரர்' என்று பெயர் வந்தது.
மன்னனுக்கு மீண்டும் கொற்றவாளை வழங்கிய ஈசன் என்பதால், இவருக்கு 'ராஜகட்க பரமேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.
மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்பாலித்த காரணத்தால், இத்தல இறைவன் 'திரிபுவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் வீணை சரஸ்வதி, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி திருக்கல்யாண திருவுருவம், சர்வ அலங்கார சாரதாம்பிகை, ரிஷப வாகனத்தில் சிவ-பார்வதி, மயில் மீது சண்முகர் ஆகியோரது சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.
இங்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் சிவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த ஆலயத்தை புதுப்பித்து திருப்பணி செய்தவர், கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவரான முத்துராமலிங்க தேசிகர் ஆவார்.
கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. இதன் நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் இருக்கிறது. தெப்பக்குளத்தைச் சுற்றி நடந்தால் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, கோவிலூர்.






