என் மலர்tooltip icon

    இலங்கை

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது.
    • பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் 2-வது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ.1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.

    நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை, மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    • சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும்.
    • ஹம்பன்தோடா துறைமுகம் 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

    சீனாவின் எரிசக்தி நிறுவனமான சினோபெக் நிறுவனத்திற்கு ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை ஹம்பன்தோடா துறைமுகத்தில் நிறுவ இலங்கை மந்திரி சபை அனுமதி அளித்துள்ளது. இதை இலங்கை மந்திரி காஞ்சனா விஜே சேகரா தெரிவித்தார்.

    சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும். இந்த சுத்திகரிப்பு நிலையத்துடன், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் பயிற்சி மையமும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.

    ஹம்பன்தோடா துறைமுகம் இலங்கையின் 2-வது பெரிய துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

    இந்த துறைமுக கட்டுமானத்துக்கு சீனாவின் எக்சிம் வங்கி கடன் அளித்துள்ளது. தற்போது இங்கு சீனா மிகப் பெரிய முதலீட்டை செய்து உள்ளது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது.
    • அரசின் தலையீடு இருப்பதாக கூறி ஐசிசியில் இருந்து இலங்கை அணி தற்காலிகமாக நீக்கப்பட்டது.

    கொழும்பு:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 55 ரன்னில் ஆல் அவுட்டாகி மோசமாக தோற்றது அந்த நாட்டு அரசியல் மட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது பதவியைப் பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டை சிதைக்கிறார். அவரது அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் ஜெய்ஷாவிற்கும் தொடர்புள்ளது என அர்ஜுன ரணதுங்க பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தொலைபேசியில் அழைத்து, ரணதுங்கா கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் என இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

    மேலும் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் நானும், எனது நண்பரான எரிசக்தி துறை மந்திரியுமான காஞ்சனா விஜேசேகராவும் வருத்தம் தெரிவித்தோம் என குறிப்பிட்டார்.

    • ‘ஷியான் யாங் ஹாங் - 03’ என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது.
    • அதிநவீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீன கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணி என்ற அடிப்படையில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவும் இதற்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன உளவு கப்பல்கள் இலங்கையின் அம்பன் தோட்டா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும். இந்த கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காகவே வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே இலங்கை கடல் பகுதிக்கு அடிக்கடி வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

    சீன கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் நின்றபடியே தமிழக கடல் பகுதிகள் மற்றும் தமிழகத்துக்குள் இருக்கும் இந்திய படைகள் ஆகியவற்றை பற்றி முழுமையான தகவல்களை கண்காணித்து அறிந்து கொள்ளும் பணிகளில் ஈடுபடுவதாகவும், தென் மாநிலங்களை உளவு பார்ப்பதாகவும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. சீன உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே அவை இலங்கைக்கு வர இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    சீனாவின் உளவு கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசால் சீன கப்பலை தடுக்க முடியவில்லை. காரணம், இலங்கை அரசு சீனாவிடம் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் பொருளாதார உதவியை பெற்றுள்ளது.

    இந்நிலையில் சீனாவின் உளவு கப்பலான 'ஷின் யான் - 6' கடந்த மாதம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடல் ஆய்வுப்பணியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கப்பலும் இந்தியாவை உளவு பார்க்க வந்ததாகவே இந்தியா சார்பில் இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பல் கொழும்பு செல்வதற்காக காத்திருக்கிறது. ஆனால் அந்த கப்பல் சீனாவுக்கு எப்போது திரும்பும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில் சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவு கப்பல் இலங்கைக்கு வருகிறது. 'ஷியான் யாங் ஹாங் - 03' என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இது பல்நோக்கு கப்பல் ஆகும். இந்த கப்பலை இலங்கைக்கு அனுப்ப அந்த நாட்டிடம் சீனா அனுமதி கேட்டுள்ளது.

    இந்த கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்ந்து இலங்கைக்கு உதவுவதற்காகவே இந்த கப்பல் அனுப்பி வைக்கப்படுவதாக மீண்டும் காரணம் சொல்லப்படுகிறது.

    'ஷியான் யாங் ஹாங் - 03' அதிநவீன கப்பல் வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிறது. ஜனவரி 5-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த கப்பல் இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக சீனா தரப்பில் கூறப்படுகிறது. இந்த கப்பல் 99.06 மீட்டர் நீளம் கொண்ட பல்நோக்கு கப்பல் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிநவீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீன கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கப்பல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கைக்கு இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை அரசு என்ன முடிவு எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    • இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது.
    • பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம்.

    கொழும்பு:

    அண்டை நாடான இலங்கை, சுதந்திரத்துக்குப் பின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை கடந்த ஆண்டு சந்தித்தது. அன்னியச் செலாவணி இருப்பு முற்றிலுமாக காலியான நிலையில், விலைவாசி விண்ணைத் தாண்டிச் சென்றது. உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொறுமை இழந்து கொந்தளித்த பொதுமக்கள், தெருவில் இறங்கிப் போராடினர். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் அதிபர் பதவியில் இருந்து கீழிறங்கிய கோத்தபய ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

    பின்னர் அவர் நாடு திரும்பிவிட்டார். இலங்கையும், இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் கொஞ்சம் சீராக மூச்சுவிடத் தொடங்கியுள்ளது. ஆனால் 46.9 பில்லியன் டாலர்கள் என்ற மிகப் பெரிய கடன் மலையில் இலங்கை உட்கார்ந்திருக்கிறது. அதில் சுமார் பாதி அளவு, சீனாவுக்கு கொடுக்க வேண்டிய கடன் ஆகும்.

    இந்த நிலையில், இலங்கை சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் (டிரான்பரன்சி இன்டர்நேசனல்) மற்றும் 4 செயல்பாட்டாளர்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. அதில் 4 நீதிபதிகள், இலங்கையில் 2019-2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே ஆகிய ராஜபக்சே சகோதரர்கள், பொருளாதாரத்தை தவறாக கையாண்டதே காரணம் என்று அதிரடியாக தீர்ப்பு கூறினர். மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர்கள் அஜித் நிவார்டு கப்ரால், லக்ஷ்மண், கருவூலத்துறை முன்னாள் செயலாளர்கள் ஜெயசுந்தரா, அட்டிகலே உள்ளிட்ட உயர்பொறுப்பு வகித்த 13 பேரும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கில் ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட்டு அபராதம் எதையும் விதிக்கவில்லை என்றாலும், மனுதாரர்களின் வழக்குச் செலவுக்கு தலா ரூ.1½ லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து, பொருளாதார சரிவு தொடர்பாக ராஜபக்சே சகோதரர்கள் மீது மேலும் பல வழக்குகள் தொடரப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
    • மக்கள் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியை இழந்தனர்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.

    பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இதுதொடர்பாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரும் பொறுப்பு என இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

    பக்சே சகோதரர்கள் கையாண்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் உள்பட பலரும் நெருக்கடிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.

    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

    • இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.
    • 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்துள்ளது.

    இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    இதையடுத்து, சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

    • இலங்கையில் வாரியத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன
    • 1996 உலக கோப்பையை ரணதுங்க தலைமையில் இலங்கை வென்றது

    கடந்த அக்டோபர் 5 அன்று ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடர் தொடங்கியது. இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டித்தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டு விட்டது.

    குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அங்கு பல விவாதங்கள் நடத்தப்பட்டன. தற்போதைய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும், அதன் தலைவர் சில்வாவிற்கு எதிராகவும் இலங்கையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில், இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு விட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார். அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கும் வரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிக வாரியம் ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது. இந்த வாரியத்தில் ஓய்வு பெற்ற இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இடம் பெறுகின்றனர்.

    ரணதுங்க, 1996 வருடம் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன.
    • சீனாவின் தொடர் ஆதிக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இலங்கையின் கடல் வளங்களை ஆராய சீனா ஆராய்ச்சி கப்பலை அனுப்பி வைத்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சீனா தொடர்ந்து தனது அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையே இந்தியா மற்றும் அமெரிக்கா எழுப்பிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீன ஆய்வுக் கப்பலான 'ஷியான் 6' கடந்த 23-ந்தேதி கொழும்புவை வந்தடைந்தது. தனது இரண்டு நாள் ஆராய்ச்சியை இலங்கை கடற்கரையில் இன்று தொடங்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியிலும், இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) மற்றும் ருஹூனா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கொழும்பில் உள்ள வெளி விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே கடந்த 2020 டிசம்பரில் சீனாவின் கடல் சார் ஆராய்ச்சிக் கப்பல்களில் ஷியான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பல் சேர்க்கப்பட்டது. புவி மற்றும் இயற்பியல் ஆய்வில் கவனம் செலுத்தும் நாட்டின் முதல் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலாகக் கருதப்படும் இது சுமார் 80 நாட்களுக்கு கடலில் இயங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

    13 ஆராய்ச்சிக் குழுக்கள் 28 ஆராய்ச்சி திட்டங்களுடன் 12 ஆயிரம் கடல் மைல்கள் முழுவதும் பயணம் செய்து தனது ஆய்வு பணிகளை சீன கப்பல் செய்ய திட்டமிட்டுள்ளது.

    சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் பெய்ஜிங்கில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையிலும் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டது.

    கடந்த செப்டம்பரில், இந்தியாவின் முதல் உள் நாட்டில் கட்டப்பட்ட போர்க் கப்பலான 'ஐ.என்.எஸ். டெல்லி' இலங்கைக்கு நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டது. கடந்த வாரம், கொரிய கடற்படையின் ரோக்ஸ், குவாங் கேட்டோ தி கிரேட்' மற்றும் சமீபத்தில், ஜப்பான் கடல் சார் நவீன போர்க்கப்பல் இலங்கையின் வடகிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

    சீனக் கப்பல்களின் வருகை குறித்து இந்தியா பலமுறை கவலை தெரிவித்து வரும் நிலையில், வெளிநாட்டுக் கப்பல்களின் வருகைக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை பின்பற்றப்படும் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனாவின் தொடர் ஆதிக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இலங்கையின் கடல் வளங்களை ஆராய சீனா ஆராய்ச்சி கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு அளித்து வரும் நட்புறவில் விரிசலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது. 

    • அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு துவங்கி இருக்கிறது.
    • இலங்கை நாட்டிற்கு விசா எடுக்காமல் பயணம் செய்ய முடியும்.

    ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். சில நாடுகளில் விசா எடுப்பதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாகவும், சில நாடுகளில் இந்த வழிமுறைகள் மிகவும் கடுமையாகவும் இருக்கின்றன.

    அந்த வகையில், இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கு இந்தியர்கள் இனி விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் இந்தியர்கள் விசா எடுக்காமலேயே இலங்கைக்கு சென்றுவர முடியும். விசா இன்றி வெளிநாட்டவரை அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு சோதனை முறையில் துவங்கி இருக்கிறது.

    அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்தியர்கள் மட்டுமின்றி சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா என ஆறு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் இலங்கை நாட்டிற்கு விசா எடுக்காமல் பயணம் செய்ய முடியும். இலங்கை அமைச்சரவையில் ஒப்புதலை பெற்ற பிறகே, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக தெரிகிறது.

    இலங்கை அரசின் இந்த அறிவிப்பு காரணமாக அடுத்த ஐந்து மாத காலத்திற்கு இந்தியா உள்பட உலகின் ஏழு நாடுகளை சேர்ந்த குடிமக்கள், இலங்கைக்கு விசா எடுக்காமலேயே பயணம் செய்ய முடியும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகும், இந்த நடைமுறை அமலில் இருக்குமா என்ற கேள்விக்கு தற்போது வரை இந்த பதிலும் இல்லை.

    • இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது.
    • சீனக் கப்பலை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் தேதிகளை முதலில் அறிவிக்க வேண்டும் என இலங்கை உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவில் இருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன.

    கடந்த ஆகஸ்டு மாதம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத் தில் 2 நாட்கள் நங்கூரமிட்டு நிறுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், சீனாவின் மற்றொரு கப்பலான ஷின் யான்-6 இலங்கைக்கு வர உள்ளதாகவும், இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இலங்கையில் உள்ள ருஹுனு பல்கலைகழக நீரியியல் துறை கடல் சார்ந்த ஆய்வினை சீன கப்பல் உதவியுடன் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்காகவே சீன உளவு கப்பல் இலங்கை வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

    சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிகஅருகில் உள்ள இந்தியாவின் ஸ்ரீ ஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது.

    இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவி உள்ளது

    இந்த சூழலில் சீன கப்பலின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீன உளவு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    சீனக் கப்பலை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் தேதிகளை முதலில் அறிவிக்க வேண்டும் என இலங்கை உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    இந்நிலையில் சீன ஆராய்ச்சிக் கப்பலுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருந்த ருஹுனு பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் மற்றொரு பேராசிரியர் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் இருந்து ருஹுனு பல்கலைக்கழகம் விலகி உள்ளது.

    இதன் காரணமாக சீன உளவு கப்பல் இலங்கை வர வாய்ப்பு இல்லை எனவும், அரசு அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்றும் இலங்கை அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    ×