search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் தேர்வு குழுவின் புதிய தலைவர் குறித்து முடிவு - அஜித் அகர்கருக்கு வாய்ப்பு

    கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் தேர்வு குழுவின் புதிய தலைவராக முன்னாள் வேகப்பந்து வீரர் அஜீத் அகர்கர் தேர்வு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அகமதாபாத்:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.இ.) 89-வது வருடாந்திர கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.

    தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்த ஜதின் பரஞ்சே (மேற்கு மண்டலம்), தேவங்காந்தி (கிழக்கு), சரண்தீப் சிங் (வடக்கு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்துள்ளது.

    இதையொட்டி இன்று நடைபெறும் கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டத்தில் 3 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யலாம்.

    புதிய தேர்வு குழு உறுப்பினர்களுக்கான இறுதி பட்டியலில் 11 பேர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் வேகப்பந்து வீரர் அஜீத் அகர்கர், அபய் குருவில்லா, நயன் மோங்கியா, (மேற்கு மண்டலம்), கேப்டன் சர்மா, மனிந்தர்சிங், விஜய் தகியா, அஜய் ரத்னா, நிகில் சோப்ரா (வடக்கு), எஸ்.எஸ்.தாஸ், மொகத்தா, ரன்தீப் போஸ் (கிழக்கு) ஆகியோர் இதற்கான போட்டியில் உள்ளனர்.

    தேர்வு குழுவின் புதிய தலைவராக அஜீத் அகர்கர் தேர்வு பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

    தற்போது தேர்வு குழு தலைவராக இருக்கும் சுனில் ஜோஷி 15 டெஸ்டில்தான் ஆடி உள்ளார். அகர்கர் 26 போட்டி மற்றும் 191 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார்.

    இதனால் அகர்கர் தேர்வு குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படலாம். அவர் தலைவராக வாய்ப்பு இருக்கிறது.

    2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் மேலும் 2 அணிகளை சேர்ப்பது குறித்தும் கிரிக்கெட் வாரிய செயலாளர் அமித்ஷாவுக்கு புதிய பதவி வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    2021-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. இதில் ஐ.சி.சி. அமைப்புக்கு வரிவிலக்கு அளிக்க கோரி மத்திய அரசிடம் பி.சி.சி.ஐ. கேட்டு இருந்தது. அந்தக்காலக்கெடு முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்து கொண்டு முன்னாள் கேப்டனான கங்குலி பல்வேறு விளம்பர படங்களில் நடிக்கிறார். அவர் மீது எழுந்து இருக்கும் இரட்டை ஆதாயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்படும்.

    இந்திய அணி 2021-ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணங்கள், 20 ஓவர் உலக கோப்பை, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    Next Story
    ×