என் மலர்
விளையாட்டு
துபாய்:
20 ஓவர் போட்டிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. டாப் 10 பேட்டிங் வரிசையில் 2 இந்திய வீரர்களே இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி கேப்டன் வீராட் கோலி, தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
லோகேஷ் ராகுல் 816 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். வீராட் கோலிஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த மலான் முதல் இடத்திலும் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 2-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் வரிசையில் டாப் 10-ல் எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை.
பந்து வீச்சு தர வரிசையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத்கான், முஜ்பூர் ரகுமான் முதல் 2 இடங்களில் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஆதில் ரஷித் 3-வது இடத்தில் உள்ளார்.
அகமதாபாத்:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.இ.) 89-வது வருடாந்திர கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.
தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்த ஜதின் பரஞ்சே (மேற்கு மண்டலம்), தேவங்காந்தி (கிழக்கு), சரண்தீப் சிங் (வடக்கு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்துள்ளது.
இதையொட்டி இன்று நடைபெறும் கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டத்தில் 3 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யலாம்.
புதிய தேர்வு குழு உறுப்பினர்களுக்கான இறுதி பட்டியலில் 11 பேர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் வேகப்பந்து வீரர் அஜீத் அகர்கர், அபய் குருவில்லா, நயன் மோங்கியா, (மேற்கு மண்டலம்), கேப்டன் சர்மா, மனிந்தர்சிங், விஜய் தகியா, அஜய் ரத்னா, நிகில் சோப்ரா (வடக்கு), எஸ்.எஸ்.தாஸ், மொகத்தா, ரன்தீப் போஸ் (கிழக்கு) ஆகியோர் இதற்கான போட்டியில் உள்ளனர்.
தேர்வு குழுவின் புதிய தலைவராக அஜீத் அகர்கர் தேர்வு பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
தற்போது தேர்வு குழு தலைவராக இருக்கும் சுனில் ஜோஷி 15 டெஸ்டில்தான் ஆடி உள்ளார். அகர்கர் 26 போட்டி மற்றும் 191 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார்.
இதனால் அகர்கர் தேர்வு குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படலாம். அவர் தலைவராக வாய்ப்பு இருக்கிறது.
2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் மேலும் 2 அணிகளை சேர்ப்பது குறித்தும் கிரிக்கெட் வாரிய செயலாளர் அமித்ஷாவுக்கு புதிய பதவி வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
2021-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. இதில் ஐ.சி.சி. அமைப்புக்கு வரிவிலக்கு அளிக்க கோரி மத்திய அரசிடம் பி.சி.சி.ஐ. கேட்டு இருந்தது. அந்தக்காலக்கெடு முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்து கொண்டு முன்னாள் கேப்டனான கங்குலி பல்வேறு விளம்பர படங்களில் நடிக்கிறார். அவர் மீது எழுந்து இருக்கும் இரட்டை ஆதாயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்படும்.
இந்திய அணி 2021-ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணங்கள், 20 ஓவர் உலக கோப்பை, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் (26-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் 5 மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியுள்ளார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், எஞ்சிய 3 டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் ரகானே கேப்டன் பொறுப்பை வகிப்பார். விராட் கோலி இடத்தில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மோசமான ஆட்டம் காரணமாக தொடக்க வீரர் பிரித்விஷா, விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்படலாம். அவர்களுக்கான இடத்தில் சுப்மன்கில், ரிஷப்பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதனால் விகாரி நீக்கப்பட்டு அவர் இடத்தில் ஆல் ரவுண்டரான ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் டெஸ்டில் காயமடைந்தார். இதனால் அவரது இடத்தில் நவ்தீப் சைனி அல்லது முகமது சிராஜ் இடம்பெறலாம்.
தொடக்க வீரராக மயங்க் அகர்வாலுடன் லோகேஷ் ராகுல் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன்கில் 6-வது வரிசையில் விளையாடுவார்.






ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் வல்லாடோலிட்டை வீழ்த்தி 7-வது வெற்றியை சுவைத்தது. 65-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவருமான லயோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி அடித்த 644-வது (749 ஆட்டம்) கோல் இதுவாகும். இதன் மூலம் ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார். பீலே, பிரேசிலைச் சேர்ந்த சான்டோஸ் கிளப்புக்காக மட்டும் 643 கோல்கள் (656 ஆட்டம்) 1956-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடித்திருந்தார். அவரது 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பார்சிலோனா கிளப்புக்காக கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வரும் 33 வயதான லயோனல் மெஸ்சிகூறுகையில், ‘நான் கால்பந்து விளையாடத் தொடங்கிய போது எந்த ஒரு சாதனையையும் தகர்ப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் பிலேவின் சாதனையை கடப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இத்தனை ஆண்டுகள் எனக்கு பக்கபலமாக இருந்த அணியின் சக வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமாதாபாத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய அம்சமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. தற்போது ஐ.பி.எல்.ல் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கு தொடர்ந்து மவுசு அதிகரித்து வருவதால் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.ஜி. உள்பட பல நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
அடுத்த ஆண்டு (2021) ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டினாலும், புதிய அணிகளை டெண்டர் மூலம் முடிவு செய்வது, வீரர்கள் ஏலம், புதிய அணிகள் போட்டிக்கு தயாராகுவது ஆகியவற்றுக்கு போதிய கால அவகாசம் இல்லாததாலும், ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வருவதாலும், 2022-ம் ஆண்டு முதல் புதிய அணிகளை சேர்க்க முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டிகளை இந்தியாவில் நடத்துகையில் அதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. விடுத்து இருக்கும் காலக்கெடு குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. காலியாக இருந்த துணை தலைவர் பதவிக்கு ராஜீவ் சுக்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கும், ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் தலைவராக பிரிஜேஷ் பட்டேல் தொடருவதற்கும் அங்கீகாரம் அளிக்கப்படும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக யாரை பங்கேற்க வைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு வாரிய செயலாளர் ஜெய் ஷாவின் பெயர் முன்மொழியப்படும் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்கான 3 புதிய தேர்வாளர்களை தேர்வு செய்வதற்கு கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைப்பது, நடுவர்கள் கமிட்டி, டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால போட்டி தொடர்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஸ்பான்சர் நிறுவனத்துக்கு போட்டியாக விளங்கும் நிறுவனத்தின் விளம்பர தூதராக கங்குலி இருப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆலோசனை செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


சென்னை:
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டுக்கான போட்டித் தொடர் வருகிற ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டித் தொடருக்கான தமிழ்நாடு அணி இன்று அறிவிக்கப்படுகிறது.தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை கேப்டனாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் கே.விக்னேஷ் கொரோனா பரிசோதனையை கடந்துள்ளதால் அணியில் இடம் பெறுவார்.
மேலும் 3 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் கிறிஸ்ட் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளரான அவர் முதுகு வலி காரணமாக நியூசிலாந்தில் ஆபரேஷன் செய்து குணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 4 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டது.
2-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு கோலி நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி வீராட் கோலி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக கோலி, அணி வீரர்களுடன் ஆலோசனை நடத்தி பேசி உள்ளார். அப்போது உத்வேகத்துடன் விளையாடுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்.
இதுகுறித்து அணி நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, “வீராட் கோலிஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். அதற்கு முன்பாக அவர் அனைத்து வீரர்களுடன் பேசினார்.
அவர்களுக்கு நம்பிக்கையை உயர்த்துவதோடு நேர்மாறாக இருக்க யோசனைகளை வழங்கினார். கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்கி விட்டு, ஆடுகளத்தில் வீரர்கள் தங்களை வெளிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா சிட்னி நகரில் கொரோனா நெறிமுறை காரணமாக அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது.
ரோகித் சர்மா வருகிற ஜனவரி 3-ந் தேதி தனது பயிற்சியை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வதுடெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ந் தேதி, 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் 15-ந் தேதி பிரிஸ்பேனிலும் தொடங்குகிறது.






