என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜடேஜாவுக்குப் பதிலாக கன்கசன் சப்ஸ்டிடியூட் வீரராக களம் இறங்கிய சாஹல் 3 விக்கெட் வீழ்த்தியதுடன் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 161 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி 23 பந்தில் 44 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

    கடைசி நேரத்தில் ஸ்டார்க் பந்தை ஜடேஜாவின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ஜடேஜா நிலைகுலைந்தார். இந்தியா இன்னிங்ஸ் முடிந்த பின் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சாஹல் பீல்டிங் செய்த வந்தார்.

    அப்போதுதான் ஜடேஜாவிற்கு சற்று மயக்கம் ஏற்படுவது போல் இருந்ததால், கன்கசன் சப்ஸ்டிடியூட் ஆக சாஹல் வந்துள்ளது. தெரிந்தது. ஒருநாள் போட்டியில் மோசமாக விளையாடியதால் கடைசி போட்டியில் இருநதும், இன்றைய போட்டியிலும் கழற்றி விடப்பட்டார். மாற்று வீரராக களம் இறங்கி அசத்தியுள்ளார்.

    இன்றைய போட்டியில் 2-வது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு சற்று முன்புதான் விளையாட இருக்கிறேன் என்பது தெரியவந்தது என்று சாஹல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘நாங்கள் பேட்டிங் செய்த பின்னர், விளையாட போகிறேன் என்று எனக்கு தெரிய வந்தது சிறந்த உணர்வு. நெருக்கடி ஏதும் இல்லை. நான் விளையாடுவேன் என்பது 10 முதல் 15 நிமிடத்திற்குள்தான் எனக்க தெரியவந்தது. 

    ஒருநாள் கிரிக்கெட் போட்டி செய்தி சில தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் அடிக்க சற்று கடினமாக இருந்தது. நான் என்னுடைய திட்டப்படி பந்து வீசினேன்’’ என்றார்.
    பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள முஜீப் உர் ஹர்மானுக்க கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

    முஜீப் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட உள்ளார். ஆஸ்திரேலியா சென்றதும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்தபின், ஒன்றிரண்டு போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    அறிமுகமான ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்திய நடராஜன், இன்று அறிமுகமான டி20-யில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கான்பெர்ராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் விளையாடிய இந்தியா 161 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவால் 150 ரன்களே அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவை 150 ரன்னில் கட்டுப்படுத்த சாஹல், டி நடராஜன் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சே முக்கிய காரணம்.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிய நடராஜன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இன்றைய டி20 அறிமுக போட்டியிலும் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேக்ஸ்வெல்லை 2 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆக்கி வெளியேற்றினார். மேலும் ஆர்கி ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்கையும் வெளியேற்றினார்.

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் விராட் கோலி கூறுகையில் ‘‘ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டதால் இன்னும் சற்று மயக்கமாக இருக்கிறார். கன்கசன் மாற்று வீரர் என்பது விசித்திரமான விசயம். இன்று அது எங்களுக்கு சாதகமாக இருந்தது. அடுத்த முறை இதுபோன்று சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்காது. சாஹல் களம் இறங்கி சிறப்பாக பந்து வீசினார். ஆடுகளம் அவருக்கு ஏற்றபடி சாதகமாக இருந்தது.

    அவர்களின் சிறப்பான தொடக்கத்தை பார்க்கும்போது, தோற்கடித்து விடுவார்கள் என்று நினைத்தோம். டி20 எப்படி வேண்டுமென்றாலும் செல்லலாம். நாங்கள் போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுத்தோம். ஆனால் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. நடராஜனை பார்த்தால், அவரால் மிகப்பெரிய அளவில் மேம்பட முடியும் போல் தோன்றுகிறார். ஹர்திக் பாண்ட்யா கேட்ச் திருப்புமுனை’’ என்றார்.
    கான்பெர்ராவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார்.

    கேஎல் ராகுல் 51 ரன்களும், கடைசியில் களம் இறங்கிய ஜடேஜா 23 பந்தில் 44 ரன்களும் விளாச இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

    பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது, ஆர்கி ஷார்ட், ஆரோன் பிங்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக ஜடேஜாவுக்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய சாஹல் அசத்தினார்.

    ஆஸ்திரேலியா 7.4 ஓவரில் 56 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. ஆரோன் பிஞ்ச் 26 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை சாஹல் வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்மித்தையும் (12) சாஹல் வெளியேற்றினார்.

    4-வது வீரராக களம் இறங்கிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல்-ஐ 2 ரன்கள் எடுத்த நிலையில், நடராஜான் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேற்றினார். அப்போது ஆஸ்திரேலியா 10.3 ஓவரில் 75 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆஸ்திரேலியா தடம் புரண்டது.

    ஹென்ரிக்ஸ் 30 ரன்களும், ஆர்கி ஷார்ட் 34 ரன்களும், மிட்செல் ஸ்வெப்சன் 12 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சாஹல் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், டி நடராஜன் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும்  வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டதால் மாற்று வீரராக சாஹல் களம் இறங்கியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சு அதிரடி வீரர் ஜடேஜா கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஸ்டார்க் வீசிய பந்து ஜடேஜாவின் தலைப்பகுதியில் பலமாக தாக்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜடேஜா 44 ரன்கள் விளாசினார்.

    டாக்டர்கள் பரிசோதித்து அவருக்கு மாற்று வீரர் களம் இறக்கலாம் எனக் கூறினர். இதனால் ஜடேஜாவுக்குப் பதிலாக சாஹல் பந்து வீசுகிறார். ஜடேஜாவுக்குப் பதில் சாஹல் பந்து வீச ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதாக இருந்தது. இரு அணி வீரர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளனர்.

    இன்றைய போட்டிக்கு தயாராகுவதற்கு முன் கடைசி கட்ட கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது, அப்போது தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இன்றைய போட்டி 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2-வது போட்டி 7-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதியும் நடக்கிறது.
    கேஎல் ராகுல் அரைசதம் அடித்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்  நடராஜன் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு டி20 அறிமுக தொப்பியை ஜஸ்பிரித் பும்ரா வழங்கினார்.

    இந்திய அணியின் கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, கேப்டன் கோலி 9 ரன்கள் மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் பந்துகளை அடித்து ஆடிய கே.எல். ராகுல் 37 பந்தில் அரைசதம் அடித்தார்.

    சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆனால் அவர் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேஎல் ராகுல் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுது்து வந்த மணிஷ் பாண்டே 2 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 16 ரன்னிலும் வெளியேறினார்.

    கேஎல் ராகுல்

    இதனால் இந்தியாவின் ஸ்கோர் அப்படியே குறைய ஆரம்பித்தது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கும்போது இந்தியா 11.1 ஓவரில் 86 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 16.5 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது.

    கடைசி நேரத்தில் ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 பந்தில் 47 ரன்கள் விளாச, இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்துள்ளது.
    கான்பெர்ராவில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ஷிகர் தவான் விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.
    கான்பெர்ரா:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. 

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த இந்திய அணி கான்பெர்ராவில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்த வெற்றி இந்தியாவின் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த உற்சாகத்துடன் இந்திய வீரர்கள் 20 ஓவர் போட்டியில் களமிறங்கி உள்ளனர்.

    இந்திய அணியில் தமிழக வீரர்  நடராஜன் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு டி20 அறிமுக தொப்பியை ஜஸ்பிரித் பும்ரா வழங்கினார். 

    இந்திய அணியின் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். தவான் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, கேப்டன் கோலி 9 ரன்கள் மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் பந்துகளை அடித்து ஆடிய கே.எல்.ராகுல் அரை சதத்தை நெருங்கினார். 
    ஹாமில்டனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    ஹாமில்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஹாமில்டனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நியூசிலாந்து தொடக்க வீரர் யங் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டாம் லாதம் - கேப்டன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. டாம் லாதம் 86 ரன்னில் ஆட்டம் இழந்தார். வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 78 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் ஆட்டம் இழக்காமல் 97 ரன்னுடனும், டெய்லர் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெய்லர் 38 ரன்னிலும், அடுத்து வந்த நிக்கோலஸ் 7 ரன்னிலும், பிளன்டெல் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    ஆனாலும் வில்லியம்சன் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜேமிசன் உறுதுணையாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார். இது அவரது 3-வது இரட்டை சதம் ஆகும். அவர் 251 ரன்னில் ஆட்டம் இழந்தார். இது இன்னிங்சில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    நியூசிலாந்து அணி 145 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜேமிசன் 51 ரன்களுடனும், டிம்சவுத்தி 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச், கேப்ரியல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்து இருந்தது. கேம்பல் 22 ரன்னுடனும், பிராத்வெயிட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியும் பெங்களூரு எப்.சி. அணியும் மோதுகின்றனர்.

    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. இன்று இரவு நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.

    சென்னை அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா பெற்றுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் சென்னையின் எப்.சி. அணி உள்ளது. சென்னை அணியில் தாபா, கோன் கால்வஸ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    பெங்களூரு அணி தான் விளையாடிய 2 ஆட்டத்திலும் டிராவே செய்துள்ளது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் இதுவரை 7 முறை சந்தித்துள்ளன. இதில் 2 அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவானது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. ஏ.டி.கே.மோகன் பகான் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த அணி 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

    நடராஜன் திறமையை பார்த்து 2017-ம் ஆண்டு ஐ.பி.எல்.லில் பஞ்சாப் அணிக்கு ஏலம் எடுத்ததை ஷேவாக் நினைவு கூர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதில் அவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

    சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் யார்க்கர் பந்துவீச்சில் அசத்தியதால் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    2017-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டி.நடராஜனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. அப்போது பஞ்சாப் அணிக்கு ஆலோசகராக வீரேந்திர ஷேவாக் இருந்தார்.

    டி.நடராஜனை ஏலம் எடுத்தது குறித்து ஷேவாக் தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் நடராஜனை பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உள்ளூர் போட்டிகளில் விளையாடாத ஒரு வீரரை தேர்வு செய்தது குறித்து ஒவ்வொருவரும் கேள்வி கேட்டனர்.

    இவ்வளவு பெரிய தொகைக்கு நடராஜனை ஏன் ஏலம் எடுத்தீர்கள் என்று கேட்டனர். நான் பணத்தை பற்றி கவலைப்படவில்லை. அவரிடம் திறமை இருக்கிறது. எங்கள் அணியில் சில தமிழக வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் நடராஜன் நல்ல பந்து வீச்சாளர், சரியான யார்க்கர்களை வீசுவார் என்று தெரிவித்தனர். நான் அவரது பந்துவீச்சு வீடியோக்களை பார்த்தேன். பின்னர் ஏலத்தின் போது அவரை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    ஏனென்றால் அப்போது எங்களிடம் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசும் வீரர் இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டு நடராஜன் காயம் அடைந்ததால் பல போட்டிகளில் விளையாட முடியவில்லை.

    ஆனால் விளையாடிய ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். மற்ற ஆட்டங்களில் தோல்வி அடைந்தோம். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடராஜனுக்கு 20 ஓவர் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவருக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

    என்ன நடந்தாலும் நல்லது. நடராஜனுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் இங்கிருந்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மெஸ்சியுடன் இணைந்து நான் மிகவும் உற்சாகமாக விளையாடி இருக்கிறேன். அது போன்று மீண்டும் அவருடன் இணைந்து ஆட ஆசைப்படுகிறேன் என நெய்மார் கூறியுள்ளார்.
    பாரீஸ்:

    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்தில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்த ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த நெய்மாரிடம், அர்ஜென்டினா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி பி.எஸ்.ஜி. கிளப்பில் இணையலாம் என்ற தகவல் தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த 28 வயதான நெய்மார், ‘மெஸ்சியுடன் இணைந்து நான் மிகவும் உற்சாகமாக விளையாடி இருக்கிறேன். அது போன்று மீண்டும் அவருடன் இணைந்து ஆட ஆசைப்படுகிறேன். அவர் இங்கு (பி.எஸ்.ஜி. அணி) வந்து எனது இடத்தில் விளையாட முடியும். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருடன் கைகோர்த்து அடுத்த ஆண்டு விளையாட விரும்புகிறேன். நாங்கள் இதை செய்தாக வேண்டும்’ என்றார்.

    33 வயதான மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். நெய்மாரும் பார்சிலோனாவுக்காக 4 ஆண்டுகள் விளையாடி விட்டு பிறகு பி.எஸ்.ஜி. கிளப்புக்கு தாவிவிட்டார். அதே சமயம் பார்சிலோனா அணிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளையும், விமர்சனங்களையும் சந்தித்த மெஸ்சி, சில மாதங்களுக்கு முன்பு அந்த அணியை விட்டு உடனடியாக விலக விரும்பினார். ஆனால் இந்த சீசனில் அவரது ஒப்பந்தம் இருப்பதால் பெரிய தொகை கொடுத்து தான் வெளியேற வேண்டிய சூழல் நிலவியது. இதையடுத்து வேறுவழியின்றி இந்த சீசனில் பார்சிலோனா கிளப்பில் நீடிக்கும் மெஸ்சி, அடுத்த ஆண்டு நெய்மார் ஆடும் பி.எஸ்.ஜி. கிளப்புக்கு மாறிவிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
    ×