என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் அரையிறுதியில் தமிழ்நாடு- ராஜஸ்தான், பஞ்சாப்- பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், ஹரியானா, பரோடா, பீகார், ராஜஸ்தான் அணிகள் முன்னேறின.

    காலிறுதியில் பஞ்சாப் கர்நாடகத்தையும், தமிழ்நாடு இமாச்சல பிரதேச அணியையும், ஹரியானாவை பரோடாவும், பீகாரை ராஜஸ்தானும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

    அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன. முதலில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகளும், 2-வது நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் - பரோடா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    வருகிற 31-ந்தேதி இறுதி போட்டி நடக்கிறது. இந்த போட்டிகள்  அனைத்தும் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடக்கிறது.
    ஐசிசி-யின் எலைட் பேனல் நடுவராக பணியாற்றி வந்த ஆஸ்திரேலியாவின் ப்ரூஸ் ஆக்சன்போர்டு, தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ப்ரூஸ் ஆக்சன்போர்டு. இவர் 2006-ல் இருந்து நடுவராக பணியாற்றி வந்தார். கடந்த 2012-ல் இருந்து ஐசிசி-யின் எலைட் பேனல் நடுவராக பணியாற்றி வந்தார்.

    15 வருடங்களாக நடுவராக பணிபுரிந்து வந்த ஆக்சன்போர்டு, தற்போது நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    சுமார் 200 போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். 62 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பிரிஸ்பேன் டெஸ்டில் பணியாற்றினார்.

    60 வயதாகும் ஆக்சன்போர்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 உலக கோப்பையில் நடுவராக பணியாற்றியுள்ளார். பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை தன்னை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கவசத்துடன் நடுவர் பணியை மேற்கொள்வார்.
    பெடரேசன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணிக்கு 12 பதக்கம் கிடைத்துள்ளது.

    சென்னை:

    18-வது பெடரேசன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது.

    இந்தப் போட்டியில் 15 சிறுவர்கள், 10 சிறுமிகள் ஆகியோர் அடங்கிய 25 பேர் கொண்ட தமிழக அணி பங்கேற்றது. தமிழக வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக இருந்தது.

    தமிழக அணிக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 12 பதக்கம் கிடைத்தது.

    10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்.சதீஷ் குமாரும், நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்டிரினும், 800 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீகிரணும், டிரிபிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேலும் தங்கப்பதக்கம் பெற்றனர்.

    இதில் பிரவீன் 16.01 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்தார். வீராங்கனைகளில் ஒருவர் மட்டுமே தங்கம் வென்றார். டிரிபிள் ஜம்ப்பில் பவிஷா முதல் இடம் பிடித்தார்.

    800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீரர் ஸ்ரீகிரண் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். உயரம் தாண்டுதலில் கெவினா அஸ்வினிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    10 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சதீஷ்குமார், 5 ஆயிரம் மீட்டரில் வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல நி‌ஷந்த் ராஜா (110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்) உள்பட 4 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள பேட்டிங் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இந்திய அணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா தொடர்ந்து முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். கோலி 870 புள்ளிகளுடனும், ரோகித் சர்மா 842 புள்ளிகளுடனும் உள்ளனர்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 791 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வீரர்களில் பும்ரா 3-வது நீடிக்கிறார். அவர் 700 புள்ளிகள் பெற்றுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த போல்ட் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முஜிபூர் ரகுமான் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீரரும், இந் திய வம்சாவழியை சேர்ந்தவருமான பனேசர் கணித்துள்ளார்.

    சென்னை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி, மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், 2-வது டெஸ்ட் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    இதற்காக ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளது. இதைப்போல இந்திய வீரர்களும் சென்னை வந்தடைந்தனர்.

    வீரர்கள் 6 நாட்கள் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்னர் 3 தினங்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீரரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவருமான பனேசர் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் சிறப்பான முறையில் செயல்பட்டார். அவர் இங்கிலாந்துக்கு எதிராகவும் நம்பிக்கையுடன் பந்து வீசுவார். டெஸ்ட் தொடரில் அவர் இந்திய அணிக்கு முக்கிய பங்கு வகிப்பார். ஜடேஜா காயத்தால் ஆடவில்லை. இதனால் 2-வது சுழற்பந்து வீரர் அஸ்வினுக்கு ஏற்ற வகையில் பந்து வீச வேண்டும். இந்த இடத்தை அக்தர் படேல் சரியாக பயன்படுத்தி கொள்வார்.

    இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் 2 டெஸ்டில் வென்று சாதித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொள்ளும்.

    சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியும். வலுவான இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    34 வயதான அஸ்வின் 74 டெஸ்டில் விளையாடி 377 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது ஒரு இன்னிங்சில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். 27 முறை 5 விக்கெட்டும், 7 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் எடுத்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அஸ்வின் 9 டெஸ்டில் 42 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    இங்கிலாந்து அணி 2012-13-ல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு பனேசர் முக்கிய பங்கு வகித்தார். அவர் 17 விக்கெட் கைப்பற்றினார்.

    பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையின் மூலம் ஒரு அடைப்பு அகற்றப்பட்டது.

    5 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கங்குலியை நேற்று மீண்டும் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு உண்டானது. அவருக்கு மறுபடியும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அவர் தனது இதயம் செயல்பாடு தொடர்பாக பரிசோதித்துக் கொள்ள வந்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
    சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள் ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    சி்ட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் சீன் காரோல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள்(முகமது சிராஜ், பும்ரா) ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை தான். விரும்பத்தகாத இந்த சம்பவத்துக்காக நாங்கள் மீண்டும் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

    இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகள், டிக்கெட் விவரங்கள், ரசிகர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். மைதானத்தில் இருந்து சந்தேகத்தின் பேரில் வெளியேற்றப்பட்ட 6 ரசிகர்களுக்கும் இனவெறி புகாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. நியூசவுத் வேல்ஸ் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது விசாரணை முடியும் வரை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
    கராச்சி:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் குயின்டான் டி காக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். டீன் எல்கர் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். ஜார்ஜ் லிண்டே 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ரபாடா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, நவ்மான் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்களை தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர். 27 ரன்களை எடுப்பதற்குள் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அசார் அலியும், பவாத் ஆலமும் பொறுப்புடன் ஆடினர்.

    அசார் அலி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மொகமது ரிஸ்வான் 33 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பவாத் ஆலம் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பஹீம் அஷ்ரப் அதிரடியாக ஆடி 64 ரன்னில் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, நூர்ஜே, நிகிடி மற்றும் கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.
    சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேறியது.
    சையத் முஷ்டாக் டிராபி டி20 தொடரின் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் அகமதாபாத்தில் உள்ள சர்தால் பட்டேல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஹரியானா - பரோடா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த ஹரியானா 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கேதார் தேவ்தார் 40 பந்தில் 43 ரன்களும், ஸ்மித் பட்டேல் 21 பந்தில் 21 ரன்களும் எடுத்தனர்.

    ஆனால் 3-வது நபராக களம் இறங்கிய விஷ்னு சோலங்கி அதிரடியாக விளையாடினார். பரோடா அணியின் வெற்றிக்கு கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது.

    சோலங்கி 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். 5-வது பந்தில் பவுண்டரி விளாசினார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. சோலங்கி டோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸ் விளாச பரோடா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்து அரையிறுதிக்கு முன்னேறியது. விஷ்னு சோலங்கி 46 பந்தில் 71 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசியதன் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்தத் தொடரில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சிறப்பாக பந்து வீசினார். அவர் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறினார். இதற்கு முன் 13-வது இடத்தில் இருந்தார். தற்போது 9 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    டிரென்ட் போல்ட் முதல் இடத்திலும், முஜீப் உர் ரஹ்மான் 2-வது இடத்திலும், பும்ரா 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர். கிறிஸ் வோக்ஸ் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் ரபடா 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கும், ஹசில்வுல் 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கும் சரிந்துள்ளனர்.

    முஷ்டாபிஜுர் ரஹ்மான் 11 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். பேட் கம்மின்ஸ் 2 இடங்கள் சரிந்து 10-வது இடத்தில் உள்ளார்.
    வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.
    வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் ஆட்டத்தில் பிவி சிந்து ஜு யிங்கை எதிர்கொண்டார். முதல் சுற்றை 21-19 எனக் கைப்பற்றிய பிவி சிந்து, 2-வது சுற்றை 12-21 எனவும், 3-வது மற்றும் கடைசி சுற்றை 17-21 என இழந்து தோல்வியடைந்தார்.

    முதல் சுற்றின் இடைவேளையின்போது பிவி சிந்து 8-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் 10-14 என பின்தங்கினார். ஆனால் 16-16 என சமன் செய்த பிறகு முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார்.

    2-வது செட்டில் பிவி சிந்துவால் தைவானின் ஜு யிங் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 0-6 என பின்தங்கிய பிவி சிந்து இடைவேளையின்போது 4-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் ஜு யிங் 21-12 என 2-வது செட்டை கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது போட்டியில் யிங் 6-3 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து 6-6 என சமன் பெற்றார். ஆனால் இடைவேளையின்போது யிங் 11-9 என முன்னிலைப் பெற்றார்.

    அதன்பின் பிவி சிந்து 13-15, 13-17 என பின்தங்கினார். அதற்குப்பிறகு 17-19 என நெருங்கி வந்தார். ஆனால் யிங் 21-17 என 3-வது செட்டை கைப்பற்றி பிசி சிந்துவை தோற்கடித்தார்.
    சென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதத்திற்குப் பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. 2021-ம் ஆண்டுக்கான சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில் வீரர்கள் ஏலம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் வீரர்கள் ஏலம் நடைபெற்றே தீரும் என பிசிசிஐ உறுதியாக தெரிவித்தது.

    அதன்படி ஜனவரி 20-ந்தேதிக்குள் வீரர்களை தக்கவைப்பது, வெளியேற்றுவது குறித்த விவரங்களை வௌயிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. 8 அணிகளும் விவரங்களை வெளியிட்டது.

    அதன்பின் பிப்ரவரி 18-ந்தேதி வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எங்கு வைத்து நடைபெறும் என்பது அப்போது தெரிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் சென்னையில் வீரர்கள் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×