என் மலர்
விளையாட்டு
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கடந்த 29-ந் தேதி நடந்த சென்னையின் எப்.சி.-மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’வில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் ரபெல் கிரிவெல்லாரோவிடம் இருந்து பந்தை பறிக்க முயன்ற போது, எதிரணி வீரர் பிரனாய் ஹால்டெர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில் கிரிவெல்லாரோ இடது கணுக்காலில் காயம் அடைந்து வெளியேறினார். இதனால் அவர் அடுத்த ஆட்டத்தில் ஆடவில்லை.
இந்த நிலையில் அவரது காயத்தின் தன்மையை ஆய்வு செய்த அணியின் டாக்டர்கள் குணமடைய குறைந்தபட்சம் 2 மாதம் பிடிக்கும் என்று தெரிவித்ததை அடுத்து அவர் இந்த போட்டி தொடரில் இருந்து நேற்று விலகினார். பிரேசிலை சேர்ந்த 31 வயது நடுகள வீரரான கிரிவெல்லாரோ உடனடியாக நாடு திரும்புகிறார். இந்த சீசனில் ஒரு கோல் அடித்து இருந்த சிறந்த வீரரான கிரிவெல்லாரோவின் விலகல் சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் பங்கேற்க 1,270 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர்கள் அடுத்த வார இறுதியில் வர உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தங்குவதற்கு மெல்போர்னில் ஓட்டல் அறைகள் பற்றாக்குறையாக இருப்பதால் 50 பேரை அடிலெய்டில் தனிமைப்படுத்த போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), நட்சத்திர வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) ஆகியோரும் அடங்குவர். உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் வீரர்கள் தங்களது அறையில் இருந்து 5 மணி நேரம் மட்டும் பயிற்சிக்காக வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இவர்கள் அடிலெய்டில் வருகிற 29-ந்தேதி நடக்கும் கண்காட்சி டென்னிஸ் போட்டியிலும் விளையாட உள்ளனர்.
12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் கர்நாடகம் உள்பட 38 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன் லீக் ஆட்டங்கள் மும்பை, வதோதரா, இந்தூர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு ஆகிய 6 இடங்களில் அரங்கேறுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். அத்துடன் ‘எலைட்’ பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணிகளில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறுகிறது.
தமிழக அணி ‘எலைட் பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவினருக்கான லீக் ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. 10 மாத இடைவெளிக்கு பிறகு நடக்க இருக்கும் முதல் உள்ளூர் போட்டியான இது கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறுகிறது. அத்துடன் இந்த ஆண்டு இறுதியில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கிறது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த நிலையில் நடைபெறும் இந்த போட்டியில் வீரர்கள் செயல்படும் விதத்தை சேத்தன் ஷர்மா தலைமையிலான புதிய தேர்வு குழுவினர் கண்காணிக்க இருக்கிறார்கள். இதில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு திரும்பவும், புதிதாக அணியில் இடம் பிடிக்கவும் வீரர்கள் தீவிரமாக முயற்சிப்பார்கள் என்பதால் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .
தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஐ.பி.எல். போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத இஷாந்த் ஷர்மா, தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் ஒதுங்கிய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் புவனேஷ்வர்குமார், ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கியதால் 7 ஆண்டு தடையை அனுபவித்த 37 வயது வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் கடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், இளம் படைகளான பிரியம் கார்க், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, இஷான் கிஷன், சர்ப்ராஸ் கான், சாய் கிஷோர், சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ஆகியோரும் தங்கள் மாநில அணிகள் சார்பில் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள்.
தொடக்க நாளான இன்று கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட்டை சந்திக்கிறது. மற்ற ஆட்டங்களில் பெங்கால்-ஒடிசா, கர்நாடகா-ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்-உத்தரபிரதேசம், ரெயில்வே-திரிபுரா, குஜராத்-மராட்டியம், சத்தீஷ்கார்-இமாச்சலபிரதேசம், பரோடா-உத்தரகாண்ட், அசாம்-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. அசாம்-ஐதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த 8 பேட்மின்டன் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டி வரை அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதித்து உலக பேட்மின்டன் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெட்டிங்கில் ஈடுபட்ட மற்ற 5 பேட்மின்டன் வீரர்களுக்கு 6 முதல் 12 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.25 லட்சம் முதல் 8.75 லட்சம் வரை அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிட்னி:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் 131 ரன்னும், லபுஷேன் 91 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 4 விக்கெட்டும், பும்ரா, நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து இருந்தது. சுப்மன் கில் 50 ரன்னிலும், ரோகித் சர்மா 26 ரன்னிலும் ஆட்டம் இழந் தனர். புஜாரா 9 ரன்னிலும், ரகானே 5 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 242 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.
ஆட்டம் தொடங்கிய 10-வது ஓவரில் 3-வது விக்கெட் ஜோடி பிரிந்தது. கடந்த டெஸ்டில் சதம் அடித்த கேப்டன் ரகானே இன்று 22 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவர் கம்மின்ஸ் பந்தில் போல்டு ஆனார்.
அப்போது இந்தியாவின் ஸ்கோர் 117 ரன்னாக இருந்தது. 4-வது விக் கெட்டுக்கு புஜாராவுடன் விகாரி ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியும் நிலைத்து நிற்கவில்லை. ஸ்கோர் 142 ஆக இருந்தபோது விகாரி ரன் அவுட் ஆனார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து ரிஷப்பண்ட் களம் வந்தார். 5-வது ஜோடி நிதானமாக ஆடியது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 42 ரன்னிலும், ரிஷப் பண்ட் 29 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மதிய உணவு இடை வேளைக்கு பிறகு 80-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது. பொறுப்புடன் விளையாடிய புஜாரா 50 ரன்னை தொட்டார். 174 பந்துகளில் 5 பவுண்டரியுடன் அவர் அரை சதம் அடித்தார்.
80-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 26-வது அரை சதமாகும்.
இந்த ஜோடியை ஹாசல்வுட் பிரித்தார். ரிஷப்பண்ட் 36 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 195 ஆக இருந்தது.
அதன்பிறகு ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. புஜாரா 50 ரன்னிலும், அஸ்வின் 10 ரன்னிலும், சைனி 4 ரன்னிலும், பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.
இதில் அஸ்வினும், பும்ராவும் ரன் அவுட் ஆனார்கள். 216 ரன்னில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் இருந்த ஜடேஜா முடிந்த அளவுக்கு போராடி ரன்களை எடுத்தார்.
கடைசி விக்கெட்டான முகமது சிராஜ் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 100.4 ஓவர்களில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 94 ரன்கள் குறைவாகும்.
ஜடேஜா 37 பந்தில் 28 ரன்கள் (5 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கம்மின்ஸ் 29 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹாசல்வுட் 2 விக்கெட்டும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இந்திய வீரர்களில் 3 பேர் ரன் அவுட் ஆனார்கள்.
94 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களான வார்னர் 13 ரன்னிலும் புகோவ்ஸ்கி 10 ரன்னிலும் வெளியேறினர். அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுமித் மற்றும் லபுசேன் பொறுப்புடம் விளையாடினர்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. சுமித் 29 ரன்னிலும் லபுசேன் 47 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
முதல் 2 டெஸ்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த டெஸ்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு 131 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 76-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 27-வது சதமாகும். இதன்மூலம் அவர் விராட் கோலி (இந்தியா), கிரேம் சுமித் (தென் ஆப்பிரிக்கா), ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) ஆகியோருடன் இணைந்தார்.
ஸ்டீவ் சுமித் 136 இன்னிங்சில் 27-வது சதத்தை எடுத்தார். இதன்மூலம் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக அதிவேகத்தில் டெஸ்டில் 27 செஞ்சுரி அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். பிராட்மேன் 70 இன்னிங்சில் 27 சதம் அடித்திருந்தார். விராட் கோலி, தெண்டுல்கர் தலா 141-வது இன்னிங்சிலும், கவாஸ்கர் 154-வது இன்னிங்சிலும், மேத்யூ ஹைடன் 157-வது இன்னிங்சிலும், 27-வது சதத்தை தொட்டு இருந்தனர்.
ஸ்டீவ் சுமித்தின் சதத்தில் 14 செஞ்சூரிகள் (62 இன்னிங்ஸ்) சொந்த மண்ணில் எடுக்கப்பட்டவையாகும். அவர் இந்தியாவுக்கு எதிராக 8-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக செஞ்சுரி அடித்து இருந்த கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) ஆகியோரை சமன் செய்தார். இவர்கள் இந்தியாவுக்கு எதிராக 8 சதம் அடித்திருந்தனர்.
ஸ்டீவ் சுமித் இந்தியாவுக்கு எதிராக இன்னும் ஒரு சதம் அடித்தால் புதிய சாதனை படைப்பார்.






