search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதமடித்த பஹாத் ஆலம்
    X
    சதமடித்த பஹாத் ஆலம்

    கராச்சி டெஸ்டில் பவாத் ஆலம் சதம் - 2ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 308/8

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
    கராச்சி:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் குயின்டான் டி காக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். டீன் எல்கர் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். ஜார்ஜ் லிண்டே 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ரபாடா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, நவ்மான் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்களை தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர். 27 ரன்களை எடுப்பதற்குள் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அசார் அலியும், பவாத் ஆலமும் பொறுப்புடன் ஆடினர்.

    அசார் அலி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மொகமது ரிஸ்வான் 33 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பவாத் ஆலம் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பஹீம் அஷ்ரப் அதிரடியாக ஆடி 64 ரன்னில் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, நூர்ஜே, நிகிடி மற்றும் கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.
    Next Story
    ×