search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை விளாசும் ஜடேஜா
    X
    பந்தை விளாசும் ஜடேஜா

    ஜடேஜா, பாண்ட்யா அதிரடி ஆட்டம்- ஆஸ்திரேலியாவுக்கு 303 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.
    கான்பெர்ரா:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.
     
    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் இன்று அறிமுகமானார். இதேபோல் ஷர்துல் தாகூரும் ஆடும் லெவனில் இடம்பெற்றார்.

    சிட்னி போன்று கான்பெர்ரா மைதானமும் முழுமையாக பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பதால் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதேபோல் அவருக்கு இணையாக அதிரடி காட்டிய ஜடேஜா, 50 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் லபுசாங்கே 7 ரன்கள் எடுத்த நிலையில் நடராஜனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். நடராஜன் சர்வதேச போட்டிகளில் பெறும் முதல் விக்கெட் இதுவாகும். அதன்பின்னர் ஆரோன் பிஞ்ச், ஸ்மித் ஜோடி நிதானமாக ஆடியது.
    Next Story
    ×