என் மலர்tooltip icon

    கால்பந்து

    • முதல் போட்டியில் கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    கொச்சி:

    ஐ.எஸ்.எல்.( இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து) போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணியும் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் கேரளா வீரர் அட்ரியன் லூனா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 82-வது நிமிடத்தில் அந்த அணியின் இவான் கல்யுஸ்னி 2-வது கோலை அடித்தார். பதிலுக்கு பெங்கால் அணியின் அலெக்ஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    89-வது நிமிடத்தில் கேரள வீரர் இவான் கல்யுஸ்னி மீண்டும் கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்கள் உலக கோப்பை போட்டிக்கான பிரசாரத்தை முன்வைத்தனர்,
    • போட்டியை நடத்தும் நாடு குறித்து 2024-ல் பிபா வாக்கெடுபபு நடத்தும்.

    நியோன்:

    உக்ரைனில் தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், போரின் பயங்கரத்தை முறியடிக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள மக்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு உக்ரைன் அரசு ஆயத்தமாகி வருகிறது. 2030ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியை ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்துவதற்கான கூட்டு முயற்சியை உக்ரைன் தொடங்கி உள்ளது.

    மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்களும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (உபா) தலைமையகத்தில் இணைந்து இதற்கான பிரச்சாரத்தை முன்வைத்தனர், இது விளையாட்டு உலகிற்கு அப்பால் மக்களை இணைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் ஆண்ட்ரி பாவெல்கோ, இது லட்சக்கணக்கான உக்ரைன் ரசிகர்களின் கனவு என்றார். மேலும் போரின் பயங்கரத்தில் இருந்து மீண்டவர்கள் அல்லது இனனமும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் கனவு என்று கூறிய அவர், விரைவில் உக்ரைன் கொடி பறக்கும் என்றார். உலககோப்பை போட்டியை நடத்தும் திட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்திருப்தாகவும் கூறினார்.

    மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பெயின்-போர்ச்சுகல் ஏலம், முன்னர் உபாவின் விருப்பமான போட்டியாளராக மாற்றப்பட்டது. போட்டியை நடத்தும் நாடு குறித்து 2024-ல் பிபா வாக்கெடுபபு நடத்தும். போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தால் உக்ரைனில் எத்தனை ஆட்டங்கள் நடைபெறும்? என்ற விவரம் ஏதும் வெளியாகவில்லை.

    • சென்னையின் அணி அக்டோபர் 10-ந் தேதி மோகன் பகானை எதிர்கொள்கிறது.
    • இந்த போட்டித் தொடரில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

    கொச்சி:

    11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. 

    தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.

    அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி நடக்கிறது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிக்கான அட்டவணையில் புதிதாக 'பிளே-ஆப்' சுற்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

    புள்ளி பட்டியலில் 3-வது முதல் 6-வது வரை இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இவற்றில் இருந்து மேலும் இரு 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

    • 'சி' பிரிவில் தமிழகம், ஒடிசா, டெல்லி அணிகள் இடம் பெற்றுள்ளன.
    • தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.

    தமிழக அஞ்சல் துறை சார்பில் 34-வது அகில இந்திய அஞ்சல் துறை கால்பந்து போட்டி இன்று முதல் 26-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தமிழகம், நடப்பு சாம்பியன் கேரளா, அசாம், டெல்லி, இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

    ௧௦ அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் தமிழக அணியுடன் ஒடிசா, டெல்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள பிற அணிகளுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்று காலை 8 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழகம்-ஒடிசா அணிகள் மோதுகின்றன. 

    • 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
    • இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    புதுடெல்லி:

    17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது.

    மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது.

    • உலக கோப்பை கால்பந்து போட்டியில் நம்பர் ஒன் அணியான பிரேசில் ஜி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
    • முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி ஆகியவை இ பிரிவில் இடம் பிடித்துள்ளன.

    தோஹா:

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

    ஏ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து

    பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து

    டி பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, ஆஸ்திரேலியா

    இ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஜப்பான், கோஸ்டாரிகா

    எப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    ஜி பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

    இந்நிலையில், உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன என பிபா தெரிவித்துள்ளது.

    • கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது.
    • காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.

    போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார்.

    இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கிறார். இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெய்னின், மஜோர்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது கார் மோதியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றது ஊழியர் தான் என்றும் ரொனால்டோ அல்ல என்றும் முதல்கட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன. மேலும் இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன

    • ஒலிம்பிக்கை போலவே உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
    • இதுவரை 21 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன.

    நியூயார்க்:

    ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    ஒலிம்பிக்கை போலவே உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 1930-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை.

    இதுவரை 21 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியை ஆசிய கண்டத்தில் உள்ள கத்தார் இந்த ஆண்டு நடத்துகிறது. நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கால்பந்து சம்மேனம் இன்று அறிவித்தது.

    அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கிறது. முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியை 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது.

    அமெரிக்காவில் 11 நகரங்களிலும், மெக்சிகோவில் 3 நகரங்களிலும், கனடாவில் 2 நகரங்களிலும் போட்டி நடக்கிறது.

    அமெரிக்காவில் போட்டி நடைபெறும் நகரங்கள் வருமாறு:-

    நியூயார்க் அல்லது நியூஜெர்சி, லாஸ்ஏஞ்சல்ஸ், டல்லாஸ், கனாஸ்சிட்டி, ஹூஸ்டன், அட்லாண்டா, பில்டெல்பியா, சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், மியாமி, சியாட்டில்.

    மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ சிட்டி, மான்ட்டெரி, குதலஜாரா ஆகிய இடங்களிலும், கனடாவில் வான்கூவர், டொரண்டோ ஆகிய நகரங்களிலும் நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா 2-வது முறையாக நடத்துகிறது. இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு நடந்தது. இதேபோல் மெக்சிகோவில் 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்று இருந்தது.

    2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்றுகின்றன. 16 நாடுகள் கூடுதலாக கலந்து கொள்கின்றன.

    • தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
    • மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்றது. தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி பெற்றது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.

    இதில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 14 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 தோல்வி, 4 டிராவுடன் 25 புள்ளிகள் பெற்றது.

    கோஸ்டாரிகா 6-வது முறையாகவும், தொடர்ந்து 3-வது முறையாகவும் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அப்பிரிவில் வடஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.

    • டி-பிரிவில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது.
    • ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்தியா தகுதி பெற்றது.

    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்  டி பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    இந்த தகுதி சுற்று போட்டியின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2 வது நிமிடத்தில் இந்திய அணியின் அன்வர் அலி ஒரு கோல் அடித்தார்.

    தொடர்ந்து 45 வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியின் 85வது நிமிடத்தில் மண்விர் சிங்கும், 93வது நிமிடத்தில் இஷான் பண்டிதாவும் கோல் அடித்தனர்.

    ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 29 ஆண்டுகள் கழித்து கால்பந்து போட்டியில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் டி-பிரிவு அணிகளில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்ததுடன் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது. 

    • ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு லாஸ் வேகாஸ் நகர கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் மேயோர்க்கா என்பவர் ரொனால்டோவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    2009ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் மேயோர்கா என்பவர், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ லாஸ்வேகாஸ் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் இதனை ரொனால்டோ மறுத்து வந்தார்.

    இந்த வழக்கு லாஸ் வேகாஸ் நகர கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரொனால்டோவுக்கு எதிரான சாட்சியங்கள் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்,

    • இந்திய அணி அடுத்ததாக ஹாங்காங் அணியுடன் மோதுகிறது
    • ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.

    கொல்கத்தா:

    ஆசிய கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டியின் 3வது சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

    போட்டியின் 83வது நிமிடத்தில் இந்திய கால்பந்து நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜுபைர் அமிரி தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் சம நிலை ஆனது.

    இதையடுத்து போட்டி நிறைவடைய சில நொடிகள் இருந்த போது இந்திய வீரர் சாஹல் அப்துல் சமத் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடுவதை இந்திய அணி உறுதி செய்துள்ளது. தகுதி சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நாளை மறுநாள் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.

    ×