என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மகேந்திர சிங் டோனி தனது ஓய்வு முடிவு குறித்து வெளியிடும்போது 19.29 நேரத்தை குறிப்பிட்டது குறித்து சிஎஸ்கே சிஇஓ விவரித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. ஐசிசி-யின் மூன்று டிராபிகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். 2015-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, நேற்று இந்தியாவின் 74-வது சுதந்திரன தினம் அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    அவர் தனது ஓய்வு அறிவிப்பில் ‘‘அதிகப்படியான உங்கள் அன்பிற்கும், கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு தெரிவித்ததற்கும் நன்றி எனத் தெரிவித்திருந்தார். 19.29 மணி நேரத்தில் இருந்து என்னை ஓய்வு பெற்றவராக கருதலாம்’’ என்று தெரிவித்தார்.

    கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த எம்எஸ் டோனிக்கு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என அனைத்து துறைகளிலும் இருந்து புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.

    ஆனால் இன்ஸ்டாகிராமில் அவர் ஏன் 19.29 நேரத்தை தேர்வு செய்தார் என்பது எல்லோருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி வி்ஸ்வநாதனுக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனிடம் இருந்து போன் கால் வந்த பின்னர்தான் 19.29 நேரம் வெளிவந்துள்ளது.

    மும்பை மிர்ரரில் டோனி ஓய்வு குறித்து எழுதியுள்ளன. இதுகுறித்து அறிந்த ஸ்ரீனிவாசன் உடனடியாக காசி விஸ்வநாதனிடம் போன் செய்து டோனி குறித்த வதந்தி உண்மையா? எனக் கேட்டுள்ளார்.

    தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் வீரர்கள் அறைக்குச் சென்று, டோனியிடம் ஸ்ரீனிவாசன் போனில் இருக்க இதுகுறித்து காசி விஸ்வநாதன் கேட்டுள்ளார். அப்போது ஆம் என எம்எஸ் டோனி கூறியுள்ளார்.

    எப்போது இந்த முடிவு எடுத்தீர்கள்? என்ற காசி விஸ்வநாதன் கேட்டுள்ளார். அப்போது டோனி, 19.29 மணிக்கு. இன்ஸ்டாகிமில் எனத் தெரிவித்துள்ளார்.

    டோனி இந்த நேரத்தில்தான் அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘பூமியின் தெற்குப்பகுதியின் பெரும்பாலான நாடுகளில் இந்த நேரத்தில்தான் சூரியன் மறையும். அதனால்தான் அவர் அந்த நேரத்தை தேர்வு செய்தார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

    இதுகுறித்து எம்.எஸ். டோனி தெரிவித்தால் மட்டுமே சரியான தெளிவு கிடைக்கும்.
    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெற்றது குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். டோனியின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஓய்வு பெற்ற டோனிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பை காணலாம்.

    அபிஷேக் பச்சன், மகேஷ் பாபு

    அபிஷேக் பச்சன்
    ஒரு சகாப்தத்தின் முடிவு. அனைத்து நினைவுகளுக்கும் நன்றி டோனி. உங்கள் அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள்.

    மகேஷ் பாபு
    2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நீங்கள் அடித்த அந்த சிக்சரை எப்படி மறக்க முடியும். பெருமையும், கண்களில் கண்ணீருமாய் வான்கடே மைதானத்தில் நின்றிருந்தேன்.  கிரிக்கெட் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது. வாழ்த்துக்கள் டோனி.

    வெங்கட் பிரபு
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் டோனி. இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி. அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி.

    தமன்
    அன்புள்ள டோனி, எங்கள் இதயங்களில் ஒருபோதும் ஓய்வு பெறாது இருப்பீர்கள். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நீங்கள் தான் எங்களுக்கு பிடித்தமான கேப்டன்.

    நிவின் பாலி

    நிவின் பாலி
    லெஜண்டுகளுக்கு ஓய்வு இல்லை. அழகான நினைவுகளுக்கு நன்றி! நீங்கள் என்றென்றும் கேப்டனாக இருப்பீர்கள். நன்றி டோனி.

    நயன்தாரா
    அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி டோனி. அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவர். ஒரு சிறந்த அணி வீரர். முழு இந்தியாவும் உங்களை நீல நிறத்தில் மிஸ் பண்ணும்.

    ஹரீஷ் கல்யாண் 
    நீங்கள் தந்த எல்லா நினைவுகளுக்கும் நன்றி சொன்னால் போதாது. என்றென்றும் கேப்டன் கூல் நீங்கள் தான். 

    வரலட்சுமி சரத்குமார்
    டோனி போன்ற ஒரு மனிதரைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல முடியும், கிரிக்கெட்டுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் ஒவ்வொரு மூச்சிலும் எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி. உங்களை போல் இன்னொருவர் இருக்க முடியாது. மேலும் எப்போதும் எங்கள் கேப்டனாக இருங்கள். லவ் யூ டோனி.

    ஜிவி பிரகாஷ், விஷ்ணு விஷால்

    ஜிவி பிரகாஷ்
    அன்பான கேப்டன் டோனிக்கு பிரியாவிடை. மிகவும் ஊக்கமளிக்கும் அணி வீரர் மற்றும் எனது மிகப்பெரிய உத்வேகம். நீல நிறத்தில் உங்களை மிஸ் பண்றேன்.

    விஷ்ணு விஷால்
    உலகெங்கிலும் உள்ள ஏராளமான ரசிகர்களை மகிழ்வித்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி டோனி. தொடர்ந்து ஊக்குவியுங்கள்.

    மோகன்லால்
    பிரியாவிடை கேப்டன். உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.
    கிரிக்கெட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் திகழ்ந்த டோனி, கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம்.
    ராஞ்சி:

    கிரிக்கெட் ரசிகர்களை ஏறத்தாழ 16 ஆண்டுகள் தன் அசாத்திய திறமைகளால் கட்டிப்போட்டவர்  இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டோனி. கிரிக்கெட்டை ரசிக்கும், விளையாடும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த டோனி, திடீரென நேற்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் டோனி பங்கேற்கவில்லை. அப்போதில் இருந்தே டோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் கொடி கட்டி பறந்தன. ஆனாலும், இந்திய அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

    எதற்குமே அலட்டிக்கொள்ளாமல் மிகவும் கூலாக (Cool) வலம் வரும் டோனி, ஓய்வு அறிவிப்பையும் எந்த முன் அறிவிப்பும், எந்த படோபடமும் இன்றி மிக சாதாரணமாக அறிவித்துவிட்டார். டோனியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து அவரது சாதனைகள் குறித்த பதிவுகள், உங்களை கிரிக்கெட் களத்தில் மிஸ் செய்கிறோம் என பல அடுக்கடுக்கான பதிவுகளை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களில்  டோனியின் ஆக்கிரமிப்பு நேற்று இரவு முதல் தற்போது வரை உள்ளது.

    எளிதில் அசைக்க முடியாத தோனியின்  5 சாதனைகள்
     
    கிரிக்கெட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் திகழ்ந்த டோனி, கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம். சாதனைகள் எப்போதும் முறியடிக்கக் கூடியவை என்றாலும் சில சாதனைகளை எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு நீண்ட காலம் சில சாதனைகள் அமைந்து விடும். அந்த வகையில் டோனியின் சாதனைகள் சிலவற்றை காண்போம்.

    ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன்

    இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே, அதாவது 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவுக்கு டோனி பெற்று தந்தார். அதன்பிறகு  4 ஆண்டுகள் கழித்து 2011 ஆம் ஆண்டில் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை உச்சி முகர்ந்ததற்கு டோனியின் சிறப்பான கேப்டன்ஷிப் திறமையும் ஒரு காரணமாகும். 2013- ஆம் ஆண்டு நடைபெற்ற மினி உலக கோப்பை தொடரிலும் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

    கேப்டனாக அதிக போட்டிகள்

    200 ஒருநாள் கிரிக்கெட், 60 டெஸ்ட் போட்டிகள் , 72 டி 20 போட்டிகள் என மொத்தம் 332 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனி கேப்டனாக இருந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் 324 சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

    எம்எஸ் டோனி


    இறுதிப்போட்டிகளில்  அதிக வெற்றியை ருசித்த கேப்டன் (ஒருநாள் கிரிக்கெட்)

    பல நாட்டு அணிகள் பங்கேற்ற 6 தொடர்களின் இறுதி போட்டியில் டோனி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். அவற்றில் இந்தியா 4 தொடர்களில் வெற்றியை ருசித்தது. டோனி கேப்டனாக 110 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். ரிக்கி பாண்டிங் கேப்டனாக 165 ஒருநாள் போட்டிகளில்  வெற்றியை பெற்றுள்ளார்.

    அதிக நாட் அவுட்

    டோனி 84 ஒருநாள் போட்டிகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நாட் அவுட் ஆக திகழ்ந்துள்ளார்.  தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஷான் பொல்லாக்கிற்கு (72 நாட் அவுட்)  அடுத்த இடத்தில் உள்ளார்.  தோனி நாட் அவுட் ஆக இருந்த 84 ஒருநாள் போட்டிகளில் 51 ஆட்டங்கள் இரண்டாவது பேட்டிங் செய்த போது அதாவது சேஷிங் செய்த போது இருந்த இன்னிங்ஸ்கள் ஆகும். டோனி இவற்றில் 47 ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.  வெறும் 2 போட்டிகள் மட்டுமே அணிதோல்வியை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

    சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்

    டோனி


    டோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதில் வல்லவர். விக்கெட் கீப்பிங்கில் தனி பாதையை உருவாக்கியவர் என்றே சொல்லலாம். பல போட்டிகளில் டோனி மின்னல் வேகத்தில் செய்த ஸ்டம்பிங்குகள் ரன் அவுட்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்தியாவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்த சாதனைக்கும் சொந்தக்காரர் டோனியே. 350 போட்டிகளில் 123 ஸ்டம்பிங்குகளை டோனி செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டம்பிங்குகளை செய்த ஒரே விக்கெட் கீப்பர் தோனி மட்டுமே. விக்கெட் கீப்பிங்கில் அதிக விக்கெட்டுகளை (கேட்ச், ஸ்டம்பிங்) எடுத்த வீரர்கள் பட்டியலில் பவுச்சர், கில்கிரிஸ்ட் அடுத்தபடியாக 3 ஆம் இடத்தில் உள்ளார்.
    நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அளிக்கும் என இந்திய கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். 

    இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி, நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக, விராட் கோலி  வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்தாக வேண்டும். ஆனால், மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

    இந்த நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும்.

    நான் மனிதனை பார்ப்பேன். சக வீரராக தோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும். அவருக்கு தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
    உலக கிரிக்கெட் இனி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை இழக்கும் என்று டோனிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார். 

    இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உலக கிரிக்கெட் இனி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை இழக்கும் என்று டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “இந்திய கிரிக்கெட்டில் தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்புக்காக, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அவரது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது கூலான மனோபாவம் அனல் பறக்கும் பல போட்டிகளை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றி உள்ளது. அவரது தலைமையின் கீழ் இந்தியா இரண்டு முறை வெவ்வேறு வடிவங்களில் உலக சாம்பியன்களாக முடிசூட்டப்பட்டது.

    டோனி தனது தனித்துவமான பாணி கிரிக்கெட்டின் மூலம் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். அடுத்து வரும் காலங்களில் இந்திய கிரிக்கெட்டை வலுப்படுத்த அவர் தொடர்ந்து பங்களிப்பார் என்று நம்புகிறேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

    உலக கிரிக்கெட் இனி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை இழக்கும். மகி! (மகேந்திரசிங் டோனி)” என்று பதிவிட்டுள்ளார்.
    2011 இல் நாம் உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
    நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மறக்க முடியாத சுதந்திர தினமாகும்.  ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தல தோனியும்,  சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் அறிவித்துள்ள செய்தி.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி இன்று மாலை அறிவித்துள்ளார்.  மேலும் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.  இன்று மாலை 7.29 மணியில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

    2004ல் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் அறிமுகமானார் தோனி.  39 வயதான மகேந்திரசிங் தோனி , 350 ஒரு நாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.  350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 10,773 ரன்கள் சேர்த்துள்ளார்.  98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும் சேர்த்துள்ளார்.  

    இதற்கிடையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தல தோனியை தொடர்ந்து சின்ன தல சுரேஷ் ரெய்னாவும்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   

    முழு மன நிறைவுடன் தோனி வழியை தேர்ந்தெடுப்பதாக இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.   சுரேஷ் ரெய்னா 226 ஒருநாள் போட்டிகள், 78 டி20 மற்றும் 19 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  226 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 5617 ரன்களை சேர்த்துள்ளார்.  

    இந்நிலையில் 2011ல் உலக கோப்பையை வென்றது சிறந்த தருணம் என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    தோனியின் ஓய்வு குறித்து அவர் கூறியதாவது. 2011 இல் நாம் உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் எனவும், உலகக் கோப்பை வென்றது என் வாழ்வில் மறக்க முடியாதது என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.  மேலும் இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனிக்கு சச்சின் டெண்டுல்கர்  புகழாரம் சூட்டியுள்ளார்.

    வாழ்க்கையின் 2வது அத்தியாயத்தில் சிறப்பாக செயல்பட தோனிக்கு தனது வாழ்த்துகளை  சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணி வீரர்கள் தல தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெய்னா இருவரும் வெளியிட்டுள்ள இந்த ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 
    இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கடந்த காலத்தில் மேற்கொண்ட சாதனைகள் மற்றும் பெற்ற விருதுகள் பற்றிய விவரங்களை காணலாம்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கடந்த 2004ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்காக முதன்முறையாக விளையாட தொடங்கினார்.

    அதன்பின்னர் கடந்த 2005ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக விளையாடினார்.

    ராகுல் டிராவிட் தலைமையில் செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 2007ம் ஆண்டு தோனி கேப்டனானார்.  9 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும், 6 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டி கேப்டனாகவும் அவர் செயல்பட்டு அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

    இவரது தலைமையிலான அணி, கடந்த 2007ம் ஆண்டில் ஐ.சி.சி. உலக கோப்பை 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  பின்னர் கடந்த 2010 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளிலும், கடந்த 2011ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றது.

    2013ம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டியிலும் டோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.

    இதனால் ஐ.சி.சி.யின் 3 நிலைகளிலான (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 20 ஓவர் உலக கோப்பை) போட்டிகளிலும் வென்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    கடந்த 2011ம் ஆண்டு லெப்டினென்ட் கர்னல் என்ற ராணுவத்தின் உயரிய அந்தஸ்து இவருக்கு வழங்கப்பட்டது.  கபில்தேவுக்கு பின்னர் இந்த பெருமையை பெற்ற 2வது கிரிக்கெட் வீரர் தோனியாவார்.

    இந்திய அணியின் சாதனை கேப்டனாக விளங்கிய எம்.எஸ். தோனி கடந்த 2015ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.  இதன்பின்னர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு நாள்  போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினார்.

    சிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, எம்.எஸ். தோனி த அன்டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் இந்தி படம் ஒன்று தயாரானது.  இதன் 2ம் பாகம் உருவாக திட்டமிடப்பட்ட நிலையில், அந்த படத்தின் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார்.  இதனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

    கடந்த 2019ம் ஆண்டிலேயே அவர் ஓய்வு பெற போகிறார் என தகவல்கள் வெளிவந்தன.  ஆனாலும், இதற்கு அவரது மனைவி சாக்சி மறுப்பு தெரிவித்து டுவிட்டரில் கண்டனமும் வெளியிட்டார்.  இதனால் அந்த தகவல் புரளியானது.

    இந்தியாவில் விளையாட்டில் சாதனை புரிந்தோருக்காக வழங்கப்படும் மிக உயரிய கேல் ரத்னா விருது 2007-2008ம் ஆண்டுக்காக தோனிக்கு வழங்கப்பட்டது.  இதன்பின்னர் கடந்த 2009ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2018ம் ஆண்டில் பத்ம பூஷண் விரும் வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார்.

    இதுதவிர கடந்த 2011ம் ஆண்டு மான்ட்போர்டு பல்கலைகக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

    இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளார்
    கிரிக்கெட் வரலாற்றில் 4 உலக சாதனைகள் படைத்த ஒரே கேப்டன் இந்திய அணியின் வீரர் எம்.எஸ்.தோனி.
    2004ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் எம் எஸ் டோனி. மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்தார்.

    ஐசிசியின் மூன்று உலகக் கோப்பையை வாங்கிய ஒரே கேப்டன் என்ற சாதனையை பெற்றவர் எம்எஸ் தோனி. 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையையும் பெற்றவர்.

    2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன் டிராபியை வென்றார். இதன் மூலம் 3 ஐசிசி கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.  

    எம்எஸ் தோனி 332 சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாக பதவி வகித்தார். இதன் மூலம் அதிக சர்வதேச போட்டிக்கு கேப்டனாக இருந்து சாதனை படைத்தார்.

    இவர் 200 ஒருநாள் போட்டிகளுக்கும், 60 டெஸ்ட் போட்டிகளுக்கும் 72 டி20 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்,
    ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 2வது இடத்தில் உள்ளார்.  

    2 அணிகளுக்கு மேல் விளையாடிய தொடர்களில் 6 முறை அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதில் நான்கு முறை இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  இது ஒரு சாதனையாகும்.  

    தோனி தலைமையில் இந்தியா 110 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா 165 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.   தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    ஒருநாள் போட்டிகளில் அதிக முறை நாட் அவுட்டாக இருந்தவர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.  84 முறை நாட் அவுட்டாக இருந்து சாதனை படைத்துள்ளார். இதில்  51 முறை சேசிங் செய்யும் போது நாட் அவுட்டாக  இருந்துள்ளார்.   இதில் 2 முறை மட்டுமே தோல்வியை கண்டுள்ளது.   
    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தல தோனி அறிவிப்பை தொடர்ந்து சின்ன தல சுரேஷ் ரெய்னா தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    சுதந்திர தினமான நேற்றைய தினம் இரவு 7.29 மணிக்கு டோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருவரும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்காக சென்னையில் ஒரே ஓட்டலில் தங்கியுள்ளனர். ‘உங்களுடன் (டோனி) இணைந்து விளையாடிய நாட்கள் அருமையானது. முழு மனதுடன் இந்த பயணத்தில் உங்களது முடிவை (ஓய்வு) பின்பற்றுகிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை. ஜெய் ஹிந்த்’ என்று ரெய்னா தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் கூறியுள்ளார்.

    33 வயதான சுரேஷ் ரெய்னா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 2005-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆடினார். அதன் பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 226 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 5 சதம் உள்பட 5,615 ரன்கள் சேர்த்துள்ளார். 18 டெஸ்ட் மற்றும் 78 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

    சர்வதேச 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்குரியவர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகினாலும், ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து விளையாடுவார்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி அறிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டை சாதனையின் உச்சத்துக்கு அழைத்து சென்ற கேப்டன்களில் ஒருவர், மகேந்திர சிங் டோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஒரு வீரராக அணியில் நீடித்தார். அதிரடியாக ஆடுவதில் வல்லவரான டோனியின் ஆட்டத்திறன் சமீப காலமாக வெகுவாக தளர்ந்தது. ஆனாலும் விக்கெட் கீப்பிங்கில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்று கூறும் அளவுக்கு மிகச்சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. தனது எதிர்கால திட்டம் குறித்து வாய்திறக்காமல் மவுனம் காத்து வந்தார். அவர் ஐ.பி.எல். போட்டியில் ரன் குவித்து, அதன் மூலம் இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்வார் என்று நிறைய கணிப்புகள் உலா வந்தன. அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையுடன் அவர் விடைபெறுவார் என்பது தான் நிபுணர்களின் ஆரூடமாக இருந்தது.

    இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி அதிரடியாக அறிவித்தார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் முழுக்கு போட்டுள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இப்போதைக்கு இந்தியாவில் எந்த சர்வதேச போட்டிகளும் நடக்க வாய்ப்பில்லை. இதனால் ரசிகர்களின் முன்னிலையில் பிரிவுபசார போட்டியில் ஆட முடியாது என்பதை உணர்ந்து ஓய்வுக்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

    ஆனாலும் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட திட்டமிட்டு உள்ளார். சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 39 வயதான டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். அப்போது இந்திய அணிக்கு பேட்டிங்குடன் கூடிய விக்கெட் கீப்பர் தேவையாக இருந்தது.

    தனது அதிரடியான பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்த டோனி சில ஆண்டுகளிலேயே இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். அவரது தலைமையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பையையும் உச்சிமுகர்ந்தது. இந்த மூன்று கோப்பைகளையும் வென்றுத்தந்த ஒரே கேப்டன் டோனி தான். அத்துடன் அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி டெஸ்டில் நம்பர் ஒன் அரியணையிலும் ஏறியது. இலங்கைக்கு எதிரான 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 91 ரன்கள் திரட்டி ஆட்டநாயகனாக ஜொலித்தது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முத்தாய்ப்பாக அமைந்தது.

    களத்தில் யுக்திகளை வகுப்பதில் சாதுர்யமாக செயல்படக்கூடிய டோனி, களத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார். கோபத்தை வெளிக்காட்டமாட்டார். அதனால் தான் அவரை ‘கூல் கேப்டன்’ என்று வர்ணிப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பிறகு ‘தல’ என்றும் அவரை ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.

    டோனி இதுவரை இந்திய அணிக்காக 90 டெஸ்டுகளில் விளையாடி 6 சதம் உள்பட 4,876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 10 சதம், 73 அரைசதம் உள்பட 10,773 ரன்களும் (சராசரி 50.57) குவித்துள்ளார். இதில் 229 சிக்சரும் அடங்கும். 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் விளாசியது ஒரு நாள் போட்டியில் அவரது அதிகபட்சமாகும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 98 ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 1,617 ரன்கள் எடுத்துள்ளார்.
    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் உடல்நலம் மோசமடைந்துள்ள நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் (வயது 73).  40 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ள சேத்தன், சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடியுள்ளார்.  இதேபோன்று மராட்டியம் மற்றும் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.  உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் மந்திரியாகவும் உள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் 12ந்தேதி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்தது.  இதனால் அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அவருக்கு பல உறுப்புகள் பாதிப்படைந்து உள்ள நிலையில், அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த இலங்கை கிரிக்கெட் போர்டு ஆர்வம் தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அதிக அளவில் பாதித்துள்ளன. இந்தியாவில் மார்ச் மாதத்திற்குப்பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்தியா சகஜ நிலையை அடைய நீண்ட மாதங்கள் ஆகலாம்.

    அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலககோப்பையை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையை மாற்று இடமாக தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இங்கிலாந்து அணி அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், நாங்கள் தொடரை நடத்த தயாராக இருக்கிறோம் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு ஆர்வம் தெரிவித்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து அணி இலங்கை சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்றிருந்தது, கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் இங்கிலாந்து தொடரை ரத்து செய்து உடனடியாக சொந்த நாடு திரும்பியது.

    இந்த டெஸ்ட் தொடர் அடுத்த வருடம் தொடக்கத்தில் மீண்டும் நடக்க இருக்கிறது. அப்போது தொடர்ந்து இங்கிலாந்து இலங்கையில் தங்கி இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் என இலங்கை கிரிக்கெட் போர்டு கருதுகிறது.

    ஆனால் இந்திய அணிக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையிடம் இருந்து அப்படி ஒரு பரிந்துரை வரவில்லை என்றார்.
    ×