என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய அணிக்காக ஆடியது நம்ப முடியாத, புதுமையான அனுபவமாக இருந்தது என தமிழக வீரர் நடராஜன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    கான்பெர்ரா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வானார். நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்ததுடன் தன் மீதான எதிர்பார்ப்பையும் மெய்யாக்கினார்.

    சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த 29 வயதான நடராஜன் ஏழ்மையை வென்று தனது விடாமுயற்சியால் இந்திய அணியில் இடம் பிடித்ததை தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சர்வதேச முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டினார்கள்.

    இந்த நிலையில் நடராஜன் நேற்று தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய அணிக்காக ஆடியது நம்ப முடியாத, புதுமையான அனுபவமாக இருந்தது. எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. கூடுதல் சவால்களை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது. அப்போது அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம்தேதி கூடுகிறது. இந்தப் பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ள 23 அம்சங்கள் குறித்து அனைத்து மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கும் 21 நாட்களுக்கு முன்பே பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பொதுக்குழுவில் மிக முக்கியமாக ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகளைச் சேர்ப்பது குறித்து ஒப்புதல் பெறப்படுகிறது. தற்போது 8 அணிகள் ஐபிஎல் தொடரில் இருக்கும் அணியில் இது 10 அணிகளாக உயர்த்தப்பட உள்ளது.

    அதானி குழுமம், மற்றும் சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயிட்ன்ஸ்) குழுமத்தினர் என இரு புதிய அணிகளுக்கு ஆர்வமாக இருக்கின்றனர். இரு அணிகளுமே அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

    ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ சார்பில் பிரதிநிதி தேர்வு செய்யப்பட வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கான பிரதிநிதியாக பிசிசிஐ செயலாளரும் அமித் ஷா மகனுமான ஜெய் ஷா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    இந்த அணியின் தேர்வுக் குழுவுக்கு நிர்வாகிகள் இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் கிரிக்கெட் குழுவுக்கும், நிலைக்குழுவுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவில்லை. இவற்றுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    இந்திய அணி 2021-ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டுப் பயணங்கள், 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் பேசப்படலாம்.

    பிசிசிஐ பொதுக்குழுவில் பேசப்பட உள்ள அம்சங்களாகக் குறிப்பிடப்படுபவை:

    பிசிசிஐ துணைத் தலைவர் தேர்வு, ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்கு இரு பிரதிநிதிகள், ஆண்டு பட்ஜெட், குறைதீர்ப்பு அதிகாரி, ஒழுங்கு அதிகாரி நியமனம் ஒப்புதல், நடுவர்கள் குழு உருவாக்குதல், கிரிக்கெட் குழு மற்றும் நிலைக்குழு உருவாக்குதல், ஐசிசிக்கான பிரதிநிகள் நியமனம், ஐபிஎல் புதிய இரு அணிகளுக்கு ஒப்புதல், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது, 2021-ல் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி நடத்துவது உள்ளிட்டவை பேசப்பட உள்ளன.
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 27-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

    இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. 6-ந்தேதி 2-வது ஒருநாள் போட்டியும், 9-ந்தேதி கடைசி போட்டியும் நடக்கிறது.

    இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டு பிளிஸ்சிஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரபாடா காயம் காரணமாக விலகியுள்ளார்.

    ஐபிஎல் உள்ளிட்டு ஏராளமான போட்டிகளில் விளையாடியதால் டு பிளிஸ்சிஸ்க்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது என தென்ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.
    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனிப்பட்ட அவசரநிலை காரணமாக லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து விலகியுள்ளார்.
    லங்கா பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது வருகிறது. இந்தத் தொடர் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. முதன்முறையாக நடக்கும் இந்த லீக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இடம் பிடித்திருந்தார். ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

    விமானத்தை தவற விட்டதால் தொடக்க போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் விமானம் பிடித்து இலங்கை சென்றார்.

    இந்த நிலையில் தற்போது தனிப்பட்ட அவசரநிலை காரணமாக சொந்த நாடு திரும்பியுள்ளார். இவர் காலே கிலாடியேட்டர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இதுவரை மூன்று போட்டிகளில் காலே அணி விளையாடியுள்ளது. மூன்றிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் எடுத்து முத்திரை பதித்த தமிழக வீரர் நடராஜன் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேக்கப்பந்து வீச்சாளர் நடராஜன் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே இரண்டு முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது, சேலம் அருகே தாரமங்கலத்தை அடுத்த சின்னப்பம்பட்டி தான் நடராஜனின் சொந்த ஊர். தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கரம்பாக கிடக்கும் வயல்வெளி பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடுவார்கள். நடராஜனும் அவ்வாறு விளையாடியவர்தான். கல்லூரியில் படிக்கும்போது அவர் வகுப்பறையில் இருந்த நேரத்தைவிட கிரிக்கெட் விளையாட்டுக்காக மைதானத்தில் இருந்த நேரம் அதிகம்.

    இவரின் தந்தை தங்கராஜ் ரெயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை பார்த்தவர். தாயார் சாந்தா கூலி தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் நடராஜன். கிரிக்கெட்டில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற வேட்கை நடராஜனுக்கு இருந்தது.

    சிறிய வயதில் இருந்தே வறுமையின் பிடியில் சிக்கி, பல போராட்டங்களை சந்தித்த இவர், பென்சில், பேனா போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டுள்ளார். 5 வயதில் டென்னிஸ் பந்தின் மூலம் கிரக்கெட் விளையாட தொடங்கிய நடராஜன், தனது 20-வது வயதில் தான், கிரிக்கெட் பந்தை முதன்முறையாக பார்க்கிறார்.

    கடினமாக பயிற்சி செய்து, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய அவரை ஜெயப்பிரகாஷ் என்பவர்தான் சென்னை கிரிக்கெட் கிளப்பில் சேர்த்துவிட்டார். கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் டிவிஷ்னல் மேட்சுக்கு தேர்வானார். பின்னர் சென்னை கிரிக்கெட் அணியின் கீழ்நிலைப் பிரிவில் சேர்ந்தார்.

    இந்த சமயங்களில் அவர் காயத்தால் பலமுறை அவதிப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு திறமையை நிரூபிக்க துவங்கினார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2017-ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை 3 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்து 2019ம் ஆண்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நகர்ந்தார்.

    இந்த சீசனில் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறியதால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யார்க்கர் கிங்’ என்னும் பட்டத்தைச் சொந்தமாக்கி, ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.

    நவ்தீப் சைனி முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால், ஒருநாள் தொடரிலும் மாற்று வீரராக நடராஜன் பெயர் இடம்பெற்றது. இதற்கான அறிவிப்பை, முதல் ஒருநாள் போட்டி தொடங்கும்முன் பிசிசிஐ அறிவித்தது. இருப்பினும். நவ்தீப் சைனி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றார், இரண்டாவது போட்டியில் 7 ஓவர்களுக்கு 70 ரன்கள் வாரி வழங்கியதால் நடராஜன் அணியில் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    3-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய நடராஜன் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மார்னஸ் லபுஷேன், ஆஸ்டன் ஆகர் ஆகியோரை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவரது விளையாட்டை அவரது சொந்த ஊர் மக்கள் டிவியில் பார்த்து ரசித்தனர். எப்போதும் கிரிக்கெட்டே பார்க்காத அவரது ஊர் மக்கள் தனது சொந்த ஊர் பையன் விளையாடுகிறான் என்று டிவியில் கிரிக்கெட்டை பார்த்தனர். முதல் போட்டியிலேயே 2 விக்கெட் எடுத்ததால் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

    அவரது தாய் சாந்தா, தங்கை தமிழரசி, உறவினர்கள் அனைவரும் நடராஜனின் பந்து வீச்சையும், கிரிக்கெட்டையும் டிவியில் பார்த்து ரசித்தனர். சர்வதேச போட்டியில் விளையாடும் மகனை டிவியில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக தாய் சாந்தா தெரிவித்தார். அவரது தங்கை தமிழரசி மற்றும் உறவினர்கள் நடராஜன் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை படைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

    நடராஜனின் சாதனைப் பயணம் மேலும் தொடர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நாளை முதல் தொடங்க உள்ள டி-20 தொடரிலும் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 243 ரன்கள் எடுத்துள்ளனர்.

    ஹேமில்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் 5 விக்கெட்டிலும், 2-வது ஆட்டத்தில் 72 ரன் வித்தியாசத்திலும் நியூசிலாந்து வெற்றிபெற்றது. 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் ஹேமில்டனில் இன்று தொடங்கியது.

    வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டாம் லாதமும், வில்யங்கும் களம் இறங்கினார்கள்.

    யங் 5 ரன்னில் கேப்ரியல் பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு லாதமுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை விளாசி தள்ளி ரன்களை சேர்த்தது.

    இருவரும் சிறப்பாக ஆடி அரை சதத்தை தொட்டனர். டாம் லாதம் 86 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை கேமர்ரோச் கைப்பற்றினார். அப்போது வில்லியம்சன் 63 ரன்னில் இருந்தார். அடுத்து முன்னாள் கேப்டன் ரோஸ்டெய்லர் களம் வந்தார்.

    இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 243 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளனர். கேப்டன் வில்லியம்சன் 97 ரன்களுடனும் டெய்லர் 31 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.

    கான்பெரா:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்று 20 ஓவர் தொடரின் முதல் போட்டி கான்பெராவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரையாவது கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கடைசி ஒருநாள் போட்டியில் பெற்ற ஆறுதல் வெற்றி இந்திய வீரர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. இந்திய அணி கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துடன் 20 ஓவர் தொடரில் மோதியது.

    இதில் 5 போட்டியிலும் வென்று அந்த அணியை அதன் சொந்த மண்ணில் ‘ஒயிட்வாஷ்’ செய்தது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஓவர் போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 2 போட்டியில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. 3 போட்டி கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    தற்போதுள்ள இந்திய அணி பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறது. ஹர்த்திக் பாண்ட்யா சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்த தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    இதேபோல கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், தவான், ஸ்ரேயாஷ் அய்யர், ஜடேஜா ஆகியோரும் 20 ஓவர் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீரர் டி.நடராஜன், சுழற்பந்து வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம்பெற்று உள்ளனர்.

    இதில் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தினார். தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே அவர் சாதித்தார். 20 ஓவர் போட்டியிலும் அவர் ஆதிக்கத்தை செலுத்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனென்றால் நடராஜன் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். யார்க்கர் பந்து வீசுவதில் அவர் வல்லவர். இதேபோல வாஷிங்டன் சுந்தரும் நேர்த்தியுடன் பந்துவீசக் கூடியவர்.

    இதேபோல பும்ரா, முகமது ‌ஷமி, தீபக் சாஹர், யசுவேந்திர சாஹல் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர்.

    ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பேட்டிங், பந்து வீச்சில் அந்த அணி சம பலத்துடன் உள்ளது.

    கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், கும்மின்ஸ், ஹாசல்வுட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். வார்னே விளையாடாதது அந்த அணிக்கு பாதிப்பே.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவி‌ஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    மிகவும் எளிமையான பின்புலத்தில் இருந்த வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பர்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்களை குவித்தது.

    அதற்கு பெரிய பங்களிப்பை கொடுத்தார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. 76 பந்துகளில் 92 ரன்களை குவித்தார் அவர். இந்த போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை பாண்ட்யா பெற்றார்.

    ஆட்டநாயகன் விருதினை பெற்ற பின் பேசிய பாண்ட்யா, “இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியின் பந்து வீச்சாளர் நடராஜன் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர். அவரது கதை அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன். ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது ஆட்டத்தில் வெற்றி பெற அதிக கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என்றார். 
    பரபரப்பான கட்டத்தில் நேர்த்தியான யார்க்கர் வீசி மேக்ஸ்வெல்லை பும்ரா வெளியேற்ற, இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது.
    ஆஸ்திரேலியா - இந்தியா மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். 

    சிட்னி போன்று கான்பெர்ரா மைதானமும் முழுமையாக பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பதால் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் இன்று அறிமுகமானார். இதேபோல் ஷர்துல் தாகூரும் ஆடும் லெவனில் இடம்பெற்றார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதேபோல் அவருக்கு இணையாக அதிரடி காட்டிய ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 150 ரன்கள் குவித்தது இந்தியாவுக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக இருந்தது

    இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் - லாபஸ்சேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லாபஸ்சேன்-ஐ க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் டி நடராஜன். இதனால் 6 ஓவருக்குள் ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித் ஷர்துல் தாகூர் பந்தில் வீழ்ந்தார்.

    முன்னணி பேட்ஸ்மேன்கள் இருவர் வெளியேற ஆஸ்திரேலியா திணற ஆரம்பித்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடினார். அவர் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹென்ரிக்ஸ் 22, க்ரீன் 21 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் ஆஸ்திரேலியா தோல்வியை நோக்கிச் சென்றது. ஆனால் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக அலேக்ஸ் ஹேரியும் ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா பக்கம் ஆட்டம் சென்றது. அலேக்ஸ் கேரி 38 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் இந்தியா சற்று ஆறுதல் அடைந்தது.

    43-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது, 42 பந்தில் 57 ரன்கள் தேவைப்பட்டது. 44-வது ஓவரை நடராஜன் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி 33 பந்தில் அரைசதம் அடித்தார் மேக்ஸ்வெல். நடராஜன் இந்த ஓவரில மேலும் இரண்டு பவுண்டரிகள் கொடுக்க ஆஸ்திரேலியா 18 ரன்கள் சேர்த்தது.

    இதனால் 36 பந்தில் 39 ரன்களே தேவைப்பட்டது. 45-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை மேக்ஸ்வெல் சந்தித்தார். பும்ரா புயல் வேகத்தில் யார்க்கராக வீசிய பந்தை மேக்ஸ்வெல்லால் கணிக்க முடியவில்லை. இதனால் ஸ்டம்பை பறிகொடுத்தார். மேக்ஸ்வெல் 38 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது 33 பந்தில் 35 ரன்கள் தேவைப்பட்டது.

    அதன்பின் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. முந்தைய ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்த நடராஜன், 46-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 47-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி 3 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை நடராஜன் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 4 ரன்களே விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் 49-வது ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் பும்ரா விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் தொடரை வென்றது. இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது.

    இந்திய அணி சார்பில் பும்ரா 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், நடராஜன் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன் தாவித் மலன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.

    இந்த மூன்று போட்டிகளிலும் 19, 55 மற்றம் 99 என ரன்கள் விளாசி இங்கிலாந்து பேட்ஸ்மேன் தாவித் மலன் முத்திரை பதித்தார். ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி ஐந்து போட்டிகளில் நான்கு அரைசதங்கள் விளாசியுள்ளார். மேலும், நியூசிலாந்துக்கு எதிராக 103 ரன்கள் அடித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐசிசி-யின் டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் முதல் இடத்தில் இருந்தார். தற்போது தாவித் மலன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    தாவித் மலன் 915 புள்ளிகள் பெற்றுள்ளார். இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆரோன் பிஞ்ச் (2018 ஜூலை) 900 புள்ளிகள் பெற்றதுதான் சாதனையை இருந்தது. தற்போது தாவித் மலன் 915 புள்ளிகள் பெற்றுள்ளார். பாபர் அசாம் 44 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.
    இந்திய அணி 152 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்த நிலையில் 6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா- ஜடேஜா ஜோடி 150 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    விராட் கோலி அரைசதம் அடித்தாலும் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 32 ஓவர்களில் 152 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    ஹர்திக் பாண்ட்யா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 6-வது விக்கெட்டுக்கு அல்லது லோ ஆர்டரில் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
    இந்திய அணி கேப்டனும், ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரருமான விராட் கோலிக்கு இந்த காலண்டர் வருடத்தில் ஒரு சதம் கூட கிடைக்கவில்லை.
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என சர்வதேச அரங்கில் 70 சதங்கள் அடித்துள்ளார். இதில் ஒருநாள் போட்டியில் மட்டும் 43 சதங்கள் விளாசியுள்ளார்.

    அவருக்கு இந்த வருடம் சரியாக அமையவில்லை. 9 இன்னிங்சில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    விராட் கோலி 2008-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அந்த வருடம் 5 இன்னிங்சில் விளையாடி சதம் அடிக்கவில்லை. அதன்பின் 2019 வரை அவர் சதம் அடிக்காமல் இருந்ததில்லை.

    2009-ம் ஆண்டு முதல் சதத்தை பதிவு செய்தார். 8 இன்னிங்சில் ஒருசதம் கிடைத்தது. அதன்பின் 2010-ல் 3, 2011-ல் 4, 2012-ல் 5, 2013-ல் 4, 2014-ல் 4, 2015-ல் 2, 2016-ல் 3, 2017-ல் 6, 2018-ல் 6, 2019-ல் 5 சதங்கள் அடித்துள்ளார். அதன்பின் தற்போது சதம் அடிக்கவில்லை.

    2008: 0 (5 inngs)
    2009: 1 (8)
    2010: 3 (24)
    2011: 4 (34)
    2012: 5 (17)
    2013: 4 (30)
    2014: 4 (20)
    2015: 2 (20)
    2016: 3 (10)
    2017: 6 (26)
    2018: 6 (14)
    2019: 5 (25)
    2020: 0 (9)
    ×