search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கேரள மாநிலம் மண்ணாரசாலை நாகராஜா கோவில்
    X

    கேரள மாநிலம் மண்ணாரசாலை நாகராஜா கோவில்

    • ஆயில்ய திருவிழா 14-ந் தேதி புணர்தம் நாளில் தொடங்குகிறது.
    • 16-ந்தேதி வரை 3 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும் என்றார்.

    கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ்பெற்ற மண்ணார சாலை நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தையில்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது.

    இதற்காக பல நாடுகளில் இருந்து சாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை வழிபாடுகளில் பங்கேற்பது இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். பண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. அதே சமயத்தில் இங்கு நாகர் ஆராதனை மையத்தில் புரட்டாசி மாதம் ஆயில்ய நட்சத்திர தினத்தில் தரிசனம் நடத்துவது என்பது திருவிதாங்கூர் மன்னர்களின் ஒரு விரதமாகவே கடை பிடிக்கப்பட்டு வந்தது.

    ஐப்பசி ஆயில்யம்

    ஒரு முறை வழக்கம் போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்து ஐப்பசி மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கோவில் சொத்துக்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டது. அதன்பிறகு தான் ஐப்பசி ஆயில்யம் மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மன்னரும், குடும்பத்தினரும் பங்கேற்கும் அந்தஸ்து கொண்ட விழாவாக ஐப்பசி மாத ஆயில்யம் பிரபலமானது.

    புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் ஆயில்ய விழா இன்றும் கோலாகலமாக நடைபெறுகிறது. சிவராத்திரி சிவபெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினத்தன்று முக்கிய விழாவாக

    கொண்டாடப்படுகிறது. அதன்படி பல கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நாகராஜா பிரதிஷ்டை சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி நடைபெறுகிறது.

    சிறப்பு வழிபாடு

    ஆயுள் குறைவு, வம்ச நாசம், தீராவியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் குறையை போக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    ஆரோக்கிய வாழ்வு பெற நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு ஆகியவையும் சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்களும், நீண்ட ஆயுள் பெற நெய், நினைத்த காரியம் கை கூடுவதற்கு பால், கதலிப்பழம், நிலவறை பாயாசமும், குழந்தை பாக்கியத்திற்கு மஞ்சள் பொடி, பால் பூஜை நடத்த தங்கத்திலான சிறிய உருளி வழங்குதல், மரங்களின் செழிப்புக்கு மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் போன்றவை படைக்கப்பட வேண்டும். நாக தோஷ பரிகாரம், சர்ப்ப பலி, மஞ்சள் பொடி காணிக்கை, பால் பழம் நிவேத்யம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் போன்றவை படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    பூஜை நேரம்

    மண்ணாரசாலை கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 10 மணிக்கு உச்ச பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வேண்டுதலுக்காக சுத்தமான தங்கத்திலும், வெள்ளியிலும் தயாரிக்கப்பட்ட நாகர் வடிவங்கள், நாகர் முட்டை, புற்று, ஆள் வடிவங்கள், விளக்குகள், மஞ்சள் பொடி, உப்பு, நல்ல மிளகு, கடுகு, கற்பூரம், பட்டுத்துணி ஆகிய அனைத்து பொருட்களும் கோவில் கவுண்ட்டர்களில் கிடைக்கும்.

    14-ந் தேதி திருவிழா

    நடப்பாண்டின் ஆயில்ய திருவிழா குறித்து மண்ணாரசாலை நாகராஜா கோவிலின் நம்பூதிரி எம்.கெ. பரமேஸ்வரன் கூறுகையில், ஆயில்ய திருவிழா வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) புணர்தம் நாளில் தொடங்குகிறது. 16-ந் தேதி வரை 3 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும் என்றார்.

    Next Story
    ×