என் மலர்
விளையாட்டு
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302- ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள், ஜடேஜா 66 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதையடுத்து 303-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய 303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. பும்ராவுடன் டி நடராஜன் பந்து வீச்சை தொடங்கினார். ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட்டை தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றி உள்ளார்.
தனது 3-ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் விக்கெட்டை வீழ்த்தி நடராஜன் அசத்தியுள்ளார். 11 ஓவரில் 56 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக இருக்கிறார்.
ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமீபத்தில் 5-வது முறையாக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து 20 ஓவர் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் காம்பீர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 போட்டியில் தோற்றதால் வீராட் கோலியை காம்பீர் மீண்டும் விமர்சனம் செய்தார். அவர் அணியை வழிநடத்தும் விதம் சரியில்லை என்று பாய்ந்து இருந்தார்.
இந்த நிலையில் காம்பீருக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கேப்டன் பதவியால் கோலி எந்தவித அழுத்தத்திலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு அந்த பொறுப்பு சுமையில்லை. கோலிக்கு சவால்கள் பிடிக்கும். அவர் ஒரு அணி தலைவர். முன்னாள் நின்று வழிநடத்தி மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்.
தலைமை பொறுப்பு கோலியின் ஆட்டத்தை பாதிக்கவில்லை. ஏனென்றால் ஒருவரால் மட்டுமே நன்றாக விளையாடி ஆட்டத்தை வெல்ல முடியாது.
2-வது போட்டியில் ராகுல் நன்றாக ஆடினார். ஆனால் மற்ற வீரர்களும் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். அப்போதுதான் கோலிக்கு இருக்கும் சுமை குறைந்து, அவரால் திறந்த மனதுடன் விளையாட முடியும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. தொடக்கம் முதலே தாக்குதல் பாணியில் இறங்கிய மும்பை அணி 20-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஹூகோ அட்னன் போமோஸ் பின்கள வீரர்கள் மற்றும் கோல் கீப்பரை ஏமாற்றி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் ஆடம் லி பான்ட்ரே அருமையாக கோல் வளையத்துக்குள் திணித்தார்.
48-வது நிமிடத்தில் ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி ஆடம் லி பான்ட்ரே மீண்டும் கோல் அடித்தார். தொடர்ந்து 58-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் மும்பை அணி வீரர் ஹூகோ அட்னன் போமோஸ் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை சக வீரர் ஹெர்னன் டேனியல் கோலாக மாற்றினார். முடிவில் மும்பை அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. ஈஸ்ட் பெங்கால் அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.
‘பார்முலா1’ கார் பந்தயத்தில் 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவரான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பக்ரைன் கிராண்ட்பிரி பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். நேற்று முன்தினம் காலை எழுந்ததும் ஹாமில்டன் தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அவருக்கு 2 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான வைரஸ் தொற்று அறிகுறியுடன் இருக்கும் அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் (பாதிப்பில்லை) என்று முடிவு வந்தால் தான் மீண்டும் போட்டியில் பங்கேற்க முடியும். எனவே அவர் இந்த வாரம் இறுதியில் பக்ரைனில் நடைபெறும் சகிர் கிராண்ட்பிரி பந்தயத்தில் விளையாட முடியாது. இந்த சீசனின் கடைசி சுற்று பந்தயமான அபுதாபி கிராண்ட்பிரி போட்டி வருகிற 13-ந் தேதி நடக்கிறது. அதிலும் 35 வயதான ஹாமில்டன் கலந்து கொள்வது கடினம் தான் என்று தெரிகிறது. ஹாமில்டனுக்கு பதிலாக களம் காணும் மாற்று வீரர் யார்? என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த 6 அணிகள் பங்கேற்கும் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) என்ற பெயரில் 20 ஓவர் லீக் போட்டி 2022-ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா ஆகியோரை உரிமையாளராக கொண்ட தி நைட் ரைடர்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. போட்டியை நடத்தும் அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் நைட் ரைடர்ஸ், போட்டியின் வளர்ச்சிக்கும், அதை முன்னெடுத்து செல்லவும் பல்வேறு ஆலோசனைகளையும், திட்டங்களையும் வகுத்து கொடுக்க உள்ளது. அத்துடன் நைட் ரைடர்ஸ் நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கி நிர்வகிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நைட் ரைடர்ஸ் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், ‘அமெரிக்காவில் அடுத்த சில ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த 6 கிரிக்கெட் மைதானங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். சர்வதேச போட்டிகளையும், உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளையும் அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்பதே குறிக்கோளாகும். இங்கு விளையாட்டுக்குரிய நல்லசூழல் நிலவுகிறது’ என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
முதல் இரு ஆட்டங்களை பொறுத்தவரை இந்திய அணி 300 ரன்களை கடந்து பேட்டிங்கில் ஓரளவு நன்றாகத் தான் செயல்பட்டது. ஆனால் பந்து வீச்சு படுமோசமாக அமைந்தது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமியின் பந்து வீச்சு எடுபடவில்லை. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 2 ஆட்டங்களையும் சேர்த்து 160 ரன்களை வாரி வழங்கியுள்ளார். கான்பெர்ரா மைதானமும் பேட்டிங்குக்கு உகந்தது தான். அதனால் பவுலர்கள் சரியான அளவில் பந்து வீசி நெருக்கடி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். முகமது ஷமி, பும்ரா, நவ்தீப் சைனி ஆகியோரில் இருவருக்கு ஓய்வு அளித்து விட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் டி.நடராஜன், ஷர்துல் தாகூர் இடம் பெறலாம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 71 ‘யார்க்கர்’ பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்த தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. தொடரை இழந்து விட்டாலும் அடுத்து வரும் தொடரை நம்பிக்கையுடனும், கூடுதல் உத்வேகத்துடனும் எதிர்கொள்வதற்கு இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி காண்பது முக்கியமாகும்.
இன்னும் 23 ரன்கள் எடுத்தால் 12 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க காத்திருக்கும் கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஒருசேர பேட்டிங்கில் ஜொலித்தால், எதிரணிக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெறலாம்.
ஆஸ்திரேலிய அணியில் இரு ஆட்டங்களிலும் ஸ்டீவன் சுமித் 62 பந்துகளில் (105 மற்றும் 104 ரன்) சதம் விளாசினார். கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் ‘சரவெடி’ பேட்டிங்கை தொடுத்தார். இதனால் தான் அவர்கள் 374 மற்றும் 389 ரன்கள் வீதம் இமாலய ஸ்கோரை எட்ட முடிந்தது. எனவே இவர்களை சீக்கிரம் காலி செய்தால் தான் இந்திய அணியின் கை ஓங்கும். இரு ஆட்டத்திலும் அரைசதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக குறுகிய வடிவிலான போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவு தான். அவருக்கு பதிலாக மேத்யூ வேட், டார்சி ஷார்ட் ஆகியோரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தடுமாற்றம் கண்டுள்ளார். இரு ஆட்டத்தையும் சேர்த்து மொத்தம் 18 ஓவர்களில் 147 ரன்களை வழங்கி வள்ளல் பவுலராக மாறிப்போனார். ஆனால் இது பற்றி கவலைப்படாத ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘ஸ்டார்க்கின் மிகச்சிறந்த பந்து வீச்சு இன்னும் வெளிப்படவில்லை. கடந்த 8-9 ஆண்டுகளாக அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதனால் மற்றவர்களை காட்டிலும் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். தொடக்கத்தில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்யவே அவர் முயற்சிப்பார். ஆனால் பெரிய ஸ்கோரை விரட்டும் எதிரணிக்கு அதுவும் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணிக்கு பந்து வீசும் போது உங்களது பந்து வீச்சை அடித்துவிரட்டத் தான் பார்ப்பார்கள். எனவே சற்று வித்தியாசமாக ஏதாவது செய்ய முடியுமா என்று அவரிடம் பேசுவேன். மற்றபடி அவரது பந்து வீச்சு குறித்து பதற்றமடைய எதுவும் இல்லை’ என்றார்.
அதிகமான ஷாட்பிட்ச் பந்துகளை போட்டுத் தான் ஆஸ்திரேலிய பவுலர்கள் இந்தியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய பேட்ஸ்மேன்களும் இந்த வகை பந்தில் ஒரு நேரம் நன்றாக அடித்து விட்டு, இன்னொரு சமயம் சிக்கிக்கொள்கிறார்கள். இன்றைய மோதலிலும் அவர்கள் அதே யுக்தியுடன் தான் வருவார்கள். அந்த சவாலை மகிழ்ச்சியுடன் சந்திக்க தயாராக இருப்பதாகவும், நாங்கள் சரிவில் இருந்து மீண்டு வலுவாக திரும்பும் மனஉறுதியுடன் இருப்பதாகவும் நேற்று நிருபர்களை சந்தித்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.
எது எப்படி என்றாலும் உள்ளூர் சூழல் ஆஸ்திரேலியாவுக்கே சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பேட் செய்ய விரும்பும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா அல்லது டி.நடராஜன், நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், மேத்யூ வேட் அல்லது டார்சி ஷார்ட், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், மோசஸ் ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, சீன் அப்போட், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.
இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனிடென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
சிட்னி போன்று கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானமும் முழுமையாக பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்கக்கூடியது தான். இங்கு இதுவரை நடந்துள்ள 9 ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணியும், கடைசி 7 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய அணி இங்கு ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் (2008-ம் ஆண்டில் இலங்கை, 2016-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) தோல்வி அடைந்துள்ளது.
11 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2015-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் (215 ரன்) நொறுக்கியதும் அடங்கும். 2015-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்தது இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். கடைசி 4 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகள் 345 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளன.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா அச்சத்தால் 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் இன்னும் சில நிலையற்ற தன்மை நிலவுகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் இருக்கிறது. எனவே இந்த போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் தெளிவான முடிவு வருகிற ஏப்ரல் மாதத்தில் தான் தெரியவரும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு சீராக இல்லாததால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியினருக்கு விசா வழங்குவது குறித்து ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே இரு நாட்டு தொடர் நடத்துவதற்குரிய சூழ்நிலை ஏற்றதாக இல்லை. இதனால் தான் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான உத்தரவாதத்தை கேட்கிறோம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இசான் மணியும், நானும் பொறுப்பில் இருக்கும் வரை பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிப்பார். அவர் எங்களுடைய சிறந்த பேட்ஸ்மேன், இளம் வீரர் மற்றும் மனரீதியாக வலுவானவர். இதனை எல்லாம் அறிந்து தான் நாங்கள் அவரை கேப்டனாக நியமித்தோம். அத்துடன் மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்க அவரும் விருப்பம் தெரிவித்தார். அவர் நீண்ட காலம் இந்த பதவியில் நீடிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.






