என் மலர்
விளையாட்டு


அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் இதுவரை 2 ஆட்டம் நடந்துள்ளது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்கியது.
பகல்-இரவாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற்று முன்னிலை பெறும் ஆர்வத்துடன் உள்ளன.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டோனியின் சாதனையை முறியடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச போட்டிகளில் கேப்டன் பதவியில் அதிக சதம் அடித்தவர்களில் ரிக்கி பாண்டிங்கும், விராட் கோலியும் இணைந்து முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 41 சதங்கள் அடித்துள்ளனர்.
3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தால் விராட் கோலி புதிய சாதனை படைப்பார். சர்வதேச போட்டியில் அதிக சதம் அடித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெறுவார்.
சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக கோலி 70 சதங்கள் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 71 சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். சதம் அடிப்பதன் மூலம் அவருடன் விராட் கோலி இணைவார். தெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.
இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் டோனியின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார். உள்நாட்டில் இருவரும் தலா 21 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளனர். இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்துவதன் மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்டில் வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை அவர் பெறுவார்.
டோனி, கோலிக்கு அடுத்தபடியாக அசாருதீன் (13), கங்குலி (10), கவாஸ்கர் (10) ஆகியோர் உள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
34 வயதான அஸ்வின் கடைசியாக 2017-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு வெள்ளைப் பந்து போட்டியான ஒரு நாள் ஆட்டம் மற்றும் 20 ஓவரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
அஸ்வின் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே பொருத்தமானவர் என்று தேர்வுக்குழு கருதி அவரை சேர்க்காமல் உள்ளது.
தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 2 ஆட்டத்தில் அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதோடு 2-வது டெஸ்டில் சதம் அடித்தார்.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் அவர் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் தேர்வுக்குழு அவரை தொடர்ந்து புறக்கணித்தது.
இந்த நிலையில் அஸ்வினை ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர், ஒருநாள் தொடரில் அஸ்வினை தேர்வு செய்யாமல் ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது. டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை நெருங்கிய வீரர், 5 டெஸ்டில் சதங்களை அடித்துள்ளார்.
ஆனால் அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் மட்டும் புறக்கணிக்கப்படுவது வேதனையானது. அவரது செயல்பாடு அருமையாக இருந்து வருகிறது.
பந்துவீச்சில் பல்வேறு வேறுபாடுகளை ஏற்படுத்தக் கூடிய திறமையான பந்து வீச்சாளர் அஸ்வின் ஆவார். ஏராளமான போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் தனக்கென முத்திரையை பதித்துள்ள அவரை புறக்கணித்திருக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல முன்னாள் வேகப்பந்து வீரர் நெக்ராவும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.
82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தி்ல தமிழக வீரர் ஜி.சத்யன், சக மாநில வீரரும் 9 முறை சாம்பியனுமான சரத் கமலை 11-6, 11-7, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

தொடக்க டெஸ்டில் தோற்றதால் கடும் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி 2-வது டெஸ்டில் எழுச்சி பெற்றது. ஆடுகளமும் (பிட்ச்) முதல் நாளில் இருந்தே சுழலுக்கு ஒத்துழைத்ததால் இந்திய வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின்-அக்ஷர் பட்டேல் கூட்டாக இணைந்து மொத்தம் 15 விக்கெட்டுகளை அறுவடை செய்ததோடு, இங்கிலாந்தை 3½ நாளிலேயே சுருட்டி வீசினர். ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரது சதமும் வெற்றிக்கு உதவின.
ஆனால் 3-வது டெஸ்ட் மின்னொளியில் அரங்கேறும் பகல்-இரவு போட்டி என்பதால் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பகல்-இரவு டெஸ்டில், வழக்கமான சிவப்பு நிற பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பந்து பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து கணிசமாக ஸ்விங் ஆகும். அதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அனுகூலமாக இருக்கும். எனவே முந்தைய டெஸ்டில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்கிய இந்திய அணி, இந்த டெஸ்டில் குல்தீப் யாதவை கழற்றி விட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கும் என்று தெரிகிறது. இதே போல் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திரும்புகிறார்.
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 11-வது இந்தியர், 2-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெறுகிறார். 99 டெஸ்டில் விளையாடி 302 விக்கெட்டுகள் வீழ்த்திய இஷாந்த் ஷர்மா தனது செஞ்சுரி டெஸ்டில் முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதே போல் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனையை நோக்கி பயணிக்கிறார். இன்னும் 6 விக்கெட் கைப்பற்றினால் அவர் 400 விக்கெட் வீழ்த்திய 4-வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைவார். அனேகமாக அவர் டெஸ்டில் இந்த சாதனையை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது.
ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த 34 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார். அந்த டெஸ்ட் தான் இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் என்பது நினைவு கூரத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது டிராவாவது செய்தாக வேண்டும். தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு புஷ்வாணமாகி விடும். அந்த வகையிலும் இந்த டெஸ்ட் இந்தியாவுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
தொடக்க டெஸ்டில் கேப்டன் ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மிரட்டிய இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட நெருங்க முடியாமல் முடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எஞ்சிய இரு டெஸ்டிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் அந்த அணிக்கும் இது வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணியில் கடந்த டெஸ்டில் ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், முழங்கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இந்த போட்டியில் தாக்குதலை தொடுக்க ஆயத்தமாகி உள்ளனர். அவர்களது வருகை இங்கிலாந்து அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனாலும் பேட்டிங்கில் ஜோ ரூட் தவிர மற்றவர்களின் ஆட்டம் சீரற்ற வகையில் இருப்பது அந்த அணியை கவலையடையச் செய்துள்ளது.
இந்த போட்டி நடக்கும் மோடேரா சர்தார் பட்டேல் ஸ்டேடியம் இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளது. 63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.800 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த ஸ்டேடியம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதியை கொண்டது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற பெருமையை பெறுகிறது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (90 ஆயிரம் ரசிகர்கள் இருக்கை) உலகின் பெரிய ஸ்டேடியமாக இருந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 50 சதவீதம் அளவுக்கே ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் 55 ஆயிரம் ரசிகர்கள் வரை போட்டியை நேரில் கண்டுகளிப்பார்கள்.
ஸ்டேடியம் சீரமைப்புக்கு முன்பாக இங்கு நடந்துள்ள 12 டெஸ்டுகளில் இந்தியா 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் 6-ல் டிராவும் கண்டுள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் இந்தியா புஜாராவின் இரட்டை சதத்தின் உதவியோடு 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
பிங்க் பந்து டெஸ்டில் இரு அணிகளும் பெரிய அளவில் சாதித்ததில்லை. இந்திய அணி இதுவரை இரண்டு பகல்-இரவு டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.
இந்திய அணி தனது கடைசி பகல்-இரவு டெஸ்டில் 36 ரன்னில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சுருண்டதும், இங்கிலாந்து 56 ரன்னில் ஆல்-அவுட் ஆனதும் (நியூசிலாந்துக்கு எதிராக) குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதனால் யாருடைய கை ஓங்கும், தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? என்பதை கணிப்பது சிரமம். டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இ்ந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், அக்ஷர் பட்டேல், பும்ரா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ்.
இங்கிலாந்து: டாம் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், பென் போக்ஸ், டாம் பெஸ் அல்லது கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச்.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






